16.1.07

பின் தொடரும் ஆ...பத்து! - முடிவு

அலட்சியம் தரும் ஆபத்து!


இறுதியியாக யாருடைய கையிலும் அடங்காத ஒரு ஆபத்து உள்ளது. அது வாகன உரிமையாளர்களின் அலட்சியத்தால் விளைவது. அதாவது, வாகனத்திற்கு காப்பீடு செய்ய மறப்பது.


பலமுறை விபத்து நடந்த பிறகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடியென காதில் இறங்கும் ஒரு செய்தி, வாகனத்திற்கு காப்பீடே இல்லாதிருப்பது அல்லது காலாவதியாகியிருப்பது. இவ்வாறான நிலைகளில் விபத்தில் நிர்க்கதியாக்கப்படும் ஒரு குடும்பத்தின் வயிற்றெரிச்சலை சுமப்பதன் குற்ற உணர்ச்சிதான், வாகன உரிமையாளருக்கு மிச்சம்!


சில சமயங்களில், வாகன உரிமையாளர் கவனமாக இருந்தாலும், காப்பீடு நிறுவன முகவர்களின் தவறான தகவலாலும், காப்பீடு இல்லாத நிலை ஏற்ப்படும். அவற்றை குறித்து வாகன உரிமையாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.


அதாவது, உங்களிடம் இருந்து பணத்தினை பெற்றவுடனே ‘வண்டியை எடுக்கலாம் சார்’ என்று கூறிவிட்டு போய் விடுவார்கள். ஆனால், காப்பீடு நிறுவனம் பணம் பெற்றதால் மட்டுமே காப்பீடு ஒப்பந்தம் ஏற்ப்பட்டதாக கருத முடியாது என்று சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன!


எனவே காப்பீடு சான்றிதழ் (Certificate of Insurance) பெறும் வரை காத்திருக்கவும். பாலிசி வருவதற்கு நாள் எடுக்குமென்பதால், சில காப்பீடு நிறுவனங்கள் ‘கவர் நோட்’ (Cover Note) என்ற பெயரில் ஒரு இடைக்கால காப்பீட்டினை அளிக்கிறது. இவ்வாறு கவர் நோட் அளிக்கப்பட்டால் பாலிசி கொடுக்கப்படும் வரை காப்பீடு உண்டு. ஆனால் சிறு கவனம் தேவை.


என்னிடம் சமீபத்தில் வந்த ஒரு வழக்கில் ‘கவர் நோட்’ டானது 11ம் தேதி வழங்கப்பட்டிருந்தாலும் அதில் காப்பீடானது 13ம் தேதியிலிருந்து தொடங்கும் என்ற வகையில் குறிப்பு உள்ளது. இடையில் 12ம் தேதி விபத்து நடைபெற, சிக்கல்தான்!


ஆக, பணத்தினை 11ம் தேதியே கொடுத்து, கவர் நோட்டும் அதே தேதியில் வழங்கப்பட்டிருந்தாலும் 12ம் தேதி நடந்த விபத்திற்கு காப்பீடு வழங்கப்பட முடியாது என நான் வாதிட......நீதிபதி ‘இரக்கமற்றவன்’ என்று என்னை முறைத்துக் கொண்டிருக்கிறார்.


இந்தப் பிரச்னையினை தவிர்க்க, வாகனத்தை காப்பீடு செய்கையில் சிறு கவனமாயிருத்தல் நலம். துர்நிகழ்வுகள் யாருக்கும், எந்த நேரத்திலும் சம்பவிக்கலாம் என்ற சிறு பயமும் தேவை!



முடிவுரை


மீண்டும் கூற விரும்புகிறேன்! இதனை ஒரு பதிவு என்ற அளவோடு நிற்காமல், இந்தியாவின் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பயணிகள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் என்ற உள்ளார்ந்த ஆதங்கத்தோடு பதிவிடுகிறேன்.


சில சமயங்களில் கீழமை நீதிமன்றங்களில் இழப்பீடு உத்தரவு கிடைத்த பின்னரும், உயர்நீதிமன்ற மேல் முறையீட்டில் சில நுட்பமான காரணங்களுக்காக மறுக்கப்படுகையில், பாதிக்கப்பட்டவர்கள் சிந்தும் கண்ணீரை உணர்ந்த குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடுதான் இந்த பதிவு!

***

1 comment:

Sivabalan said...

சார்

மிக உபயோகமான தொடர்..

நிச்சயம் பல பேருக்கு நன்மை பயக்கும்.