Showing posts with label Hollywood. Show all posts
Showing posts with label Hollywood. Show all posts

26.1.12

அமெரிக்க காஞ்சனா, ஆபத்தான காஞ்சனா


உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நீதிமன்ற வழக்கு விசாரணை பற்றிய படம் என்று பார்த்து ஏமாந்த மற்றொரு இல்லை எரிச்சலடைந்த படம் ‘தி எக்ஸார்சிசம் ஆஃப் எமிலி ரோஸ்’ (2005)

அப்படியும், அதனைப் பற்றி இங்கு பதிவிடுவதன் அவசியம், ‘மற்றுமொரு பயமுறுத்தும் வகையிலான படமாக மட்டுமே கடந்து போகாமல், உலகெங்கும், முக்கியமாக இங்கு விரவிக் கிடக்கும் பேய்விரட்டுதல் என்ற மூடநம்பிக்கையினை மருத்துவத்திற்கு மாற்றாக பார்ப்பவர்களிடம் விதைக்கூடிய வகையில் சார்பு நிலையில் அணுகியிருப்பதன் அரசியலைக் குறித்த ஆதங்கம்தானேயொழிய வேறில்லை.


கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட எளிமையான ஒரு குடும்பத்திலிருந்து நகரத்திற்கு உயர்கல்விக்காக எமிலி செல்கிறாள். அங்கு விடுதியில் தனியே தங்கியிருக்கும் எமிலியை பயங்கரமான வலிப்பு (Epilepsy) நோய் தாக்குகிறது. அதாவது வலிப்புடன், மனநோயும் (Psychosis). விஞ்ஞானத்தால் அப்படித்தான் அவளது அனுபவங்களை விளக்க முடியும். படிப்பினைத் தொடர முடியாத எமிலி வீட்டிற்கே திரும்பி வருகிறாள். நிலமை மேலும் மோசமாக, அவர்கள் சார்ந்திருக்கும் கோவில் பாதிரி, எமிலியை பேய் பிடித்திருப்பதாக நம்புகிறார். பேயை விரட்டும் அவரது முயற்சிகள் தோல்வியடைய, அதற்கு காரணம் எமிலி உட்கொள்ளும் மருந்துகள்தான் என்று கருதி, பாதிரி எமிலியை மருந்துகளை நிறுத்தச் சொல்கிறார். ஆயினும் பாதிரியின் முயற்சிகள் தோல்வியடைந்து எமிலி பரிதாபமாக இறந்து போகிறார்.

எமிலி இறந்தது பாதிரியின் அலட்சியத்தால் (Negligence) என்று அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடக்கிறது. ஒருவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்ற முடிவிற்கு வருவதற்கும் அதனை விரட்டுவதற்கும் அதீத கட்டுப்பாடுகளை வைத்திருக்கும் கத்தோலிக்க சபைக்கு அதனை மீறிய பாதிரியின் செயல் தர்மசங்கடத்தை ஏற்ப்படுத்த சபைக்கு பங்கம் வராமல் காக்க, ஒரு பெரிய சட்டநிறுவனத்தை பாதிரியின் வழக்கினை நடத்த ஏற்ப்பாடு செய்கிறது. ஆனால் இறுதியில் பாதிரி சபைக்கு கட்டுப்படாமல், ‘தான் செய்ததே சரி எனவும், உலகமாந்தர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கும் வண்ணம் கன்னிமேரி விருப்பத்தின்படி எமிலி தன்னை சாகக்கொடுத்தாள்’ என்றும் நிறுவ முயலுகிறார்.


விசாரணைக்கு பின்னர் ஜூரர்கள் பாதிரி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும், திரைக்கதை ’பேய்பிடிப்பதும் சாத்தியம்தான், பேய்விரட்டுவதும் ஒரு சிகிச்சை முறையாக இருக்கலாம்’ என்பதை நிறுவும் சார்புநிலையில் (biased) எழுதப்பட்டு, ‘பேய்பிடி’ப்பதன் விஞ்ஞானம் புரியாதவர்கள் தங்களை மேலும் மோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் மூடநம்பிக்கையில் மேலும் அமிழ்ந்து போக இந்த திரைப்படம் வாய்ப்பளிக்கிறது.

அதற்காகவே இந்தப் படத்தில் பல காட்சிகள் இருக்கிறது. நம்மை திகிலூட்டச் செய்வதற்காக திணிக்கப்பட்ட காட்சிகள் மட்டுமல்லாமல், பாதிரியின் வழக்குரைஞரின் (லாரா லின்னே) ஏற்ப்படும் அனுபவங்களும் படம் பார்ப்பவர்களை அந்த முடிவிற்கு தள்ளும் வகையிலேயே அமைந்துள்ளன.

நீதிமன்றத்தில் பேய்பிடிப்பதும் ஒரு சாத்தியம்தான் என்பதை நிறுவ வழக்குரைஞர் சாட்சிகளிடம் கேட்கும் கேள்விகளும், முன்னிறுத்தும் சாட்சிகளும், வாதங்களும் ஏற்றுக்கொள்ள இயலாதவை. சில சமயங்களில் அபத்தம் என்று நம்மை முணுமுணுக்கச் செய்பவை!

நல்லவேளை இந்தப் படம் தமிழில் வெளிவரவில்லை. வந்திருந்தால் வேப்பிலையடிக்காரர்களுக்கு தனி மவுசு வந்திருக்கும்.

மதுரை
26/01/12