17.10.09

சோனியாவை முந்திய கருணாநிதி!





ஆனந்த விகடன், குமுதம் மூலம் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பத்தி எழுத்தாளரான ஞாநி, தனது இணையதளத்தில் அளித்த ஒரு பதிலில் மேற்கண்ட கருத்தினை தெரிவித்துள்ளார்.

ஞாநி சட்டம் பற்றி எழுதும் பத்திகளில், ‘முழுமையான ஆய்வினை மேற்கொள்கிறாரா?’ என்ற எனது சந்தேகம் மேலும் வலுப்பெறும் வண்ணம், மேற்கண்ட பதிலிலும், தவறான சில கருத்துகளை கூறியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை பதில் முழுவதுமே தவறானது. நமது அரசியலமைப்பு சட்டம் வருவாய் தரக்கூடிய அரசுப் பணியில் இருப்பவர்கள் மட்டுமே பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதையோ அல்லது பதவி வகிப்பதையோ தடை செய்கிறது. (Art 102(1) (a) & 191) மற்ற பணி அல்லது சுயதொழில் மூலமாக வருவாய் ஈட்டுபவர்கள் பதவி வகிக்க எந்த தடையுமில்லை.

தனியார் பணி என்று கூட இல்லை, நகராட்சியில் கணக்காளராக உதவி கணக்காளராக பணியாற்றும் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. (1985 (1) SCC 151 Ashok Kumar Bhattacharyya Vs Ajoy Biswas)

ஏன், தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தில் (Employees State Insurance Corporation ESI) மருத்துவராக பணியாற்றுபவர் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் உச்ச நீதிமன்றம் ESIல் பணிபுரிவது அரசுப் பணியல்ல என்று கூறி அனுமதித்தது.

அடுத்த தவறு, இந்த தடையின் நோக்கம், ஞாநி கூறுவது போல ‘எம்.பி. பணி என்பது மக்களுக்கான சேவை’ என்பது அல்ல. மாறாக சட்டமன்ற ஊழியராக இருப்பவரின் கடமைகளை அவரது சொந்த நலன்கள் பாதிக்கக் கூடாது என்பதுதான் என்றும் மேற்கண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக் காட்டப்படுகிறது.

மூன்றாவது தவறு தேவையில்லாமல், அம்பேத்கரையும் துணைக்கு அழைத்தது. மேற்கண்ட தடையினைப் பற்றிய எவ்விதமான விவாதமும் இல்லாமலேயே அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழு அதனை ஏற்றுக் கொண்டது. எனவே அம்பேத்கர் அந்தப் பிரிவினைப் பற்றி என்ன கருதினார் என்பதும், ஞாநி எங்கே படித்தார் என்று விளங்கவில்லை.

எனவே சட்டமன்ற உறுப்பினர் பதவியினை ஒருவர் இழப்பதற்கு, அவருக்கு வேறு வருவாய் இருந்தால் மட்டும் போதாது. அந்த வருவாய் அரசுப் பணியில் இருப்பதால் ஈட்டப்பட்டால் மட்டுமே, தகுதியிழக்க முடியும்!

-oOo-


அதே வலைத்தளத்தில் காணப்படும் மற்றொரு பதில்!

எனக்கென்னவோ இந்தப் பதிலுக்காகவே, கேள்வி வடிவமைக்கப்பட்டதாக தோன்றுகிறது. இந்த பதிலினை எழுதியது தங்கபாலு என்றால் தவறு என்று கூறியிருக்க மாட்டேன். ஆனால், வாசகர் தெளிவு பெறுவதற்காக இந்தப் பதிலினை கூறும் தோரணையில் ஞாநி எழுதியிருப்பதால், சில விளக்கங்களை அளிக்க வேண்டியதிருக்கிறது.

இந்திய விடுதலைக்கு மகாத்மா காந்திதான் காரணம் என்று கூறுவதே எவ்வளவு தூரம் பொருத்தமானது என்று தெரியவில்லை. மவுண்பேட்டன்தான் காரணம் என்று கூறினால் அபத்தம். குடும்ப வன்முறை சட்டம் மகாத்மா வகை என்றால், தகவல் அறியும் சட்டம் மவுண்ட்பேட்டன் ரகம்!

தகவல் அறியும் சட்டத்தின் வரலாறு 1966ம் ஆண்டு இந்தியாவும் கையெழுத்திட்ட ‘சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்’ (International Covenant on Civil and Political Rights) என்பதில் இருந்து தொடங்குகிறது, அடுத்து 1975ம் ஆண்டில் இந்திராகாந்தி தேர்தல் வழக்கில் ராஜ் நாராயணன் கேட்ட சில விபரங்களை அளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம், இந்தற்கான தேவை வலுப்பெற்றது.

பின்னர் பல்வேறு முயற்சிகள். உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்புகளில் சர்வதேச ஒப்பந்தங்களை மதிப்பதின் அவசியத்தினை வலியுறுத்தியது (AIR 1997 SC 3011, AIR 1999 SC 625)

2000ம் ஆண்டில் வாஜ்பாய் அரசால் Freedom of Information Bill 2000, தாக்கல் செய்யப்பட்டது 2002ம் ஆண்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றாலும், சில குறைபாடுகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆயினும் அந்த காலகட்டத்திலேயே, ராம் ஜேத்மலானி அரசு உத்தரவு மூலம் தகவல்களை பெற வழி செய்தார். ஆனால் அதிகாரிகளின் ஒத்துழையாமையால் அதுவும் முழுமை பெறவில்லை.

இறுதியில், மன்மோகன்சிங் பிரதம மந்திரியானதும், தற்பொழுதுள்ள தகவல் அறியும் சட்டம்’2005 நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் சோனியாவின் பங்கு, அவர் தலைமையில் இயங்கிய தேசிய ஆலோசனைக் குழு (National Advisory Council) இந்த சட்டதினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது.

-oOo-

இந்தியாவிற்கு முன்னதாகவே 55 நாடுகள் இந்த சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டன. முக்கியமாக பாக்கிஸ்தானில் 2002ல் அவசர சட்டம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே, இந்தியாவில் இந்த சட்டமானது காலத்தின் கட்டாயம் என்றுதான் கூற முடியுமே தவிர, சோனியாவுக்கு இதற்கான பாராட்டுதலை ஒரு அரசியல்வாதி தெரிவிக்கலாம்....பத்திரிக்கையாளர் தெரிவிக்க முடியாது.

ஞாநிக்கு உவப்பில்லாத மற்றொரு செய்தியும் இருக்கிறது. தமிழ்நாட்டில் தகவல் அறியும் சட்டம் 1997ம் ஆண்டு கருணாநிதி அரசால் இயற்றப்பட்டு அமுலில் இருந்து வருகிறது. தமிழக தகவல் அறியும் சட்டம்தான் இந்தியாவின் முதல் சட்டம். 1998ம் ஆண்டில் கோவாவில் இயற்றப்பட்டது. பின்னர்தான் மற்ற பல மாநிலங்களில்.

சோனியாவுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே கருணாநிதி, தகவல் அறியும் சட்டத்தினை இங்கு நடைமுறைப்படுத்திவிட்டார் என்பதற்காக ஞாநி கருணாநிதிக்கு பூச்செண்டை கொடுப்பாரா?

மதுரை
17/10/09

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஏன், விளையாட்டு மூலம் வருவாய் ஈட்டும் Professional Sportsperson களை தடை செய்யும் விதி ஏற்ப்படுத்தப்பட்டது தெரியுமா?






2 comments:

PRABHU RAJADURAI said...

http://marchoflaw.blogspot.com/2008/03/blog-post_31.html

ரவி said...

இந்த பதிவில் எழுத்துக்கள் சிறியதாக தெரிகிறதே ??