8.11.07

சின்னதாய், ஒரு மின்னல்!

ஏறக்குறைய 500 வருடங்களுக்கு முன்னர் நடந்த கதை. மார்ட்டின் கெரி பிரஞ்சு தேசத்தை சேர்ந்த பெரிய ஒரு நிலச்சுவாந்தாரின் மகன். மார்ட்டினுக்கும் பெட்ராண்டே டி ரால்ஸ் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றதென்றாலும், திருமண வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. சில வருடங்களாகியும் அவர்களுக்கு குழந்தையில்லை. மார்ட்டினுக்கு பாலியல் ரீதியான குறைபாடுகள் இருந்ததே காரணம் என்று சொல்லப்பட்டது. ஒரு கிராம வைத்தியப் பெண்ணிடம் ஆலோசனை கேட்க, பின்னர் என்ன நிகழ்ந்ததோ மார்ட்டினுக்கு புத்திர பாக்கியம் அமைந்தது.

சில காலம் கழித்து, மார்ட்டினுக்கும் அவரது தந்தைக்கும் குடும்ப சொத்து விவகாரமாக சச்சரவு எழ, வீட்டை விட்டு தனியே வெளியேற்றப்பட்டார் மார்ட்டின். பின்னர் அவர் தனது தந்தையின் பூர்வீக நாடான ஸ்பெயின் தேசத்துக்கு சென்றதாகவும், அங்கிருந்த ராணுவத்தில் கூலிப்படையாக சேர்ந்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.

எட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன. மார்ட்டினின் தந்தை மறைந்திருந்தார். அவருடைய அளப்பறிய சொத்துக்கள் அவரது உறவினர்களின் மேற்பார்வையில். பெட்ராண்டேவோ உறவினர்களின் பாதுகாப்பில் தனது குழந்தையுடன் தனியே அதே கிராமத்தில் வசித்து வந்தார்.

திடீரென ஒரு நாள் வாசலில் மார்ட்டின்! பெட்ராண்டேவையும் குழந்தையையும் தேடி!!

முதலில் அனைவருக்கும் சந்தேகம். பின்னர் வந்தவருக்கு உருவ ஒற்றுமை இருந்தது. முன்னர் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் நினைவு கூறவும் முடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக பெட்ராண்டேவுக்கு வந்த மார்ட்டினை மிகவும் பிடித்து விட்டது, முக்கியமாக மார்ட்டினிடம் இந்த எட்டு ஆண்டுகளில் தென்பட்ட பெரிய மாற்றம். மார்ட்டினுக்கோ காதல் காத தூரம். வந்தவனோ அதில் வல்லவனாக இருந்தான். திருமணமான பின்னர் முதன் முறையாக மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள் பெட்ராண்டே.

மார்ட்டினின் வருகையும், மனைவியுடனான புதிய வாழ்க்கையும் மற்ற உறவினர்களை சங்கடப்படுத்தியது. அவர்கள் இத்தனை நாட்கள் அனுபவித்து வந்த சொத்துக்களுக்கல்லவா வேட்டு வந்து விட்டது. அவர்கள் பெட்ராண்டேவின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் விதைத்தனர். 'வந்தவன் அவளையும் சொத்துக்களையும் திருட வந்தவன்' என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வந்தனர். பெட்ராண்டேவுக்கோ தர்ம சங்கடம். அவள் கஷ்டம் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

பெட்ராண்டே வந்தவனை மார்ட்டின் என்று நம்பினாலும், வேறு வழியில்லாமல் உறவினர்களுடன் சேர்ந்து விரும்பாத ஒரு வழக்கை தாக்கல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் நீதிமன்றம், வழக்கின் இறுதியில், வந்தவன் ஒரு போலி என்று நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற நிலைக்கு வந்தது.

நீதிபதி தீர்ப்பினை 'வந்தவன் மார்ட்டின். அவர் அவருக்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்தலாம்' என்ற தனது தீர்ப்பினை வாசிக்க ஆரம்பித்து விட்டார். பெட்ராண்டேவுக்கோ உள்ளுக்குள் மகிழ்ச்சி...

தீடீரென செயற்கையான கட்டைக் கால்களுடன் ஒரு நபர், நீதிமன்றத்திற்குள் வந்தார்....பார்த்தால் மார்ட்டின்!!!

வந்தவன், மார்ட்டினுடன் ஸ்பெயின் கூலிப்படையில் பணியாற்றிய பன்செட்டே. பல்குரல் மன்னன் மற்றும் சிறந்த நடிகன். மார்ட்டினை சிநேகம் பிடித்த அவன், மார்டினின் முழுக்கதையும் கேட்டு அறிந்து பின்னர் மார்ட்டினாக உருமாறியிருந்தான். இருவரும் நன்கு பரிசோதிக்கப் பட்டு, பன்செட்டே போலி என்பது உறுதியானது.

இறுதியில் பன்செட்டே தான் போலி என்பதை ஒத்துக் கொள்ள...சில நாட்களில் தூக்கிலிடப்பட்டான்.

(One Author named Natalie Zemon Davis has written this story into a book titled The Return of Martin Guerre (1983). This has also been made into a film)


(இதே போன்றதொரு இந்திய வழக்கினைப் பற்றி எழுதுவதற்காக, இணையத்தில் தேடியதில் கிடைத்த சுவராசியமான மற்றொரு சம்பவம் இது. இந்திய வழக்கு ‘நான் யார்?’ என்ற பதிவில்)


(குஜராத் படுகொலைகளில் மோடியின் பங்கு பற்றி தெஹல்கா ஆய்வுகளை படித்த, பார்த்த எனக்கு, முன்பு நான் எழுதிய ‘விஷம் கக்கிய பாம்பு’ என்ற அமெரிக்க வழக்கு ஒன்றும் ஞாபகம் வந்தது)

No comments: