26.10.07

கட்டாய திருமணப் பதிவு!

பொதுநலம் குறித்த விடயங்களில் நமது நீதிமன்றங்களின் செயல்பாடு ‘படித்த நடுத்தர மக்கள்’ என்று வகைப்படுத்தப்படும் மக்கள் கூட்டத்தின் பொதுவான கண்ணோட்டத்திலேயே அமைகிறது என்ற எண்ணம், எப்போதுமே எனக்கு உண்டு. ஒடுக்கப்படும் மக்களுக்காக அரசு கொணரும் நலத்திட்டங்களின் பலன்கள், இறுதியில் மத்தியதர மக்களால் அபகரிக்கப்படுவதைப் போலவே நீதிமன்றத்தின் முன் தங்களின் குரல்களை ஒலிக்கவியலா மக்களுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுநல வழக்குகள், இன்று மத்தியதர மக்களால், தங்கள் ஆதங்கங்களை கொட்டும் ஒரு ஊடகமாக கைப்பற்றப்பட்டுள்ளது.

அரசின் மற்ற இரு அங்கங்களான நிர்வாகம் (executive) சட்டமியற்றுதல் (legislature) ஆகியவற்றின் முன் வைக்கப்பட வேண்டிய அனைத்து கோரிக்கைகளும் இன்று, பொதுநல வழக்குகளாக நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்படுவதில் எரிச்சலுறும் நீதிபதிகள் சமயங்களின் அடித்தட்டு மக்களின் (voiceless people) பிரச்னைகளை தாங்கி வரும் வழக்குகளையும் தூக்கிக் கடாசி விடுகின்றனர்.

திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்வது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவும், இன்றைய சூழ்நிலையில் அத்தியாவசியமான ஒன்றா என்பது கேள்விக்குறியதே!


***

பெரும்பான்மையான திருமணங்கள் இங்கு பதிவு செய்யப்படாமல் போவதால், பின்னர் ஏற்படும் பிரச்னைகளை கவனத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம், திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் வண்ணம் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் விதிகளை (Rules) வகுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

வழக்கம் போலவே, முஸ்லீம் பெர்ஸனல் லா போர்டு (Muslim Personal Law Board) தனது மெல்லிய எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. விடயம் என்னவென்று புரியாமலே, மீண்டும் தனிநபர் சட்டம் (Personal Law) பொது சிவில் சட்டம் போன்ற பிரச்னைகளை கிளப்பப்படும் அபாயம் உள்ளது.


***

பத்திரிக்கைச் செய்திகளை படிக்கையில், உச்ச நீதிமன்றா உத்தரவு ஏதோ இஸ்லாமியர்களின் உரிமையில் தலையிடுவது போன்ற பயத்தினை (apprehension) ஏற்ப்படுத்துகிறது என்றாலும் இப்படி ஒரு விதியினால் பிரச்னை இஸ்லாமியர், கிறிஸ்தவர் அல்லாத மற்றவர்களுக்கே உள்ளது.

கிறிஸ்தவர்களில் திருமணங்கள் தேவாலயங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இஸ்லாமியர்களின் திருமணங்களும் அவர்கள் சார்ந்திருக்கும் ஜாமாத்தில் பதிவு செய்யப்படுகின்றன. பிறப்பு, இறப்புகள் எவ்வாறு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றனவோ, அவ்வாறே தேவாலயங்களும், ஜமாத்துகளும் பதிவாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டலாம்.

ஆனால் மற்றவர்கள்?

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடத்தப்படும் திருமணங்களை பதிவு செய்ய அங்கேயே ஏற்பாடு செய்யலாம். எழுதப்படிக்கவே தெரியாதவர்கள் பூசாரிகளாக இருக்கும் குக்கிராம கோவில்களில், திருமணங்களை எப்படி பதிவது? கூடி வாழ்வதற்கு கோவில்களை கூட நாட முடியாத மக்களை என்ன செய்வது?

படித்த நடுத்தர மக்களை திருமணங்களை பதிவு செய்ய கட்டாயப்படுத்தலாம். பெருவாரிய மக்கள் கூட்டம் இங்கு அன்றாட உணவுக்கே அல்லல்படுகையில், திருமணப் பதிவிற்காக அவர்கள் மெனக்கெடப் போவதில்லை!

***

திருமணப் பதிவினை எப்படி கட்டாயப்படுத்துவது?

சொத்துப் பத்திரம் என்றால், பதியாவிட்டால் சொத்து உங்களுடையதில்லை எனலாம். திருமணம் செல்லாது என்று கூற முடியாது. இவ்வாறாக திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய விதிகளை வகுக்க கூறும் இந்து திருமண சட்டத்தின் பிரிவு 8ல், பதிவு செய்யாவிட்டால் ‘இருபத்தி ஐந்து’ ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்று இருக்கிறது. அவ்வளவுதான் முடியும்.

இருபத்தி ஐந்து ரூபாய் அபராதம் விதிப்பதற்காக வழக்கு தொடருவதற்கு, அரசு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

***

கடந்த வாரம் தில்லியிலிருந்து ஆக்ராவிற்கு காரில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. போகும் வழியில் நான் பார்த்த எந்த ஒரு டிராக்டருக்கும் முன்னாலும் சரி, பின்னாலும் சரி பதிவு எண்...இல்லை பதிவு எண் எழுதியிருக்கும் போர்டு கூட இல்லை!

எந்த டிரைலரிலும் பின்னால் சிவப்பு விளக்கு வேண்டாம், சற்றே தெளிவாக தெரியும் பெயிண்ட் கூட அடிக்கப்பட்டிருக்கவில்லை!

சூப்பர் ஹைவேயான தில்லி-ஆக்ரா சாலையில் இரவில் சற்று கவனக்குறைவாக இருந்தாலும், முன்னால் செல்லும் டிராக்டருடன் மோதக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இவ்வகை சட்ட மீறல்களை, நாட்டின் தலைநகருக்கு அருகிலேயே நம்மால் தடுக்க முடியவில்லை. திருமண பதிவை கட்டாயப்படுத்துவதாவது!

மக்களால் கேலிக்கூத்தாக்கப்படும் ஒரு விதியினை இயற்றுவதற்கு பதிலாக, அரசினை உச்ச நீதிமன்றம் வேறு உருப்படியான வேலைகளை பார்க்க உத்தரவிட்டிருக்கலாம்.

மதுரை
26.10.07

2 comments:

வடுவூர் குமார் said...

நீதிமன்ற உத்திரவு,புதியவர்களுக்கு இது அவசியம் என்று தெரியப்படுத்தவாது உதவுமே!!
எல்லா உத்திரவையும் செயல்படுத்த அரசாங்கத்து செலவு ஆகத்தான் செய்யும், வருங்காலத்தை கருத்தில் கொண்டு இதில் செலவு செய்யலாம் என்றே எனக்கு தோன்றுகிறது.

Anonymous said...

If so let us abolish all laws and rules.Some measure even if implemented 50% will bring in more benefits than no measure.