Showing posts with label hindi. Show all posts
Showing posts with label hindi. Show all posts

29.3.08

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி III

தனது கட்டுரையில் வெங்கட் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய மொழிகளில் கிடைக்கிறதா? என்று ஒரு கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

பல சட்டங்களின் தமிழ் வடிவம் கிடைக்கும் என்றாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் எழலாம். உதாரணமாக சட்ட பிரிவுகளில் காணப்படும் 'shall', 'may', 'as' போன்ற வார்த்தைகளின் நுணுக்கமான அர்த்தம் பற்றிக் கூட பல சமயங்களில் விவாதம் நடைபெறுவதுண்டு. மொழி பெயர்ப்புக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் இவ்வாறு
நுணுக்கமாக ஆராய்கையில் குழப்பத்தை விளைவிக்கும். எனவே தமிழ் மொழிபெயர்ப்பு வெறுமே படிப்பு உபயோகத்திற்கே பயன்படும். ஆங்கில வடிவம் மட்டுமே செயல் வடிவம் பெறும். தமிழிலேயே சட்டமியற்றப்பட்டால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக, சட்ட வரைவுக்குழு டாக்டர்.ராஜேந்திர பிரசாதை அதனை ஹிந்தி மொழியாக்கம் செய்து வெளியிட அனுமதியளித்தது.

அதன்படி ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு சட்ட வரைவுக்குழு உறுப்பினர்கள் 1950ம் வருடம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியாக்கம் இரண்டிலும் கையெழுத்திட்டனர். மொழியாக்கத்தைப் படித்த நேரு, 'தான் அதில் ஒரு வார்த்தையை கூட புரிந்து கொள்ள முடியவில்லை' என்று கடிதம் எழுதினார்.

பின்னர் ஏறக்குறைய கைவிடப்பட்ட நிலையில்....ஹிந்தி வடிவம் இறுதியாக 1988ம் வருடம் முழுமை பெற்று அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்திய பிரிவு ஆர்டிகிள் 394Aன் படி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஹிந்தி தவிர்த்த மற்ற மொழிகளுக்கு இந்த உரிமையில்லை.

பொதுவாக சட்டங்கள், நீதிமன்ற முறைகள் தமிழிலோ அல்லது ஹிந்தியிலோ ஏற்படுத்தப்படுவதோ கடினமான காரியம். ஆனால் இயலாத காரியமல்ல. அதற்கு மக்களின் ஒத்துழைப்பும், முன்னேற்றமும் தேவை.

பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் லத்தீனே படித்தவர்களின் மொழியாக இருந்து பின்னர் ப்ரெஞ்சு அந்த இடத்துக்கு வந்தது. மெல்ல மெல்ல பின்னர் ஜெர்மன், ரஷிய மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்க பல வருடங்கள் பிடித்தது.

-oOo-

இறுதியாக, நீதிமன்றங்கள் எவ்வாறு இந்த மொழிப் பிரச்னையில் வேறுபட்ட நிலையினை எடுத்து நீதிபதிகளும் ரத்தமும் சதையுமான மனிதர்கள் என்று உணர வைக்கிறது என்பதற்கு உதாரணமான வழக்குகள் இரண்டினைப் பார்க்கலாம்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்ற ‘தியாகி’களுக்கான ஓய்வூதிய (pension) திட்டம் ஒன்றினை அறிவித்தது.
உடனடியாக சுதந்திரப் போராட்ட ‘தியாகி’யான திரு.தளவாய் அவர்கள் இந்த ஓய்வூதிய திட்டம் 'ஹிந்தியை மேம்படுத்தி பரப்புமாறு மைய அரசினை வேண்டும்' அரசியலமைப்புச் சட்டத்தின் 351ம் பிரிவை பாதிக்கிறது என்ற வாதத்துடன் ஒரு நீதிப்பேராண்மை மனுவை தாக்கல் செய்தார்.

சென்னை நீதிமன்ற நீதிபதிகள், 'நிதிப் பகிர்வு சட்டத்தின் மூலம் மாநில அரசுக்கு இவ்விதமான திட்டத்திற்கு நிதி ஒதுக்க அதிகாரம் இருக்கிறது' என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

தளவாய் உச்ச நீதிமன்றம் சென்றார்.

உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு, 'இவ்விதமான ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி தமிழக அரசின் திட்டத்தினை செல்லாது என அறிவித்தனர்.

நீதிபதிகள் முக்கியமாக தீர்ப்பில் கூறிய வாசகங்கள் கவனிக்கத்தக்கது. 'தமிழக அரசின் இந்த திட்டம் பிளவுபடுத்தும் பிரிவினைவாத சக்தியினை உள்ளடக்கியது. ஏதாவது மாநிலம் ஹிந்திக்கு அல்லது வேறு மொழிக்கு எதிரான உணர்வுகளை தூண்டி விட முயன்றால் அத்தகைய முயற்சியானது மக்கள் விரோத, தேச விரோத செயல்கள். அவை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்' (AIR 1976 SC 1559)

எனவே தமிழக அரசின் திட்டம் செல்லாக் காசாகியது!


-oOo-

இவ்வாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளும் தில்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் வேறுபட்ட கோணங்களில் மொழிப் பிரச்னையை அணுகியது மற்றொரு வழக்கிலும் நேர்ந்தது.

1960ம் ஆண்டு கையெழுத்தான குடியரசுத் தலைவரின் உத்தரவினைத் தொடர்ந்து பல மைய அரசுத் துறைகள் தமது பணியாளர்களுக்கு கட்டாய ஹிந்தி பயிற்சி அளிக்கும் அறிவிப்பினை வெளியிட்டதை ஏற்கனவே பார்த்தோம். இவற்றை எதிர்த்து அப்போது நாடாளுமன்றத் தலைவராக இருந்த முரசொலி மாறனும் தபால் துறையில் வேலை பார்த்த ஒரு உதவி மேலாளரும் தனித் தனியே ரிட் மனுக்களை தொடர்ந்தார்கள். முரசொலி மாறனின் ரிட் மனு அவர் அந்த அறிவிப்பினால் பாதிக்கப்படுபவர் அல்ல என்ற காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் தபால் துறை உதவி மேலாளரின் ரிட் மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவுகள் அரசு மொழிகள் சட்டத்தின் பிரிவுக்கு மாறாக இருப்பதாக கூறி அவற்றை செல்லாது என அறிவித்தது. பிரச்னை உச்ச நீதிமன்றம் சென்றது.

தளவாய் வழக்கினை விசாரித்த அதே நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்சு, குடியரசுத் தலைவரின் உத்தரவும், அரசுத் துறை நிறுவனங்களின் அறிவிப்புகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணமாகவே உள்ளன. அவை அரசு மொழிகள் சட்டத்தின் பிரிவுகளை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. மாறாக அவற்றிற்கு இசைந்தே உள்ளது' என்று கூறினர்.

மேலும், 'கட்டாய பயிற்சியானது வேலை நேரத்தின் பகுதியாகவே வழங்கப்படுகிறது. எனவே கட்டாயமாக அதில் கலந்து கொள்வது அவர்களது கடமை. இவற்றில் தேற வேண்டிய அவசியமில்லை. தேறாதலால் ஏதும் பாதிப்பில்லை. தேறிய்வர்களூக்கு ஊக்கத் தொகை (incentive like prizes and increase in pay) வழங்கப்படுவதால் மட்டுமே சமநிலை பாதிக்கப்படுகிறது என்பதல்ல' என்று கூறி மைய அரசு அலுவலக பணியாளர்களுக்கான கட்டாய ஹிந்தி பயிற்சியும் அதில் தேறுவதால் கிடைக்கும் ஊக்கத் தொகைகளும் சட்டத்திற்கு உட்பட்டதே என்று தீர்ப்பளித்தனர். (AIR 1977 SC 231)

இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி மட்டுமே.... ஆட்சி மொழி மட்டுமல்ல. அரசுப் பணிக்கான மொழியாகவும் அதனை முழுவதும் மாற்றும் வண்ணம் இந்திய மக்களாகிய நாம் செயல்பட நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் இந்தியர்கள் அனைவருக்கும் அறிவுறுத்துகிறது.

இனி உங்களது கருத்துகளை எதிர்நோக்கி...

மும்பை
26.12.03




OLD LIGHT HOUSE, RABBIT ISLAND, THOOTHUKUDI

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி II


ஹிந்தி வேண்டாம் என்றால் ஆங்கிலம் மட்டும் அந்நிய மொழியில்லையா? அதன் தேவை என்ன? உணர்வு பூர்வமாக அணுகினால் இந்த வாதம் சரியே! ஆனால் நடைமுறையில், இந்தியா ஒன்றுபட்டிருப்பதற்கு ஆங்கிலம் முக்கியமான ஒரு காரணம் என்று நான் உணர்கிறேன். இதை நான் சந்தித்த பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

உதாரணமாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 345வது பிரிவின் படி மாநில அரசுகள் ஹிந்தியையோ அல்லது அந்தந்த மாநிலத்தில் பயன்படுத்தப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழியையோ தனது அலுவலகப் பணிகளுக்கான மொழியாக பயன்படுத்த அனுமதியளிக்கிறது.

348வது பிரிவின் படி குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்று மாநில அரசு ஹிந்தியையோ அல்லது அந்த மாநிலத்தில் அரசுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மொழியையோ அந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தலாம் என்று கூறுகிறது. இவ்வாறான ஒரு நிலையில் என்ன நிகழும்?

நீதிமன்றத்துக்கு நீதிமன்றம் குழப்பம் நிலவும். உயர் நீதிமன்றங்களில் இருந்து மேல் முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றம் செல்கையில் மேலும் குழப்பம். ஏறக்குறைய இவ்வாறான நிலையை கிறிஸ்தவர்களின் வேதத்தில் கூறப்படும் 'பாபேல் கோபுர' நிலைக்கு சட்ட மேதை எச் எம் சீர்வாய் ஒப்பிடுகிறார்.

ஆங்கிலம் ஒன்றே இந்த நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு கருவியாக, நாட்டின் பல மாநிலங்களுக்கும் பயணம் செய்திருக்கும் பலர் அறிவர்.

-oOo-

1952ல் ஹிந்தியும், தேவநாகரி எண்களும் மாநில ஆளுஞர்கள், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமிக்கும் உத்தரவில் பயன்படுத்தப்படலாம் என்பது நடைமுறைக்கு வந்தது.

1955ல் பிற அரசுப் பணிகளுக்காகவும் ஹிந்தி பயன்படுத்தப்படலாம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது.

1956ல் அரசியலமைப்புச் சட்டம் விரும்பியபடி, ஹிந்தியின் பயன்பாட்டை அதிகரிக்க ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட பி.ஜி.கெர் ஆணையம் தனது அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது.

1959ல் கெர் ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கோபிந் வல்லப் பந்த் தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்ற குழு தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஆட்சி மொழியினைப் பற்றிய விவாதம் தொடங்கியது.

விவாதம் சூடு பிடிக்க, நேரு 'இந்தியாவின் அனைத்து மொழிகளும் அதன் தேசிய மொழிகளாக சமமாக மதிக்கப்படும். ஆங்கிலம் ஹிந்தியோடு தொடர்ந்து அரசுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும். அதனை நீக்குவதற்கான கால அவகாசம் ஏதும் கிடையாது' என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.

ஆனால் தேசிய மொழி என்பது உணர்வு பூர்வமான பதம். சட்டபூர்வமான அங்கீகாரம் அதற்கு கிடையாது.

-oOo-

1960ல் ஹிந்தியை பரப்புவதற்காகவும், மைய அரசு அதிகாரிகளுக்கு ஹிந்தி பயிற்சி அளிப்பதற்காகவும், ஹிந்தி கலைச்சொற்கள், நடைமுறை வழக்கத்திற்காக ஹிந்தி கையேடுகள் உருவாக்கவும் மற்றும் உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் வண்ணம் ஹிந்தி சட்ட வரைவுகளை எழுதவும் அதிகாரமளித்து குடியரசுத் தலைவரின் உத்தரவு கையெழுத்தானது.

இந்த உத்தரவின்படி 45 வயதுக்கு குறைவான மைய அரசு அதிகாரிகள் கண்டிப்பான ஹிந்தி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். அதில் தேறாவிட்டால் தண்டனை ஏதும் கிடையாது என்றாலும் தேறியவர்களுக்கு ஊக்கத் தொகை போன்றவை வழங்கப்படும். ஹிந்தி பேசும் பகுதிகளில் உள்ள மைய அரசு பணிக்கான பணியாளர்களை நியமிக்கையில் அவர்களுக்கு தேவையான ஹிந்தி அறிவு இருத்தல் வேண்டும்.

1962ல் வெளியான ரயில்வே போர்டு அறிவிப்பு, 'ஹிந்தி பயிற்சி மிகவும் மந்தமாக இருப்பதாக கவலைப்பட்டு பயிற்சிக்கு வராத அலுவலர்கள் வேலைக்கு வராதவர்களாக கருதப்படுவார்கள்' என்று எச்சரித்தது.

போதாதா? தமிழக அரசியல் மொழிப் பிரச்னையில் மெல்ல மெல்ல புகையத் தொடங்கியது.

இதற்கிடையில் அரசியலமைப்புச் சட்டத்தின் பதினைந்து வருட கெடு நெருங்கிக் கொண்டிருந்தது. நேருவுக்கோ இரு பக்கமும் நெருக்கடி!

-oOo-

பதினைந்து ஆண்டுகள் ஆனாலும், ஆங்கிலத்தின் பிடியை நீக்க முடியவில்லை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு 1965ம் வருடம் ஆட்சி மொழிகள் சட்டம்'1963 நடைமுறைக்கு வந்தது.

ஆட்சி மொழி என்னவோ ஒன்றுதான் என்றாலும் ஆட்சி மொழிகள் சட்டம் என்று பன்மையில் இந்த சட்டத்தின் தலைப்பு அமைந்திருப்பது சட்டத்தை இயற்றியவர்களுக்கே வெளிச்சம்!

இதன் மூலம் ஹிந்தி ஆட்சி மற்றும் அரசுப் பணிகளுக்கான மொழியென்றாலும், ஆங்கிலம் ஹிந்தியோடு சேர்ந்து பயன்படுத்தப் படலாம் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் போராட்டம் தீவிரப்பட நேரு, 'ஹிந்தி பேசாத மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலம் நீக்கி ஹிந்தி மட்டுமே அரசு பயன்பாட்டு மொழியாக மாற்றப்பட மாட்டாது' என்று உறுதி கூறினார்.

இந்த உறுதிக்கு சட்ட வடிவம் கொடுக்கும் வகையில் 1968ல் ஆட்சி மொழிகளின் சட்டத்தில் 'அனைத்து சட்ட மன்றங்களும் ஆங்கிலத்தை நீக்கி ஹிந்தியை மட்டும் அரசு பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வரை, ஆங்கிலமும் ஹிந்தியோடு பயன்பாட்டு மொழியாக நடைமுறையில் இருக்கும்' என்று ஒரு திருத்தம் கொண்டு வரப்பட தமிழகம் அமைதியடைந்தது.

அதற்கிடையே இங்கு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய தி.மு.க ஆட்சிக்கும் வந்திருந்தது.

இதற்கிடையில் இந்த மொழிப்பிரச்னை முக்கியமான ஒரு மனிதரின் பதவியை காவு வாங்கியது. 1967ன் இறுதியில் 'ஆங்கிலத்தை விடுத்து ஹிந்திக்கு முதலிடும் கொடுக்கும் மந்திரி சபையின் கல்விக் கொள்கை' மீதான முடிவினை எதிர்த்து முன்பு கல்வி அமைச்சராக பணியாற்றிய வெளியுறவு மந்திரியும் சட்ட மேதையுமான எம்.சி. சாக்ளா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

எது எப்படியோ, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஹிந்திக்கு மட்டுமே "முதலிடம்" என்று சொல்வதை விட ஹிந்திக்கு மட்டுமே "இடம்" என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும்.

அடுத்து இந்த மொழிப் பிரச்னை எப்படி நீதிபதிகளையும் பாதிக்கிறது என்று பார்க்கலாம்.

மும்பை
26.12.03