13.1.07

பின் தொடரும் ஆ...பத்து! - 4

ஓட்டுநர் உரிமை (Driving License)

நாகராஜன், கன்னியாகுமரியில் காய்கறி வியாபாரி. காய்கறி வியாபாரத்தின் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் ஏதோ குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் படித்து முடித்த மகனுக்கு ஒரு வேலை கிடைத்தால், மகளுக்கு கலியாணத்தை நடத்தி முடித்து விடலாம் என்ற கனவில் இருப்பவர். செலவுக்கு சொந்தமாக உள்ள ஒரே வீட்டினை நம்பியிருக்கிறார். அந்த நம்பிக்கைக்கு இடியென வந்தது, அந்த வீட்டினை ஏலத்தில் விட வேண்டுமென்று நீதிமன்றத்தில் இருந்து வந்த நோட்டீஸ்!

விடயம் இதுதான். ஐந்து வருடங்களுக்கு முன்னர் நாகராஜன் ஒரு வாடகைக் கார் வைத்திருந்தார். ஒரு விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கி விட பயணி ஒருவர் மரணம். மரித்தவரின் வாரிசுகள் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த வழக்கில் பங்கு பெற நாகராஜனுக்கு நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை (summons) வந்தது. அதுதான் வண்டியை காப்பீடு செய்திருக்கிறீர்களே, வழக்கினை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்று கூறப்பட அழைப்பாணையினை அலட்சியம் செய்தார் நாகராஜன்.

ஆனால், நீதிமன்றத்தில் காப்பீடு நிறுவனம் வண்டி ஓட்டுநருக்கு தகுந்த உரிமம் இல்லை என்று கூறி அதனை ஓரளவுக்கு நிரூபணம் செய்ய, நீதிமன்றம் காப்பீடு நிறுவனத்தை இழப்பீட்டினை அளித்து பின்னர் அதனை நாகராஜனிடம் வசூலித்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. எனவே, காப்பீடு நிறுவனம் சுமார் ஐந்து லட்ச ரூபாயினை நாகராஜனின் வீட்டினை விற்று தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

வழக்கினை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்து வந்தார் நாகராஜன்.

“என்ன இது? தகுந்த உரிமம் இல்லாத ஓட்டுநரிடம் வண்டியினைக் கொடுத்ததற்க்கு, அவரது வாழ்வினையே குலைக்கும் அளவிற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?” என்று நீதிபதி வினவினார்.

“வேறு வழியில்லை! அவர் மீது பரிதாப்படுகிறேன். என்னால் இயலக்கூடியது அவ்வளவுதான்” என்றேன்.

இத்தனைக்கும் நாகராஜனின் ஓட்டுநரிடம் இலகு ரக வாகனம் (Light Motor Vehicle LMV) ஓட்டக்கூடிய உரிமம் உள்ளது. ஆனால், விபத்துக்குள்ளானது வாடகைக் கார். அதனை ஓட்டும் ஓட்டுநர் அவரது உரிமத்தில் அதற்கான முத்திரையினை (endorsement or badge) பெற வேண்டும். எனவே அவரிடம் இருந்தது தகுந்த உரிமம் இல்லை என்று கருதப்பட்டது.


***

காப்பீடு இருந்துமா இவ்வாறு என்றால், அப்படித்தான். வாகன காப்பீட்டினை கட்டாயப்படுத்தும் வாகன சட்டம், சில காரணங்களுக்காக காப்பீடு நிறுவனங்கள் காப்பீடு அளிக்க மறுக்கலாம் என்று கூறியுள்ளன. அவற்றில் ஒன்றுதான் தகுந்த உரிமம் இல்லாத நபர் வண்டியினை ஓட்டுதல்.

தற்பொழுது இக்கட்டுரையின் (முதல் பகுதியின்) ஆரம்பத்தில் கூறப்பட்ட சம்பவத்தைக் கவனியுங்கள். நம்மில் யாவருமே அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில் ஈடுபட்டிருப்போம். மேலும், நான் உட்பட எனது நண்பர்கள் யாருமே, உரிமம் வாங்கியபின் இரு சக்கர வாகனங்கள் ஓட்டியவர்கள் அல்ல. அவ்வாறு உரிமம் இன்றி இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்கையில் ஏதாவது விபத்து ஏற்படுகிறது என்றால், இறுதியில் இழப்பீடு கொடுத்த காப்பீடு நிறுவனம் அதனை திரும்பிப் பெற உங்களிடம் வந்தால், உங்களது நிலை என்ன?

உதாரணமாக, நீங்கள் ஒரு வங்கியில் பெரிய அதிகாரியாக இருக்கிறீர்கள் என்றால், உங்களது சம்பளத்தின் கணிசமான பகுதியினை உங்களது ஓய்வு பெறும் காலம் வரை இழப்பீடாக செலுத்த வேண்டி வரும்.

இரு சக்கர வாகனம் மோதி மரணம் ஏற்ப்படாது என்பது இல்லை. எனது இரு வருட அனுபவத்தில் டிவிஎஸ் மொபெட் மோதி மரணம் சம்பவித்த இரு வழக்குகளை சந்தித்திருக்கிறேன்!


***

சில வருடங்களுக்கு முன்பு வரை, உரிமம் இல்லாதிருப்பின் நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்டவரை நேரிடையாக இழப்பீட்டினை வாகன உரிமையாளரிடம் வாங்கிக் கொள்ள உத்தரவிடுவார்கள். அப்பொழுது கூட அவ்வளவு பிரச்னையில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வாகன உரிமையாளரை தேடி அவர் மீது உத்தரவினை செயல்படுத்த சிரமப்பட்டு அப்படியே விட்டுவிடுவார்கள்.

ஆனால், தற்பொழுது உச்ச நீதிமன்றம் ‘உரிமம்’ சம்பந்தப்பட்ட பிரச்னையினை தீர ஆராய்ந்து காப்பீட்டு விதிகளை (Policy Conditions) வாகன உரிமையாளர் மீறுவதால், பாதிக்கப்படும் மூன்றாவது நபர் பாதிக்கப்படக் கூடாது என்று கூறி, இவ்வாறு காப்பீடு நிறுவனம் அந்த இழப்பீட்டினை அளித்து வாகன உரிமையாளரிடம் அதனை பெற்றுக் கொள்வதை சட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது நிறுவன பலத்தினை வைத்து வாகன உரிமையாளர்கள் மீது தங்களது கவனத்தை செலுத்துகின்றன!

எனவே, இதுவரை மோட்டார் வாகன நீதிமன்றங்களில் (Motor Accidents Claims Tribunal) நாகராஜனைப் போல நமக்கு ஏதும் வராது என்று வராமலேயே இருந்து (exparte) வந்த பல வாகன உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தின் கதவினை தட்ட ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிலை யாருக்கும் வர வாய்ப்பு உள்ளது.


***

மேலே கூறப்பட்ட உரிமம் குறித்தான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வாகன உரிமையாளர்களுக்கு பல பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. அதாவது, வாகன உரிமையாளர் தெரிந்தே இவ்வாறு வாகனத்தை உரிமம் இல்லாத நபரிடம் கொடுத்தார் என்பதை காப்பீடு நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், பின்னர் வந்த தீர்ப்பில் இது வலியுறுத்தப்படவில்லை. எனினும், ஏன் வம்பு?


***

மேலும் சில மீறக்கூடாத விதிகள் உண்டு என்றாலும், முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை இரண்டு. அதாவது, இரு சக்கர வாகனத்தில் பக்க வண்டியை (side car) இணைப்பது மற்றும் தனியார் உபயோகத்திற்கான வண்டியை வாடகைக்கு விடுவது. எனவே, இந்த வகையான செயல்கள் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறதா என்று உங்களது வாகன காப்பீட்டினை கவனமாக படித்துப்பாருங்கள்.

எப்படியோ அதி முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது, உங்கள் வாகன ஓட்டிக்கு தகுந்த உரிமம் இருக்கிறதா என்பதை சரி பார்ப்பதே!

to be continued...


குறிப்பு : ஒரு காப்பீடு நிறுவனம், ‘தனது மோட்டார் பைக் காணாமல் போய்விட்டது. காப்பீடு வேண்டும்’ என்று ஒருவர் கோரியுள்ளதாகவும், அவர் ஒரு பார்வையற்றவர் என்பதால் அவரிடம் உரிமம் இல்லை என்று கூறி அதனை நிராகரிக்க முடியுமா என்று ஆலோசனை கேட்டது.

‘அய்யா, வண்டி ஓட்டிக்குத்தான் உரிமம் தேவையே தவிர உரிமையாளருக்கு அல்ல, மேலும் வண்டி காணாமல் போவதற்கும் உரிமத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்’ என்று பதில் எழுதினேன்.

1 comment:

சிறில் அலெக்ஸ் said...

சூப்பர் தொடர்... சட்ட சம்பந்தமான விஷயங்கள் நமக்கு ரெம்ப பிடிக்கும்..

B.comல commercial law, Contract act எல்லாம் படிச்சதன் விளைவு..

அண்ணன் இப்ப ஒரு மஜிஸ்ட்ரேட்டா இருக்கார்.
:)