15.1.07

பின் தொடரும் ஆ...பத்து! - 5

தனியார் வாகனம், கவனம்!


கடந்த பெருமழையின் பொழுது, சென்னையை உலுக்கிய சம்பவம் ஒன்று உண்டென்றால், அது மூன்று நண்பர்கள் பூட்டிய காருக்குள் இறந்து கிடந்த சம்பவம். அதாவது, சாலையில் ஏற்ப்பட்ட நீர்ப்பெருக்கினால் தங்களது காரினை சாலையிலேயே நிறுத்தி அதற்குள் குளிரூட்டியினை (Air Conditioner) ஓட விட்டபடி அமர்ந்திருந்த அந்த மூன்று நபர்களும் தங்களுக்கு என்ன சம்பவிக்கிறது என்பதை அறியாமலேயே இறந்து போயிருந்தனர்.

இழப்பீடுகளுக்கான, மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளின்படி நடைபெற்றது ஒரு வாகன விபத்தாகவே கருதப்படும்.

எனவே, இறந்து போன மூவரின் வாரிசுகளுக்கும் இழப்பீடு உண்டு!

இறந்து போனவர்கள், கணிசமாக சம்பாதித்துக் கொண்டிருந்த மென்பொருள் வல்லுஞர்கள், அதுவும் இளைஞர்கள். எனது கணிப்பில் அவர்களுக்கு மொத்தமாக வழங்கப்படக்கூடிய இழப்பீடு குறைந்தது ஐம்பது லட்சமாவது இருக்கும்.

ஆனால் இழப்பீட்டினை கொடுக்க வேண்டிய நபர், காப்பீடு நிறுவனம் அல்ல மாறாக வண்டி உரிமையாளர் என்ற செய்தி பலருக்கு அதிர்ச்சி தரலாம்!

கார் மட்டுமல்ல, மோட்டார் பைக், ஸ்கூட்டர் போன்ற தனியாருக்கு சொந்தமான எந்த ஒரு வாகனத்திலும் பயணம் செய்பவருக்கு, விபத்தினால் ஏற்ப்படும் இழப்பிற்கு அளிக்கப்பட வேண்டிய இழப்பீட்டிற்கு காப்பீடு கிடையாது என்ற அதிர்ச்சிகரமான உண்மை பல வழக்குரைஞர்கள் ஏன் காப்பீடு நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கே தெரியாது.

பலர் ‘வண்டிக்கு ‘முழுமையான காப்பீடு’ (Comprehensive Policy) எடுத்திருக்கிறேன், எனவே எல்லா இழப்பினையும் காப்பீடு நிறுவனம்தான் தர வேண்டும்’ என்று சமாதானம் கூறுவார்கள். நீதிமன்றங்கள் கூட சில சமயங்களில் முழுமையான காப்பீடு என்று அழைக்கப்படுவதை அவ்வாறே தவறாக அர்த்தம் கற்பிக்கின்றனர். ஆனால், காப்பீடு நிறுவனங்களால் ‘முழுமையான காப்பீடு’ என்ற தவறான பதத்தால் அழைக்கப்படும் காப்பீட்டில், இங்கு முன்பு கூறப்பட்ட மூன்றாம் நபர் காப்பீடு ( Act Policy) மற்றும் வண்டிக்கு ஏற்ப்படும் இழப்பு மட்டுமே காப்பீடு செய்யப்படுகின்றன!

ஏன் இவ்வாறு?

ஏனெனில் சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ள காப்பீடானது அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு மட்டுமே! பேருந்து போன்ற பொது வாகனங்களில் பயணம் செய்யும் அனைவருக்கும் காப்பீட்டினை கட்டாயமாக்கிய சட்டம், தனியார் வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு அவ்விதமான சட்டப்பாதுகாப்பினை அளிக்கவில்லை.

சரி, கட்டாயம் கிடையாது. காப்பீடு நிறுவனங்கள் தனியார் வாகனத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு தனியே கட்டணம் (Premium) வாங்கி காப்பீடு அளிக்கலாமே என்றால், செய்யலாம்தான். ஆனால், என் அனுபவத்தில் எந்த காப்பீடு நிறுவனமும் அவ்விதம் கூடுதல் கட்டணம் வாங்கி பாதுகாப்பு அளிக்க முன் வருவதில்லை.

காரணம், கட்டணத்தை நிர்ணயிக்க திறன் இல்லை. இந்தியாவில் வாகன காப்பீட்டிற்கான கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்கு உள்ள அமைப்பினால் கட்டணங்கள் வரையறுக்கப்படுகின்றன. அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள், சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ள நபர்களுக்கு மட்டுமே உள்ளது. எனவே நீதிமன்றங்கள் அவ்வாறு கூடுதல் கட்டணம் வாங்கலாம் என்று கூறினாலும் காப்பீடு நிறுவனங்கள் வாங்குவதில்லை!

ஆனால் சமீபகாலங்களில், காப்பீடு நிறுவனங்கள் தனியார் வாகன பயணிகளுக்காக தனியே தனி நபர் காப்பீடு (Personal Accident Policy or PA) அளிக்கின்றன. சமீபத்தில் நான் எனது காரினை காப்பீடு செய்கையில் ஐந்து நபர்களுக்கு இவ்வாறு காப்பீடு அளித்தது. ஆனால், ஆபத்தினை தவிர்க்க இது போதாது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அதிக பட்சமாக காப்பீடு ஒரு லட்சம் வரைதான் வழங்கப்படும். மிஞ்சிய தொகையினை வாகன உரிமையாளர்தான் தர வேண்டும்!

அதுவும் பல சமயங்களில் வாகன உரிமையாளர் கட்ட வேண்டிய கட்டணத்தினை குறைத்து சொல்வதற்காக, காப்பீடு நிறுவன முகவர்கள் இந்த தனி நபர் காப்பீட்டினை சேர்ப்பதில்லை. வாகன உரிமையாளர்களும் ‘முழுமையான காப்பீடு’ என்ற பெயரில் மயங்கி ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

அப்படியே தெரிந்தால் கூட பலர், எனக்கு விபத்து ஏற்ப்படாது என்ற இந்தியர்களுக்கேயுரிய அசட்டுத்தனமான நம்பிக்கையினால் தனி நபர் காப்பீடு கூட எடுப்பதில்லை.

எனவே, காப்பீடு இருந்தும், வாகனம் சட்டப்பிரகாரம் கையாளப்பட்டிருந்தும் ஆபத்து வாகன உரிமையாளரை தொடர்கிறது.....சற்றே ஆபத்திலிருந்து விலகியிருக்கும் ஒரு வழி நம்பிக்கையில்லையெனில், யாரையும் தங்களது காரிலோ அல்லது இரு சக்கர வாகனத்திலோ அழைத்துச் செல்லாமல் இருப்பது மட்டுமே!

to be continued...

குறிப்பு: இந்தியாவில் உள்நாட்டு விமான விபத்தில் ஏற்ப்படும் மரணத்திற்கு கூட அதிகபட்சம் ரூ.ஐந்து லட்சம்தான் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், மோட்டார் வாகன பயணிக்கு வானமே எல்லை!

5 comments:

PRABHU RAJADURAI said...

இந்தப் பதிவில் கூறப்பட்ட சம்பவம், இழப்பீட்டிற்கான விபத்தா என்ற சந்தேகம் எழுந்தால் 'பாவத்தின் சம்பளம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட பழைய பதிவில் விடை உள்ளது. http://marchoflaw.blogspot.com/2006/06/blog-post_07.html

ஞானவெட்டியான் said...

அன்பு நண்பரே!
மின்னஞ்சல் முகவரி இல்லாமையால் இங்கு தங்களின் இல்லத்திலுள்ள அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Doctor Bruno said...

1. When a car dashes against a lorry, if the lorry has "Comprehensive" Insurance, then the persons in the car gets money

2. When the car dashes against a tree, they don't get money. But money is given for repair of car

நான் சரியாக புரிந்துகொண்டிருக்கிறேனா

PRABHU RAJADURAI said...

Dear Dr.Bruno,

I feel satisfied. You are correct. However in the first instance, one needs to prove that the lorry driver was negligent.

Prabhu.

PRABHU RAJADURAI said...

Now under a Comprehensive Policy, the occupants of the private car also covered. HENCE NO NEED FOR CONCERN