25.1.07

நான் யார்?

அசாதாரண நிகழ்ச்சி

"உன் பெயர் என்ன?"

அந்த ஜெய்தேபூர் கிராம ஜமீந்தாரினி பங்களாவின் வாசலில் ஜமீந்தாரினி, அவரது மகன், ஜமீன் அலுவலர்கள், வேலையாட்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் குழுமியிருக்க அவர்கள் நடுவே நின்றிருந்த அவனைப் பார்த்துதான் அப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

கேள்வியை கேட்டது, அந்த பங்களாவுக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர். கூட்டத்தில் வேறு எந்தவித முணுமுணுப்பும் இல்லை. எல்லோர் மனதில் இருந்ததும் அந்தக் கேள்விதான். அவனோ முகத்தில் எவ்வித சலனமும் இன்றி வெளிறிய கண்களோடு கூட்டத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். ஜடாமுடி, நீண்ட தாடி இடுப்பை மட்டும் மூடிய அரைகுறை ஆடை என்று இலக்கின்றி சுற்றித்திரியும் சன்னியாசி போல இருந்தாலும் அந்தக் கூட்டம் இதையெல்லாம் கடந்து அவனது வெள்ளை சருமத்திலும் முக தேஜஸிலும் வேறு எதையோ தேடியது. அவனது சாம்பல் அள்ளிப் பூசப்பட்ட தேகத்தின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் குண்டூசிகள் போல ஆயிரக்கணக்கான கண்கள் துளைத்துக் கொண்டு இருந்தது.

"ராமேந்திர நாராயணன் ராய செளத்ரி" தீர்மானமாக பதில் வந்தது.

"உன் தந்தையின் பெயர்?"

"ராஜா ராஜேந்திர நாராயண் ராய செளத்ரி" இந்த முறை உடனடியாக வந்தது பதில்.

"உன் தாயின் பெயர்?"

"ராணி பிலாஸ்மணி தேவி"

கூட்டத்தில் அமைதி குலைந்து ஒரு சலசலப்பு எழுந்தது. எல்லாவற்றையும் அடக்கி ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.

"ராஜா, ராணி பெயரெல்லாம் எல்லாருக்கும் தெரியும். இதுல என்னப்பா ஆச்சர்யம். சொல்லு. உன்னோட தாதி பெயர் என்ன?"

"அலோகா"

ஆச்சர்யங்களையே எதிர்பார்த்தே காலத்தை ஓட்டும் மக்கள் கூட்டத்துக்கு மேலும் பொறுமையில்லை. "வெற்றி! வெற்றி!!" என்று அர்த்தம் கொள்ளும் "ஹல்லுதானி! ஜெயதானி!!" என்ற குரல்கள் விண்ணை எட்டியது.

"மெஜோ குமார் வாழ்க" என்ற கூக்குரல்கள் எழுந்தன. பெண்கள் குலவையிட்டனர். இந்த ஆரவாரத்தில் உணர்ச்சியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த அவன் மயங்கிச் சரிந்தான்.........

***

அடுத்த நாள், மே மாதம் 5ம் தேதி, 1921ம் வருடம் கிழக்கு வங்காளத்தில் உள்ள பவால் ஜமீனை நிர்வகிக்க அரசால் நியமிக்கப்பட்ட மேலாளர் F.W. நீதம், ஜெய்தேபூரில் இருந்து டாக்கா மாவட்ட கலெக்டர் லிண்ட்ஸேக்கு அனுப்பிய ரகசிய தாக்கீது இவ்வாறாக தொடங்குகிறது.

'அன்பார்ந்த லிண்ட்ஸே, மிகவும் அசாதாரணமான மற்றும் விநோதமான நிகழ்ச்சியொன்று இங்கு நடைபெற்று, ஜமீனின் உள்ளேயும் வெளியேயும் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது...............'

ஆம் அது உண்மையிலேயே அசாதாரணமான நிகழ்ச்சிதான். மனித குல வரலாறு அறிந்தவரை நான்கோ அல்லது ஐந்து முறையேதான் இப்படிப்பட்ட அசாதாரணங்கள் நிகழ்ந்துள்ளன. பின்னர், இறந்து எரிக்கப்பட்டவர் திரும்பவும் உயிருடன் அதுவும் 12 ஆண்டுகள் கழித்து வருவதாக சொல்வது சாதாரண நிகழ்ச்சியா என்ன?

இந்திய நீதித்துறைக்கே பெரிய சவாலாக விளங்கி இன்று வரை விடையே காணப்படாத கதை இது.



பவால் ஜமீன்

பவால் ஜமீன், வங்காள தேசத்தின் தலைநகரான டாக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த செல்வாக்கு மிகுந்த ஒரு ஜமீன். சொல்லப் போனால் சுதந்திரத்திற்கு முன்பு, கிழக்கு வங்காளம் என்று அழைக்கப்பட்ட மாகாணத்தில் இருந்த பெரிய ஜமீன்களில் அதுவும் ஒன்று. ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஜமீன் சொத்துக்களில் இருந்து வந்த வருட வாடகையே சுமார் ஆறரை லட்ச ரூபாய்கள்.

ஜமீனின் மாளிகை, டாக்காவில் இருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள ஜெய்தேபூர் என்ற சிறிய கிராமத்தில் அமைந்திருந்தது. பவால் ஜமீனின் சொத்துக்கள் பல நகரங்களில் பரந்து விரிந்திருந்தது. பவால் ஜமீந்தார் ராஜேந்திர நாராயண் ராய், பவால் ராஜா என்றே அழைக்கப்பட்டார். அவருக்கு டாக்காவில் பங்களா இருந்தாலும், ஜெய்தேபூரில் இருந்த பெரிய ஜமீன் மாளிகையிலேயே வசித்து வந்தார்.

பவால் ராஜாவின் மனைவி ராணி பிலாஸ்மதேவி. ஜமீன் தம்பதிகளுக்கு முதல் இரண்டும் மகள்கள். பின்னர் மூன்று மகன்கள். கடைசி ஒரு பெண். மகன்கள் மூவரும் பரோ குமார், மெஜோ குமார் மற்றும் சோட்டோ குமார் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இரண்டாவது மகனான மெஜோ குமார்தான் ராமேந்திர நாராயண் ராய். இவர்களோடு ராஜாவின் தாய் ராணி சத்யபாமா மற்றும் சகோதரியும் குடும்ப உறுப்பினர்களாக ஜெய்தேபூர் மாளிகையிலேயே வசித்து வந்தனர்.

இப்படிப்பட்ட அப்போதைய கிழக்கு வங்காளத்தின் மிகப்பெரிய நிலச்சுவான்தாரான பவால் ராஜா 1901ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி மரித்துப் போனார்.

பவால் ராஜா மரிக்கும் போது மேஜோ குமாருக்கு சுமார் 17 வயது. ராஜா விட்டுச் சென்ற உயிலின் படியும், அப்போதய சட்டப்படியும் ஜமீன் சொத்துக்கள் முழுவதும் அவரது மூன்று மகன்களையுமே சமபங்காக சென்று சேர்ந்தது. ஆனாலும், ராஜாவின் உயில்படி ராணி அவரது வாழ்நாள் முழுவதும் ஜமீன் சொத்துக்களை மூன்று மகன்களுக்கான டிரஸ்டியாக இருந்து நிர்வகிக்க வேண்டியிருந்ததால், ராணி அவர் மறைந்த தினமான 21 ஜனவரி 1907ம் ஆண்டு வரை ஜமீன் சொத்துக்களுக்கான டிரஸ்டியாக இருந்தார்.

இதற்கிடையில், மூத்த குமாருக்கு அவரது தந்தை இறந்த வருடமான 1901ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
மெஜோ குமாருக்கு 1902ம் ஆண்டும் சோட்டோ குமாருக்கு 1904ம் வருடமும் திருமணம் நடந்தது. இவர்களது மூன்று சகோதரிகளுக்கும் அடுத்தடுத்து திருமணம் நடக்க, அனைவரும் ஜெய்தேபூர் மாளிகையிலேயே கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.


தொடர்ந்த மரணங்கள்

பொதுவாக நல்ல நிலைமையுடனும், புகழுடனும் விளங்கிய பவால் ஜமீனுக்கு அதன் ராணி மறைந்த பின்னர் துயரங்கள் ஒர் சாபம் போல அடுத்தடுத்து தொடர்ந்தன. இந்திய ராஜகுமாரர்களுக்கான, குறிப்பாக ஆங்கில ஆட்சியின் போது அதிகமாக இருந்த, பொதுவான சில குணங்கள் மெஜோ குமாரையும் விட்டு வைக்கவில்லை. இளம் வயதிலேயே தந்தையை இழந்த மெஜோ குமாருக்கு விலங்குகளை வேட்டையாடுவதில் இருந்த பிரியம் பெண்களை வேட்டையாடுவதிலும் இருந்தது. விளைவு, ஆங்கிலேயர்கள் நமக்கு அளித்த கொடைகளில் ஒன்றான 'பறங்கி நோய்' என்று தமிழகத்தில் அழைக்கப்பட்ட 'சிபிலிஸ் நோய்' அவரை தொற்றிக் கொண்டது.

அது சிபிலிஸ் ஆட்கொல்லி நோயாக இருந்த காலம். பெனிஸிலின் கண்டுபிடிக்கப்பட்டது 1928ம் வருடமாக இருந்தாலும் அது ஒரு மருந்தாக தயாரிக்கப்பட்டது முப்பதுகளின் கடைசியில். மேலும் சிபிலிஸுக்கு பெனிஸிலின் சிறந்த மருந்து என்று அறியப்பட்டது 1943ல். ஆனால் குமாருக்கு இந்த நோய் பீடித்த ஆண்டோ, துரதிஷ்டவசமாக 1905.

நான்கே ஆண்டுகளில் மெஜோ குமாருக்கு 'Tertiaray Stage' என்று சொல்லப்படும் நோய் முற்றிய நிலை. இத்தகைய ஒரு லையில் கும்மாஸ் (gummos) என்று சொல்லப்படும் கொப்புளங்கள் தோலுக்கு அடியிலான திசுக்களில் ஏற்படும். பின்னர் எலும்புகள் பாதிக்கப்பட நோயானது ஈரல், கிட்னி மற்றும் இதயத்தை தாக்கி மரணத்தை விளைவிக்கக் கூடியது. குமாருக்கும் ஏற்கனவே கால்கள் மற்றும் கைகளில் முழங்கைக்கு மேல் கொப்புளங்கள் தோன்றி புண்களாய் வெடித்திருந்தது. வேறு மருத்துவ நடவடிக்கைகள் இன்றி, ஏதாவது மலை வாசஸ்தலத்தில் சென்று ஓய்வெடுக்கும்படி அவருக்கு ஆலோசனை சொல்லப்பட்டது.

1909ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி மெஜோ குமார், தனது மனைவி, குடும்ப மருத்துவர் அஷுடோஷ் தாஸ்குப்தா மற்றும் 21 வேலையாட்கள் சகிதமாக டார்ஜிலிங் நோக்கி பயணமானார். அவருடன் சென்ற மற்றொறு முக்கியமான நபர் குமாரின் மைத்துனர் சத்தியேந்திரா. அவர்தான் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர்.

ரயிலில் குமார் டார்ஜிலிங் சென்று சேர்ந்தது 20ம் தேதி. அங்கு மைத்துனாரால் வாடகைக்கு பிடிக்கப்பட்ட 'ஸ்டெப் அஸைட்' என்ற பங்களாவில் தங்கினார். டார்ஜிலிங் வந்த சில நாட்களிலேயே உடல் நிலை மோசமடைய மே மாதம் 8ம் தேதி பவால் ஜமீனின் இரண்டாவது வாரிசு மெஜோ குமார் தனது 25ம் வயதில் மரித்துப் போனார். மெஜோகுமாருக்கு சிகிச்சை அளித்த ஆங்கிலேய மருத்துவர் நோயாளி இறந்துவிட்டார் என்று அறிவிக்க மறுநாளே மெஜோகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. 8ம் தேதி இரவு கிடைத்த 'குமார் கவலைக்கிடம். உடனே கிளம்பவும்' என்ற தந்தியால் 9ம் தேதி டார்ஜிலிங்கிற்கு ரயிலேறிய சோட்டோ குமாரின் வண்டி பாதியிலேயே றுத்தப்பட்டு அவருக்கு குமார் மரித்த சேதி சொல்லப்பட, இனி டார்ஜிலிங் செல்வது தேவையில்லை என்று நினைத்த அவர் மாளிகைக்கு திரும்பி விட்டார்.

12ம் தேதி சத்தியேந்திரா, இளம் விதவையும் தனது தங்கையுமான பீபாபட்டியையும் மற்ற அனைவரையும் அழைத்துக் கொண்டு ஜெய்தேபூர் திரும்பினார். 8ம் தேதி நள்ளிரவு குமார் இறந்து போனதாகவும் மறுநாள் காலை அவரது பூத உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு டார்ஜிலிங்கிலுள்ள புதிய இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.


இறந்த குமாருக்கு சடங்குகள் அனைத்தும் ஜெய்தேபூரில் நடைபெற்றது. விரைவில் பீபாபட்டியின் சகோதரர் சத்யேந்திரா அவள் சார்பில், மெஜோ குமாருக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் பொருட்டு ஜமீன் நிர்வாகத்தில் தலையிட அது பல பிரச்னைகளை கிளப்பியது. பல சட்ட புணர்களை அது சம்பந்தமாக அவர் ஆலோசிக்க, அதில் ஏதும் பலனின்றி விரைவில் அவர் கல்கத்தாவுக்கு குடியேறி விட்டார். தனது சகோதரியை தன்னுடன் வருமாறு அவர் வற்புறுத்தியும் பீபாபட்டி அவருடன் செல்லவில்லை.

பீபாபட்டிக்கு கிடைத்ததென்னவோ மெஜோகுமாரின் காப்பீடு பணமான 30,000 ரூபாயும், மாத அலவன்ஸான ரூபாய் 1100ம்தான். பின்னர் அவருக்கு மெஜொகுமார் பங்கு சொத்திலிருந்து ரூபாய் 35,000 அளிக்கப்பட ஜெய்தேபூரில் இருந்து அவரும் கல்கத்தாவில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறிவிட்டார். அதன் பிறகு அவர் ஜெய்தேபூர் திரும்பவேயில்லை.

***

இதற்கிடையில் பவால் ஜமீனை பிடித்த சாபம் அதனை விடவில்லை. மெஜோகுமார் இறந்த அடுத்த வருடம் மூத்த குமார் தனது 28 வயதில் இறந்து போனார். பின்னர் பாவல் ஜமீனில் கடைசி ஆண் வாரிசான சோட்டோ குமார் 1913ம் வருடம் தனது 26ம் வயதில் இறந்து போனார். அடுத்தடுத்து பவால் ஜமீன் இளவரசர்கள் குறைந்த வயதில் வாரிசு எதுவும் இன்றி இறந்து போனது விதியின் விநோத விளையாட்டுகளில் ஒன்று.

இளவல்களின் சொத்துக்களுக்கு ஆண் வாரிசு ஏதும் இல்லாமையால் ஒன்றன் பின் ஒன்றாக ஜமீன் சொத்துக்கள், வாரிசு இல்லாத ஜமீனை நிர்வகிக்கும் எஃப்.டபிள்யூ.நீதம் (F.W.Needham) என்ற ஆங்கிலேய எஸ்டேட் அலுவலரின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இதன் மூலம், கிழக்கு வங்காளத்திலேயே பெரிய ஜமீனான பவால் ஜமீன் வாரிசு இல்லாத மூன்று விதவைகளை உள்ளடக்கி ஆனால் யாருடைய நிர்வாகத்திலும் இல்லாமல் ஆங்கிலேய அரசு அலுவலரின் கைகளுக்கு சென்று விட்டது.

விரைவில் ஜமீன் பெண்கள் அவரவர் இடங்களில் சென்று வசிக்க ராஜாபாரி என்று அழைக்கப்பட்ட பவால் ஜமீன் மிக்க செல்வாக்குடன் கோலோச்சிய ஜெய்தேபூர் மாளிகை காலியாகிப் போனது. வயாதான ராணி சத்யபாமா கூட மாளிகையில் வசிக்காமல் தனது பேத்திகளுடனே வசித்து வந்தார்.

1920ம் வருடம் ஜமீன் மூத்த பெண்ணும் ஜமீனிலேயே வசித்து வந்த அவரது அத்தையும் இறந்து போனார்கள்.


அழகிய சன்னியாசி

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் டாக்காவின் 'பக்லாண்ட் பண்ட்' (Buckland Bund) காலை மாலை நடைக்காகவும் மற்றும் பொழுது போக்கிற்காகவுமான சிறந்த அழகிய இடம். பூரிகங்கா (Buriganaga) நதிக்கரையோரம் அமைந்த பொதுவழி. அநேக மக்கள் மாலைவேளையில் ஓய்வுக்காக தேர்ந்தெடுக்கும் இடம் அது.

உடல் இளைப்பாறுவதற்காக 'பக்லாண்ட் கரை' சென்ற டாக்கா மக்கள் அங்கு சில காலமாக காலை மாலை இரவு என என்நேரமும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்த சன்னியாசியை கவனிக்க தவறவில்லை. அவன் எப்போது வந்தான் என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. 1921 ஜனவரி அல்லது மிஞ்சிப் போனால் 1920 டிசம்பர் முதல் அங்கு அமர்ந்திருக்க வேண்டும்.

சந்யாசிகளுக்கே உரிய வாரப்படாத அழுக்குப் படிந்த ஜடாமுடி, நீண்ட பெரிய தாடி, இடுப்பை மட்டுமே மூடிய சிறிய து. உடல் முழுவதும் முகம் உட்பட சாம்பலை அள்ளி பூசியிருந்தான். சிறிய நெருப்பு முன்னே எரிய மழையோ வெயிலோ அவன் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.

எல்லா சந்யாசிகளுக்கு கூடுவது போலவே அவனைச் சுற்றியும் மக்கள் கூட்டம் கூடியது. அவன் மக்களை ஈர்த்ததற்கு ஒரு முக்கிய காரணம், அழுத்தப் பூசிய சாம்பலையும் மீறி தெரிந்த அவனது வெள்ளை நிறம் மற்றும் வடிவான முகம்.

மக்கள் அவனைப் பற்றி பல கேள்விகள் கேட்டாலும், சில சமயமே அதுவும் ஹிந்தியில் அவன் பேசினான். பஞ்சாபில் தனது மனைவி ,குழந்தைகளை விட்டு சந்யாசம் பூண்டதாக சொன்னான். அநேகர் அவனை பூஜித்து நோய்களை தீர்க்க மருந்து வேண்டினார்கள். அப்படிக் கேட்பவர்களுக்கு
தன் உடலில் பூசிய சாம்பலை சிறிதளவு கொடுத்தானேயொழிய வேறு எந்தவித பரிகார காரியங்களிலும் அவன் ஈடுபடவில்லை.

கடந்த நான்கு மாதங்களில் அந்த சந்யாசியை தரிசித்தவர்களில் சில ஜெய்தேபூர்வாசிகளும் அடக்கம். அப்படிப்பட்டவர்கள் டாக்கவிலிருந்து ஊர் திரும்பும் போது சில சந்தேகங்களையும் சுமந்து சென்றனர். மெஜோகுமார் டார்ஜிலிங்கில் இறந்து எரிக்கப்பட்டதிலிருந்தே பவால் ஜமீனை ஆக்கிரமித்துள்ள 'மெஜோகுமார் சாகவில்லை. எங்கோ சாமியாரக சுற்றி வருகிறார்' என்ற வதந்த்திக்கு வலு சேர்க்கும் சந்தேகம் அது.

'அந்த சந்யாசி மெஜோகுமாராக இருக்குமோ?' என்ற சந்தேகம்தான் அது. போதாதா? மெஜோகுமார் இறந்ததை நம்ப மறுத்து வந்த ஜெய்தேபூர் முழுவதும் அழகான முகத்துடனும், வெள்ளை சருமத்துடனும் டாக்கா 'பக்லாண்ட் கரை'யில் குடி கொண்டிருக்கும் சந்யாசி மெஜோகுமார் என்ற வதந்தி பரவியது.

மெஜோகுமார் இறந்தது முதலே அப்படிப்பட்ட வதந்திகள் ஜமீன் முழுவதும் பரவியிருந்தது. பொதுவாக நமது மக்கள் தங்களைக் கவர்ந்த தலைவர்கள் மற்றும் அரசர்கள் இறந்ததை நம்ப மறுப்பது இயல்பு. அதுவும் கண்காணாத இடத்தில் ஒருவர் மரித்துப் போகும் போது, இப்படிப்பட்ட சந்தேகங்கள் எழுவது
உறுதி.

ஆனால் பவால் ஜமீனிலோ ஆயிரம் வதந்திகள்! அதனால் ஒருமுறை மெஜோகுமாரின் பாட்டி ராணி சத்யபாமா, மெஜோகுமார் இறந்த அதே தினம் டார்ஜிலிங்கில் இருந்த புர்ட்வான் (Burdwan) மகாராஜாவுக்கு தனது பேரன் மரணத்தைக் குறித்து அவர் அறிந்ததை சொல்லுமாறு ஒரு கடிதம் எழுதினார்கள். மகாராஜா பதிலுக்கு, அவர் டார்ஜிலிங்கிலிருந்த போது மெஜோகுமாரின் மரணத்தை பற்றிக் கேள்விப்பட்டதாகவும் உடனே தனது ஆட்கள் மூலம் கங்கை தீர்த்தமும், துளசி இலைகளையும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ததாகவும் வேறு எதுவும் தனக்கு அது பற்றித் தெரியாது எனவும்சொன்னார்.



நான் அவனில்லை!

காரியங்கள் பின்னர் மளமளவென்று நடந்தன. மெஜோகுமாரின் மூத்த சகோதரி ஜோதிர்மாயியின் மகன் 'புத்து' (Buddhu) சில நபர்களை அழைத்துக் கொண்டு டாக்கா சந்யாசியை காணச் சென்றார். சந்யாசியை பார்த்ததும் அவருக்கு தனது மாமா ஞாபகம் வந்தது. முக சாயல் ஒத்தே இருந்தது. அவனுக்கு பின்னால் ன்ற சிலர், 'இது மெஜோ குமாரேதான்..நம்ப இரண்டாவது குமார்' என்று முணுமுணுக்க, புத்துவால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

ஏப்ரல் 5ம் தேதி 1921ம் வருடம் காசிம்பூர் கிராமத்தை சேர்ந்த பவால் ஜமீன் குடும்பத்தவரான அதுல் பிரசாத் டாக்கா சந்யாசியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் தனக்கு குழந்தை வேண்டி சந்யாசியை பூஜை செய்யச் சொல்லவே, சந்யாசி அப்படி எதுவும் தனக்குத் தெரியாது என்று மறுத்துவிட்டான். அதுல் பிரசாத் மெஜோ குமாருக்கு மிகவும் நெருங்கியவர். ஒரு வாரம் கழித்து யானை மீது அமர வைத்து சந்யாசியை அவர் ஜெய்தேபூர் அனுப்பி வைத்தார்.

யானை ஜெய்தேபூருக்கு வரும் போது மாலை நேரமாகிவிட்டது. அது நேராக ராஜாபாரி செல்ல, சந்யாசி அங்கிருந்த மாதாபாரி என்று அழைக்கப்பட்ட வழிப்போக்கர்களையும், சந்யாசிகளையும் போஷிக்கும் வீட்டின் எதிரே இருந்த காமினி மரத்தின் கீழ் அமர்ந்து விட்டான். இறந்த மெஜோகுமார் என்று சந்தேகிக்கப்பட்ட சந்யாசியை பார்ப்பதற்கு ஜமீனுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை அப்போது. ஜெய்தேபூரில் வசித்து வந்த தூரத்து உறவினர்களும், சில ஜமீன் அலுவலர்களுமே சந்யாசியை காண வந்தனர். எல்லோரும் இடுப்பைத் தவிர வேறு எங்கும் மறைக்கப்படாத சந்யாசியின் உடம்பை கூர்மையுடன் பார்த்தனர். ஆனால் உடல் முழுவதும் மூடிய சாம்பலும் முகம் முழுவதும் மூடிய அழுக்கடைந்த முடியும் அவர்களை எந்த முடிவுக்கும் செல்ல விடவில்லை.

மறு நாள் காலை, பவால் ஜமீன் காரியதரிசியும் ஜோதிர்மாயியின் சம்பந்தியுமான யோகேந்திரநாத் ராஜாபாரி வந்தார். சந்யாசியை முழுவதும் கண்காத்தவர், சந்யாசியின் பழுப்பு கண்கள், பார்க்கும் முறை மற்றும் அமரும் முறை அனைத்தும் மெஜோகுமாரை ஞாபகப்படுத்துவதாக அறிந்தார்.

ஆனாலும் 'இது மிகவும் சிக்கலான பிரச்னை. இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டுமென' தீர்மானித்துக் கொண்டார். பின்னர் ஜோதிர்மாயியின் வீட்டுக்கு அவரது விருப்பப்படி சந்யாசியை அழைத்துச் செல்வதென முடிவாயிற்று.

மாலை தனது பங்களாவில் இருந்த ஜோதிர்மாயிக்கு சந்யாசி வந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டது. பங்களாவின் தாழ்வாரத்துக்கு வந்தவர் அங்கு சந்யாசி ஜமீன் உறவினர்கள் புடை சூழ ஒரு பாயில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தார். சந்யாசி தலையை குனிந்து ஒரக்கண்ணால் அவரைப் பார்த்தான்.

'தம்பி அப்படித்தான் பார்ப்பான்' ஒரு கணம் அவரது மனம் துள்ளியது. அவனருகே அமர்ந்து சந்யாசியின் கண்கள், காதுகள், உதடுகள், கை கால்கள், முக பாவனை என ஒவ்வொன்றாக கவனித்தார்.

சிறிது உண்டபின் பிரம்மபுத்திராவில் ஸ்நானம் செய்யவேண்டுமென அவன் போய்விட்டான். அவனது நடையும் கூட தம்பியுடையது என்று ஜோதிர்மாயி நினைத்தார். மறுநாள் காலை மறுபடியும் சந்யாசியை அழைத்து வருவதென தீர்மானித்தார்கள்.

மறுநாள் காலை சந்யாசி, ராஜாபாரிக்குள் சென்று அங்குள்ள வரவேற்பறையில் உலாவியதாகவும் அருகிலிருந்த குளியலறைக்குச் சென்று குளித்ததாகவும் சிலர் சொன்னார்கள். அன்று ஜோதிர்மாயியின் வீட்டுக்கு வந்தவன், நேராக உள் அறைக்குச் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். உறவினர்கள் எல்லாம் சுற்றி அமர, நாற்காலியில் அமர்ந்திருந்த வயதான ரா சத்யபாமாவை வசதியாக திவானில் அமர்ந்து கொள்ளுமாறு சொல்லி அவர் அவ்வாறு அமரவும் கைத்தாங்கலாக உதவி செய்தான்.

"இந்தப் பாட்டி மிகவும் துக்கத்தில் இருக்கிறார்கள் போல" என்று ஹிந்தியில் அவன் முணுமுணுத்தது அனைவருக்கும் கேட்டது. பின்னர் அங்கிருந்த உறவுக்காரப் பெண்களையெல்லாம் ஒவ்வொருவராக யாரென்று கேட்டுக் கொண்டே வந்தவன் இறந்து போன மூத்த அக்காவின் மகளைப் பார்த்ததும் திடீரென பொங்கி அழுதான்.

பின்னர், மறைந்த மெஜொகுமாரின் புகைப்படம் அவனுக்கு காட்டப்பட்டது. அதனைப் பார்த்ததும் அவன் மேலும் அழுதான். ஜோதிர்மாயி அவனிடம், 'முற்றும் துறந்த சந்யாசியாகிய நீங்கள் அழலாமா?' என்று கேட்டாள். அதற்கு அவன்,'இல்லை எனது தொலைந்து போகாத விருப்பங்களை (மாயை) எண் அழுகிறேன்' என்றான்.

'எதன் மீதான மாயை?' ஜோதிர்மாயியின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் மெஜோகுமாரின் கதையை அவனுக்கு விரிவாக சொன்னாள். அவள் முடிக்குமுன்னே அவன், 'இல்லை. இல்லை. அவன் சாகவில்லை. அவனது உடலும் எரியூட்டப்படவில்லை. அவன் உயிரோடு இருக்கிறான்' என்று கத்தினான்.

எல்லோரும் அவனையே நோக்க, அமைதியாக ஜொதிர்மாயி, ''உன்னைப் பார்த்தால் என் தம்பி மாதிரியே இருக்கிறது. நீ அவனா?"

"இல்லை இல்லை. எனக்கும் உங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை"

அவன் உணவருந்தும் போது ஜோதிர்மாயி கவனித்தாள். உணவை வாய்க்குள் எடுத்துச் செல்கையில் ஆள்காட்டி விரல் தனியாக நீட்டிக் கொண்டிருப்பதாக. மேலும் நாக்கினை சிறிது வெளியே நீட்டி உணவை விழுங்கினான். மெஜொகுமாரேதான். ஜோதிர்மாயி நினைத்தாள். ' சிறு வயதிலிருந்து ஒன்றாக விளையாடிய தம்பியை எப்படி மறக்க முடியும்? '

'பற்கள் கூட அவனைப் போலவே, அழகான வரிசையில்'. அங்கம் அங்கமாக அவனை கவனித்துக் கொண்டே இருந்தாள். குரல் கூட அவனைப் போலத்தான். ' அனால், இப்படி நீண்ட தாடி, ஜடாமுடி மற்றும் உடம்பெல்லாம் சாம்பலைப் பூசி மறைத்துள்ளானே? '

ஜோதிர்மாயி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவன் டாக்கா செல்வதாக சொல்லி போயே விட்டான்.

ஆனால் பின்னர் அவன் டாக்காவிலும் காணப்படவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் தனது பழைய 'பக்லாண்ட் கரை' யில் அவன் அமர்ந்திருந்தான்.

புத்து அவனை வற்புறுத்தி டாக்காவிலுள்ள தனது உறவினரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அங்கு ஜோதிர்மாயியின் ஏற்பாட்டின் பேரில், மெஜோகுமாரின் கடைசி தங்கை அவனைப் பார்த்தாள்.

ஏப்ரல் மாதம் 30ம் தேதி அவன்ஜெய்தேபூரில் உள்ள ஜொதிர்மாயியின் வீட்டுக்கு மறுபடி அழைத்துச் செல்லப்பட்டான். ஜோதிர்மாயி வேண்டியும் அவன் உடலில் பூசிய சாம்பலை அகற்ற மறுத்து விட்டான். அவனைப் பார்க்கவோ மக்கள் கூட்டம் அதிகமாக வந்த வண்ணம் இருந்தது.

மூன்றாம் நாள் குளித்து விட்டு வரும் போது அவன் உடலில் சாம்பல் இல்லை. ஜோதிர்மாயி அவன் தேக வண்ணத்தில் தனது சகோதரனைப் பார்த்ததாக கூறுகிறார். அவளது 'மற்ற உறவினர்கள், முக்கியமாக ரா சத்யபாமாவும் அவன் மெஜோகுமார் என்பதாகவே நினைத்தனர்' என்கிறார்.

அடுத்த நாள் மே மாதம் 4ம் தேதி, ஜோதிர்மாயியின் விருப்பத்தின் பேரில் புத்து அவன் உடலிலுள்ள அடையாளங்கள் அனைத்தும் பார்க்க சந்யாசி ஒப்புக் கொண்டான். அதற்கிடையில் வெளியே அதிகமான மக்கள் கூட்டம் கூடிவிட்டது. அவர்கள் முகத்தில் எல்லாம் கட்டுப்படுத்த முடியாத ஆர்வம். ஜோதிர்மாயி சந்யாசியை தனியாக அழைத்துச் சென்றாள்.

"உன் உடலிலுள்ள அடையாளங்கள், தோற்றம் எல்லாமே எனது இரண்டாவது சகோதரன் போலவே இருக்கிறது. நீ அவன்தான். நீ யாரென்பதை எங்களுக்கு சொல்ல வேண்டும். நீ யார்?"

"நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். நான் அவனில்லை. ஏன் என்னை தொந்திரவு செய்கிறீர்கள்?"


நான், ராமேந்திர நாராயண் ராய்செளத்ரி

ஜோதிர்மாயி சந்யாசி சொன்னதை ஒத்துக் கொள்ளும் நிலையில் இல்லை, "நீ யாரென்பதை எங்களுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும்."

வெளியே கூடியுள்ள மக்கள் கூட்டம் ஆயிரத்தை தொட்டது. பெரும்பாலும் ஜமீன் குடிகள். அதற்குள் புத்து வெளியே உள்ள மக்களிடம் சந்யாசியிடம் மெஜோகுமாரின் அங்க அடையாளங்கள் காணப்படுவதாக சொல்லிக் கொண்டிருந்தான்.

ஜோதிர்மாயி சந்யாசியிடம், "நீ எனது சகோதரன் என்பதை நான் அறிவேன். நீ அதனை பொதுவில் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இல்லையெனில் அதுவரை நான் சாப்பிடவே போவதில்லை" என்றாள் உறுதியாக!

சந்யாசியோ பேசாமல் இருந்தான். சரியாக மெஜோகுமார் இறந்ததாக சொல்லப்பட்ட தினத்திலிருந்து 12 ஆண்டுகள் கடந்திருந்தது. மத்தியானத்திற்கெல்லாம் பொறுமை இழந்த மக்கள் கூட்டம் 2500ஐ தொட்டது.

ஜோதிர்மாயியும் புத்துவும் கூடவர சந்யாசி வெளியே மக்கள் கூட்டத்தைக் காண அழைத்து வரப்பட்டான்.

"உன் பெயர் என்ன?" மக்கள் கூட்டத்திலிருந்து எழுந்தது ஒரு கேள்வி.

"ராஜேந்திர நாராயண் ராய்செளத்ரி" சிறிது யோசிப்புக்கு பின் வந்தது பதில்.

பிறகு நடந்ததுதான் இந்தக்கதையில் முதல் அத்தியாயத்தில் சொல்லப்பட்டது. சந்யாசி மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி மயங்கி விழுந்தாலும் மக்கள் கூட்டம் அங்கிருந்து கலைய மறுத்தது.

அடுத்த நாள் 'அன்பார்ந்த லிண்ட்ஸே' என்று கலெக்டருக்கான தனது தாக்கீதை தொடங்கிய ஜமீனின் அரசு மேலாளர் F.W.நீதம் தனது கடிதத்தை இவ்வாறு முடிக்கிறார்,

'காலையிலிருந்தே சாதுவை பார்ப்பதற்கான மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருக்கிறது. மக்களிடையே காணப்படும் பரபரப்பும் ஆரவாரமும் கட்டுக்கடங்காமல் போய் ஏதாவது அசம்பாவிதமான சம்பவம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் உடனடியாக ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். தங்கள் உத்தரவு வேண்டி'

கடிதத்தின் நகல் மெஜோகுமாரின் மனைவி உட்பட மூன்று விதவை ஜமீந்தாரினிகளுக்கும் அனுப்பப்பட்டது.

மக்கள் கூட்டமோ தொடர்ந்து சாதுவை பார்க்க வந்த வண்ணம் இருந்தது. ஆனால் இப்போது அவன் சாது போல இல்லை. நீண்டமுடியும் தாடியும் இருந்தாலும் சராசரி உடைகளை அயத் தொடங்கி விட்டான். தினமும் வீட்டிற்கு முன் நாற்காலி போட்டு அமர்ந்து ஜமீன் மக்களிடம் பழைய நினைவுகளை பேசினான். சில சமயம் எதையோ நினைத்து அழுவான். பெரும்பாலான மக்கள் அவன் தங்கள் மெஜோ குமார் என்றே நம்பினர்.

மே மாதம் 15ம் தேதி ஜெய்தேபூர் ராஜாபாரிக்கு வெளியே பெரிய கூட்டமொன்று பவால் ஜமீன் குடிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் முறையாக சந்யாசி பவால் ஜமீனின் இரண்டாவது குமார் என்று அறிவிக்கப்படுவார் என்று நம்பப்பட்டதால் பெருந்திரளான கூட்டம் காலையிலிருந்தே கூடத் தொடங்கிவிட்டது.

ரயில்வே கம்பெனி சிறப்பு ரயில்கள் விட்டும் ரயிலில் ஏற கூரையில் கூட இடமில்லை. மதியத்தில் கூட்டம் ஐம்பதாயிரத்தை தொட்டு விட்டது.

ஜமீனின் தாலுக்தார் அதிநாத் பேசினார். மெஜோகுமாரின் முழுவரலாற்றையும், சந்யாசியின் கதையையும் சொல்லி எப்படி அவர் உடல் மற்றும் அதில் உள்ள அடையாளங்கள் அவரை மெஜோகுமார்தான் என்று உறுதிபடுத்துவதாகவும் சொன்னார்.

"சில உறவினர்கள் தங்களது சுயலாபத்துக்காக இவரை மறுத்தாலும், ஜமீனின் குடிகளாகிய நாம் அனைவரும் இவர் குமார் ராமேந்திர நாராயண் ராய் என்பதை உறுதியாக நம்புகிறோம். எங்கே இவர் ராமேந்திரா என்று நம்புபவர்கள் அனைவரும் கை தூக்குங்கள்"

பல்லாயிரக்கணக்கான கைகள் ஒரு சேர உயர்ந்தன.

"யராவது இவர் ராமேந்திரா இல்லை என்று சந்தேகிக்கிறீர்களா?"

எங்கும் நிசப்தம் நிலவியது.

வந்திருக்கும் சந்யாசி பவால் ஜமீனின் இரண்டாவது குமாரான ராமேந்திர நாராயண் ராய் என்று ஒரு தீர்மானம் இயற்றப்பட்டு அனைத்து அரசு அலுவலர்களும் அனுப்புவது என்று முடிவாயிற்று.

பின்னர் குமார் யானை மீதேறி புறப்பட்ட போது, 'இரண்டாவது குமார் வாழ்க' என்ற மக்களின் கூக்குரல் விண்ணைப் பிளந்தது. ஆம், உண்மையிலேயே காற்றடித்து பெருமழை கொட்டியது. அனைவரும் மகிழ்ச்சியுடன் கலைந்தார்கள்.


தாவாவின் ஆரம்பம்

மே மாதம் 21ம் தேதி 1921ம் ஆண்டு தன்னை இரண்டாவது குமாராக பிரகடனபடுத்திக் கொண்ட சந்யாசி தனது வக்கீல்கள் இருவருடன் டாக்கா மாவட்டக் கலெக்டரை சந்தித்தான்.

அவன் கலெக்டரிடம் தான் இறந்ததாக சொல்லப்படும் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னர் நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டதாகவும், தன்னுடைய கைகளில் ஒரு கொப்புளத்தை தவிர வேறு எதுவும் அப்போது இல்லையெனினும், தான் டார்ஜிலிங்கில் நோய்முற்றி மயங்கிவிட்டதாகவும் கூறினான். மேலும் அவன் தனக்கு உணர்வு வந்த போது ஒரு மலைக்காட்டில் பின்னர் தனது குருவாகிப் போன சாதுவின் பராமரிப்பில் இருந்ததாகவும், அவர், அவன் அவ்வாறு மூன்று நாட்கள் மயக்கத்தில் இருப்பதாக கூறியதாகவும் கூறினான். தன்னை அந்த சாது இடுகாட்டுத்தரையில் மிகவும் நனைந்து போய் யாரோ வீசிவிட்டுப் போன நிலையில் பார்த்ததாக கூறியதாகவும் தனக்கு தனது பழைய வாழ்க்கை எல்லாம் மறந்து போனது என்றும் கூறினான்.


சந்யாசியின் வக்கீல்கள் கலெக்டரிடம், 'ஜமீன் சொத்துக்கள் குறித்து, முக்கியமாக வாடகைதாரர்களுக்கு பயனுள்ள வகையில் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும்' என்றதற்கு கலெக்டர், 'இதனை நேரடியாக வருவாய் துறை ஒத்துக் கொள்ள முடியாது. எனவே குமார் நீதிமன்றத்தை அணுகி தகுந்த ஆணையைப் பெறும் நிலையில் தன்னால் உதவி செய்யமுடியும்' என்று கூறிவிட்டார்.

ஐந்து நாட்களில் கலெக்டரின் உத்தரவின் பெயரில் வருவாய்த்துறை ஒரு அறிவிப்பை பவால் ஜமீன் முழுவதும் வெளியிட்டது.

"பவால் ஜமீன் வாடகைக் குடி அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், பவாலின் இரண்டாவது குமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து டார்ஜிலிங்கில் எரியூட்டப்பட்டது ஆதாரபூர்வமான உண்மை. எனவே இந்த சந்யாசி ஒரு போலி. அவரிடம் யாராவது வாடகைப்பணம் செலுத்தினால் அது அவர்களது சொந்த நஷ்டத்தின் பெயரிலேயே செலுத்தப்பட்டதாக கருதப்படும்"

சந்யாசி தற்போது தான் இரண்டாவது குமார் என்று வழக்குத் தொடர வேண்டியது அவசியமாகிப் போனது.



விந்தை வழக்கு

டாக்கா மாவட்ட நீதிமன்றத்தில் ஆரம்பித்து லண்டன் பிரிவி கவுன்சிலில் (Privy Council) முடிந்த வழக்கு, இந்திய சிவில் வழக்குகளிலேயே மிகவும் பிரச்சித்து பெற்றதென கூறலாம். இந்திய சாட்சிச் சட்டத்தின் முக்கிய கூறுகள் இந்த வழக்குக்காக அலசப்பட்டன. வழக்கின் முக்கிய கட்டமான 'டிரையல்' என்று சொல்லப்படும் சாட்சி விசாரணை மற்றும் வாதம் நடைபெற்ற நாட்களே அறுநூற்றைத் தாண்டிவிட்டது.

இந்தியாவில் அதிகமான சாட்சிகள் விசாரிக்கப்பட்ட சிவில் வழக்கு இதாகத்தான் இருக்க முடியும். பெங்கால் மாகாணத்தில் இந்த வழக்கினை பற்றி அறியாதவர்களும் அதன் போக்கினை பற்றியும் சந்யாசி உண்மையான குமாரா? இல்லையா? என்பதை விவாதிக்காதாவர்களும் இல்லை என்று சொல்லி விடலாம்.

வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே இரண்டாவது குமாரைப் பற்றிய பாடல்கள், பிரச்சாரங்கள், கதைகள் ரயில்கள், தெரு முனைகள் மற்றும் மக்கள்
கூடும் இடங்களில் எல்லாம் பாடப்பட்டன. துண்டுப் பிரசுரங்கள் வியோகிக்கப்பட்டன.

சந்யாசிக்கு அரசின் எதிர்ப்பை சந்திப்பது பெரிய பிரச்னை இல்லை. எதிர்ப்பு வந்தது ஜமீனின் மூன்று விதவைகளிடம் இருந்து, குறிப்பாக இரண்டாவது குமாரின் (தனது!) மனைவியான பீபாபட்டியிடம் இருந்து!
அவர் சந்யாசியை தனது கணவரான குமார் என்பதை ஏற்றுக் கொள்ள அறவே மறுத்து விட்டார்கள். அதற்கு முன்னரே அவரது சகோதரர் சத்யேந்திரா குமார் இறந்தது அதனை அவருக்கு சிகிச்சையளித்த ஆங்கிலேய மருத்துவர் உறுதிப்படுத்தி சான்றிதழ் அளித்தது, குமாரின் இறுதி ஊர்வலத்தில் தானும் மற்ற நண்பர்களும் கலந்து கொண்டது அனைத்தும் கலப்படமற்ற உண்மை என்று பத்திரிக்கைகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

1930ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி சந்யாசி, டாக்கா நீதிமன்றத்தில் தனது மனைவி மற்றும் தனது சகோதரர்கள் மனைவியர் மீதும் வழக்கு தொடர்ந்தார்.

'வாதியாகிய தான் பவாலின் இரண்டாவது குமராகிய ராமேந்திர நாராயண ராய் என்று அறிவிக்க வேண்டியும் பவால் ஜமீன் சொத்துக்களில் தனக்குறிய மூன்றில் ஒரு பங்கினை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்' என்பதுதான் வழக்கு.

சந்யாசிக்கு மறுபுறம் முதல் பிரதிவாதியாக பீபாபட்டி!

சந்யாசியின் வாதம், 'பீபாபட்டி சொல்வது போலன்றி தான் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது ஏழு அல்லது எட்டு மணியளவில் என்றும் உடனடியாக அதனை தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால் உடல தகனம் செய்வதற்காக பழைய இடுகாட்டில் வைக்கப்பட்டு இருந்தபோது பெருங்காற்றுடன் மழை பெய்ததால் அனைவரும் உடலை விட்டு ஓடி விட்டனர்' என்பதாகும்.

மேலும் 'மழை நின்ற பின்னர் உடலை காணாதலால், வேறு உடல் கண்டெடுக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு மறுநாள் காலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புதிய இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது' என்றும் ' முதல் நாள் மழையின் போது இடுகாட்டில் சத்தம் கேட்டு வந்த சில சந்யாசிகள் குமாரை உயிருடன் கண்டதால் தங்களுடனே எடுத்துச் சென்று விட்டதாகவும், பின்னர் உணர்வு வந்த பிறகும் பழைய னைவுகள் மறந்து அவர்களுடனே சாமியாராக அலைந்து திரிந்ததாக' என்றும் வாதத்தில் கூறப்பட்டது.

பீபாபட்டியின் சார்பின் அனைத்து வாதங்களும் வன்மையாக மறுக்கப்பட்டது.

சந்யாசியின் சார்பில் சில விலைமாதர்கள் கூட சாட்சியாக அவரது உடலில் உள்ள அடையாளங்களை குறிப்பிடும்படி நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டனர். சந்யாசியின் இடது கையில் ஒரு தழும்பும் வலது கையில் இரண்டு தழும்பும் முழங்கைக்கு மேல் காணப்பட்டது. இது குமாருக்கு இருந்ததாக சொல்லப்பட்ட தழும்புகளைவிட குறைவுதான் என்றாலும் நீதிமன்றம் இதுவே போதுமென கருதியது.

குமாருக்கு சாதகமான முக்கியமான சாட்சி அவரது சகோதரியான ஜோதிர்மாயி மற்றும் குமார் இறந்ததாக சொல்லப்பட்ட நேரத்தில் டார்ஜிலிங்கில் ஒரு கிளப்பில் அமர்ந்திருந்த நான்கு நபர்கள். அவர்களுக்கு பல விஷயங்கள் மறந்திருந்தாலும், எட்டு மணி வாக்கில் ஒரு வேலையாள் ஒடி வந்து, 'பவால் ஜமீன் இரண்டாவது குமார் இறந்து விட்டதாகவும் ஈமக்கிரியைகளுக்கான உதவிகள் புரியுமாறு வேண்டியதாகவும்' கூறினர். மற்றும் அவர்கள் அன்று பெய்த பெரிய மழையையும் உறுதிப்படுத்தினர். இது குமார் இறந்ததாக சொல்லப்பட்ட நேரத்தினைப் பற்றிய பிரச்னையில் சந்யாசிக்கு பெரிய சாதகமாக அமைந்தது.

சந்யாசிக்கு எதிரான மிகப்பெரிய சோதனை, பீபாபட்டியின் சாட்சி மற்றும் குமாரது காப்பீடு பத்திரம். அதனோடு இணைக்கப்பட்ட மருத்துவரின் அறிக்கையில் குமாரின் கண் நிறம் சாம்பல் (grey) என்று குறிப்பி டப்பட்டிருந்தது. சந்யாசியின் கண் நிறமோ பழுப்பு (brown). ஆனால் குமார் மரித்த பின்னர் அவருக்கு மிகவும் நெருக்கமான வித்தியாசாகர் என்பவர் காப்பீட்டு நிறுவனத்துக்கு அளித்த பிரமாண பத்திரத்தில் (affidavit) குமாரின் கண் பழுப்பு நிறம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆக ஆவணத்துக்கு ஆவணம் சரியாகப் போயிற்று.

அடுத்து சந்யாசியிடம் சிபிலிஸ் நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை. தனக்கு சந்யாசிகள் எதுவும் மருந்து தரவில்லை என்பதனையும் அவன் ஒத்துக் கொண்டான். மேலும் மருத்துவ சாட்சியான K.K.சாட்டர்ஜி கையிலும் காலிலும் பெரிய புண்கள் ஏற்பட்டு அவை கழுவி சுத்தப்படுத்தப் படாத பட்சத்தில் நோயாளி மூன்று மாதங்களுக்கு மேல் புண்கள் புரையோடிப் போகாமல் உயிர் பிழைத்திருப்பது நடவாத காரியம் என்று கூறியிருந்தார்.

ஆனால் மருத்துவ சாட்சி அறிக்கைதானே தவிர முழுமையானதல்ல.

இந்தியவின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் ஈடுபட்ட இந்த வழக்கின் தீர்ப்பினை 1936ம் வருடம் ஆகஸ்ட் 24ம் தேதி இந்தியரான டாக்கா மாவட்ட நீதிபதி வழங்கினார்.

'வாதி பவால் ஜமீனின் இரண்டாவது குமார் என்று அறிவிக்கிறேன். பவால் ஜமீனின் சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கு அவருக்கு வழங்கப்பட வேண்டும்'

பீபாபட்டி கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு (appeal) தாக்கல் செய்தார். மீண்டும் இந்தியாவின் பெரிய வக்கீல்கள் வாதிட, மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு மேல் முறையீட்டு வழக்கினை விசாரித்து 1940ம் வருடம் நவம்பர் மாதம் 25ம் தேதி தனது தீர்ப்பினை வழங்கியது.

பிஸ்வாஸ் என்ற இந்திய நீதிபதியும் காஸ்டெல்லோ என்ற ஆங்கிலேய நீதிபதியும் வாதிக்கு சாதகமாக டாக்கா நீதிமன்ற தீர்ப்பினை உறுதி செய்ய சந்யாசிக்கு மீண்டும் வெற்றி!

லாட்ஜ் என்ற ஆங்கிலேய நீதிபதி மற்ற இரு நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிராக அதாவது சந்யாசிக்கு எதிராக வழங்கிய தீர்ப்பின் (dissenting judgement) வாசகம் கவனிக்கத்தக்கது.

'குமார் இறந்த பின்னர் லவிய வதந்திகள் மக்களை குமார் உயிருடன் இருக்கிறார் என்று யார் வந்து சொன்னாலும் நம்பத்தகுந்த வகையில் தயார்படுத்தி வைத்திருந்தது. இப்படியாகப்பட்ட சூழ்லையில் குமாரை உருவத்தில் ஒத்த யாரும் இப்படிப்பட்ட காரியத்தை வெற்றிகரமாக செய்யக்கூடிய சாத்தியங்கள் அதிகம்'

ஆனால் வதந்திகளைப் பற்றிய இந்த கருத்து இருபுறமும் வெட்டக்கூடிய ஒரு வாள். நெருப்பில்லாமல் புகையாது. குமாரின் ஈமக்கிரியையின் போது ஏதோ அசாதரணமாக நடந்திருக்க வேண்டும். அதனை யாராவது வேலையாள் ஜெய்தேபூரில் யார் காதிலோ ஓத, இந்த வதந்திகள் ஆரம்பித்திருக்கலாம்.

ஆக பெரும்பான்மைத் தீர்ப்பினால் (majority judgement) பீபாபட்டிக்கு மறுபடியும் தோல்வி. இப்போது நமக்கு டெல்லியில் உச்ச நீதிமன்றம் இருப்பது போல அப்போது லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலை (privy council) அணுகலாம். உச்ச நீதிமன்றம் போலவே, பிரிவி கவுன்சிலிலும் மேல் முறையீடு செய்வதை நமக்குள்ள உரிமையாக கோர முடியாது. வழக்கில் சட்ட சம்பந்தமான பிரச்னை இருக்கும் போது அல்லது கீழ் கோர்ட்கள் சாட்சிகளை சட்டத்துக்கு புறம்பான வகையில் எடுத்தாள்கையில்தான் அவை ஒரு தீர்ப்பினை மறு பரிசீலினை செய்ய அனுமதிக்கும். முக்கியமாக ஒரு கழ்வு சம்பந்தமான பிரச்னை இரண்டு கோட்டிலும் ஒரே மாதிரியாக தீர்க்கப்படும் நேரத்தில் அதனை மாற்றியமைக்க நினைக்காது.

சந்யாசி குமாரா? இல்லையா? என்பது கழ்வு சம்பந்தமான (quesion of fact) ஒரு கேள்வி. இரு நீதிமன்றங்கள் அதனை ஒரேமாதிரி தீர்த்தபின்னர் பீபாபட்டியின் மேல் முறையீடு கடினம்தான். ஆனாலும் பிரிவி கவுன்சிலுக்கு சென்றார் பீபாபட்டி.

அவரது வழக்கறிஞ்ர் வன்மையாக வாதிட்டார். இறுதியில் ஒரு இந்திய நீதிபதியை உள்ளடக்கிய பிரிவி கவுன்சில் 1946ம் வருடம் ஜூலை மாதம் 30ம் தேதி தனது தீர்ப்பினை வழங்கியது.

'டாக்கா மாவட்ட நீதிமன்றம் மற்றும் கல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்யப்படுகின்றன. மேல் முறையீடு தள்ளுபடியாகிறது'

இப்படியாக குமாரின் மரணத்தினைப் பற்றிய சந்தேகம் அவர் இறந்த 35 வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்து விட்டதாக அனைவரும் கருதினர். ஆனால் காலம் வேறு விதமான பதிலை வைத்திருந்தது.

முடிவில்லா கதை

தீர்ப்பு விவரம் ஜெய்தேபூரை எட்டியதுமே பெரிய கொண்டாட்டம். அடுத்த நாள் இரண்டாவது குமாராகிய சந்யாசி அருகிலுள்ள தந்தனிய காளி கோவிலுக்கு பூஜை செய்ய போனார். இருபத்தைந்து வருடங்களாக நடைபெற்ற போராட்டம் ஒரு முடிவுக்கு வந்து விட்ட மகிழ்சியில் பெரிய பூஜை நடைபெற்றது. பூஜை முடிந்து குமார் ஜெய்தேபூர் திரும்பவில்லை!

வரும் வழியிலேயே வாதம் தாக்கி அவரது பிணம்தான் ஜெய்தேபூரை வந்து
சேர்ந்தது.

குமாராகிய சந்யாசியின் மரணத்தை கேள்விப்பட்ட அவரது மனைவி என்று கருதப்பட்ட பீபாபட்டி, "மனிதர்களின் நீதிமன்றத்தில் வேண்டுமென்றால் நான் தோற்றிருக்கலாம். இறைவனது கடைசியான நீதிமன்றத்தில் இறுதியில் நான் வென்று விட்டேன்"

இந்த வழக்கின் இறுதியான தீர்ப்பு எது? என்பது இன்றுவரை யாராலும் விடை காணப்படாத கேள்வி!

***

(இந்த வழக்கின் தீர்ப்பு பிரிவி கவுன்சிலின் வலைத்தளத்தில் கிடைக்கிறது)

9 comments:

பெத்தராயுடு said...

Wow, amazing story. There is a wonderful screenplay with the potential for a great movie.

Pedharayudu

Gurusamy Thangavel said...

நன்றாக விருவிருப்புக் குறையாமல் மொழிபெயர்த்தியிருக்கிறீர்கள் பிரபு. எனக்கென்னவோ அந்த பிரிட்டிஷ் நீதிபதி சொன்னதுதான் சரி எனப்படுகிறது.

//'குமார் இறந்த பின்னர் லவிய வதந்திகள் மக்களை குமார் உயிருடன் இருக்கிறார் என்று யார் வந்து சொன்னாலும் நம்பத்தகுந்த வகையில் தயார்படுத்தி வைத்திருந்தது. இப்படியாகப்பட்ட சூழ்லையில் குமாரை உருவத்தில் ஒத்த யாரும் இப்படிப்பட்ட காரியத்தை வெற்றிகரமாக செய்யக்கூடிய சாத்தியங்கள் அதிகம்'//

ஆயினும் இதன் முழு விபரங்கள் அறியாமல் நான் கருத்துச் சொல்வது தவறு.

PRABHU RAJADURAI said...

ஏற்கனவே இந்த சம்பவம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெயகாந்தன் அருமையான ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.

இதனை மொழிபெயர்ப்பு என்று கூற முடியாது. பல்வேறு தகவல்களை திரட்டி எழுதப்பட்டது. உரையாடல்களுக்கு உதவியது, இந்தச் சம்பவம் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு புத்தகம்.

முன்பு மரத்தடி இணைய குழுவில் இதனை எழுதிய பொழுது பலர் சந்நியாசி ஏமாற்றுக்காரர் என்றுதான் சந்தேகப்பட்டனர். இதே போன்ற மற்ற சம்பவங்களை தேடிய பொழுது பிரஞ்சு சம்பவம் ஒன்று மிக சுவராசியமாக இருந்தது...

Doctor Bruno said...

Princess Diana கூட இப்படி ஏதோ ஒரு தீவில் இருப்பாதாக வதந்தி வந்ததே

Doctor Bruno said...

இது குறித்து தாங்கள் குமுதம் விகடன் போன்ற (வெகுஜன)இதழ்களில் எழுதலாமே

PRABHU RAJADURAI said...

Thank you Dr.Bruno. I take your comment as a compliment.

தருமி said...

//ஜெயகாந்தன் அருமையான ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.//

கதைத்தலைப்பு என்ன?

//பிரஞ்சு சம்பவம் ஒன்று மிக சுவராசியமாக இருந்தது... //
அதைப் பற்றி எப்போது எழுதப் போகிறீர்கள். ஆவலோடு காத்திருக்கிறோம்........

PRABHU RAJADURAI said...

பெயர் மறந்துவிட்டது. ஆனால் கதை முழுவதும் வசனம் கூட மறக்கவில்லை. அமானுஷ்யமாக ஆரம்பித்து இருப்பார்.

பிரஞ்சு சம்பவம் கொஞ்சம் A சமாச்சாரம்:-)

Doctor Bruno said...

தங்களின் நடை நன்றாக இருக்கிறது