12.11.10

சபாஷ்! சைலேந்திரபாபு

சைலேந்திரபாபுவிற்கு சபாஷ் போடத் தோன்றுகிறது. அவரது தியாகம் வியக்க வைக்கிறது. எனெனில், மோகன்ராஜ் என்கவுண்டர் முடிவு எடுத்ததும் (அவர் மறுத்தாலும், தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து அதுதான் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இணையத்திலும் கூட போலி என்கவுண்டர் என்ற ஒன்று இருக்கிறது என்பதே தெரியாமல், என்கவுண்டர் என்றால் வாழத்தகுதியில்லாத ஒருவனை காவலர்கள் போட்டுத்தள்ளுவது என்ற அர்த்ததில்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்) அவர் மனதில் ஒரு முறை கேரளாவின் லக்ஷ்மணா, குஜராத்தின் வன்சாரா, தில்லியின் ரஜ்பீர் சிங், மும்பையின் தயா நாயக் ஆகிய பெயர்கள் மனதில் ஓடியிருக்கும். அந்தப் பயத்தை எல்லாம் தள்ளி வைத்து விட்டு கொடூரன் மோகன்ராஜ் என்கவுண்டர் (sic) செய்து விடலாம் என்ற முடிவினை அவர் எடுத்திருந்தால், அந்த தியாத்தை வியந்து ‘சபாஷ்’ போடுவதில் என்ன தவறு இருக்க முடியும்.


***

நேற்று ஆய்வாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். கோவை என்கவுண்டர் பற்றி பேச்சுத் திரும்பிய பொழுது, ‘அண்ணாத்துரை ரொம்ப அப்பாவி. எப்படித்தான் சுட்டாரோ தெரியவில்லை’ என்று கூறினார்.

வர்கீஸை சுட்ட ராமச்சந்திர நாயரும் அப்பாவிதான். இப்படித்தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், கேரள காவலர்களால் கைது செய்யப்பட்ட நக்ஸல் வர்கீஸ், பின்னர் காவல்துறையோடு நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக முதலில் சொல்லப்பட்டது. ஆலயம் கூட கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைக்க மறுத்தது.

வர்கீஸ் கொல்லப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் கழித்து, அவரை சுட்ட ராமச்சந்திரன் நாயர் என்ற காவலர், தனது மனச்சாட்சியின் குரலுக்கு பயந்து ‘நான் இருந்தேன் என்பதற்கு சாட்சியாக” என்று ஒரு புத்தகத்தை எழுதி அதில் வர்கீஸை மேலதிகாரியின் உத்தரவுக்கு பணிந்து தான் சுட்டதாக கூறியிருந்தார்.

அந்தப் புத்தகம் அவரது ஒப்புதல் வாக்குமூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, ராமச்சந்திரன் நாயர், முன்னாள் IG லக்ஷ்மணா மற்றும் முன்னாள் DGP விஜயன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடைபெறுகையில் ராமச்சந்திரன் நாயர் இறந்து போக, கடந்த அக்டோபர்’ 2010ல் ஐஜி லக்ஷ்மணா குற்றவாளி என்று தீர்ப்புக் கூறப்பட்டு, 74 வயது லக்ஷ்மணா கடந்த ஒரு மாதமாக சிறையில்…

ஒருவேளை இருபது வருடங்கள் கழித்து அண்ணாதுரையும் தனது மனச்சாட்சிக்கு பணிந்தால்....சைலேந்திரபாபுவுக்கு துணையாக, எந்த ஊடகவியலாளரும் சிறைக்குச் செல்லப் போவதில்லை.

***

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்த லக்ஷர் தோய்பா பயங்கரவாதி சொராபுதீனை தீரமாக குஜராத் காவலர்கள் சுட்டுக் கொன்ற பொழுது, DIG வன்சாரா மீது சூட்டப்பட்ட புகழாரங்கள் முன்பு இன்று சைலேந்திரபாபுவிற்கு கிடைக்கும் புகழாரங்கள் எல்லாம் ஒன்றுமில்லை!

இன்று வன்சாராவிற்காக கவலைப்பட எந்த ஊடகமும் தயாரில்லை. பாவம், ராஜ்குமார் பாண்டியன். ஐ பி எஸ் அதிகாரியாக குஜராத் செல்லும் தான், அங்கு ஒரு கைதியாக சிறையில் வாட வேண்டியிருக்கும் என்பதை கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

இருபது வருடங்களுக்கு முன்னர் ஐ பி எஸ் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த சைலேந்திரபாபுவும் நினைத்திருக்க மாட்டார். ஒரு கொலையில் தனக்கும் பங்கிருப்பதாக, சந்தேகிக்கப்படுவோம் என்று…

***

எட்டு வருடங்களுக்கு முன்னர், தில்லி அன்சால் வணிக வளாகத்தில், இரு லக்ஷர் இ தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ACP ரஜ்பீர் சிங் கொண்டாடப்பட்டார். உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த ரஜ்பீர் சிங் 13 வருடங்களில் உதவி ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார். காரணம் அவர் பணி செய்த 24 ஆண்டுகளில் 56 என்கவுண்டர்களை நடத்தியுள்ளார். ஆனால், கொடூர பயங்கரவாதிகளை ஒரு தனக்கு ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் சுட்டுத்தள்ளிய ரஜ்பீர் 2008ம் ஆண்டில் நிசமான ஒரு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டார். பல்வேறு நில கட்டபஞ்சாயத்துகளில் ஈடுபட்ட ரஜ்பீர், அதனால் ஏற்பட்ட ஒரு தகறாரில் ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

***

சுமார் 50 நபர்களை என்கவுண்டரில் விண்ணுக்கு அனுப்பிய மும்பை ஆய்வாளர் விஜய் சலாஸ்கர் கூட இப்படித்தான். ஒரு சிராய்ப்பு கூட வாங்கியதில்லை. அனால் நிசமாகவே ஒரு துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதி அஜ்மல் கசாபுடன். சலாஸ்கரின் பெயர் எழுதிய ரவை அன்றுதான் துப்பாக்கியிலிருந்து கிளம்பியது.

ஆனால், 85 நபர்களுக்கு மேல் போட்டுத்தள்ளிய மும்பையின் தயா நாயக் அந்த சண்டையில் பங்கெடுக்க முடியவில்லை. எனெனில் 2006ல் மும்பை தாதா உலக நடவடிக்கைகளில் அவருக்கும் பங்கிருப்பதாக வழக்கு தொடரப்பட்டு அவரே சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது.

பிரதீப் சர்மா…அவரது என்கவுண்டர்கள் 100ஐ தாண்டி வெகுகாலமாயிற்று. அவரும் தாவூது இப்ராகிமோடு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வேலை நீக்கம் செய்யப் பட்டார். தற்பொழுது நீதிமன்ற உத்தரவால் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சைலேந்திரபாபுவுக்கு கூட இப்படித்தான். முதலில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனில் ஆரம்பிக்கும். பின்னர் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொலைகாரனை போட்டுத் தள்ளினால் என்ன என்ற எண்ணம் பிறக்கும். அடுத்து கொள்ளைக்காரன். காலப்போக்கில் குற்ற உணர்வுகள் மரத்துப் போன பின், ‘இந்த லோக்கல் ரவுடியை கொஞ்சம் கவனியுங்கள். நான் உங்களைக் கவனிக்கிறேன்’ என்று ஒரு தொழிலதிபர் வந்தால் அதையும்தான் செய்து பார்ப்போமோ என்ற எண்ணம் வரலாம்.

தான் மறுத்தால் கூட, அண்ணாதுரை வந்து, ‘நான் செய்து கொள்கிறேன். நீங்கள் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் இருந்தால் போதும்’ என்றால் முடியாது என்று கூற முடியுமா?

முடியாது என்று கூறினால், அண்ணாதுரை ராமச்சந்திரன் நாயர் போல ஒரு புத்தகம் எழுதினாலும் எழுதுவார் என்ற பயம் உருவாகுமல்லவா?

அதனால்தான் அவரது துணிவுக்கு ஒரு சபாஷ் போட வேண்டும் என்று தோன்றுகிறது.



மதுரை
131110

20 comments:

Thekkikattan|தெகா said...

வணக்கம் சார்! பகிர்தலுக்கு நன்றி... சரியான நேரத்தில், புள்ளிவிபரங்களுடன் கூடிய பதிவு. பரவலாக வாசிக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

Sridhar Narayanan said...

//பயங்கரவாதி சொராபுதீனை தீரமாக குஜராத் காவலர்கள் சுட்டுக் கொன்ற பொழுது, //

மிகச் சரி! இன்று சைலேந்திரபாபுவிற்காக புளகாங்கிதப்பட்டு கொண்டாடும் மக்கள் குஜராத் கலவரங்களுக்கு போலிஸ் துணை போனதை எந்த வகையில் பார்க்கிறார்களோ?

//முடியாது என்று கூறினால், அண்ணாதுரை, ராமச்சந்திரன் நாயர் போல ஒரு புத்தகம் எழுதினாலும் எழுதுவார் என்ற பயம் உருவாகுமல்லவா?//

புத்தகம் எழுதினால் மட்டும் போதுமா? நிரூபிப்பது கடினம் என்றுதான் நினைக்கிறேன்.

நல்ல பதிவு. நன்றி!

Ravichandran Somu said...

வக்கீல் சார்,

எனக்கு ஒரு சந்தேகம்... இந்தியாவில் நீதித்துறை என்று ஒன்று இருக்கிறதா? இந்த நீதித்துறையால் உண்மையான குற்றவாளிகளுக்கு உரித்த நேரத்தில் தண்டனைகள் கிடைக்கிறதா?

மக்கள் சட்டம், நீதித்துறையில் நம்பிக்கை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மக்களுக்கு நம்பிக்கை திரும்பி வரும்வரை சைலந்திரபாபு போன்ற போலிஸ் அதிகாரிகள் கொடுக்கும் நல்ல நோக்கம் கொண்ட என்கவுண்டர் அதிர்ச்சி வைத்தியங்கள் தேவை!

Anonymous said...

ஆஹா! செம உள்குத்து சார். ஆனால் மக்கள் இதை வரவேற்கக் காரணமே தாமதமான சட்ட நடைமுறை, அதிகார-பணபலத்தால் சட்டமும் தீர்ப்புகளும் மீறப்படுவதும் போன்றவையால்தானே?
- நிறைய மாற்றம் தேவை.
- ஜெகன்

Rex Arul said...
This comment has been removed by the author.
Rex Arul said...

நண்பர் ரவிச்சந்திரனின் கேள்விக்கு எனது 2 cents :-)

//எனக்கு ஒரு சந்தேகம்... இந்தியாவில் நீதித்துறை என்று ஒன்று இருக்கிறதா? இந்த நீதித்துறையால் உண்மையான குற்றவாளிகளுக்கு உரித்த நேரத்தில் தண்டனைகள் கிடைக்கிறதா?//

இந்தியாவில் நிச்சயமாக நீதித்துறை இருக்கின்றது. ஆனால், அது பிறப்பிக்கும் ஆணைகளை சரிவர அமலாக்கப்பட ஒரு அமைப்பு முறை என்பது இந்தியாவில் இல்லை. உச்ச நீதி மன்றமாகட்டும், உயர் நீதி மன்றங்கள் ஆகட்டும், அல்லது சாதாரண விசாரணை நீதிமன்றங்கள் ஆகட்டும், பிறப்பிக்கப்படும் ஆணைகளை அமலாக்கப் படுவது என்பது குதிரை கொம்பு தான்.

சமீபத்தில், ஒரு நண்பருடன் இங்கு அமெரிக்காவில் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய குழந்தையை அவர் மனைவி கடத்திக் கொண்டு போய் இந்தியாவில் சென்னை, கர்நாடக, பஞ்சாப் & ஹரியானா நீதிமன்றங்களுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துக்கொண்டு அந்தப் பெண்மணி அமெரிக்க நீதிமன்ற ஆணைகளையும் புறக்கணித்துக் கொண்டு இருக்க, இவர் உச்ச நீதிமன்ற உயர் நீதிபதிகளிடம், "அய்யா, இந்தியாவில், தங்களுடைய ஆணைகளையே தாங்கள் அமலாக்க இயலவில்லை என்றால், அத்தககைய ஆணைகள், tissue-paper க்கு சமம் ஆகிவிடும் அல்லவா? அத்தகைய ஆனைகளை மட்டும் வைத்து என்ன பயன்?" என்று சீற, Division-Bench உடனடியாக அவர் வழக்கில் CBI அமர்த்தி, "நமது ஆணைகளுக்கும் அங்கே அமேரிக்கா போல் அமலாக்கும் சக்தி உண்டு என்று காட்டுவோம். குழந்தையை கண்டெடுத்து அவரிடம் ஒப்படைத்து அவரை இந்த நீதிமன்றம் முன்னாடி இனி ஒரு தடவை வராத வண்ணம் பார்த்துக் கொள்வோம். இந்திய நீதி மன்ற ஆணைகள் அமெரிக்க ஆணைகளுக்கு சளைத்தது இல்லை என்று காட்டுவோம்" என்று சூளுரைத்து, அதற்கு தகுந்த வண்ணம் ஆணைகளைப் பிறப்பித்து பின்னர் அந்த குழந்தையோடு அவர் எங்கே அமேரிக்கா வந்து சேர்ந்த கதை எல்லாம் கேட்க வெகு சுவாரசியமாக இருந்தது. இங்கு நான் கூற வருவது என்ன என்றால், நீதிமன்றமோ அல்லது காவல் துறையோ மட்டும் இந்தியாவில் தனித்து குறை கூறுவதற்கு இல்லை. SYSTEM TO ENFORCE -- அமலாக்க ஒரு வித அமைப்பு சரி வர இல்லை. இருந்தாலும் அது செயல் படுவது இல்லை. இதுவே நமது சமுதாய மலட்டு தனத்திற்கு காரணம்.

In other words, this friend should not have argued before the Honorable Supreme Court Bench to point to them that despite their Orders, his wife was playing truant and if the Indian Government can't enforce the Honorable Supreme Court's own orders in its lands, then what worth is that order? Thankfully, the Justices were aroused to rope-in CBI to give teeth to their orders. In the US, it is just the opposite. ENFORCEMENT is considered to be sacrosanct. Even if a person has violated an ordinary traffic-stop ticket in any state, such tickets are enforced that any person will think twice of not paying traffic-tickets. And contempt of court? Forget it!!!

ஒரு முறை நான் "The Hindu" வில் அமெரிக்க ஜனாதிபதி தியோடோர் ரூசெவேல்ட் கூறியதை மேற்கோள் காட்டி இருந்தேன்: "No man is above the law and no man is below it; nor do we ask any man's permission when we require him to obey it. Obedience to the law is demanded as a right, not asked as a favour."

இந்நிலை எப்போது இந்தியாவில் வருகிறதோ, அது வரை, உங்கள் கேள்வி இருந்து கொண்டே இருக்கும்.

Rex Arul said...

அந்த division bench-ல் மேதகு நீதியரசர்கள் சவ்ஹான், லோதா, மற்றும் தருண் சட்டர்ஜி இருந்ததாக நினைவு.

Rex Arul said...

Prabhu Uncle - I would request once again that you add "Facebook" and/or "Twitter" Integration on your blog so that we can "share" your blog posting in Facebook and Twitter.

Also, you should consider having your Facebook account. The reach will be more due to "social-graph".

Sundararajan P said...

நல்ல பதிவு சார். என் ஃபேஸ்புக்கில் லிங்க் கொடுத்துள்ளேன்.

திங்கள் சத்யா said...

இது போலி என்கவுண்ட்டர் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளீர்கள். அனைவரும் படிக்கவேண்டிய அவசியமான கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

வரவனையான் said...

sabash sir ! well said

PRABHU RAJADURAI said...

கடந்த வருடம் வேறு ஒரு பதிவில் என்னுடைய பின்னூட்டம்...

http://india360degree.blogspot.com/2009/09/blog-post_12.html

"நடந்தது என்கௌண்டர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் இது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்"

முதல் வாக்கியம் சரியாக அமையவில்லை என்று நினைக்கிறேன். என்கவுண்டர் என்பது, காவலர்கள் சட்டம் தங்களுக்கு அனுமதியளித்த வகையில் ஒருவரை கொல்வது...எதிர்பாராத சூழ்நிலையில் நிகழகூடியது. திட்டமிட முடியாது. நாடகமாகவும் இருக்க முடியாது.

இர்ஷாத் வழக்கில் நடந்தது போலி என்கவுண்டர் என்கிறார்கள். பொலி என்கவுண்டர் என்பதற்கும் திட்டமிட்டு நடத்தப்படும் கொலைக்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது.

துரதிஷ்டவசமாக என்னுடைய கணிப்பில், பெரும்பான்மையானவை போலி என்கவுண்டர் எனப்படும் கொலைகளே!

முக்கியமாக், பிரச்னை என்கவுண்டரா, கொலையா என்பதுதானே தவிர கொலையுண்டவர் குற்றவாளியா சுத்தவாளியா என்பதல்ல...ஆனால் அந்த கருத்து என்கவுண்டர் குறித்த விவாதங்களில் முன்னிறுத்தப்படுவது துரதிஷ்டம்...

September 13, 2009 4:18 AM

Anonymous said...

ஆஹா! ரவி-யின் கேள்வியும் - ரெக்ஸ் அவர்களின் பதிலும் அற்புதம்.
வக்கீல் சாரிடம் நான் வெகு நாட்களாக கேட்க நினைத்த கேள்வியைத்தான் ரவி கேட்டுள்ளார்.


//நீதிமன்றமோ அல்லது காவல் துறையோ மட்டும் இந்தியாவில் தனித்து குறை கூறுவதற்கு இல்லை. SYSTEM TO ENFORCE -- அமலாக்க ஒரு வித அமைப்பு சரி வர இல்லை. இருந்தாலும் அது செயல் படுவது இல்லை. இதுவே நமது சமுதாய மலட்டு தனத்திற்கு காரணம்.//
ரெக்ஸ் உங்கள் பதில் மிகச்சரி. Implement செய்வதுதான் பிரச்னை.
பிரபு சார் இது குறித்து விரிவான அலசல் தருவார் என்று எதிர்பார்க்கிறேன்.

-ஜெகன்

Anonymous said...

////அவருடைய குழந்தையை அவர் மனைவி கடத்திக் கொண்டு போய் இந்தியாவில் சென்னை, கர்நாடக, பஞ்சாப் & ஹரியானா நீதிமன்றங்களுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துக்கொண்டு//
ரெக்ஸ் அருள்..
இந்த செய்தியை பலமுறை பரபரப்பாக படித்துள்ளேன். அதன் முடிவு இப்போதுதான் தெரிந்தது.
-ஜெகன்

Rex Arul said...

ஜெகன் அவர்கட்கு:

மிக்க நன்றி. என்னைப் போன்ற பொழுது போகாத (??) நீதிமன்ற வாசனையற்ற case-களை பாராட்ட ஒரு மனம் வேண்டும். அது உங்களுக்கு நிறையவே உள்ளது. மிக்க மகிழ்ச்சி. நன்றிகளும் பல. ENFORCEMENT IS THE PROBLEM IN INDIA, என்ற எமது கருத்தினை ஆமோதித்ததற்காக மிக்க நன்றி.

நீங்கள் விறுவிறுப்பாக படித்த அந்த செய்திக்கு உரியவர், டாக்டர் வி. ரவிச் சந்திரன். டெக்சாஸ் மாகாணத்தில் தற்சமயம் தனது மகனுடன் சவுக்கியமாக இருக்கின்றார். அவரும் எமது alma mater ஐ சார்ந்தவர் -- University of Florida, Gainesville. மிக சுவாரசியமான ஒரு மனிதர். எமது நண்பரும் கூட.

இவருடைய V.Ravi Chandran v. Union of India and Others பெற்றோர் குழந்தை கடத்தல் வழக்குகளில் ஒரு முன்னோடி. அருமையான Jurisprudence. சென்னை உயர் நீதிமன்றம் தொடங்கி, இவர் உச்ச நீதிமன்றம் வரை சென்று வெற்றிவாகை சூடி தற்சமயம் இது தொடர்பான விசயங்களில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் இவ்வகை குழந்தைகளை பெற்றோர்களே கடத்துவதை தடுக்கும் பொருட்டு ஒரு வித awareness ஐயும் தன்னால் முடிந்த வரை செய்து கொண்டு வருகின்றார். Visit www.rescueaditya.org

அவருடைய முன்னாள் மனைவியின் நிலைமை தான் அந்தோ பரிதாபம். 2 MS பட்டங்கள் அமெரிக்காவில் இருந்தும் என்ன பயன்? இந்தியாவிலேயே இருந்து கொண்டு தனது மகனை தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்வது தான் அவர் கண்ட பயன். அன்பர் டாக்டர் ரவி, தனது மகனிடம் இருந்து அம்மாவை பிரிக்க மனமில்லாமல், இப்படி குழந்தையை கடத்திக் கொண்டு சென்றாலும் அந்த அம்மையாரோடு பேச தாராளமாக அனுமதி தருகின்றார்.

Regardless of what it is, International Parental Abduction is a bane on the society. It is not a "custody" issue. It is one of ABUSE. Only those who lose a child to such subterfuge and trickery will know the pain of a LEFT-BEHIND-PARENT (ஆமாம். அது தான் அமெரிக்க வெளித்துறை அமைச்சகம் விட்டுப் போன பெற்றோருக்கு கொடுக்கும் title :-)).

No kid should be abducted. A kid needs both parents. Spouses can divorce; children cannot and should not divorce one or both parents.

It is a shame that India still has not signed the Hague Conventions, thereby undermining the International Will on this matter.

Worse, it has become a "safe haven" to such abductions. Next time, don't look any further: Even your own kid is not safe, if your spouse decides to snatch, pack, and go to Maldives, Japan, or Indonesia.

Take a look at my Op-Ed I published in this regard in the Atlanta Journal Constitution Newspaper, here in Atlanta: http://bit.ly/a9Q0Ac

Anonymous said...

மிக்க நன்றி ரெக்ஸ் அருள்.
-ஜெகன்

PRABHU RAJADURAI said...

2012 பிப்ரவரியில் சென்னையில் நடந்த மோதல் சாவு குறித்த பதிவு
http://marchoflaw.blogspot.in/2012/02/blog-post_26.html

Siva said...

சிந்தனையை தூண்டிய பதிவு. நீதிமன்றம் என்பது உண்மையை கண்டறியும் இடமா? அல்லது ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்கும் இடமா? தண்டனைகள் மட்டும் குற்றம் நடக்காமல் தடுக்கும் என நம்புவது எந்த அளவுக்கு நியாயமானது? குற்றம் நடக்க ஏதுவான காரணங்களை கண்டுபிடிப்பது தானே நீதி, மீண்டும் அக்குற்றம் நடைபெறாமல் இருப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவேண்டிய பொறுப்பு நீதி மன்றங்களுக்கு உண்டா?

Sivakumar said...

சிந்தனையை தூண்டிய பதிவு. நீதிமன்றம் என்பது உண்மையை கண்டறியும் இடமா? அல்லது ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்கும் இடமா? தண்டனைகள் மட்டும் குற்றம் நடக்காமல் தடுக்கும் என நம்புவது எந்த அளவுக்கு நியாயமானது? குற்றம் நடக்க ஏதுவான காரணங்களை கண்டுபிடிப்பது தானே நீதி, மீண்டும் அக்குற்றம் நடைபெறாமல் இருப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவேண்டிய பொறுப்பு நீதி மன்றங்களுக்கு உண்டா?

Sivakumar said...

சிந்தனையை தூண்டிய பதிவு. நீதிமன்றம் என்பது உண்மையை கண்டறியும் இடமா? அல்லது ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்கும் இடமா? தண்டனைகள் மட்டும் குற்றம் நடக்காமல் தடுக்கும் என நம்புவது எந்த அளவுக்கு நியாயமானது? குற்றம் நடக்க ஏதுவான காரணங்களை கண்டுபிடிப்பது தானே நீதி, மீண்டும் அக்குற்றம் நடைபெறாமல் இருப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவேண்டிய பொறுப்பு நீதி மன்றங்களுக்கு உண்டா?