8.11.07

நீதிபதிகள் கடவுள் அல்ல!

‘நமது விமானப் பணிப்பெண்களில் பலர் மிகத் தடிமனாக இருக்கிறார்களே’

‘ஆம், அதனால்தான் அவர்கள் இருக்கைகளுக்கிடையே நடக்க சிரமப்படுகிறார்கள் போல’


சுமார் 15 வருடங்களுக்கு முன்னர், கேலியும் கிண்டலுமான மேற்கண்ட உரையாடலை நான் கேட்டது ஏதோ கேளிக்கை விடுதியிலில்லை! தங்கள் உரிமைகளின் கடைசிப்புகலிடமாக மக்கள் கருதும், சென்னை உயர்நீதிமன்றத்தில். அதுவும் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றிய நீதிபதிக்கும், சென்னையின் முக்கியமான சட்ட நிறுவனம் ஒன்றின் வழக்குரைஞருக்கும் இடையே, திறந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற உரையாடல்.

பலர் இந்த உரையாடலில் மகிழ்ந்து சிரித்தாலும், உயர்நீதிமன்றத்தில் புதிதாக தொழிலை ஆரம்பித்திருந்த எனக்கு சற்று வியப்பாக இருந்தது!

ஆயினும் இந்த சொல்லாடல்கள் (comments) எனக்கு இன்றும் மறக்கால் இருப்பதற்கு ‘that’s what they find it difficult to walk between the aisles’ என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் அந்த வழக்குரைஞர் கூறியதை வைத்து aisle என்ற வார்த்தையினை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டதும் ஒரு காரணம்.

***

இந்த உரையாடல் நடைபெற்ற காலகட்டத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டும்தான் இருந்தது என்பதை விடவும், இன்று போல தனியார் தொலைக் காட்சிகள் இல்லை என்பது இங்கு முக்கியம். ஏனெனில், இவ்வாறு தொலைக்காட்சிகள் வந்த பின்னர்தான், நீதிமன்றத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் தொலைக்காட்சி தவிர பிற அச்சு ஊடகங்களாலும் பெரியதொரு பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகின்றன என்பது எனது அனுமானம்.

இன்றைய சூழ்நிலையில் இதே போன்றதொரு கிண்டலை திறந்த நீதிமன்றத்தில் கூற ஏதாவது நீதிபதி தைரியம் கொள்வாரா என்பது கேள்விக்குறியது. ஏனெனில், அடுத்த நாளே, ‘விமானப் பணிப்பெண்கள் தடிமனாக இருக்கிறார்கள் - சென்னை உயர்நீதிமன்றம் வருத்தம்’ என்று தலைப்புச் செய்தி வெளியாகி, அந்த நீதிபதி பின்னர் பத்திரிக்கை கடிதங்களில் கிழித்து எறியப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம்.

***

சில வருடங்களுக்கு முன்னர் மும்பையில் தொழில் புரிகையில், பரபரப்பான வழக்கு ஒன்றில் தினசரி நீதிமன்றத்தில் நடக்கும் வாத பிரதிவாதங்களோடு, நீதிபதிகளின் சொல்லாடல்களையும் (comments) பத்திரிக்கைகள் வெளியிட, அதனால் மக்களுக்கு தவறான செய்தி சென்று சேருவதாக புகார் செய்யப்பட, நீதிபதிகள் அந்த வழக்கில் நீதிமன்ற சொல்லாடல்களை வெளியிடக் கூடாது என்று தடை செய்தனர். ஆயினும், இந்த தடை சட்டத்திற்கு புறம்பானது என்பது எனது கருத்து.

***

நீதிமன்ற சொல்லாடல்கள் தீர்ப்புகள் அல்ல. பல சமயங்களில் அவை நாம் நினைப்பது போல, நீதிபதிகளில் மனதில் உள்ள கருத்தின் வெளிப்பாடும் அல்ல. எனது தனிப்பட்ட அனுபவத்தில், நீதிபதிகள் தங்களுடைய மனதினை என்னுடைய வழக்கின் பக்கம் திருப்பிய பின்னர், மேலும் வேகமாக என் வழக்கிற்கு எதிரான கேள்விகளை எழுப்புவதை பார்த்திருக்கிறேன். ஏனெனில், இருக்கும் கொஞ்ச நஞ்ச சந்தேகத்திற்கும் என்னால் பதில் அளிக்க முடிந்தால்...தீர்ப்பினை எவ்வித குறைபாட்டிற்கும் வழியின்றி எழுதலாம் என்ற ஆதங்கமே தவிர வேறல்ல!

ஆனால், வழக்கினை கவனித்துக் கொண்டிருக்கும் கட்சிக்காரருக்கோ, ‘என்ன நீதிபதி நம்முடைய வழக்குரைஞரை இப்படிப் போட்டு குடைகிறார். நம் பக்கம் சாதகமாக இல்லையோ?’ என்று கவலை ஏற்படுவதுண்டு!

சில அவசரகுடுக்கை கட்சிக்காரர்கள், நிலைமை புரியாமல் வேறு தவறான யூகங்களுக்கு உட்பட்டு முட்டாள்தனமான சில முடிவுகளுக்கு தங்களை இட்டுச் செல்வார்கள்.


***

சமீப காலமாக பொது நலம் சார்ந்த வழக்குகளில், இவ்வாறு நீதிமன்றங்களில் நடக்கும் சொல்லாடல்கள், ஊடகங்களால் பரபரப்பாக்கப்பட்டு, நீதிமன்றங்களின் நம்பகத்தன்மையினையே கேள்விக்குறியாக்கும் நிலமைக்கு இட்டுச் சென்றுள்ளன.

உதாரணமாக, சமீபத்தில் வாதப் பிரதிவாதம் முடிந்த இட ஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகள் எழுப்பும் கேள்விகள் ஏதோ, அவர்களின் தீர்ப்பு போல பத்திரிக்கைகளால் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவே உணர்கிறேன். நான் தவறாமல் படிக்கும் ‘இந்து’வில் இந்த செய்திகளுக்கு அளிக்கப்பட்ட தலைப்புகள் இவ்வாறான எண்ணத்தை என்னுள் தோற்றுவித்தது.

நீதிபதிகள் மனிதர்கள். அவர்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு விருப்புகள் (bias) உள்ளது உண்மைதான். அவ்வித விருப்புகள் அவர்களது நீதிமன்ற சொல்லாடல்களில் வெளிப்படுவதும் எதிர்பார்க்கக்கூடியதே! ஆயினும், அந்த விருப்பினை தீர்ப்பாக வடிப்பது கடினம். அவ்விதமான விருப்பு சார்ந்த தீர்ப்புகள், பிரபலப்படுத்தப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் தவறு இல்லை...தேவையானதும் கூட!

ஆனால், சொல்லாடல்கள் (comments) அவ்வளது தீவிரமாக எடுத்து அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராயப்பட வேண்டியவை அல்ல!

காலை முதல் மாலை வரை, மதிய இடை வேளை தவிர மற்ற நேரங்களில் ஒரு தேநீருக்காக கூட இருக்கையிலிருந்து எழ இயலாத ஒரு நீதிபதி, இறுகிய முகத்துடன் சேரியமாக ஒரு வழக்கினை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, சேடிஸம். நான்கு பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், அவர்கள் தங்கள் பணியில் இயல்புத் தன்மையற்று இருக்க வேண்டுமென்பது, சலிப்பூட்டும் ஒரு அலோசனன.

அசதி அதிகமானால், எழுந்து அல்லது உட்கார்ந்தபடியே கைகளை பின்னுக்கு தள்ளி சோம்பல் முறித்துக் கொள்வது ஒரு காவல்காரருக்கு கூட இயலுவது போல ஒரு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இயலாது.

ஆயினும் ஊடகங்களை மட்டும் நான் குறை கூறவில்லை. நீதிபதிகளும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியினை புரிந்து கொண்டு தங்கள் வார்த்தைகளை சற்று கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளனர்.

‘தமிழக பந்த்’ வழக்கில் முதலில் நீதிபதி அவசரத்தில் தெளித்த வார்த்தைகளை, ஏதோ ‘ஆட்சியினைக் கலைக்கும் சர்வ அதிகாரம் அவரது கையில் இருப்பதைப் போலவும், தமிழக அரசு அதோ கதி’ என்ற ரீதியிலும் ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் அன்று திரும்ப திரும்ப ஓட்டிக் கொண்டேயிருந்தன!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது அவ்வளவு எளிதல்ல. தகுந்த அறிவிப்பு வழங்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு பல்வேறு காரணிகளை கவனத்தில் கொண்டே பின்னர் தீர்ப்பு வழங்க முடியும். எனவே அன்று கூறிய வார்த்தைகள், அவரது பணியின் இடையே நடைபெற்ற தனிப்பட்ட சொல்லாடல் என்ற அளவிலேயே நாம் பார்க்க வேண்டும், என்பதே எனது கருத்து.

ஆனால், ஏதோ ஒரு தீர்ப்பினைப் போல பெரிய முக்கியத்துவம் அளித்து, நீதிமன்ற நடவடிக்கைகளை பெரிதும் அறிந்திராத மக்களிடம் தேவையற்ற விவாதத்தினை எழுப்பியதில் ஊடகங்களும் ஒரு காரணமாகி விட்டன!

‘Let the Judges be judged by their Judgements but not on their casual outbursts...they are after all humans like you and me’

பிரபு ராஜதுரை
08.11.07

7 comments:

Doctor Bruno said...

தெளிவான விளக்கம்

Nakkiran said...

GOT IT Sir....

cheena (சீனா) said...

துளசி அறிமுகப் படுத்திய பதிவு இது. இன்று தான் இங்கு வந்திருக்கிறேன் என நினைக்கிறேன். விமானப் பணிப் பெண்கள் குண்டாக இருக்கிறார்கள் - உயர் நீதி மன்றம் கடுங் கண்டனம் - இது தான் தைப்புச் செய்தியாக இருக்கும்.

PRABHU RAJADURAI said...

The following comment by anonymous is edited to remove an improper word...sorry

//
‘Let the Judges be judged by their Judgements but not on their casual outbursts...they are after all humans like you and me’
//

ரொம்பச் சரி.


மோடியைப் பற்றி casual outburst ஆகச் சொன்ன ஒரு ஜட்ஜின் வார்த்தையையே இன்னும் பல &%*# பயன் படுத்திக் கொண்டு இருக்கிறார்களே, அதைப் பற்றி ??

கானகம் said...

Dear Rajadhurai,

Good presentation of messages. It is not only Air hostesses but also applicable for every one. Could any Judge will have adare to tell all the TN Polices are too big to run beghind the culprit?? They will not.. But for Air Hostess they can because it was 15 years back.. :)
Anyway, I am also from Madurai district.. So, greetings to you and I enjoyed readingyour posting..

PRABHU RAJADURAI said...

ஏறக்குறைய இதே விடய்ம் குறித்தான ஆங்கிலப் பதிவு

http://lawandotherthings.blogspot.com/2009/07/working-of-judicial-mind-reflecting-on.html

PRABHU RAJADURAI said...

”It is hardly a surprise that its display of annoyance has led agencies such as the CBI to interpret oral observations made in the course of the hearing as if they were judicial diktat” ஹிந்துவின் தலையங்கம், இதே போன்றதொரு பிரச்னையில் THE WELLSPRING OF JUDICIAL ACTIVISM http://www.thehindu.com/opinion/editorial/article1534948.ece