8.7.08

நீதிமன்ற புறக்கணிப்பும்...சோம்பேறி மனதும்





கடந்த ஒரு வாரமாக வழக்குரைஞர்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களை புறக்கணித்து வருகின்றனர். இவ்வாறான் தொடர்ச்சியான போராட்டங்களில் வழக்கமாக பங்கு எடுக்காத, மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞர்களும் நீதிமன்றங்களை புறக்கணிப்பதால், தமிழக நீதித்துறையில் பெரும் பிரச்னை எழுந்துள்ளது.

வழக்குரைஞர்கள் இவ்வாறு நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது, முறையல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறினாலும், இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது இது வரையில், தமிழகத்தை பொறுத்தவரை நீதித்துறை அறியாத ஒன்று.

ஏனெனில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நீதித்துறையினரும் வழக்குரைஞர் சமுதாயத்திலிருந்து தோன்றியவர்கள்தான் என்பதால், இருவருக்கும் இடையில் நிலவும் நெருக்கமான உறவு கடினமான நடவடிக்கைகளை எடுக்க தடையாக உள்ளது.

பல சமயங்களில், நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கை என்பது மிகச்சிலரான வழக்குரைஞர்களால் முன் வைக்கப்பட்டு மற்றவர்கள் எதற்கு வம்பு என்று ஒதுங்கிக் கொள்ள நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஓரிரு நாட்கள் என்றால் பரவாயில்லை...தொடர்ந்த புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது, கட்சிக்காரர்கள் பலரின் அடிப்படை உரிமையினை பாதிக்கும் ஒரு செயல் என்பதை பல வழக்குரைஞர்கள் அறிந்திருந்தாலும்...ஏதும் செய்ய இயலாத நிலையில் உள்ளனர்.

-oOo-

வழக்குரைஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்கள் பலமுறை வெற்றி பெருவதில்லை. ஓரளவிற்கு பிறகு வழக்குரைஞர்கள் சோர்ந்து...போராட்டங்கள் நீர்த்துப் போகிறது. வழக்குரைஞர்களும் அதற்காக வெட்கப்படுவதில்லை.

லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினால், அது பொது மக்கள் அனைவரையும் பாதிக்கிறது. போராட்டம் தொடங்கும் முன்னே பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகி...அரசு நடவடிக்கை எடுக்க முன் வருகிறது.


ஆனால் வழக்குரைஞர் போராட்டங்களில், நீதிமன்றத்தை அணுகும் மிகச் சிறிய அளவிலான, அதிலும் குற்றவியல் நீதிமன்றங்களை அணுகும் மக்கள் கூட்டத்தினரே பாதிக்கப்படுகின்றனர்.

தற்பொழுதும், ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வந்தாலும்...பெரிய செய்தி ஏதும் இல்லை. இறுதியில் வழக்குரைஞர்கள் அமைச்சர்களாக இருக்கும் தங்களது சமுதாயத்தை சார்ந்தவர்கள் மூலமாக காரியத்தை முடித்துக் கொள்வார்கள்...அதுதான் புத்திசாலித்தனமும் கூட!

-oOo-

கடந்த வாரம் எழுந்த தசவதார இரைச்சலில் அதிகமாக கேட்டது ‘ஹாலிவுட் படங்களுக்கு நிகரான உலகத்தரம்’ என்ற வார்த்தை!

‘அமெரிக்காதான் உலகம்’ என்று அமெரிக்கர்கள்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன்...நாமும் கூடவா?

70 கோடியில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தொழில் நுட்பத்தில் எடுக்க முடியுமென்றால்...அந்த மடையர்கள் ஏன், 1000 கோடியினை படமெடுப்பதற்கு வீணாக்குகிறார்கள்?

-oOo-

வலைப்பதிவர்கள் அரைவேக்காடுகள் என்ற ரகசியம் உட்பட தமிழகத்தில் எல்லாவற்றையும் அறிந்த ‘ஞாநி’ இந்த வார குமுதத்தில் ஊட்டி மலையில் அமைக்கப்படும் ஆராய்ச்சி மையத்தினால் வனப்பகுதிக்கு ஏற்ப்படப் போகும் பாதிப்பினைப் பற்றி கவலைப்படுகிறார்.

ஆனால், ஊட்டி வனப்பகுதிக்கு பேரழிவை ஏற்ப்படுத்தியது அங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் என்பது புரியாமல்...புகைப்படங்களில் மட்டுமே அழகாகத் தோன்றும் தேயிலைத் தோட்டத்தின் படத்தை கட்டுரைக்கு பின்புலமாக பயன்படுத்தி கட்டுரையின் நோக்கத்தையே கேலிக்குறியதாக்கியதால், குமுதத்திற்கும் ஒரு குட்டு!

-oOo-

யார் கேள்வி கேட்டாலும், பக்கம் பக்கமாக எழுதி தன் ஞானத்தை முன்னிறுத்தும் ஜெயமோகன், வலைப்பதிவர்கள் சிலர் தர்மசங்கடமான கேள்விகளை எழுப்பியதற்கு மட்டும் ‘ஞாநி’யைப் போல பொங்கி பின் குமுதம் போல கேலி செய்து முடித்து விட்டார்.

கருணாநிதியின் ‘இலக்கியத்தை’ கேள்விக்குறியதாக்கிய பொழுதும், எம்ஜிஆர் சிவாஜியைப் பற்றி சுவராசியமாக கிண்டலடித்த பொழுதும்...ஜெயமோகனுக்கு அரணாக நின்றது வலைப்பதிவர்கள்தான்...

ஆனாலும், பயந்து போய் கட்டுரையைத் தூக்கி, ஆதரித்தவர்களை நட்டாற்றில் விட்டார் என்பது வேறு கதை!

-oOo-

உலக மகா இலக்கியம், சினிமா பேசும் சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்றவர்கள் இந்திய மசாலா திரைப்படங்களை அவ்வப்போது சற்று தடவிக் கொடுப்பது அவர்களின் நோக்கத்தினை சந்தேகிக்க வைக்கிறது.

தமிழ் வாசிக்கும் என் ஆர் ஐ இளைஞர்களை அடுத்து அவர்களது நம்பிக்கை......தமிழ் திரைப்படங்களாக இருக்குமா என்ற சந்தேகம்...

Lazy mind is devil’s workshop என்று சும்மாவா சொன்னார்கள்...I blame it on Advocate’s strike.

மதுரை
10.07.08




TERRACOTA IN MUMBAI BAZAR

உச்ச நீதிமன்றமும், குழப்பமான தீர்ப்புகளும்!



நமது உச்சநீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பில் கூறப்படும் சட்டக் கருத்துகளை இந்தியாவில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும். (Article 141 of Constitution of India) எனவே உச்சநீதிமன்றமானது தன் முன் உள்ள எந்த ஒரு வழக்கினையும் ஆய்ந்து அறிந்து தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஏனெனில் அவர்கள் தீர்ப்பில் எழுதக் கூடிய ஒவ்வொரு வாசகமும், இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் எடுத்துக் கூறப்பட்டு அந்த வாசகங்களில் கூறப்பட்டுள்ளவாறுதான், வழக்கானது தீர்மானிக்கப்பட வேண்டும் என்று வாதிடப்படுகிறது.

எனவே வேறு ஏதோ ஒரு நபர் நடத்திய வழக்கில் கூறப்படும் தீர்ப்பானது, அந்த வழக்கில் சம்பந்தப்படாத மற்றொரு நபரை பாதிக்கிறது!

ஆனால், பல்லாயிரக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் எழும் வேலைப்பளுவின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ, உச்ச நீதிமன்றமானது வழக்கின் மீது முழுக்கவனமும் செலுத்த இயலாமல்.....தவறான அல்லது முன்னுக்குப் பின் முரணாக தீர்ப்பு கூறும் பொழுது அது, மற்ற நீதிமன்றங்களில் பெரும் குழப்பத்தை விளைவிக்கிறது.

முக்கியமாக, சமீப காலங்களில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏன் இவ்வாறு கூறுகிறது என்று புரிந்து கொள்ள முடியாமல், பல உயர்நீதிமன்ற நீதிபதிகளே புருவத்தை உயர்த்துகின்றனர்.

-oOo-

மோட்டார் வாகன சட்டப்படி மோட்டார் வாகனங்கள் கண்டிப்பாக காப்பீடு செய்திருக்க வேண்டும். அதனால், வண்டியினால் விபத்துக்குள்ளாகும் ஒரு நபருக்கு, அதன் உரிமையாளர் சார்ப்பில் காப்பீடு நிறுவனங்கள் நஷ்ட ஈட்டினை வழங்கும்.

ஆனால், வாகன ஓட்டியிடம் முறையான உரிமம் இல்லையெனில் (not duly licensed) காப்பீடு நிறுவனம் காப்பீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளது என வாதிடலாம் என்று சட்டம் உரிமையளித்துள்ளது.

காப்பீடு என்பது ஒரு ஒப்பந்தம். எந்த ஒரு ஒப்பந்தத்திலும் அதன் விதிகளை ஒருவர் மீறும் பொழுது பொழுது அதன் பலன்களை அவருக்கு மறுக்கலாம் என்பது நியாயமே!

ஆனால், மோட்டார் வாகன விபத்துகளைப் பொறுத்தவரை பலனடைவது, வண்டியில் அடிபடும் மூன்றாவது நபர். எனவே, வண்டியோட்டிக்கு உரிமம் இல்லை என்று காப்பீடு நிறுவனம் நஷ்ட ஈட்டினை வழங்க மறுக்கையில், அவர் அதனை வண்டி உரிமையாளரிடம்தான் பெற வேண்டும். உரிமையாளர் போதிய பண வசதி படைத்தவராக இல்லாத பட்சத்தில் அது இயலாது. மற்ற சந்தர்ப்பங்களிலும் அது கடினமான ஒரு காரியம்.

ஆக, தவறு ஏதும் செய்யாத மூன்றாவது நபரின் உரிமை மறுக்கப்பட வேண்டுமா?

இதனை அடிப்படையாக கொண்டே, பல உயர்நீதிமன்றங்கள் இவ்வாறான காப்பீடு விதி மீறல் என்றால், காப்பீடு நிறுவனம் தான் ஏற்றுக் கொண்டபடி நஷ்ட ஈட்டினை மூன்றாவது நபருக்கு அளித்து, பின்னர் வேறு வழக்கு ஏதும் தொடராமல், தவறு செய்த வண்டி உரிமையாளரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறின!

இது ஒரு சரியான அணுகுமுறை என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

-oOo-

வண்டி உரிமம் பற்றிய பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருந்ததால், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் இந்த பிரச்னையில் பல்வேறு பரிமாணங்களை அலசி ஆராய்ந்து, முக்கியமான தீர்ப்பு ஒன்றினை வழங்கியது. சுவரண்சிங் வழக்கு என்று கூறப்படும் தீர்ப்பில் (2004 ACJ 1) உச்சநீதிமன்றம் இவ்வகையான விதி மீறல்களை சிறிய மீறல்கள் (minor breaches) அடிப்படை மீறல்கள் (fundamental breaches) என்று இரு வகையாக பிரித்தது. அதாவது காப்பீடு வழங்கும் தனது கடமையிலிருந்து விலக்கப்பட காப்பீடு நிறுவனமானது, வெறுமே விதி மீறலை சுட்டிக்காட்டினால் மட்டும் போதாது. மாறாக, ஓட்டுநரிடம் முறையான உரிமம் இல்லாததே, விபத்து நடந்ததற்க்கான காரணம் என்றும் நிரூபிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. (பாரா 82).

முறையான உரிமம் இல்லாதது என்பது இங்கு விபத்துக்குள்ளான வண்டியினை ஓட்டுவதற்கான உரிமம் இல்லாதது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது இலகுரகவாகன உரிமம் (LMV) உள்ளவர் கனரக வாகனம் (HMV) ஓட்டுவது போன்ற மீறல்கள்.

ஓட்டுநருக்கு உரிமமே இல்லாதா பிரச்னைகளையும் இந்த வழக்கில் சேர்க்க முடியுமா என்பது சற்று குழப்பமாக இருக்கிறது. (பாரா 100 மற்றும் 102(iii)).

வெறுமே மீறல் அல்ல அடிப்படை மீறல் என்று நிரூபிக்க வேண்டும் என்ற கடமையோடு வழக்கிலிருந்து தப்பிக்க காப்பீடு நிறுவனங்கள் அந்த வகையான அடிப்படை மீறல்கள் உரிமையாளரின் கவனக்குறைவால் நடந்தது என்பதையும் நிரூபிக்க வேண்டும். (பாரா 102 (vi)).

அதாவது விபத்துக்குள்ளான வண்டியின் ஓட்டுநரிடம் உள்ளது ஒரு போலி உரிமம். வண்டியில் உரிமையாளர், ‘அவர் என்னிடம் வேலைக்கு சேரும் பொழுது உரிமத்தை என்னிடம் காட்டினார். அதனை உண்மை என்று நம்பினேன். மேலும் அவர் நல்ல முறையிலேயே வண்டியினை ஓட்டினார்’ என்று சான்றளித்தால் உரிமையாளரின் கவனக்குறைவு என்று கூற இயலாது.

சரி, இவ்வாறு இரண்டு விடயங்களையும், காப்பீடு நிறுவனங்கள் நிரூபித்தாலும், நீதிமன்றங்கள் காப்பீடு நிறுவனத்தை அடிபட்டவருக்கு இழப்பீடு வழங்கக் கூறி அவற்றை வண்டி உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கும் உரிமத்தை அளிக்கலாம் என்று கூறப்படுவதுதான் இந்த தீர்ப்பின் சிறப்பம்சம்!

‘இந்த வழிமுறை பல்வேறு தீர்ப்புகளில் கூறப்படுகிறது. அதிலிருந்து விலக நாங்கள் விரும்பவில்லை’ என்று மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் இந்த வழக்கில் கூறிய தீர்ப்பு உரிமம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் முக்கியமான ஒரு மைல்கல் எனலாம்.

-oOo-

சுவரன்சிங் வழக்கு தீர்ப்பு வெளிவந்த சில மாதங்களில் குசும் ராய் ((2006) 4 SCC 250) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு புரிந்து கொள்ள இயலாத ஒன்றாக இருந்தது. அதாவது அந்த வழக்கில் கார் ஓட்டுநரிடம் இலகுரக வாகன ஓட்டும் உரிமம் இருந்தது. ஆனால் அவர் ஓட்டியது ஒரு வாடகைக்கார். வாடகை வண்டி ஓட்ட விரும்புவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வில்லை (badge or endorsement) பெற வேண்டும்.
யாருக்கும் எளிதில் இது ஒரு அடிப்படை மீறல் அல்ல என்பது புரியும். அதனையும் கவனத்தில் கொள்ளாமல், வண்டி உரிமையாளர் கவனக்குறைவாக இருந்தாரா என்ற கேள்வியினையும் எழுப்பாமல் மேற்போக்காக வில்லை இல்லாதலாம் முறையான உரிமம் இல்லை என்று கூறி காப்பீடு நிறுவனம் இழப்பீடு அளிக்க தேவையில்லை என்று கூறியது.

ஆனாலும் இந்த வழக்கின் இறுதியில், தனது சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு (Article 142 of Constitution of India) வேறு ஏதோ ஒரு வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பினை முன்மாதிரியாக (precedent) கொண்டு காப்பீடு நிறுவனம் இழப்பீட்டினை அளித்து பின்னர் உரிமையாளரிடம் வசூலித்துக் கொள்ளலாம் என்று கூறியது.

அவ்வளது தூரம் வேறு ஏதோ ஒரு வழக்கினை முன்மாதிரியாக கொள்வதற்கு பதிலாக உரிமம் பற்றிய வழக்குகளில் மைல் கல்லாக விளங்கிய சுவரன்சிங் வழக்கினை முன் மாதிரியாக கொண்டிருந்தால் இந்தப் பிரச்னை எழுந்திருக்காது.

வேடிக்கை என்னவென்றால், குசும்ராய் வழக்கினை விசாரித்த் இரு நீதிபதிகளில் ஒருவர் சுவரன்சிங் வழக்கினை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவர்!

ஆக, அடிப்படை மீறல் என்று சுவரண்சிங் வழக்கில் கூறப்பட்டது புறந்தள்ளப்பட்டு வாடகைக்கார் ஓட்ட தேவையான வில்லை இல்லாதது கூட காப்பீட்டினை மறுக்கும் ஒரு காரணியாக இந்த வழக்கு கூற முதல் குழப்பம்.

-oOo-

குசும்ராய் வழக்கிலாவது, கருணை கூர்ந்து நீதிபதிகள் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீட்டினை வழங்கி பின் உரிமையாளரிடம் வசூலித்துக் கொள்ள கூறினர். ஆனால், சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு தீர்ப்பில் அந்தக் கருணை கூட இல்லாமல், விபத்தில் தனது கணவனை பறி கொடுத்த ஒரு மனைவியையும், தந்தையை பறி கொடுத்த மூன்று சிறு பிள்ளைகளையும் தவிக்க விட்டிருப்பதுதான் கொடுமை!

பிரேம்குமாரி வழக்கு என்று கூறப்படும் இந்த வழக்கின் (Appeal No.490/2008 Date 18/01/2008) தீர்ப்பினைப் படிக்கையில் லாரி ஓட்டுநருக்கு முறையான உரிமம் இல்லை என்றுதான் குறிப்பிடுகிறார்களே தவிர அது அடிப்படையான மீறலா? உரிமையாளரின் கவனக்குறைவு உள்ளதா? என்ற கேள்விகளை எழுப்பாமல், முன்னர் உரிமம் பற்றிய அனைத்து தீர்ப்புகளையும் பற்றி மட்டும் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் வண்டி உரிமையாளரிடம் இருந்து இழப்பீட்டினை வசூலித்துக் கொள்ளலாம் என்று மட்டும் கூறி வழக்கினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

ஐயா, அடிப்படை மீறல், உரிமையாளரின் கவனக்குறைவு என்பது இந்த வழக்கில் நிரூபிக்கப்பட்டதாகவே கொள்வோம். ‘இழப்பீட்டினை வழங்கி வசூலித்துக் கொள்ளலாம்’ என்ற கொள்கையினை (pay and recover) சட்டக்கருத்தாகவே மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் முன்மொழிந்த பின்னர் தந்தையினை இழந்த மூன்று சிறு பிள்ளைகள் சம்பந்தப்பட்ட வழக்கில் அதனை பின்பற்றாமல் வேறு எந்த வழக்கில் பின்பற்றுவதாம்?

தீர்ப்பு எழுதிய இரு நீதிபதிகளுக்குத்தான் வெளிச்சம்!

08.07.08
மதுரை


பி.கு. வேடிக்கை என்னவென்றால் இந்த தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்ட அனைத்து தீர்ப்புகளிலும், சம்பந்தமில்லாத லக்ஷ்மி நாராயணன் தூத் மற்றும் மீனா வரியால் வழக்கு தீர்ப்பு உட்பட அனைத்து தீர்ப்புகளிலும் இந்த வழங்கி வசூலிக்கும் முறை ‘மூன்றாவது நபர்கள்’ வழக்கில் கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.





PETCHIPARAI DAM AND KALAKAD RANGE, WESTERN GHATS, INDIA

4.7.08

பயணம்-ரோடங் கணவாய் (Rohtang Pass)

மணாலி செல்கிறீர்களா? அங்குள்ள ரோடங் கணவாய் வரை செல்லாமல் திரும்புவதில் அர்த்தமேயில்லை. மணாலி எங்கிருக்கிறது என்பவர்களுக்கு ‘ரோஜா’ படம் எடுத்த இடம் என்றால் சட்டென்று புரியும்.

மணாலி என்பது இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000மீ உயரத்தில் அமைந்துள்ள கோடை வாஸஸ்தலம். வருடம் முழுவதும் சுற்றிலும் பனிசூழ்ந்திருக்கும் சிகரங்களுக்கு நடுவே அமைந்திருக்கும் பள்ளத்தாக்கு.

பனிச்சிகரங்களில் இருந்து உருகி வழியும் நீர் பியாஸ் (Beas/Vyas) நதியாக நுரை பொங்க மணாலி நகரின் நடுவே வேகமாக ஓடுகிறது.

குளிர்காலத்தில் மணாலி நகர் முழுவதும் பனி சூழ்ந்து, அப்பொழுதும் செல்வதற்கு அருமையாக இருக்குமாம்.

-oOo-

ரோடங் கணவாய், மணாலியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் சுமார் 5500 மீ உயரத்தில் அமைந்துள்ள கணவாய். ரோடங் கணவாயினை கடந்து அந்தப்பக்கம் இறங்கினால் லெ பின்னர் லடாக் செல்ல பாதை உள்ளது.

ரோடங் பாதை கோடைக்காலத்தில்தான் திறந்திருக்கும். செல்ல விரும்புவர்கள் காலை 4 மணிக்கே மணாலியிருந்து கிளம்பிவிட வேண்டும். போகும் வழியிலேயே குளிர் உடைகள் வாடகைக்கு கிடைக்கும். பிரச்னை என்னவென்றால், பேரம் பேச நம்மை அனுமதிக்காமல் ஓட்டுநர்கள் அவசரப்படுத்துவார்கள்.
உண்மையில் ரோடங்கில் ஸ்வெட்டர் அதற்கு மேல் ஒரு ஜாக்கெட்டுடன் சமாளித்து விடலாம். முக்கியமான தேவை கையுறையும், காலுக்கு ரப்பர் பூட்டும்தான்.

மணாலிக்கு வரும் 90 சதவிகித பயணிகள் சுமார் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மர்தி ஐஸ் பாயிண்ட் என்ற இடத்தோடு திரும்பி விடுவார்கள். ஆனால் பனியினை அதன் சுத்தமான அழகோடு (virgin beauty) பார்க்க விரும்பினால், மர்தியை 6 மணிக்குள்ளாக கடந்து விட வேண்டும். அதற்கு பிறகு அனுமதிக்க மாட்டார்கள்.

4 மணிக்கே கிளம்புவதற்கு காரணம் அதுமட்டுமல்ல. ரோடங்கில் முதல் பத்து வண்டிக்குள்ளாக நாம் போனால்தான் ரோடங் அருகே நிறுத்த இடம் கிடைக்கும்.

‘ரோடங்’கின் அழகு!

போய்த்தான் பாருங்களேன்...தற்பொழுதுக்கு புகைப்படத்தை அழுத்தி பெரிதாக்கிப் பார்க்கலாம்.

அது இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து!!!


(ZERO POINT...அந்தப் பக்கம் இறங்கினால்...லடாக் சென்று விடலாம்.











காலையில் முதல் ஆளாக சென்றால், ரோடங் முழுவதும் விலங்கினங்களின் கால்தடங்கள்!


-oOo-

ஞாநியைத் தொடருவது சுவராசியமாகத்தான் இருக்கிறது. ‘இந்தியாவில் ஓரின உறவு சட்டப்படி இன்னமும் குற்றமாக இருந்து வருகிறது’ என்பவர் அடுத்து ‘பலதார மணமும் இந்து(ச்) சட்டப்படி குற்றம்தான்’ என்கிறார்.

அப்படியா?

மதுரை
040708

1.7.08

கருத்தும், கவிதையும்...காமக்கதையும்...



அரிஜித் பசாயத்.....உச்ச நீதிமன்றத்தில் தற்பொழுது பணியாற்றும் நீதிபதிகளில் சுறுசுறுப்பு மிக்கவர். நெருங்கி வரும் தனது பணி ஓய்விற்குள்ளாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு வழக்குகளில் தீர்ப்பு கூற வேண்டும் என்ற தாகத்துடன் செயல்படுகிறார். அதே போல பரபரப்பிற்கும் பஞ்சமில்லாதவர்.

சமீபத்தில் பிரிந்து வாழும் கணவன் மனைவிக்கிடையே, ‘குழந்தை யாரிடமிருப்பது’ என்ற வழக்கினை விசாரித்த இவர், ‘இந்து திருமண சட்டம் திருமணங்களை உடைக்கவே பயன்படுகிறது’ என்பது போல ஒரு கருத்தினை உதிர்க்க அது பத்திரிக்கைகளில் பெரிய செய்தியாக வெளிவந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்னர் இவரது நீதிமன்றத்தில் வாதிடப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியின் பெயர் நேரு என்பதை அறிந்தவர், ‘குற்றவாளிகளிடம் இருந்து தேசத்தலைவர்களின் பெயர்களை பறிக்க அரசு ஏதாவது செய்ய வேண்டும்’ என்று முழங்க அதுவும் செய்தியானது!

முதலாவது கருத்தாவது ஒரு விவாதப் பொருள். இரண்டாவது அபத்தம்.

எதுவாயினும், நீதிபதிகள் இவ்வாறு தங்களது சொந்த கருத்துக்களை உதிர்க்க நீதிமன்ற அறையினைப் பயன்படுத்துவது ஒரு வகையில் அதிகார துஷ்பிரயோகம்தான் என்பது எனது தாழ்மையான கருத்து.

தங்களது தீர்ப்புகளில் நீதிபதிகள் கவிதையினையும், திருக்குறள் போன்றவற்றை நுழைப்பது கூட அப்படித்தான்.

எனக்குத் தோன்றும் ஒரு கருத்தினை அல்லது நான் ரசித்த ஒரு கவிதையினை மற்றவர்களோடு இவ்வாறு ஒரு பதிவு எழுதுவதன் மூலம் பகிர்ந்து கொள்ளுவதில் எனக்கு ஒரு இன்பம் ஏற்ப்படுகிறது. ஆனால், இதற்காக நான் செலவழிப்பது, எனது கணனியும் மின்சாரமும்!

அவ்வாறின்றி அந்த இன்பத்தினைப் பெற எனது பதவி தரும் சில வசதிகளை நான் பயன்படுத்துவது, ஏறக்குறைய அலுவலக ஊர்தியினை சொந்த காரியங்களுக்கு பயன்படுத்துவது போன்ற ஒரு செயல்தான்.

-oOo-

எழுத்தாளர் ஞாநியை குறை கண்டுபிடிப்பது வரவர உற்சாகம் தரும் ஒரு செயலாக இருக்கிறது. கடந்த வார குமுதத்தில் ‘ஓரின சேர்க்கை’ என்பது இந்திய சட்டப்படி குற்றம் என்பது போல எழுதியிருக்கிறார். குறை என்று கூற முடியாது. ஆனாலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு சில விளக்கங்கள் உதவலாம் என்பதால்...கொஞ்சம் காமக்கதை!

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377ஐ மனதில் வைத்து எழுதியிருப்பார் என நினைக்கிறேன். தமிழில் மொழி பெயர்க்கப் போவதில்லை.

“Whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal, shall be punished with imprisonment for life, or with imprisonment of either description for term which may extend to ten years, and shall also be liable to fine.
Explanation. -Penetration is sufficient to constitute the carnal intercourse necessary to the offence described in this section”

ஆக இந்தப் பிரிவின் கீழ் குற்றம் என்பது ஓரினபாலரை மட்டும் குறி வைக்கவில்லை என்பதை அறியலாம்.

-oOo-

அது என்ன ‘carnal intercourse against the order of nature’?

சென்னை வழக்கு ஒன்றில் (Brother John Antony Vs State 1992 CrLJ Mad 1352) இதனை விரிவாக ஆராய்ந்த நமது நீதிமன்றம் மூன்று வகையான sodomy, buggery மற்றும் bestiality போன்ற பாலியல் வக்கிரங்கள் (sexual perversions) இந்த குற்ற விளக்கத்திற்குள் அடங்கும் என்று கூறுகிறது.

முக்கியமாக sodomy என்பதன் விளக்கம் கவனிக்கத்தக்கது. மீண்டும் தமிழில் மொழி பெயர்க்கப் போவதில்லை.

Non coital carnal copulation with a member of the same or opposite sex e.g. per anus or per os (mouth)

இந்த விளக்கத்தின் மூலம், ஓரினசேர்க்கையோ, ஈரினசேர்க்கையோ குற்றமும் தண்டனையும் அனைவருக்கும் பொதுதான் என்பதை அறியலாம்.

எனது கேள்வி இதுதான்...

Are you sure, you have not ever committed any crime, punishable under law with life imprisonment?

-oOo-

பதிவாளர் பாலபாரதி தனது விடுபட்டவை பதிவில், ‘காவல்துறை வாகனங்களுக்கு’ இன்ஸூரன்ஸ் (காப்பீடு) சென்னையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவது கிடையாது. அதனால் அதில் அடிபட்டு விட வேண்டாம் என்று எழுதியிருக்கிறார்.

காவல்துறை மட்டுமல்லாது, அனைத்து அரசு வாகனங்களுக்கும், மோட்டர் வாகன சட்டமானது (Motor Vehicle Act) கட்டாய காப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கிறது. அதற்காக வண்டியில் அடிபடுபவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்காது என்பதல்ல. அரசிடம் இருந்து பெற முடியும்.

வாகன விபத்தில் அடிபடுபவர்களுக்கு வாகன உரிமையாளர் நஷ்ட ஈடு தர வேண்டும். உரிமையாளரிடம் அவ்வளவு பணம் இருக்காது என்பதால், காப்பீடு நிறுவனங்கள் தருகின்றன. அரசு அவ்வாறு கூற முடியாதே!

இவ்வாறு கிடைக்கும் நஷ்ட ஈடு, விபத்து நடந்தவுடன் அரசு தன்னிச்சையாக அறிவிக்கும் உதவித்தொகையல்ல. அது வேறு!

-oOo-



QUTUB MINAR, NEW DELHI



மதுரை
01.07.08

14.6.08

உயிரினம்-ஜூன் புகைப்படங்கள்

கோடை விடுமுறைக்கு மணாலி, சிம்லா சென்றிருந்த பொழுது ..... மனதில் உறைந்த காட்சிகள்!!!





சிம்லா, 'ஈ'க்கு அது முக்கியமில்லை! (போட்டிக்கு)




கடைத்தெரு (மால்), சிம்லா





மனாலி குல்லு சாலையோரம், பியாஸ் நதிக்கரையோரம் அமைந்திருந்த பழத்தோட்டத்தில்...
எனக்குப் பிடித்த காட்சி இதுதான்!




31.5.08

பன்றிக்கறியா, பால்பவுடரா?

சிந்திக்க உண்மைகள்’ என்ற வலைப்பதிவு கர்த்தரின் கட்டளைக்கு எதிராக கிறிஸ்தவர்கள் பன்றி இறைச்சியினை உண்ணலாமா? என்ற கேள்வியினை தனது இடுகையொன்றில் எழுப்புகிறது. அதற்கு ஆதாரமாக, பன்றியிறைச்சியினை உண்ணலாகாது என்ற கிறிஸ்தவ வேதாகமத்தின் லேவியராகமத்து (Leviticus) வசனத்தையும் மேற்காட்டுகிறது.

உண்மைதான். ஆனால் லேவியராகமம் கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தைச் சார்ந்த பழைய ஏற்பாட்டிலுள்ளது (Old Testament). இயேசுவின் போதனைகளோ பழைய ஏற்பாட்டின் விதிகளை அப்படியே புரட்டிப் போட்டன! தயக்கமோ அல்லது பிற காரணங்களாலோ, இயேசு தன்னை ஒரு நாத்திகராக அறிவிக்காமல், பழைய யூதேய மதத்தின் நீட்சியாகவே கருத்துகளை முன்வைத்தார்.

மோசே ‘பல்லுக்குப் பல்’ என்றால் இயேசு ‘ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தைக் காட்டு’ என்கிறார். ஆயினும் கிறிஸ்தவர்களும் வேறு வழியின்றி பழைய ஏற்பாட்டினையும் வேதமாக ஏற்றுக் கொள்கின்றனர்.

இயேசு சிலுவையில் அறையுண்ட பின்னர் அவரது சீடரான பேதுரு (Peter) கிறிஸ்தவ மதத்தினை கட்டியெழுப்பினார். அவருக்கு பன்றியிறைச்சி சாப்பிடும் ஆசை வந்ததோ என்னவோ தெரியவில்லை, இறைவனின் தரிசனத்தில், ‘அனைத்து ஜீவராசிகளும் அவரது படைப்பாயிருக்க, பன்றி மட்டும் எப்படி சுத்தமில்லாததாயிருக்கும்’ என்று வெளிப்படுத்தியதாக கூற...கிறிஸ்தவர்களுக்கு அனைத்தும் அனுமதிக்கப்பட்டது.

நல்லவேளை, பேதுரு தரிசனம் கண்டார்...இல்லை, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் மிஷனரிகளுக்கு விசுவாச அறுவடைகளுக்குப் பதிலாக ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கும். பின்ன! பால்பவுடருக்காக, முயல் கறியை தியாகம் பண்ண முடியுமா?

-oOo-

பேதுருவும், பாலும் (Peter and Paul) அனுமதித்தாலும், குஜராத் அரசு அனுமதிக்க மறுக்கிறது.

சமண மதத்தின் முக்கியமான விழா ஒன்றின் பொழுது தொடர்ச்சியாக ஒன்பது நாட்களுக்கு, ஆமதாபாத்தில் உள்ள கசாப்பு மையங்களை (slaughter house) மொத்தமாக மூடச் சொல்கிறார்களாம். ‘தொழில் செய்வதற்கான தங்களது அடிப்படை உரிமை’ (fundamental right to carry on trade) பாதிக்கப்படுவதாக கசாப்புக் கடைக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினால்...முடிவு வழக்கம் போலத்தான்.

நீட்டி முழக்கி பல பக்கங்களில் ஏதேதோ கூறிவிட்டு இறுதியில் ‘கொஞ்ச நாள்தானே, அசைவ உணவுப் பிரியர்கள் ஒன்பது நாட்களுக்கு சைவ உணவுக்காரர்களாக இருக்கலாம், தப்பில்லை’ என்று பிரச்னையை முடித்து வைத்துள்ளார்கள். (As already stated above, it is a short restriction for a few days and surely the non-vegetarians can remain vegetarian for this short period)

சில உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை படிக்கையில் சட்டம் சார்ந்த தீர்ப்பா அல்லது ஆராய்ச்சி மாணவர் சமர்ப்பிக்கும் கட்டுரையா என்ற சந்தேகம் வருகிறது.

தற்பொழுது எனது சந்தேகம் இதுதான். கசாப்புக் கடைகளை மூடி, தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தால் மட்டும், அசைவர்களை ஒன்பது நாட்களுக்கு சைவர்களாக்கி விட முடியுமா?

ஸ்பென்ஸருக்கு போனால், பன்றி, மாடு, எறா எல்லாம் உறைந்த இறைச்சியாக கிடைக்கிறது. அட! வீட்டிலேயே குளிர்ப்பெட்டிக்குள் வாங்கி வைத்துக் கொள்ளலாம். இல்லை, இருக்கவே இருக்கு உப்புக் கண்டம், கருவாடு!

மார்க்கண்டேய கட்ஜுவுக்கு தெரியுமா, கருவாட்டு வாசனை!

-oOo-



OLD FORT : NEW DELHI




மதுரை
31.05.08

28.4.08

பொதுநல வழக்குகள், நீதிபதிகள் மற்றும் தமிழ்!


உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளைக் குறித்து, சட்ட நிபுணர்கள் பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் பதிவு ஒன்றினைப் பற்றி எனது முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டேன். சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவர்கள் பொதுநல வழக்குகளைக் குறித்து தெரிவித்த கருத்துகளைக் குறித்து சில பதிவுகளை அங்கு கண்ணுற நேர்ந்தது.

ஒரு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே வழக்கினை தாக்கல் செய்ய முடியும் என்பது பொது விதி.. பொதுநல வழக்கு என்பது, இந்த எல்லையினை உடைத்து வெளிக்கிளம்பியதாகும். அதாவது வழக்கில் நேரிடையாக சம்பந்தப்படாத ஒரு நபர் பொது நலனுக்குக்காக தொடரும் வழக்கே பொதுநல வழக்காகும் (Public Interest Litigation PIL).

பொதுநல வழக்குகளால் நீதிமன்றங்கள் மக்களிடையே அடைந்த புகழ் குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும் அவ்வப்போது, இவற்றை Paisa Interested Litigation அல்லது Publicity Interested Litigation என்று நீதிமன்றங்கள் நிராகரிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

முக்கியமாக, பல சமயங்களில் இவ்வகையான வழக்கினை நிராகரிக்கையில் பொதுநல வழக்கு என்றால் என்ன என்று நீதிபதிகள் இவற்றை எந்த எல்லையினை மீறி இவை தோன்றியதோ அதே போன்றதொரு எல்லைக்குள் இதனை அடைத்து வரைமுறைப்படுத்த முயல்வதுதான் வேடிக்கை!

பொதுநல வழக்கு என்பதற்கு வரைமுறையினை (definition) ஏற்ப்படுத்த முயலும் நீதிபதிகளைப் பார்த்தால் எனக்கு பதினெட்டாம் நூற்றாண்டில் ‘முடிவில்லாமல் இயங்கும் இயந்திரத்தை’ உருவாக்குகிறேன் என்று அலைந்த பெளதீகவியலாளர்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.

பொதுநல வழக்குகளை எந்த வரையறைக்குள்ளும் கொணராமல், அவற்றை அதன் போக்கில் நடை போட விடுவதுதான் சட்டத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்யக்கூடியது.

-oOo-

மார்கண்டேய கட்ஜூ நமது உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருக்கையிலும், அரசினை பல்வேறு பேராண்மை மனுக்களில் (writ petition) பாதுகாத்தார். ஆனால் அவரது உத்தரவுகள் செல்லாது என்று மூத்த வழக்குரைஞர் ஒருவர் கூறினார்.

‘அவருக்குதான் வயது பதினாறை தாண்டாதே...மைனர் தீர்ப்பு செல்லுமா?’ என்றாரே பார்க்கலாம்!

-oOo-

தீர்ப்பு என்றதுதான் நினைவுக்கு வருகிறது. இரு நாட்களுக்கு முன்னர் மேல்முறையீட்டு மனு (Appeal) தயாரிப்பதற்காக சார்பு நீதிபதி (Sub Judge) ஒருவரின் தீர்ப்பினை படித்த எனக்கு தீர்ப்பில் ஒரு வரி பிடிபடவில்லை. ‘இறந்தவர் இரும்பு முதலிய உலோகத்தால் செய்யப்பட்ட சாமான்கள் சம்பந்தப்பட்ட கணணியில் பட்டயப் படிப்பு படித்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது’ என்ற வரிதான் அது.

Metallurgy ஆ? தென்காசியில் அதெல்லாம் படிக்கிறார்களா என்று குழம்பி பின்னர் வழக்கு கட்டினை முழுவதும் புரட்டிய பின்னர்தான் அது என்ன படிப்பு என்று புரிந்தது. Diplomo in Computer Hardware!

வாகன விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட பல தீர்ப்புகளில் ‘இயற்பியல் சிகிச்சை’ என்ற வார்த்தை இடம் பெறும். எனக்கு தற்பொழுது பழக்கப்பட்ட அந்த வார்த்தையின் ஆங்கில மொழியாக்கம் ‘Physiotherapy’!

நீதிபதிகளுக்கான பயிற்ச்சிக் களத்தில் தமிழ் மொழியாக்கம் பற்றி, இராமகி ஐயாவை வகுப்பெடுக்க வேண்டுகோள் வைக்கலாம்.

-oOo-

‘என் வருகையை அறிவித்தவர் சுஜாதா’ என்று ஜெயமோகன் கூறியதை ‘இது போன்றவர்களின் வருகையை அறிவிக்கும் அபோஸ்தலராக எப்போது மாறினார் சுஜாதா?’ என்று சாருநிவேதிதா தனது கட்டுரையொன்றில் கிண்டலடித்திருக்கிறார்.

மற்றொருவரின் வருகையினை உலகுக்கு அறிவிக்கும் நபரைக் குறிக்க அப்போஸ்தலரை உதாரணப்படுத்துவது சரியாக வருமா? கிறிஸ்தவ விவிலியத்தை படித்தவர்கள்தான் கூற வேண்டும்.

பிரபு ராஜதுரை
28.04.08

17.4.08

சாய் பாபாவும் இராமரின் மோதிரமும்!

கடந்த மாதம் ஏதோவொரு தொலைக்காட்சியில், புட்டபர்த்தி சத்திய சாய்பாபாவை பற்றிய அவரது நிறுவனம் தயாரித்த ஆவணபடம் ஒன்றினை பார்த்தேன். இறுதியில் பொது நிகழ்ச்சியில், தனது வாயிலிருந்து பெரிய பச்சைக்கல் பதித்த மோதிரமொன்றினை எடுத்துக் காட்டி, ‘திருமணத்தின் பொழுது ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம்’ என்று தெரிவித்தார். கூட்டம் வியப்பிலாழ மோதிரத்தினை அவரது முன்னே வைத்தார்.

ஆவணப்படத்தில் வர்ணனை வழங்கியவர், அது பின்னர் மறைந்துவிடும் என்று கூற தொலைக்காட்சித் திரை முழுவதுமாக மங்க மோதிரம் மறைந்து போனது!

இவ்வாறாக சாய்பாபா நகைகளை கொணர்வது பற்றிய விபரங்கள் அவர்களது வலைத்தளத்திலும் கண்ணுற்றேன்.

-oOo-

ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம் என்றால் அரிய பழம் பொருள் ஆயிற்றே. அரசுக்கு தெரிவிக்காமல் அதனை வைத்திருக்கலாமா என்ற இயல்பான சந்தேகம் எழுந்தது.

1958ம் வருடம் இயற்றப்பட்ட ‘The Ancient Monument and Archeological Sites and Remains Act’ என்ற புராதான சின்னங்களைப் பற்றிய சட்டத்தில் பழம்பொருட்கள் பற்றியும் கூறப்படுகிறது. ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரமென்றால், இந்த சட்டப்பிரிவில் பழம்பொருள் (antiquity) என்று விளக்கப்படும் பதத்திற்குள் வரும். ஆனால் இந்தச் சட்டப்பிரிவுகளின்படி, மத்திய அரசாங்கம் ஏதாவதொரு பழம்பொருளானது ஒரிடத்திலிந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படக்கூடாது எனில் அவ்வாறு அறிவிக்கலாம். அவ்வாறான உத்தரவு மீறப்பட்டாலே அது தவறாகும்.

எனவே சாய் பாபா ராமரின் மோதிரத்தினை வைத்திருப்பதில் ஏதும் தவறில்லை!

-oOo-

பின்னர் 1972ம் ஆண்டில், ‘The Antiquities and Art Treasures Act’ என்று பழம்பொருட்கள் மற்றும் கலைச்செல்வங்களுக்காக தனியே ஒரு சட்டமியற்றப்பட்டது.

இந்த சட்டப்பிரிவுகளின்படி பழம்பொருட்களை ஏற்றுமதி செய்தல், விற்றல் ஆகியவற்றில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. முக்கியமாக பழம்பொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை மத்திய அரசிடம் தெரிவித்து அதனைப் பற்றிய விபரங்களை பதிய (register) வேண்டும்.

ஆனால் மத்திய அரசு எந்த எந்த வகையான பழம்பொருட்களை பதிய வேண்டும் என்று அறிவிக்கிறதோ அவற்றை பதிந்தால் போதுமானது.

ராமர் சீதைக்கு அணிவித்தது, தங்க நகை/ ஆபரணம். இதனை பதிவு செய்ய வேண்டுமா என்று பார்த்தால் மத்திய அரசு இதற்காக 1976ம் ஆண்டு GSR 280(E) என்ற அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகைகள்’ பதிவு செய்யப்பட வேண்டிய பழம்பொருட்கள் பட்டியலில் வருகிறது.

ஆக, சாய்பாபா இந்தச் சட்டத்தின்படி தன்னிடம் உள்ள பழம்பொருளான நகை பற்றிய விபரத்தினை மத்திய அரசிடம் பதியாமல் விடுவது தவறுதான்.

ஆனால், 1980ம் வருடம் மத்திய அரசு S.0. 397(E) என்ற அறிக்கை மூலம் பதிவு செய்ய வேண்டிய பழம்பொருட்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நகைகள் விடப்பட்டுள்ளது. எனவே சாய் பாபா தான் எடுக்கும் நகைகளை பதிய வேண்டியதில்லை.

எனவே 1976ம் ஆண்டிலிருந்து 1980ம் ஆண்டு வரைதான் இந்தப் பிரச்சினை. பின்னர் இல்லை. சாய்பாபா நகைகளை வைத்திருப்பதில் தவறு ஏதும் இல்லை!

-oOo-

இந்த வெட்டி ஆராய்ச்சிக்காக வலையினை மேய்கையில், இதை விட வெட்டி ஆராய்ச்சி செய்து ‘சாய்பாபா’ பக்தர்களுக்கு அளிக்கும் தங்க நகைகள் மூலம் தங்க கட்டுப்பாடு சட்டத்தினை மீறுகிறார் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்த விபரம் கிடைத்தது

-oOo-

ஞாநி பிரச்சினை விடாது போலிருக்கிறது. சுடுவது சுகம் என்ற வலைப்பதிவில் காப்பிரைட் பற்றிக் கவலைப்படாமல் ஞாநியின் கட்டுரையொன்றினை பதிந்திருக்கிறார்கள். அதில் ஞாநி இவ்வாறு ஆரம்பிக்கிறார்

தனிநாடு கோருவது சட்ட விரோதம என்ற சட்டத்தை மத்திய அரசு 1963ல் கொண்டு வந்ததும, அதுவரை தன் திராவிடநாடு கோரி வந்த திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது

நானறிந்த வரையில் அவ்வாறு 1963ம் வருடம் சட்டம் ஏதும் இயற்றப்படவில்லை!

இந்தியா - சீனா போர் சமயத்தில் நாடு முழுவதும் எழும்பிய தேசபக்தி அலையிலும், இம்மாதிரியான கொள்கைகளை கொண்டிருக்கும் கட்சிகள் தடை செய்யப்படலாம் என்ற மறைமுகமான மிரட்டல்களாலும்தான் திமுக பிரிவினை கோரிக்கையினை கைவிட்டது என்பது எனது அனுமானம்.

அவ்விதம் ஏதும் சட்டம் இயற்றப்பட்டு, யாரேனும் ‘பாபா’ உட்பட (சாய்பாபா இல்லை நம்ம பாபா) தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

-oOo-

இந்திய நீதிமன்றத் தீர்ப்புகளை பற்றி சட்டபூர்வமாக அலசும் ஒரு ஆங்கிலப்பதிவில் சுட்டியினை பத்ரி தந்துள்ளார். மணற்கேணியினைப் போல இல்லாமல் மேலும் ஆழமாக சட்டத்தினை ஆழமாக படிக்க விரும்புவர்களுக்கு உதவும்.
http://lawandotherthings.blogspot.com/

மதுரை
18.04.08

31.3.08

‘ஞாநி’களும் மேற்போக்காக மேய்தலும்...

திருமணத்தை ரத்து செய்வதற்கான உரிமை குரான் விதிகளின்படி இஸ்லாமியப் பெண்களுக்கும் உண்டு என்று அறிவித்து அதற்கான விதிமுறைகளை வெளியிட்டிருப்பதற்காக அனைந்திந்திய முஸ்லீம் சட்ட வாரியத்துக்கு இ.வா.பூச்செண்டு” - எழுத்தாளர் ஞாநி!

‘ஞாநிகளுக்கு எதற்கு அறிவு? என்ற எனது பதிவினை தொடர்ந்து, தனது கருத்துகளை ‘செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்’ என்று தனது வலைப்பதிவில் எழுதிய வெங்கட் “அது பின்நவீனத்துவமோ, மரபு மாற்றமோ, சூடேற்றமோ, சூடான் அரசியல் விவகாரமோ இவர்கள் பல சமயங்களில் மேம்போக்காக மேய்ந்துவிட்டு அடுத்தவாரமே தங்கள் மேதமையை அச்சிலேற்றிவிடுவார்கள்” என்று எழுதியதற்கு ஒரு உதாரணம்தான் மேலே காணும் பூச்செண்டு!

முதலில் ஞாநி குறிப்பிடுவது முஸ்லீம் சட்ட வாரியம் அல்ல. மாறாக முஸ்லீம் பெண்கள் சட்ட வாரியம். அடுத்து மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது விதிமுறைகள் அல்ல. மாறாக, இஸ்லாமியர்களின் திருமண ஒப்பந்தமான நிக்காநாமாவின் வடிவம் (model form).

இஸ்லாமிய சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board) என்பது 1973ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு. ‘அனைத்திந்திய’ ‘வாரியம்’ என்ற வார்த்தைகள் அதன் பெயரில் இருந்தாலு அரசு சார்ந்த ஒரு அமைப்பல்ல. மாறாக பொது சிவில் சட்டம் என்ற அரசின் கொள்கைக்கு எதிரான ஒரு அமைப்பு (pressure group).

2005ம் ஆண்டு நிக்காநாமா இவ்வாறு இருக்கலாம் என்று ஒரு வடிவத்தினை இந்த அமைப்பு வெளியிட்டது. இந்த அமைப்பின் தீர்மானங்கள் இஸ்லாமியப் பெண்களின் பிரச்னைகளை போக்குவதாக இல்லை என்று சில இஸ்லாமியப் பெண்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் இஸ்லாமியப் பெண்கள் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board). இரு அமைப்புகளையும் இங்குள்ள இஸ்லாமியர்கள் சீந்துவதில்லை.

இரு வாரங்களுக்கு முன்னர் இந்த பெண்கள் அமைப்பு தனது நிக்காநாமாவை வெளியிட்டது. உடனே, மற்ற நிறுவனத்திடம் இருந்து, தேவையற்றது (irrelevant) என்ற கண்டனம் வந்து விட்டது!

ஆனால் ‘ஞாநி’ நடப்பது என்ன ஏது என்று புரியாமலேயே கண்டனம் தெரிவித்த அமைப்பிற்கு பூச்செண்டைக் கொடுத்துவிட்டார்.

-oOo-

நான் மேலே கூறும் விபரங்கள் அனைத்தும், சிறிது நேரம் செலவழித்து இணையத்தில் தேடினாலேயே கிடைக்கும். எழுதும் விஷயத்தில் சிறு ஆராய்ச்சி கூட செய்ய விரும்பாதவர்கள்தான் இன்றைய தமிழ் பத்தி எழுத்தாளர்கள்.

சாருநிவேதிதா தனது கட்டுரையொன்றில் துருக்கி இந்தியாவை விட மிகவும் ஏழை நாடு என்று குறிப்பிடுகிறார். பின்னர் ஒரு முறை வெறுமே துருக்கியை ஏழை நாடு என்று தனது மற்றொரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டதையும் வாசிக்க நேர்ந்தது.

இந்தியாவிற்கு எதிரான துருக்கியின் பொருளாதார வலிமையினை சுமார் பத்து விநாடி நேரத்தில் இணையத்தில் கண்டுபிடித்து விடலாம். ஆனால், யார் எம்மை கேள்வி கேட்பது என்ற தைரியம்தானே இவ்வாறு இவர்களை எழுத வைக்கிறது.

சுசூகியும், யமாஹாவும் வரும் வரை இந்திய பஜாஜும், ராஜ்தூத்தும் இப்படித்தான் ‘வாகனம் என்றால் இரு சக்கரத்தில் சென்றால் போதும்’ என்ற வகையில் நடந்து கொண்டன. தற்பொழுது அவைகள் இருக்கும் இடம் தெரியவில்லை.

-oOo-

எழுத்தாளர் சுஜாதா கூட இதற்கு விதிவிலக்கல்ல... ‘சுஜாதா வீட்டு லாண்டிரிக்கணக்கை கூட வெளியிடுவார்கள்’ என்று வைக்கப்பட்ட ஒரு விமர்சனத்தை கிண்டல் செய்யும் நோக்கோடு, சாவி இதழ் ஒருமுறை தனது பக்கங்களில் ஒன்றினை ‘லாண்டிரிக் கணக்கு’ ஒன்றினை வெளியிட்டது. யாரையோ நக்கல் செய்கிறோம் என்ற பெயரில், மறைந்த சா.விஸ்வநாதன் காசு கொடுத்து, தனது பத்திரிக்கை வாங்கியவர்களை அவமானப்படுத்தினார்.

அந்நியனுக்காக சுஜாதா செய்த ‘ஆராய்ச்சி’யினை இங்கு குறிப்பிட்டுள்ளேன்!

-oOo-

இறுதியாக தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது குறித்து விவாதங்கள் நடைபெற்ற காலத்தில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ‘தீராநதி’ யில் எழுதிய கட்டுரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினைப் பற்றி கூறுவதைப் பார்க்கலாம்

இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. தமிழ் மொழி செம்மொழி என்று கிவிட்டால், அரசியல் சட்டம் எட்டாம் பிரிவின்படி, நவீன இந்திய மொழி என்று அதற்குக் கிடைத்து வரும் உரிமைகளும் சலுகைகளும் பாதிக்கப் படமாட்டா என்பது என்ன நிச்சியம்? ஒரே மொழி இரண்டு தகுதிகளுக்கும் உரியது காது என்று, மனித வள மேம்பாட்டுத் துறை கூறாது என்பது உறுதியா?

எழுத்தாளரின் கட்டுரை ‘ராயர் காபி கிளப்’ என்ற வலைக்குழுமத்தில் விவாதப் பொருளாகிய பொழுது நான் எழுதியது

தேர்ந்த எழுத்தாளரான கட்டுரையாசிரியர், இந்தக் கருத்துக்காக எந்த ஆராய்வின் அடிப்படையில் இவ்வாறு கூறுகிறார் என்பது புரியவில்லை. அரசியல் சட்டத்தின் எட்டாம் பிரிவில் கண்ட மொழிகள் முதலில் நவீன இந்திய மொழிகள் என்று கூறப்படவில்லை. மேலும் அந்த அட்டவணையில் 14வது மொழி சமஸ்கிருதம். நான்காவது மொழி ஹிந்தி! அரசியலமைப்புச் சட்டத்தின் பிற பிரிவுகளில் பல சிறப்பு இடங்கள் ஹிந்திக்கும் சில சிறப்பு இடங்கள் சமஸ்கிருதத்திற்கும் உள்ளன. ஹிந்திக்கு அட்டவணைத்தகுதியும் ஆட்சி மொழித் தகுதியுமாக இரு தகுதிகள் இருக்கையில் தலையிடாத மனித வள மேம்பாட்டுத் துறை தமிழைக் கண்டதும் தலையிடுமோ?

அடுத்து அரசியல் சட்டத்தின் எட்டாம் பிரிவில் ஒரு மொழி இடம் பெறுவதால் அதற்கு ரூபாய் நோட்டில் இடம் பெறுவதை தவிர வேறு பெரிய உரிமையும், சலுகையும் இருப்பதாக நான் அறியேன். இல்லாத உரிமையும், சலுகையும் எவ்வாறு பாதிக்கப்படும் என ஆசிரியர் கூறுகிறார்? அரசியல் அமைப்புச் சட்டத்தில்இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளுக்கு சிறப்புச் சலுகைகள் ஏதும் கூறப்படாத நிலையில் இந்த அட்டவணையில் குறிப்பிடாத மொழிகள் கூட தங்கள் வளர்ச்சிக்கான தொகையினை வேண்டிப் பெறலாம்.
இந்த எட்டாவது அட்டவணையே ஒன்றுக்கும் உதவாத, பயனற்ற அட்டவணை என்று முன்பு 'இந்திய ஆட்சி மொழி' என்ற கட்டுரையில் விளக்கமாக எழுதியிருந்தேன். என்னிடம் தற்பொழுது இல்லை. இராயர் கிட்டங்கியில்
எங்காவது புதைந்து கொண்டிருக்கலாம்.

தமிழ் செம்மொழி என்று அறிவிப்பதால் நன்மை ஏதாவது இருக்கிறதோ இல்லையோ தீமை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. கட்டுரையாசிரியர் தனது கட்டுரையில் ஏதாவது தீமையை சுட்டிக்காட்டும் எண்ணத்துடன் பொதுவாக எழுதியது போல இருக்கிறது மேற்கண்ட வாசகம்


இன்று வரை எனது கருத்திற்கு யாரிடமிருந்தும் பதிலில்லை. எனது கருத்து தவறாகக் கூட இருக்கலாம். ஆனால், தகுந்த ஆய்வினன மேற்கொண்ட பின்னரே நான் எனது கருத்தினை எழுத துணிந்தேன். ஆனால், இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஏதும் ஆய்வினை புரியாமலேயே, தனது கருத்தினை எழுதினார் என்றே இன்றளவும் நம்புகிறேன்.

மதுரை
31.03.08


THERMAL POWER STATION, THOOTHUKUDI

30.3.08

‘ஞாநி’களுக்கு எதற்கு அறிவு?

மும்பையில் இருக்கையில், மிட் டே (Midday) டைம்ஸ் ஆப் இந்தியா (times of India) ஆகிய தினசரிகளில் ரஜ்தீப் சர்தேசாய், ஷோபா டே, கங்காதர், சுவாமிநாத ஐயர் மற்றும் பல பத்தி எளுத்தாளர்கள் (columnists) எழுதும் கட்டுரைகளை (column) மிகவும் ஆர்வமுடன் படிப்பேன். நாமும் இப்படி எழுதிப் பார்த்தால் என்ன என்ற ஆசை அவ்வப்பொழுது எழுந்தாலும், அவர்களைப் போல மொழியின் மீது ஆளுமையும், அறிவும் நமக்கு வாய்க்குமா என்ற பயத்தில், வெறுமே ஆசிரியருக்கு எழுதிய சில கடிதங்களோடு நிறுத்திக் கொண்டேன்.

முக்கியமாக எதாவது ஒன்றிற்கு பொருத்தமான ஆங்கில வார்த்தை என்னவென்று தெரியாமல் போய்விட்டால் என்ன செய்வது?

மதுரைக்கு வந்த கடந்த சில வருடங்களில் நான் இழந்தது, ஆங்கில பத்தி எழுத்தாளர்களின் கட்டுரைகளை. ஆயினும் தமிழிலும் பாமரன், ஞாநி, சாருநிவேதிதா போன்றவர்கள் தொழில் முறையில் பத்தி எழுதுகிறார்கள். பாமரன் சாரு நிவேதிதா போன்றவர்களைப் போல ஞாநி எனக்கு சுவராசியமாக இருந்ததில்லை எனினும், அவரது கருத்துகள் இணையத்தில் சமீப காலங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.

ஆனால், நேற்று குமுதத்தில் வாசிக்க நேர்ந்த ஞாநி அவர்களது கட்டுரை, மும்பையில் நான் கொண்டது எத்தனை அர்த்தமற்ற பயம் என்பதை விளக்கியது.

மனிதர் மொழி ஆளுமை, தமிழ் அறிவு எதுவும் பற்றிக் கவலைப்படாமல், தானும் ஒரு பத்தி எழுத்தாளன் என்று கூறிக்கொண்டு, எங்கெல்லாம் முடியவில்லையோ அங்கெல்லாம் ஆங்கில வார்த்தைகளை உபயோகித்தே எழுதியிருக்கிறார்.

ஆரம்பத்திலேயே ‘அவையெல்லாம் ‘சப்ஜெக்ட்டுக்கு’ முழு நியாயம் செய்யவில்லை’ என்கிறார். தான் நினைப்பதை எழுத்தில் வடிக்க சிரமப்படும், இயலாதவர்களும் இங்கு தொழில் முறை எழுத்தாளர்கள் என்று கூறிக்கொள்ள முடியுமென்றால், அவரது அரைகுறை எழுத்தினை காசுக்கு விற்கும் பத்திரிக்கை வாசகனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பது அல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்?

ஹீரோ, சினிமா’ போன்ற வார்த்தைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டு இன்று கதாநாயகன், திரைப்படம் என்ற வார்த்தைகள் சரளமாக எழுத்து உலகில் புழங்கி வந்தாலும் பாவம், அவருக்குத் தெரியவில்லை போலும். முரணாக, பின்னர் கதாநாயகன் என்ற வார்த்தையினை அவரே உபயோகிக்கிறார்.

கால்ஷீட் நேரத்துக்கு நடிக்க செல்லாமல்’ என்பதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை என்ன என்பது ஏதோ, தன்னார்வர்த்தில் எழுதும் வலைப்பதிவாளர்களுக்கு தெரியாமல் இருப்பதில் அர்த்தமுண்டு. ஆனால், காசுக்கு எழுதும் ஞாநி போன்ற எழுத்தாளர்கள் அவசியம் அதனை கற்று பின் எழுத முயல வேண்டும்.

‘எழுப்பியிருக்கும் கேள்வி ஒரு படத்தின் கேப்டன் இயக்குஞரா? ஸ்டாரா? நடைமுறையில் அது ஸ்டார்தான் என்று இருந்த போதும் எல்லோருமே நியாயப்படி டைரக்டர்தான் கேப்டனாக இருக்க வேண்டும்’

தொடர்ந்து ஒரு விஞ்ஞானியைப் பற்றி எழுத முயல்பவர் ‘கணிதம், பயோமெடிக்கல், எஞ்ஜினீயரிங், மருத்துவம் சர்ஜரி................கார் டிரைவர், மெக்கானிக், டாக்டர், சினிமா இயக்குஞர், டி.வியில் வானிலை அறிவிப்பாளர்’ என்று இஷ்டத்துக்கு பண்பலை வானொலி அறிவிப்பாளர் மாதிரி பொளந்து கட்டுகிறார்.

பின்னர் கற்பிதங்கள் என்ற அதிகம் தெரிந்திராத வார்த்தையினை பயன்படுத்துபவருக்கு ‘பிரிலியண்ட்’ என்ற வார்த்தைக்கு தமிழில் தெரியாமல் தடுமாறுகிறார்.

இறுதியாக, ‘காற்றுப் பிரிதல்’ என்று எந்த மருத்துவரும், விஞ்ஞான மாணவரும் இயல்பாக பயன்படுத்தும் வார்த்தையினை தமிழில் எழுதினால், அதுவும் விஞ்ஞான ஆராய்ச்சியினைப் பற்றி எழுதுகையில் ‘பாரம்பரியம் மிக்க குமுதம்’ இதழுக்கு பொருந்தி வராது என்பதால் ‘farting’ என்று ஆங்கிலத்தில் எழுதுவதாக ஒரு சப்பைக்கட்டு வேறு!

அண்ணாமலையாரே இந்தப் புகழுரையினை கேட்டு சற்று, மேலுலகத்தில் நெளிந்திருப்பார்!

-oOo-

எனது சந்தேகம் இதுதான்.

பணம் வாங்கிக் கொண்டு எழுதும் ‘எழுத்தாளரான’ ஞாநிக்கு இருக்கும் தமிழ் அறிவினை விட எனது ஆங்கில அறிவு சற்று அதிகம் இருக்கலாம். ஏனெனில் நான் தமிழ் வார்த்தைகளை உபயோகித்து ஆங்கில கட்டுரை எழுதியதில்லை. ஹிந்துவில் எனக்கு பத்தி எழுத வாய்ப்பு தருவார்களா?

மதுரை
30.03.08

“Some men are born Mediocre, some men achieve mediocrity, and some men have mediocrity thrust upon them”


MY BELOVED THOOTHUKUDI