Showing posts with label Law College. Show all posts
Showing posts with label Law College. Show all posts

26.11.08

சட்டக்கல்லூரி வன்முறையும் சாருநிவேதிதாவும்...


இந்திரா காந்தி இறந்த செய்தி, கடைசியாக தெரிய வந்த இந்தியர், எம்ஜிஆராகத்தான் இருக்க முடியும் என்று கூறுவார்கள். அதுபோல சமீபத்தில் சென்னை சட்டக்கல்லூரில் நடைபெற்ற மோதலின் முழுவீச்சினையும் உணர்ந்த கடைசித்தமிழனாக இருக்கக்கூடிய வாய்ப்பு, எனக்கு கிடைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஏனெனில், அடுத்த நாள் வழக்குரைஞர் சங்க கூட்டத்தில் இந்த விடயத்தின் மீதான விவாதத்தில் மற்றவர்கள் பேசிய பொழுதுதான், விடயம் மிகச் சேரியமானது என்பது எனக்கு விளங்கியது.

காலையில் செய்தித்தாள்களில் படங்களைப் பார்த்தாலும், வழக்கமாக நாம் கல்லூரியில் கேள்விப்படும் வன்முறைதானே என்றிருந்தது. வழக்குரைஞர் சங்கத்தில் ஈழத்தமிழர் பிரச்னையைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூட்டத்தைக் கூட்டியிருந்தோம். ஆனால், அதை விட்டுவிட்டு, கல்லூரி வன்முறையினைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்த பொழுது, இதற்காக ஒரு கூட்டமா என்று நினைத்தேன்.

அப்பொழுதுதான், எனது நண்பர், வன்முறை முழுவதும் திரைப்படம் போல தொலைக்காட்சிகள் காட்டப்பட்ட விபரத்தினைக் கூறினார். பின்னர் மாலை வந்து மீண்டும் ஒருமுறை பத்திரிக்கையில் வந்த படங்களைப் பார்த்த பொழுது, ஓரளவுக்கு என்னால் அதனை ஒரு சலனப்படமாக கற்பனை செய்ய இயன்றது.

ஆயினும் இன்று வரை, மிகப்பெரிய ‘கொடூர’மென்று தமிழகமே பொங்கிப் பொருமினாலும் என்னால், அதில் பங்கு கொள்ள இயலவில்லை.

அஞ்சா நெஞ்சருக்கு மீண்டும் நன்றி!

-oOo-


சில வருடங்களுக்கு முன்னர், கும்பகோணத்தில் பள்ளிக்குழந்தைகள் எரிந்து மடிந்து போன விடயம், முதலில் தெரிய வந்த பொழுது மும்பையில் எனது அலுவலத்தில் இருந்தேன். யாஹூ குழும மடல் மூலமாக. அப்பொழுது அங்கு தனியாக இருந்தேன். உடனடியாக நான் எடுத்த முடிவு, தொலைக்காட்சி பக்கமே செல்லக்கூடாதென. பின்னர் இரண்டு வாரங்களுக்கு குறுந்தகட்டில் படங்கள் பார்ப்பதோடு மட்டுமே டிவியுடனான எனது தொடர்பினை வைத்துக் கொண்டேன்.

இதை எழுதுகையில் எனக்கு ஆங்கிலத்தில் ‘mediacracy’ என்ற வார்த்தையினை உருவாக்கலமா என்ற எண்ணம் பிறந்தது. கூகுளில் தேடினால் அது ஓர் அங்கீகரிக்கப்பட்ட வார்த்தையாக உருவாகி பல ஆண்டுகள் கடந்திருக்கும் போல. Mediarchy என்ற வார்த்தையும் உருவாகியிருப்பதும் புரிந்தது.

-oOo-


சட்டக்கல்லூரி வன்முறை பற்றி எழுத்தாளர் சாருநிவேதிதாவும் எழுதியிருக்கிறார். தவறில்லை யார் வேண்டுமென்றாலும் எழுதலாம். ஆனால், பில் கிளிண்டன் அதிபராக இருந்த பொழுது சாலை விதிகளை மீறி விட்டார் என்று அவரது மகளின் ஓட்டுநர் உரிமம் (‘தமிழ்’ எழுத்தாளரின் மொழியில் டிரைவிங் லைசன்ஸ்) பறிக்கப்பட்டதாக ஒரே போடாக போட்டிருக்கிறார். நான் அறிந்த வரையில் அதிபர் புஷ்ஷின் மகளின் உரிமம் தற்காலிகமாக தடை (suspend) செய்யப்பட்டது. அதுவும் சாலை விதிகளை மீறியதற்காக அல்ல...

தனது எழுத்தினை படிப்பதற்கு காசு வேண்டும் என்று கேட்பவர்கள், கூறும் விடயங்களில் கொஞ்சம் கவனம் எடுப்பது நல்லது. லத்தீன் அமெரிக்கா என்றால் பரவாயில்லை. இங்கு யாருக்கும் தெரியாது. வட அமெரிக்க செய்திகள்தான் விலாவாரியாக படிக்கக் கிடைக்கிறதே!

-oOo-
மதுரை
261108