20.6.10

நீதிமன்றத்தில் தமிழ்!


என்ன அர்த்தத்தில் அப்படி கூறினார் என்பது தெரியவில்லை.

ஏனெனில் உயர்நீதிமன்றம் தவிர்த்து மற்ற அனைத்து கீழ் நீதிமன்றங்களிலும் தமிழ் அனைத்து வகைகளிலும் பயன்பாட்டிலுள்ளது. தமிழில் வழக்குரைகள் தாக்கல் செய்வதிலிருந்து தீர்ப்பு வழங்குவதை வரை முழு அளவில் அனுமதிக்கப்படுகிறது.

1956ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு அலுவல் மொழி சட்டத்தின்படி தமிழ்தான் கீழ் நீதிமன்றங்களின் அலுவல் மொழி. ஆயினும் அதனை செயலுறுத்தும் அறிவிப்புகள் (Notification) திமுக ஆட்சிக்காலத்தில்தான் வெளியிடப்பட்டு 1976ம் குற்றவியல் நீதிமன்றங்களிலும் 1982ம் ஆண்டு உரிமையியல் நீதிமன்றங்களிலும் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முதன்முதலில் தமிழ் அறிமுகப்படுத்தப்படுகையில் பலத்த கேலிக்கும், கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டது. ஆனால் 25 வருடங்கள் கடந்த சூழ்நிலையில், தமிழ் நிலையான ஒரு இடத்தினை தற்பொழுது பிடித்துள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன் நீதிமன்ற வரலாற்றை 25 ஆண்டுகள் பின்னால் தள்ள நினைக்கிறாரா?

-oOo-

உயர்நீதிமன்றத்தில் தமிழ் கூடாது என்று தமிழக அரசின் கோரிக்கையினை நிராகரித்த முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனும் ஏற்றுக் கொள்ள்வியலாத ஒரு காரணத்தை கூறியுள்ளார். 'உயர்நீதிமன்றத்தில் தமிழ் வந்து விட்டால் உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்கையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியிருக்கும் என்றும், அதனால் ஏற்ப்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியாது' என்றும் கூறியதாக ஹிந்துவில் கூறப்பட்டுள்ளது.

முன்சீப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஒரு வழக்கின் வழக்குரைகள் 10 பக்கம் இருக்கலாம். சாட்சி விசாரணை 20 பக்கம் இருக்கும். தீர்ப்பு 20 பக்கம் இருக்கும். மேல் முறையீட்டு தீர்ப்பு 20 பக்கம் இருக்கும். உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மேல்முறையீட்டு தீர்ப்பு, ஐந்து பக்கங்களுக்கு மிகாது. ஆக இன்று கூட உச்ச நீதிமன்றம் செல்லும் ஒரு உரிமையியல் வழக்கின் 90 சதவீத ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக ஆனாலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு எந்த நீதிபதியும் தமிழில் தீர்ப்பு சொல்லப்போவதில்லை. எனவே இன்றுள்ள நிலைதான் நீடிக்கும்.

குற்றவியல் நீதிமன்றங்களில் முதல் தகவல் அறிக்கை, குற்றச்சாட்டுரை (Charge Sheet) தொடங்கி சாட்சி விசாரணை தீர்ப்பு அனைத்தும் இன்று தமிழில்தான் உள்ளன. அவை உச்ச நீதிமன்றம் செல்கையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுகின்றன.

தலைமை நீதிபதி, உண்மை நிலையை அறிந்து கொள்ளாமல் ஏதோ காரணம் சொல்ல வேண்டும் என்று பொருந்தாத ஒரு காரணத்தை கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாவதை மத்திய அரசு விரும்பாததற்கு காரணம் வேறு. காபினட் மந்திரி பதவி பெறுவது போல இது சுலபமான காரியம் அல்ல என்பது கலைஞருக்கும் தெரியும்.
அதனால்தான், சக வழக்குஞர்களிடம் நான் குறிப்பிட்டேன். ‘தெலுங்கான போராட்டம் சாதிக்காததை நீங்கள் சாதித்துவிட முடியாது என்று...

பிரபு ராஜதுரை
மதுரை
20/06/10

18.6.10

போபால், நீங்களே தீர்ப்பளியுங்கள்...


போபால் வழக்கில், நீதிபதி முன்பு இருந்த வழக்கு ‘கவனக்குறைவான ஒரு செயலால், மரணத்தை ஏற்ப்படுத்துதல்’. அதற்கான அதிகபட்ச தண்டனை இரண்டு வருடங்கள். அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அதிக தண்டனை அளிக்க இயலாது. எனவே வேறு என்ன வகையான தீர்ப்பினை நீதிபதியிடம் இருந்து ஊடகங்கள் எதிர்பார்த்தன என்பது புரியவில்லை.

குற்றவாளிகள் புரிந்த குற்றத்தினை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304Aல் காணலாம்


மேற்கண்ட சட்ட பிரிவு இந்திய தண்டனை சட்டம் 1860ம் ஆண்டு இயற்றப்பட்ட பொழுது இல்லை. பத்து ஆண்டுகள் கழித்து 1870ம் ஆண்டு சட்ட திருத்தத்தின் மூலமாக கொண்டு வரப்பட்டது. மோட்டார் கார் மூலம், முதல் மரணம் ஏற்ப்பட்ட ஆண்டு 1869. எப்படியோ, மோட்டார் கார்களின் வரத்து இந்தப் பிரிவிற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

-oOo-


முதலில் குற்றவாளிகள், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304(II) கீழ் 10 வருடங்கள் வரை தண்டனை வழங்கப்படக்கூடிய கொலை இல்லை என்றாலும் தண்டனைக்கு ஏதுவான மரணத்தை விளைவித்தல் (culpable homicide not amounting to murder) என்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள். பிரிவு 304(II) கூறுவதாவது:


இங்கு மரணத்தை ஏற்ப்படுத்தும் நோக்கம் தேவையில்லை. ஆனால் ஒருவர் செய்யும் செயலானது மரணத்தை ஏற்ப்படுத்தலாம் என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

அது மட்டும் போதாது. அந்த செயல் ஒரு தண்டிக்கப்படக்கூடிய மரணம் விளைவித்தலாக இருத்தல் வேண்டும்.

அவ்வாறு குற்றம் சாட்டியது தவறு என்று குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தினை அணுகினர். உச்ச நீதிமன்றம் அரசு தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், பிரிவு 304(II)ல் விளக்கப்படும் குற்றத்திற்கான கூறுகள் அவற்றில் இல்லை. ஆனால் பிரிவு 304Aன் கூறுகள் உள்ளன என்று கூறி மற்ற குற்றப் பிரிவுகளை நீக்க ஆணையிட்டது.

எனவே குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள்தான் தண்டனை என்பது 1996ம் ஆண்டே உச்ச நீதிமன்றத்தாலேயே தீர்மானிக்கப்பட்ட ஒரு விடயம்.

-oOo-

தீர்ப்பிலிருந்து, நஷ்டத்தில் இயங்கி வந்த தொழிற்சாலையினை மூடி இந்தோனேசியாவிற்கு எடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டதால், தகுந்த பராமரிப்பு இல்லாமல் இறந்து கொண்டிருந்த ஒரு தொழிற்சாலையில் இவ்வளவு அபாயகரமான நச்சுப் பொருட்களை கையாண்டிருக்க வேண்டுமா என்று தோன்றுகிறது.

விபத்து நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் போபால் தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கை அதன் பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நடக்கப் போகும் விபத்தினை துல்லியமாக எச்சரித்துள்ளதை படிக்கையில் நமது தண்டுவடம் சிலிர்க்கிறது...

(a) It appears that it would be possible to contaminate the tank with material from the vent gas scrubber. Although the arrangement of lines connecting the tank and vent scrubber appears to be adequate to prevent back flow of liquid, it appears possible to back reactive quantities of water vapors and other gases from the scrubber to the feed tank when it is depressurized.

(b) Location of the tank inside a room and lack of water spray protection facilities create a situation where a toxic and flammable vapor cloud could be formed and confined without provision for knockdown or dispersal. There is mechanical ventilation in the room, but the same circumstances that could result in a leak or overfill (power failure, for instance) could result in the ventilation being inoperative. Also, it appears that a sizeable spill would not be readily dispersed by the system.
(c) There is some question about the adequacy of the tank relief valve to relive a runaway reaction or fire exposure, particularly since the tank has been enlarged.
(d) Manual control of filling of the tank, with no instrumentation backup, creates a possibility of accidental overfilling

ஆயினும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு பாதுகாப்பினை மேம்படுத்த செலவு செய்ய எந்த நிர்வாகம் முன் வரும். அதுவும் இந்தியாவில்! அதுவும் 25 வருடங்களுக்கு முன்னர்!!

உச்ச நீதிமன்றம், விபத்து நடந்த அன்று நிகழ்ந்தவைகளை மட்டுமே, குற்றச்செயல்களாக கருதி “அன்று அந்த தொழிற்சாலையினை இயக்கிய பொழுது அதனை இயக்கியவர்களுக்கு அதனை இயக்குவதால் மனிதர்கள் உயிரிழக்க நேரிடலாம் என்ற எண்ணம் (knowledge) இருந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறி பிரிவு 304(II)ஐ நீக்கியது.

சட்ட முறைகளை அறிந்தவர்கள் உச்ச நீதிமன்றம் கூறியது ஒரேடியாக தவறு என்று கூற மாட்டார்கள். ஆனாலும், மக்களின் மனநிலையை கருதி, உச்சநீதிமன்றம் ‘குற்றம் மட்டுமே சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த கேள்விக்கான விடையினை வழக்கினை விசாரிக்கும் நடுவரே (Judicial Magistrate) தீர்மானிக்கட்டும்’ என்று கூறியிருக்கலாம். சாட்சிகளை பின்னர் விசாரிக்கையில் மேலும் பல உண்மைகள் வெளி வந்திருக்கலாம்.

ஏனெனில், மிக அரிதான வழக்குகளில் மட்டுமே இவ்வாறு குற்றம் மட்டுமே சாட்டப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டுகளை (charges) நீக்க உச்ச நீதிமன்றம் முன் வரும்.

பிரிவு 304(II)ஐ பொறுத்து தற்பொழுது செய்வதற்கு ஏதுமில்லை. இரண்டு வருடங்கள் அளிக்கப்பட்ட தண்டனையே இறுதியில் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகமே!

இவ்வளவு பயங்கரமான நச்சுப் பொருட்கள் இருக்கையில், எவ்வித பராமரிப்பும் இல்லாமல் செத்துக் கொண்டிருந்த ஒரு தொழிற்சாலையினை, பாதுகாப்பு தொழிற்நுட்பத்தில் குறைபாடுகளுடன் இயக்குவதால் நச்சுப் பொருள் வெளியேறி மரணம் ஏற்ப்படலாம் என்ற அறிவு (knowledge) அதனை இயக்குபவர்களுக்கு இருந்திருக்குமா? என்ற கேள்வியினை எதிர்காலத்தில், இவ்விதமான பயங்கரங்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் மக்கள் மன்றத்தில் ஆராயப்படலாம்.

Prabhu Rajadurai
Madurai
19/06/10









  

15.6.10

போபாலும் ஆங்கில காந்திமதிகளும்!

கடந்த சில நாட்களாக, போபால் விஷவாயு விபத்தின் குற்ற வழக்கு தீர்ப்பு குறித்து நமது ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் நடந்து கொள்ளும் முறை எரிச்சல் ஏற்ப்படுத்துவதாய் உள்ளது.

வழக்கின் தன்மை பற்றியோ, குற்றவியல் நடைமுறை பற்றியோ சிறிதும் சிந்திக்காமல் ‘நீதி செத்து விட்டதுஎன்றும் வாரன் ஆண்டர்சன் தப்பித்து விட்டார் என்றும் கூக்குரலிடுவதில் ஏறக்குறைய நமது தமிழ்ப்படங்களில் காந்திமதி மண்ணை வாரி தூற்றி சாபம் விடும் இயலாமைதான் தெரிகிறது.

-oOo-

தற்பொழுது தண்டனை பெற்றவர்களின் மீதான குற்றச்சாட்டு கவனக்குறைவான செயலால் மரணம் ஏற்ப்படுத்தியது. அந்த குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனை இரண்டு ஆண்டுகள்தான். அதையும் கொடுத்தாயிற்று. பின்னர் எங்கிருந்து நீதி செத்தது என்பது தெரியவில்லை.

வேறு கடுமையான குற்றச்சாட்டு ஏற்கனவே நீக்கப்பட்டு கவனக்குறைவினால் மரணம் ஏற்ப்படுத்துதல் என்ற வகையிலே மட்டும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது கடந்த பல ஆண்டுகளாக அனைவருக்கும் தெரிந்த நிலையில், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஊடகங்கள் தற்பொழுது ஏன் இப்படி அலறுகின்றன என்பது புரியவில்லை. (எனது போபால் பற்றிய கட்டுரையில் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்)

ஆண்டர்சன், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னர், அவரைப் தனியே பிரித்து மற்றவர்களைப் பற்றி மட்டும் வழக்கு நடைபெற்ற சூழலில், தீர்ப்பில் ஆண்டர்சனைப பற்றி குறிப்பிடவில்லை என்று தனியே ஒரு புலம்பல்!


காங்கிரஸ் என்ன செய்தது, பிஜேபி என்ன செய்தது என்று தற்பொழுது கேட்கும் ஊடகங்கள், இது வரை தாங்கள் என்ன செய்தோம் என்பதையும் கூறினால் நல்லது. இதில் வேடிக்கை என்னவென்றால், டைம்ஸ் நவ் ‘இதோ நாங்கள் ஆண்டர்சனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விட்டோம்என்று ஒரு தம்பட்டம். விட்டால், காப்டன் பிரபாகரன் போல அவரை சங்கிலியில் கட்டி அட்லாண்டிக் வழியே கூட்டி வந்து விடுவார்கள் போல.

ஆண்டர்சன் எங்கு வசிக்கிறார் என்பது, எந்தக் காலத்திலும் யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. பல வருடங்களுக்கு முன்னரே அவர் வசிக்கும் வீட்டின் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியானது.

ஆண்டர்சன் அரச மரியாதையுடன் இந்தியாவை விட்டு சென்றது அன்றே தொலைக்காட்சியாலும் பத்திரிக்கைகளாலும் ஆவணமாக்கப்பட்ட ஒரு விடயம். இவ்வளவு வருடங்கள், அதைப் பற்றி எதுவும் கவலைப்படாத இந்த ஊடகங்கள், தற்பொழுது அர்ஜுன் சிங் தாத்தாவைப் போட்டு இப்படி காய்ச்சுவது என்ன நியாயம் என்று புரியவில்லை.

தர்ம அடி என்பது இதுதான். யார் வேண்டுமானாலும் ஒரு தடியை எடுத்து அர்ஜுன் சிங்கை ஒரு போடு போட்டு விட்டுப் போகலாம் போல. ஆண்டர்சனை இங்கிருந்து அனுப்ப வேண்டுமென்றால், ஒரே ஒரு மனிதர்தான் அதற்கு உத்தரவிட்டு இருக்க முடியும். அவரை குறிப்பிட முடியாது. அர்ஜுன் சிங் என்றால் பிரச்னை இல்லை!

-oOo-

‘குற்ற மனமில்லாச் செயல் குற்றமல்லஎன்பது குற்றவியலின் முக்கியமான ஒரு விதி. எந்த ஒரு தவறான செயலையும் தண்டனைக்கேதுவான குற்றச்செயலாக கருதுவதற்கு ‘mens reaஎனப்படும் குற்றமனம் தேவை.

கவனக்குறைவான் ஒரு செயலால் மற்றொரு நபருக்கு ம்ரணத்தையோ அல்லது காயத்தையோ விளைவித்தல் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம். கவனக்குறைவான ஒரு செயலில், மேற்கண்ட குற்ற மனம் இல்லை என்பது போலத் தோன்றினாலும் அந்த வகையில் கவனக்குறைவாக இருத்தலுக்கு ஒரு குற்ற மனம் தேவை.


எனினும், இந்த வகை குற்றத்திற்காக சட்டம் அளிக்கும் தண்டனை மிகக் குறைவு. அதிக பட்சம் இரண்டு வருடங்கள்!

இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட பொழுது பெரிய வாகனங்களும் இல்லை. நச்சு தொழிற்சாலைகளும் இல்லை. எனவே கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியோ அல்லது நச்சுப்புகை தொழிற்சாலை நடத்தியோ ஒருவரை கொன்றாலும் சரி, ஆயிரம் பேரை கொன்றாலும் சரி அதே சிறிய தண்டனைதான்.

போபால் விபத்திலும் சரி, தொடர்ச்சியாக காரை ஏற்றி பல பேரை கொன்று போட்ட சல்மான்கான், நந்தா வழக்குகளிலும் இந்த தண்டனை போதாது என்று கொலை இல்லை என்றாலும் தண்டிக்கத்தகுந்த வகையில் மரணத்தை ஏற்ப்படுத்துதல் ( Culpable homicide not amounting to murder) என்ற் அதிகபட்சம் பத்து வருடம் தண்டனை தரத்தக்க ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. எதிர்ப்பார்த்தது போல, போபால் வழக்கிலும், அந்த குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது.

எனவே, போபால் தீர்ப்பில் அதிர்ச்சி தெரிவிக்க புதிதாக என்ன இருக்கிறது என்று புரியவில்லை!

-oOo-

குற்ற வழக்கை விடுங்கள். உண்மையில் நாம் கோட்டை விட்டது நஷ்ட ஈடு வழ்க்கில்.(எப்படி என்ற விபரம் எனது போபால் கட்டுரையில் உள்ளது) எனெனில் தொழிலதிபர்கள் தூக்கு மேடைக்கு கூட போவார்கள். ஆனால் தாங்கள் திவாலாவதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கும் தவறிழைத்தவர்களின் இரத்தத்தினை விட, வளமான எதிர்காலத்திற்கான தகுந்த பாதுகாப்பே சிறந்த நிவாரணமாக இருக்க இயலும்.

தொழில் நடத்த வேண்டும் என்றால், அந்த தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத ஏழைகள் அதனால் பாதிக்கப்பட்டால் அதற்கான முழு நஷ்ட ஈடும் அளிக்க தொழில் நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும்.


அந்த வகையில், இப்படி உணர்ச்சிகரமாக பிரச்னையை கிளப்பியதற்கு வேண்டுமானால் ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களிற்கு நமது நன்றியினை தெரிவிக்கலாம்!

மதுரை
16/06/10

6.4.10

மதன், நீங்களுமா?




ஆனந்த விகடன் வார இதழில் ‘ஹாய் மதன்என்ற தலைப்பில் கார்டூனிஸ்ட்டும் வரலாற்று எழுத்தாளருமான மதன் வாசகர் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். பல வருடங்களுக்கு முன்னர் ஜூனியர் விகடனில், எழுத்தாளர் சுஜாதா ஏன்? எதற்கு? எப்படி? எனறு பதிலளித்து வந்த அதே முறையில்தான் இந்த தொடரும் அமைந்துள்ளது.

இந்த வார இதழில், என்ன கேள்வி என்று தெரியவில்லை. ஆனால் ஒரு கேள்விக்கான பதிலில் நிலவுக்கு முதன் முதலில் மனிதர்கள் சென்ற பொழுது ஆல்ட்ரின்தான் முதலில் நிலவில் காலடி வைப்பதாக இருந்ததாகவும், அதனை ஆம்ஸ்டிராங் படம் பிடிப்பது என்றும் ஏற்ப்பாடாகியிருந்தது என்றும் ஆனால் ஆல்ட்ரின் நிலவில் மெத்தென்று இருந்து புழுதியில் கால் வைக்க தயங்கியதால் ஆம்ஸ்டிராங் முதலில் இறங்கியதாகவும், பின்னர் வாழ்நாள் முழுவதும் ‘தவற விட்ட வாய்ப்புக்காக வருந்திஆல்ட்ரின் மதுவுக்கு அடிமையாகிப் போனதாகவும் எழுதியிருக்கிறார்.


(பேருந்தில் செல்கையில் கையில் கிடைத்த விகடனில் ஹாய் மதனில் படித்தது என்று நினைக்கிறேன். தவறு என்றால் திருத்திக் கொள்கிறேன்)

அப்பல்லோ 11 நிலவுப் பயணம் குறித்து அநேக தகவல்கள் உள்ளது. அல்ட்ரின் எழுதிய புத்தகமும் உள்ளது. இப்படி ஒரு தகவலை நான் படித்ததில்லை.

பொதுவாக இவ்வாறான பயணங்களில், அறியாத பிரதேசங்களில் பயணக் கலத்தின் தலைவர் முதலில் கால் வைப்பது மரபு இல்லை. எனவே ஆல்ட்ரின் முதலில் கால் வைக்கலாமா என்று விவாதிக்கப்பட்டது. ஆயினும், மனிதகுல வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கப் போகும் ஒரு நிகழ்வின் பெருமையினை தலைவருக்கு தர வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டு மரபை மீறி ஆம்ஸ்டிராங்கிற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

இத்தகைய முடிவுகள் விண்கலம் இங்கிருந்து கிளம்பும் முன்பே எடுக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு நொடியும் திட்டமிடப்படாமல், இவ்விதமான பயணங்கள் மேற்கொள்ளப்படாது.

ஆல்ட்ரின் குடிப்பழக்கத்துக்கு ஆளானது உண்மை. ஆனால் நழுவ விட்ட வாய்ப்புக்காக என்பது தவறு.

அடுத்தது, நிலவில் ஆம்ஸ்டிராங் இருப்பது போல படமே எடுக்கப்படவில்லை என்று கூறியிருப்பதும் தவறு. சில படங்களே எடுக்கப்பட்டது என்பதுதான் சரியான் தகவலாய் இருக்கக் கூடும்.

***



இதே இதழில், எப்படி நேருவின் மகள் இந்திரா காந்தியானார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இந்திராவின் கணவரான பெரோஸ் காந்திக்கும் குஜாராத் ‘காந்திக்கும் சம்பந்தமில்லை என்பதையும் விளக்கியிருந்தால் வாசகர்கள் மேலும் தெளிவு அடைந்திருப்பார்கள்.

ஞாநி, சாரு நிவேதிதாவைத் தொடர்ந்து மதனும் இவ்வாறு தகுந்த ஆய்வின்றி ஒரு சம்பவத்தினை எழுத முற்ப்படுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

தனது தவறினை ஏற்றுக் கொண்டு வாசகர்களுக்க்கு நிலவுப் பயணம் குறித்து சரியான தகவல்களைத் தர வேண்டிய பொறுப்பு மதனுக்கு உள்ளது. பார்க்கலாம்...

மதுரை
060410

19.3.10

நாம் கொடுத்த கோடியும்...கிடைக்கப் போகும் லட்சமும்!

டாக்டர் சுரேஷ் மஹாஜன் இந்தியர். ஆனால், இந்தியாவில் ஆரம்பித்த தனது மருத்துவ தொழிலை அமெரிக்காவில் தொடர்ந்து, பின்னர் அமெரிக்க குடிமகனாக மாறியவர். அமெரிக்க பெண்ணான பட்ரீசியாவை மணந்து, மூன்று குழந்தைகளுக்கு தந்தையான மஹாஜன் தனது நாற்பத்தி ஏழாவது வயதில், ஒரு சாலை விபத்தில் இறந்து போனார்.

1995ம் வருடம் தனது பெற்றோர்களை காண இந்தியா வந்திருந்த மஹாஜன் பயணம் செய்த கார் மீது லாரி மோதிய விபத்தில் மஹாஜன் உயிரிழக்க நேரிட்டது.

பட்ரீசியா, மஹாஜனின் மரணத்திற்கு இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தார். விபத்தினை ஏற்ப்படுத்திய லாரியை காப்பீடு செய்திருந்த நிறுவனம், யுனைட்டட் இந்தியா இன்ஸுரன்ஸ் கம்பெனி (United India Insurance Co.Ltd.,)

விபத்து நடப்பதற்கு முந்தைய வருடமான 1994ம் வருடத்தில் மஹாஜனின் வருட வருமானம் 9லட்சம் அமெரிக்க லாடர்கள் என்று கூறப்பட்டாலும் அவரது நிகர வருமானம் (take home salary) 3,39,445 டாலர்கள் என்று கண்டறியப்பட்டது.

பலபடிகளைக் கடந்து, வழக்கு இறுதியில் சென்ற இடம் உச்ச நீதிமன்றம். அங்கு மஹாஜனனின் மரணத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இழப்பீடு ரூ.6,78,89,100/- இந்த தொகையானது வ்ழக்கு தாக்கல் செய்த தேதியிலிருந்து 9% வருட வட்டியுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டியது.

மஹாஜன் குடும்பத்திற்கு ஆயுள் காப்பீடு மூலம் கிடைக்கும் 2,50,000 அமெரிக்க லாடர்கள் இந்த இழப்பீடு தொகையில் கழிக்கப்பட வேண்டும் என்ற யுனைட்டட் இன்ஸூரன்ஸ் நிறுவனத்தின் வாதம் நிராகரிக்கப்பட்டது. (United India Insurance Co.Ltd., Vs Patricia Jean Mahajan 2002 (6) SCC 281)

1995ம் ஆண்டு நிகழ்ந்த மரணத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை சுமார் 7 கோடி இந்திய ரூபாய்கள். இன்றைய பண மதிப்பில் சுமார் சுமார் 20 கோடி இருக்கலாம். மேலும் பத்து ஆண்டுகள் கழித்து சுமார் 30 கோடியை தொடலாம்.

***

அமெரிக்கரான பட்ரீசியாவிற்கு கொடுக்கப்பட்ட இழப்பீடு தொகைக்காக யுனைட்டட் இந்திய இன்ஸூரன்ஸ் நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட கிளையில் அதன் அனைத்து வாடிக்கையாளர்களும் செலுத்திய பிரீமிய தொகை பயன்படுத்தப்பட்டதாம்.

ஒரு வேளை மஹாஜனைப் போல பத்து அமெரிக்க மருத்துவர்கள் இறந்திருந்தால், வேறு வழியில்லை. பத்து கிளைகளின் பிரீமியத் தொகையை கொடுக்க வேண்டியிருக்கும்.

ஏனெனில், மோட்டார் வாகன விபத்துகளில் உயர்ந்த பட்ச இழப்பீடு என்பது கிடையாது. காப்பீடு நிறுவனங்களும் தாங்கள் கொடுக்க வேண்டிய அதிக பட்ச இழப்பீடு இவ்வளவுதான் என்று வரையறுக்க இயலாது.

எனவே, அமெரிக்கரான மஹாஜன் இந்தியாவில் ஏற்ப்பட்ட சாலை விபத்தில் இறந்ததால், வளரும் நாடான இந்தியாவின் நிறுவனம் ஒன்று அளித்த இழப்பீட்டு தொகை...1995ல் சுமார் 7 கோடி!

வருடம் 2020 என்றால் 30 கோடி இருக்கலாம்.

***

அதே 2020ம் ஆண்டு, அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்தியாவில் நிர்மாணித்து, இயக்கும் அணு உலையில் ஏற்ப்பட்ட விபத்து ஒன்றினால், மஹாஜன் அளவிற்கு சம்பாதிக்கும் இந்திய மருத்துவர் ஒருவர் இறந்து போனால்...அமெரிக்க நிறுவனம் அவரது மனைவிக்கு அளிக்கும் இழப்பீடு 30 லட்சம் கூட இல்லாமல் போகலாம். அணுக்கரு இழப்பிற்கான சிவில் கடப்பாடு சட்டம் (Civil Liability for Nuclear Damage Act) என்ற சட்டம் நமது பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டால்...

இந்தச் சட்டம் அணு உலை விபத்தால் ஏற்ப்படும் இழப்புகளுக்கு தர வேண்டிய அதிக பட்ச இழப்பீட்டினை நிர்ணயிக்கும். அதாவது மொத்த இழப்பீடு சுமார் 2000 கோடி. அதுவும் அணு உலையை நிர்மாணிக்கும்/ இயக்கும் நிறுவனம் தர வேண்டிய அதிக பட்ச தொகை சுமார் 500 கோடி மட்டுமே. மீதி, இந்தியர்களின் வரிப்பணத்திலிருந்து தரப்பட வேண்டும்.

உதாரணமாக, போபால் விசவாயு விபத்தில் உயிரிழந்தவர்கள் மட்டும் சுமார் 2500 நபர்கள். செர்னோபில்லில் அதிகம் இருக்கலாம். அப்படி ஒரு விபத்து இந்தியாவில் நடந்தால், அமெரிக்க நிறுவனம் இந்திய மஹாஜன்களுக்கு கொடுக்கும் இழப்பீடு சுமார் 20 லட்சத்தை தாண்டாது.

மேலிருந்து கீழ் நோக்கி எதுவும் பாயலாம்...பணம் மட்டும் பாயாது!

மதுரை
19/03/10

14.1.10

இஸ்லாமிய வங்கியும் வம்பு வழக்கும்...

இஸ்லாமிய வங்கியும் வம்பு வழக்கும்...


சுப்பிரமணிய சுவாமி மறுபடியும் கோல் அடித்திருக்கிறார். இந்த முறை கேரள உயர்நீதிமன்றத்தில்!

ஆனால், இதுவும் சுவாமியின் வழக்கமான ‘ஆஃப் சைட் கோல்’தான். இந்த வழக்கு எதிர்காலத்தில், தங்களுக்கே எதிராக திரும்பும் சாத்தியக்கூறுகளை அறியாமலேயே, அவரை தற்பொழுது சுற்றியுள்ள ‘இந்துத்வா’வாதிகள் இதனை ஒரு வெற்றியாக கொண்டாடுகின்றனர்.

எப்படியோ சுவாமி மீண்டும் பொதுநல வழக்கு ஒன்றின் மூலம், அரசியலில் தன்னுடைய இருப்பிடத்தினை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

-oOo-

தற்பொழுதுதான் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பத்திரிக்கைச் செய்திகளின் மூலமே வழக்கின் சாரம் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. கேரள அரசு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (KSIDC) என்ற நிறுவனம் கேரள மாநில அரசினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஒரு அரசு நிறுவனம். தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதன் மூலம், கேரள மாநிலத்தில் தொழில் வளத்தினைப் பெருக்கும் நோக்கத்துடன் இயங்கி வருகிறது.

சமீபத்தில் இந்த நிறுவனம், இஸ்லாமிய ஷரியா விதிகளுக்கு உட்பட்டு இயங்கக்கூடிய கடன் வழங்கும் நிறுவனம் (Financial Institution) சுமார் 20 தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து தொடங்கப் போவதாக அறிவித்தது. KSIDC முதலீட்டில் 11 சதவீதம் அளிக்கும். வங்கியின் பங்குகளில் 51 சதவீதம் முதலீட்டாளர்களுக்கும், 49 சதவீதம் பொதுமக்களுக்கும் அளிக்கப்படும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

கேரள அரசு இதற்காக ஒரு அரசாணையை வெளியிட அதனை எதிர்த்து, சுவாமி கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

சுவாமியின் வாதம்?

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, நமது அரசு ஒரு மதச்சார்பற்ற அரசு (secular state). அவ்வாறான ஒரு அரசு இஸ்லாமிய வங்கி என்ற மதரீதியிலான நிறுவனத்தை தொடங்குவது, அரசின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானதாகும். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டை பின்பற்றி இயங்கும் ஒரு வங்கியினை நடத்துவதன் மூலம், கேரள அரசு இஸ்லாமிய மதத்திற்கு சார்பாக நடந்து கொள்கிறது. அரசுப் பணமானது ஒரு தனிப்பட்ட மதத்திற்கு ஆதரவாக பயன்படுத்தப்படும் இந்த செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதே!

மேற்கண்டவை தவிர, இவ்விதமான வங்கி நமது வங்கி கட்டுப்பாட்டுச் சட்டம் (Banking Regulation Act) மற்றும் மைய வங்கியின் வழிகாட்டுதல்கள் (Reserve Bank Regulations) ஆகியவற்றையும் மீறுகிறது என்ற காரணங்களும் கூறப்பட்டாலும், மதச்சார்பின்மை வாதம் மட்டுமே முன்னணியில் வைக்கப்படுவதால், அவற்றை ஆராய்வது அவசியம் என்று கருதுகிறேன். ஏனெனில் மற்ற விதிமீறல்களை சட்டத்தினை (Act) திருத்துவதன் (amendment) மூலமும், விதிகளை (Rules) தளர்த்துவதன் மூலமும் சரி செய்து விடலாம்.

மேலும், இந்த நிறுவனம் வங்கி சாராத ஒரு அமைப்பு (Non Banking Financial Company NBFC). வங்கி அல்ல!

ஆனால், மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்பின் அடிப்படைக்கூறு (basic feature). அதற்கு எதிரான எந்த செயலையும் நேர் செய்துவிட முடியாது!

-oOo-

இஸ்லாம் மதக் கோட்பாடான ஷரியா, வட்டி பெறுதலை அனுமதிப்பதில்லை. ஆனால் ஒரு தொழிலினை புரிவதன் மூலம் லாபம் ஈட்டுவதை அனுமதிக்கிறது. மாறாக நவீன பொருளாதாரம் கடனை அடிப்படையாக கொண்டே இயங்குகிறது. நவீன வங்கிகளும் கடன் வழங்கி, அதற்கான வட்டியில் இருந்து லாபம் ஈட்டுகின்றன.

எனவே நடைமுறையிலுள்ள வங்கியின் செயல்பாடுகள் இஸ்லாத்திற்கு எதிரானது என்ற கருத்து நிலவுகிறது.

இஸ்லாம் தடை செய்துள்ள வட்டியினை வைப்பீடுகளுக்கு (deposits) வழங்காமலும், தொழில்களுக்கு அளிக்கப்படும் கடன்களுக்கு வட்டி வசூலிக்காமலும் செயல்படும் வண்ணம், நடைமுறையிலுள்ள வங்கிகளுக்கு மாற்றாக செயல்படும் நிறுவனங்கள்தாம் ‘இஸ்லாமிய வங்கி’ எனப்படும் அமைப்புகள்.

வட்டியில்லாமல் ஒரு வங்கி செயல்படுவது நடைமுறையில் சாத்தியமா? சுவாமி இதனை கொதிக்க வைக்கப்பட்ட ஐஸ்கிரீம் (boiled ice cream) என்று கிண்டலடிக்கிறார்.

ஆனால், வட்டியில்லா வங்கி முறையை அவ்வளவு எளிதாக புறம் தள்ள முடியாதபடி உலக பொருளாதாரத்தில் அவற்றின் வளர்ச்சி உள்ளது என்பதுதான் உண்மை!

-oOo-

நவீன இஸ்லாமிய வங்கி 1963ம் ஆண்டு எகிப்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது கடனுக்கு வட்டி வழங்காமலும், அவற்றை தொழிலில் முதலீடு செய்து அதனால் கிடைக்கும் லாபத்தினை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முறைதான் இஸ்லாமிய வங்கி முறை.

முதன் முறையாக தொடங்கப்பட்ட வங்கி சில ஆண்டுகள்தான் செயல்பட்டது என்றாலும் இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 10-15% வேகத்தில் வளர்ந்தும் வருகின்றன.

சமீப காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை (global recession) இஸ்லாமிய வங்கி முறைக்கு சாதகமாக அமைந்து அதன் மொத்த சொத்துகளின் வளர்ச்சி கடந்த ஆண்டு 29%ஐ தொட்டு சுமார் 822 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பல ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறை வேர்விட்டுள்ளது. பிரான்சு கூட சமீபத்தில் இஸ்லாமிய வங்கி முறையினை அமுல்படுத்துவதற்காக பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் தனது சட்டத்தினை திருத்தியுள்ளது. பிரெஞ்சு உச்ச நீதிமன்றம் சட்டதிருத்தம் தவறு என்று கூறியிருப்பினும் அது ஒரு நடைமுறை காரணத்திற்காகத்தான் (technical reason) என்பதால், மீண்டும் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் வாய்ப்புகள் உள்ளன.

புகழ் பெற்ற சந்தை குறியீட்டு நிறுவனமான டெள ஜோன்ஸ் (Dow Jones) கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்லாமிய சந்தை குறியீடு (Dow Jones Islamic Market Index DJIMI) என்பதின் மூலம் இந்த சந்தையின் போக்கினை கணித்து வருகிறது.

முக்கியமாக, ‘மேற்கத்திய வங்கிகள் இஸ்லாமிய வங்கி முறையினை தங்களது செயல்பாட்டில் புகுத்துவதன் மூலம், தங்களது வாடிக்கையாளர்களின் நெருக்கமான நம்பிக்கையினை பெற முடியும்’ வாடிகன் வேறு இஸ்லாமிய வங்கி முறைக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.

எனவே இஸ்லாமிய வங்கி என்பது, இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு பாதகமின்றி செயல்படும் ஒரு வர்த்தக கோட்பாடே (commercial concept) தவிர இஸ்லாம் மதம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இந்த வங்கினை நடத்துபவர்களோ, வேலை செய்பவர்களோ, வாடிக்கையாளர்களோ அல்லது கடன் பெறுபவர்களோ இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

உதாரணமாக, ஆயுர்வேதம் என்பது இந்திய வேதங்களில் குறிப்பாக அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு மருத்துவ முறை. இதனை எந்த மதத்தை சேர்ந்தவரும் கற்று மருத்துவராக தொழில் புரிய முடியும். இந்து வேதத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும்தான் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலும் என்பதில்லை.

அலொபதி மருத்துவத்திற்கு மாற்றாக ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவ முறைகளில் மக்களிடையே உள்ள நம்பகத்தன்மையினை விட கூடுதலான நம்பகத்தன்மையினை இஸ்லாமிய வங்கி முறை பெற்றுள்ளது என்று உறுதியாக கூற முடியும்.

-oOo-

தீவிர வலதுசாரி கொள்கையுடைய அரசு நடக்கும் பிரெஞ்சு நாட்டிலேயே எதிர்ப்புகளுக்கிடையிலேயும் இஸ்லாமிய வங்கி முறையினால் கிடைக்கும் லாபத்தினையும், முதலீட்டையும் கருத்தில் கொண்டு சட்டத்திருத்தம் ஏற்ப்படுகின்றது என்றால், இந்தியா மட்டும் பின் தங்கி விட முடியுமா?

எனவேதான் வங்கிச் செயல்பாடுகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தம் பற்றி ஆராய்ந்த ‘ரகுராம் ராஜன் குழு’வும் இஸ்லாமிய வங்கிகள் இந்தியாவில் ஏற்ப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

முக்கியமாக, கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பலர் இஸ்லாமியர்கள். இஸ்லாமிய வங்கி தொடங்குவதன் மூலம், இவர்களது கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள முதலீட்டினை பெற்று பெருமளவில் இங்கு பல தொழில்களிலும், நலத்திட்டங்களிலும் பயன்படுத்த முடியும். உலக பொருளாதார தேக்க நிலையில் அதிகளவில் பாதிக்கப்படாத இந்தியா போன்ற நாடுகளில் முதலீடு செய்யவும் மற்ற நாடுகளில் முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஏன், லாபகரமாக இயங்கினால் யார் வேண்டுமானாலும் இவ்விதமாக வங்கிகளில் முதலீடு செய்ய முன்வருவார்கள்.

எனவே இஸ்லாமிய வங்கி முறை இந்திய சூழ்நிலையில் சோதித்து அறியப்பட வேண்டிய ஒன்று. ‘கொதிக்கும் பனிக்குழைவு’ என்று எளிதாக தூக்கி எறிந்து விட முடியாது.

-oOo-

கேரள தொழில் முதலீட்டு நிறுவனம், இந்த வங்கிக்கான தலைமை செயல் அதிகாரி (CEO) மற்றும் மேலாளர்கள் (Managers) தேவை என்று தனது வலைப்பதிவில் செய்துள்ள விளம்பரத்தை, சுவாமி தனக்கு சாதகமாக பயன்படுத்தி இடைக்கால உத்தரவினை பெற்றுள்ளார் என்றே நினைக்கிறேன்.

இஸ்லாமிய வங்கி என்பது ஏதோ மத அமைப்பு போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ள சுவாமி, மேற்கண்ட விளம்பரத்தில் அதன் தலைமை செயல் அதிகாரி வங்கியின் இயக்குஞர் குழுவிற்கும், ஷரியா ஆலோசனைக்குழுவிற்கும் பதிலளிக்க கடமைப்பட்டவர் (He will report to the Board of Directors and Shariah Advisory Board) என்ற வாசகத்தினை வைத்து, ‘மத அமைப்பு ஒன்றிற்கு கட்டுப்பட்ட முஸ்லீம் தலைமை செயல் அதிகாரியினை கொண்ட வங்கி மதச்சார்புடைய அமைப்பு’ என்று வாதிட்டுள்ளார்.

விளம்பரத்தில் தலைமை செயல் அதிகாரி இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லை. ஏற்கனவே கூறியபடி இஸ்லாமிய வங்கி முறை என்பது ஒரு வர்த்தக கோட்பாடே தவிர மதத்தை பின்பற்றுவதல்ல.

ஷரியா ஆலோசனைக் குழு?

வாடிக்கையாளர்களிடம் இருந்து வைப்பீட்டினைப் பெறுவதோடு மட்டும் வங்கியின் பணி முடிவடையாது. பெற்ற பணத்தினை தொழில்களில் முதலீடு செய்ய வேண்டும். பிரச்னை, இஸ்லாம் தடை செய்வது வட்டியினை மட்டுமல்ல. சில தொழில்களையும் கூடத்தான். எனவே, இஸ்லாமிய வங்கி மற்ற வங்கிகளைப் போல அனைத்து தொழில்களிலும் முதலீடு செய்து விட முடியாது.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்குமா என்ற முடிவினை ஒரு வர்த்தக மேலாளரால் எடுக்க இயலும். ஆனால் அந்த நிறுவனம் நடத்தும் தொழிலை இஸ்லாம் அனுமதிக்கிறதா என்ற கேள்வி எழுந்தால், அந்த முடிவினை ஒரு ஷரியா சட்டத்தினை அறிந்த அறிஞரால் எடுக்க முடியும்.

எனவே, இஸ்லாமிய வங்கிகள் ஷரியா ஆலோசனைக் குழு என்ற அமைப்பு ஒன்றினை ஏற்படுத்திக் கொண்டு அதன ஆலோசனையின் படி தொழில் முதலீடுகளில் ஈடுபடுகின்றன.

ஷரியா கோட்பாடுகளை கற்றுத் தெரிந்த யாரும் இவ்வகையான ஆலோசனைக் குழுக்களை அமைத்து செயல்பட முடியும். ஐ எஸ் ஓ (ISO) தரம் நிர்ணயம் செய்யும் தனிப்பட்ட ஒரு அமைப்பு போல இவையும் செயல்படுகின்றன. இஸ்லாமிய மெளல்வி அல்லது இஸ்லாமியர்கள்தான் அந்த அமைப்பில் இருக்க வேண்டும் என்ற விதி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

ஷரியா கூறுவதை வைத்து, இஸ்லாமியர்களுக்கிடையேயான வழக்குகளில் தீர்ப்பு கூறும் இந்து நீதிபதிகளையும், இந்து ஆகமம் கூறுவதை ஆராய்ந்து இந்து கோவில் நிர்வாகப் பிரச்னையில் தீர்ப்பு கூறும் இஸ்லாமிய நீதிபதிகளையும் நாம் இங்கு பார்க்கவில்லையா? அது போலத்தான் இதுவும்.

முக்கியமாக, இஸ்லாம் அனுமதிக்கும் அல்லது தடை செய்யும் தொழில்களைக் குறித்து இஸ்லாமிய அறிஞர்களுக்கிடையே கூட பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுவது நாம் அறிந்ததே!

இஸ்லாமிய வங்கியோ வேறு வங்கியோ, ஷரியா கோட்பாடுகளுக்கு பாதகமில்லாமல் எந்த ஒரு வங்கியும் இயங்க முடியாது என்ற கருத்தினையும் சிலர் முன் வைக்கிறார்கள். வங்க தேசத்தின் முகமது யூனிஸ் கூட தனது ‘கிராமீன் வங்கிகள்’ ஜாமீன் சொத்து இல்லாதது (Collateral Security) மற்றும் குறைந்த வட்டியில் இயங்குவது போன்றவற்றால் இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு உட்பட்டது என்றுதான் கூறுகிறார்.

எனவே வைப்பீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வைப்பீடானது ஷரியா கோட்பாடுகளுக்கு உட்பட்டே முதலீடு செய்யப்படுகின்றன என்று ஓரளவிற்கு ஒரு உத்தரவாதத்தினை தருவதற்காக இப்படிப்பட்ட குழுக்களின் ஆலோசனைகளின்படி இவ்விதமான வங்கிகள் செயல்பட முன்வருகின்றன.

எனவே ஷரியா ஆலோசனைக் குழு என்பது ஒரு மத அமைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை.

-oOo-

தனது வாதத்திற்கு வலு சேர்க்க சுவாமி நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 27ஐ சுட்டிக் காட்டுகிறார். அந்தப் பிரிவு

27. Freedom as to payment of taxes for promotion of any particular religion.- No person shall be compelled to pay any taxes, the proceeds of which are specifically appropriated in payment of expenses for the promotion or maintenance of any particular religion or religious denomination.

இந்தப் பிரிவினை ஒரு வழக்கில் ஆராய்ந்த 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்சு கூறிய ஒரு தீர்ப்பில் ‘எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் நிறுவனங்களை முன்னிறுத்துவதற்காக பொதுப் பணத்தை உபயோகிக்க முடியாது’ என்று கூறியதை மேற்கோள் காட்டுகிறார்.

உண்மைதான். ஆனால் இந்து அறநிலையத்துறை ஆணையர், சென்னை எதிர் ஸ்ரீ லஷ்மீந்திர ஸ்வாமியார் மடம் என்ற வழக்கில் 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு (AIR 1954 SC 282) சுப்பிரமணிய சுவாமியின் வழக்கிற்கு பாதகமாக அமைந்துள்ளது என்றே நினைக்கிறேன்.

1951ம் ஆண்டு தமிழக அரசு இந்து அறநிலையத்துறை சட்டத்தினை இயற்றியது (Madras Hindu Religious & Charitable Endowments Act’ 1951). அந்த சட்டத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளிக்கும் மத உரிமைகளுக்கு பாதகமாக இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய மன்றத்தால் விசாரிக்கப்பட்டது.

இந்த சட்டத்தின்படி இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை கண்காணிக்கும் அதிகாரம் அரசின் கைகளில் வந்தது. அதற்காக அரசு இந்து அறநிலையத்துறை என்ற தனித் துறையினை உருவாக்கி அதனை நடத்துவதற்கு ஒரு ஆணையாளரின் (Commissioner) தலைமையில் பல்வேறு அலுவலர்களை நியமிக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு சம்பளம் போன்ற செலவினங்களை ஈடுகட்ட அந்த சட்டத்தின் பிரிவு 76(1)ன் கீழ் இந்து மத நிறுவனங்கள் அவற்றின் வருமானத்தில் 5% அளிக்க வேண்டும்.

இந்த சட்டப்பிரிவினை எதிர்த்த மடம், மேற்கண்ட அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 27ல் ‘ஏதேனும் மதத்தை முன்னேற்றுவதற்காக அரசு வரி எதுவும் வசூலிக்க முடியாது’ என்று கூறப்பட்டுள்ளதால் ‘இந்து மத நிறுவனங்களை பாதுகாக்கவும் முன்னேற்றுவதற்குமாக’ இவ்வாறு வரி வசூலிக்க அரசிற்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டது.

அரசு சார்பில் பிரிவு 76ன் கீழ் செலுத்த வேண்டியது கட்டணம் (fee) வரி (tax) இல்லை என்று வாதிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் அது வரிதான் என்று கூறி அந்தப் பிரிவு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பு கூறியது. ஆனால் காரணம், அத்தகைய வரி வசூலிப்பதற்கு அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது, மாநில அரசிடம் இல்லை என்பதுதான்.

அது மட்டுமல்ல...மத நிறுவனங்களை கண்காணிக்கும் பணி மத ரீதியிலான நடவடிக்கை இல்லை என்று கூறி அதற்காக செலவிடப்படும் பணம் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 27ஐ பாதிக்காது என்றும் கூறியது.

“The purpose is to see that religious trusts and institutions, wherever they exist, are properly administered. It is a secular administration of the religious institutions that the legislature seeks to control and the object, as enunciated in the Act, is to ensure that the endowments attached to the religious institutions are properly administered and their income is duly appropriated for the purposes for which they were founded or exist. There is no question of favouring any particular religion or religious denomination in such cases. In our opinion, Art. 27 of the Constitution is not attracted to the facts of the present case”

இதன்படி இந்து அறநிலையத்துறை என்ற துறை மூலம் அரசு இந்து கோவில் நிர்வாகங்களை கட்டுப்படுத்துவதும், கண்காணிப்பதும் மத ரீதியிலான ஒரு செயல் அல்ல. ஆயினும் இந்து அறநிலையத் துறை கண்காணிப்பாளர் முதல் கீழ்மட்ட அலுவலர்கள் வரை இந்துக்களாகத்தான் இருக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்து கோவில்களை நிர்வாகம் செய்யும் ஒரு பணி இந்து மதத்தினை முன்னேற்றுவதான அல்லது பாதுகாப்பதான (promote or maintain) பணி இல்லை என்றால், இஸ்லாமிய மதக் கோட்பாடு வலியுறுத்தும் ஒரு வர்த்தகக் கொள்கையினை பின்பற்றி நடத்தப்படும் ஒரு வங்கிக்காக அரசு செலுத்தும் முதலீடு மேற்கண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மீறியது ஆகாது என்பதே என்னுடைய எண்ணம்.

ஏனெனில் கேரள அரசின் செயல் ஒரு புத்திசாலித்தனமான வர்த்தக செயல்பாடு (prudent business idea). இஸ்லாமிய மதத்தினை முன்னேற்றும் செயலல்ல. இப்படி ஒரு சோதனை முயற்சியில் இறங்குவது புத்திசாலித்தனமான வர்த்தகமல்ல என்றாலும், முதலில் தனியாருக்கு அந்த வாய்ப்பை ஏற்ப்படுத்திக் கொடுத்து பொதுமக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் ஒரு புத்திசாலித்தனமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

எப்படியாயினும் இந்த வங்கி சுவாமி கூறுவது போல முஸ்லீம் வாக்காளர்களைக் குஷிப்படுத்துவதற்காக (placate) கேரள கம்யூனிஸ்டு அரசு எடுக்கும் முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆனால், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது அல்ல.

மற்றபடி சுவாமி கூறுவது போல என்றால், ஆயுர்வேத மருத்துவமனைகளை அரசு செலவில் நிறுவுவதும், அங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்கு சம்பளமும், ஆராய்ச்சிக்கு உதவி செய்வதும் தவறு. ஜோதிட படிப்பு (Astrology) படிக்க அரசு நிறுவனமான யுஜிசி (Universities Grants Commission) நிதி அளிப்பதும் தவறுதான்.

எந்தவொரு அரசு திட்டப்பணியும் இந்து முறைப்படி அமைந்த பூசையுடன் ஆரம்பிக்கப்படுவதும் தவறுதான்.

வெள்ளிக்கிழமையினை தவிர்த்து ஞாயிற்றுக் கிழமையை பொது விடுமுறையாக அறிவிப்பதும் தவறுதான்.

ஏன், உயர்நீதிமன்ற வளாகத்தை பயன்படுத்தி அதன் அலுவலர்கள் வருடா வருடம் சரஸ்வதி பூசை நடத்துவதும் கூட அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதம்தான்.

சுப்பிரமணிய சுவாமி தனது சுய முன்னேற்றத்திற்காக தேவையின்றி ஒரு வம்பு வழக்கினை ஆரம்பித்து உள்ளார். இந்தியாவிற்கோ அல்லது இந்துக்களுக்கோ இந்த வழக்கினால் ஏதும் நன்மை விளையப் போவதில்லை.

மாறாக வளர்ச்சிக்கான சாதாரண ஒரு வர்த்தக முயற்சி இந்த வழக்கின் மூலம் இஸ்லாமியர்களிடையே தேவையற்ற ஒரு அவநம்பிக்கையினை தோற்றுவித்து தேசிய நீரோட்டத்திலிருந்து அவர்களை ஒரு சிறு அளவேனும் விலக்கி வைக்க ஏதுவாக இருக்கும் என்பதே என் அச்சம்!

மதுரை
14/01/10



25.12.09

எங்களுக்காக அழ வேண்டாம், ‘தி இந்து’வே!




நள்ளிரவு கிறிஸ்துமஸ் ஆராதனையை, ‘தூக்கம் வருகிறது என்று இந்த வருடம் தவிர்த்து விட்டாலும், காலை எட்டு மணிக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆயினும் கோவிலுக்கு வெளியேதான் இடம்!

பாதிரியார் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் ‘வெளிநாட்டு பழக்கமான கிறிஸ்துமஸ் குடில் வைத்தல், மரம் வைத்தல்என்பவற்றின் காரணங்களைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார். சுவராசியமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இறுதியில், அதனால்தான் இந்த வருடம் நமது கோவிலின் குடிலானது ஈழ மக்களின் துயரினை எடுத்துக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுஎன்று கூறியது உடனடியாக கவனத்தை ஈர்த்தது.

அந்த குடிலினை நோக்கி  நகர்ந்தேன்.......பின்னணியில் சிவப்பு நிறத்தில் ஈழ வரைபடத்துடன் ‘தூங்காதே தூங்காதே எங்கள் துயர் தீரும் வரை தூங்காதேஎன்று தொடங்கும் பாடல் வரிகளுடன் ‘பாலகன் இயேசுவைவாழ்த்தும் வாசகங்களால் அமைந்த குடில்.

இயேசு பிறந்த குடிசையின் கூரை கெரில்லாப் படைக்கான துணியில் வேயப்பட்டிருந்தது!

-oOo-

வருடா வருடம் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட ஆராதனையில் கண்டிப்பாக ஈழ மக்களின் துயர் ஏதேனும் ஒரு வகையில் பங்கு பெறும் மக்களிடம் நினைவூட்டப்படுகிறது என்று அப்பொழுதுதான் தோன்றியது.

கிறிஸ்தவத்தின் மற்ற பிரிவுகளில் உள்ள போதகர்கள், பொது விடயங்களில் தங்களது கருத்தினை எப்பொழுதேனும் வெளிப்படுத்துவதை பார்த்ததில்லையெனினும், கத்தோலிக்க பிரிவிலுள்ள பாதிரிகளில் சிலர் வெளிப்படையான மனித உரிமை ஆர்வலர்களாகவும், இடது சாரி சிந்தனையுள்ளவர்களாயும் இருப்பதை பார்க்கிறேன்.

நான் அவ்வாறு சந்தித்த பலர், தங்களது ஆழ்மனதில் இறைமறுப்பாளர்களாகவும் இருப்பார்கள் என்ற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு!

-oOo-

கிறிஸ்தவ அமைப்புகள், தங்களது ஆராதனையில் இவ்வாறு ஈழ மக்களின் துயரினை நினைவு கூறுகையில், இந்து மத அமைப்புகளுக்கு ஏன் அவ்வாறு தோன்றுவதில்லை.

சிதம்பரம், ஸ்ரீரங்கம் கோவிலை விடுங்கள்......முருகனின் அறுபடைவீடுகளில் முக்கியமான பழனி, திருச்செந்தூர் ஆலயங்களில் கூட ஈழ மக்களை முன்னிருத்தி வழிபாடு ஏதும் செய்யப்பட்டதாக செய்திகள் ஏதும் இல்லையே!

மனிதர்கள் கைவிடலாம்...கடவுளர்களும் கூடவா?

-oOo-

நான்காம் ஈழம் போர் உக்கிரமடைந்திருந்த பொழுது இந்த நாடு சிங்களர்களுக்கானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்என்றும் ‘சிறுபான்மையினர் எங்களுடன் இங்கு வாழலாம். ஆனால் சிறுபான்மையினர் என்ற போர்வையில் அவர்கள் தகுதியில்லாத உரிமைகளை கோர இயலாது என்றும் கூறினார். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை ‘கோமாளிக்கூட்டம்என்று வர்ணித்ததன் மூலம் தான் பணியாற்றும் அரசாங்கத்திற்கு ராஜரீக தர்மசங்கடத்தை ஏற்ப்படுத்தினார். சமீபத்தில் ‘தற்போதய சூழலில் மாநிலங்களுக்கு அதிகாரம் தரும் 13ம் சட்டத்திருத்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்என்று கூறி அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.

இவ்வாறு, சிரீலங்கா முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகாவின் ‘இனவாதத்தை குறிப்பிட்டு தலையங்கம் எழுதும் நாளிதழ்...
                                                  
‘தி இந்து’!

ஆனால் எழுதிய தேதிதான் முக்கியம். பொன்சேகா தனது இனவாதத்தினை, வார்த்தைகளில் விஷமாக கொட்டிக் கொண்டிருந்த காலத்தில், ‘தி இந்துஅதைக் கண்டித்து மூச்சு விடவில்லை. ஏனெனில் ‘alls fair in love and war’!

தற்பொழுது பொன்சேகாவால் ராஜபக்சேவிற்கு பிரச்னை என்றவுடன், ‘தி இந்து இறந்த காலத்திற்குச் சென்று தலையங்கம் எழுதுகிறது.

சரிதான், லங்க ரத்னாவின் ஆதங்கம் நியாயமானதுதான்!

-oOo-

இந்த தலையங்கம் வெளிவந்த அதே நாளில் ‘தி இந்துவின் முதல் பக்கம் முழுவதும் வெளிவந்த செய்தி என்னவென்று தெரிந்தால் இன்னமும் வே(தனை)டிக்கையாக இருக்கும்.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், காங்கிரஸ் முதல்வர் அசோக் சவானைப் பற்றி மராத்தி பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளைப் போன்ற விளம்பரங்களைப் பற்றிய இந்துவின் புலனய்வு அறிக்கை!


விளம்பரத்தை செய்திகளைப் போல வெளியிடுவது தவறு என்று இது வரை தெரியாது. தெரியாமல், நான் ‘தி இந்துவில் வெளியாகும் இலங்கைச் செய்திகளை விளம்ப்ரம் என்று இதுவரை நினைத்து வந்தேன்...

மதுரை
25/12/09