24.12.07

மீண்டும் மீண்டும் மரணதண்டனை!



The mood and temper of the public with regard to the treatment of crime and criminals is one of the most unfailing tests of the civilizations of any country

-Winston Churchill


வின்ஸ்டன் சர்ச்சில் மீது எனக்கு பெரிய அளவில் மரியாதை ஏதும் இல்லையெனினும், தனது எண்ணங்களை சிறந்த முறையில் வெளியிடும் அவரது ஆற்றல் குறித்து வியப்பு கலந்த மதிப்பு உண்டு. கடந்த நூறு ஆண்டுகளில் தோன்றிய அரசியல் தலைவர்களில் புகழ் மிக்க communicatorகளாக விளங்கிய மிகச் சிலரில் அவரும் ஒருவர்.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில், சர்ச்சிலின் மேற்கண்ட ஆங்கில வரிகள் அலசப்பட்டது என்பது அவரது மேதமைக்கு ஒரு சான்று!

அவரது இந்த வாக்கியத்தினை பல்வேறு பரிமாணங்களில் பார்க்கலாம் என்றாலும், சமீபத்தில் மதறாஸ் உயர்நீதிமன்றத்தான் ‘தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில்’ உறுதி செய்யப்பட்ட தூக்குத் தண்டனையினை இந்த வரிகளால் எவ்வாறு அணுகுவது என்பதை அவரவர் யூகத்திற்கே விடுகிறேன்.



மரணதண்டனை குற்றங்களை விட குற்றவாளிகளின் தகுதி ஓரளவிற்கும், பாதிக்கப்பட்டவரின் தகுதி பெருமளவிற்கும் தீர்மானிப்பதாக மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் ஒரு வாதத்தினை எடுத்து வைக்கிறார்கள். எனக்கு உடனடியாக மனதில் தோன்றும் பில்லா, ரங்கா பின்னர் கல்கத்தாவில் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டவர் வழக்கிற்கும் தர்மபுரி வழக்கிற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.

தற்பொழுது உள்ள சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தண்டனை குறைக்கப்படும் வாய்ப்பு அதிகம். அதுதான், இறந்தவர்களுக்கு செலுத்தக்கூடிய பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

***

சில சமயங்களில், இப்பதிவுகளை படிக்கும் நண்பர்கள் தங்களது சந்தேகங்கள் குறித்து மின்னஞ்சல் அனுப்புவார்கள். அவ்வாறு கடந்த வாரம் மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை இங்கேயே தருகிறேன்.

கேள்வி : ஆயுள் தண்டனை என்பது ஆயுள் வரை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 31(அ) எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அப்படிப்பட்ட நபருக்கு 14 ஆண்டுகளுக்கு மேலான தண்டனை அளிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளதே?

பதில் : பிரிவு 31னை முழுவதும் படித்தால் இந்த குழப்பம் தீரும்.

ஒரே செயலில் பல குற்றங்கள் இணைந்து வரும். உதாரணமாக வெடிகுண்டு வீசி ஒருவரை காயப்படுத்தினால் கொலை முயற்சி குற்றமும் வரும். வெடிப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றமும் வரும். இரண்டிற்கும் தனித்தனி தண்டனை வழங்கப்படும். நீதிபதி நினைத்தான் இந்த தண்டனைகளை குற்றவாளி ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று கூற இயலும். ஆனால் அவ்வாறாக ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கையில் மொத்த தண்டனைக் காலம் 14 ஆண்டுகளுக்கு மிகக்கூடாது என்பதுதான் இந்தப் பிரிவு கூற வருவது.

ஆனால் ஆயுள் தண்டனையினைப் பொறுத்தவரை நீதிபதி கூறினாலும், கூறாவிட்டாலும் மற்ற தண்டனைகள் அதனுடன் சேர்ந்தே அனுபவிக்கப்படும். எனவே இந்தப் பிரிவு ஆயுள் தண்டனையினைப் பொருந்தவரை, பொறுத்தமற்றது.

***

மரணதண்டனைக்கேதுவான குற்றத்தினைப் புரிந்தவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் 14 ஆண்டுகளை சிறையில் கழிக்காமல் அவரது தண்டனைக் காலத்தை அரசு குறைக்க முடியாது என்று Cr.P.C. பிரிவு 433A கூறுகிறது.

ஆனால் சீர்திருத்தப்பள்ளிகளில் சேர்க்கப்படும் (Borstal School) சிறார்களுக்கு (Adolescents) (16 முதல் 21வயதுடையவர்கள்) இந்த விதி பொருந்துமா என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விவாதிக்கப்பட்டு தீர்ப்பினை எதிர்நோக்கியுள்ளார்கள்.

***

ஆண்டிப்பட்டி மலைபகுதியில் பழங்கால குகை ஓவியங்கள் உள்ளன என்று குமுதத்தில் ஒருவர் எழுதியதை வைத்து, நாங்களும் பளியர் ஒருவர் துணையுடன் சித்திரப்புடவு எனப்படும் புடவிற்கு சென்றால், ஓவியங்களை காணவில்லை. ஆனால், 500 மீட்டர் உயரமுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் அருமையான ஒரு நடைப்பயணம்!

முக்கியமாக எங்கள் பார்வையில் சிக்கிய படத்தில் நீங்கள் காணும் நபர்!!

மதுரை
24.12.07

5 comments:

கோவி.கண்ணன் said...

பிரபு சார்,

படம் சூப்பர்.

மரணதண்டனை குறித்து எனது பார்வையையும் எழுதி இருக்கிறேன்.
அரிசி புதுசுன்னாலும் அரைத்த மாவுதான்.

:)

மு. சுந்தரமூர்த்தி said...

Just for the information. The US State of New Jersey banned capital punishment last week. It is expected that other states may follow the suite.

Doctor Bruno said...

சமீபத்தில் குமுதம் இதழில் பாமரன் எழுதிய கட்டுரை.

ஒரு பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இருவர் சில வருடங்களுக்கு முன்னர் (காவல் நிலையத்தில்) ஒப்பு கொள்கிறார்கள்.

வழக்கு நடந்து வருகிறது. (என்ன தண்டனை என்பது நினைவு இல்லை)

ஒரு நாள் திடீரென அந்த பெண் தனது கனவருடன் வருகிறார் !!!!

ஒரு வேளை அந்த இருவரையும் தூக்கில் போட்டிருந்தால்.... நினைக்கவே பதறுகிறது.

PRABHU RAJADURAI said...

டாக்டர்,

மதுரையில் இவ்வாறு நடப்பது, இரண்டாவது முறை

Doctor Bruno said...

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு வருத்தம்.

மரண தண்டனை குறித்த விவாதங்கள் ஒரு வழக்கின் தண்டனை அறிவிக்கப்பட்டவுடன் துவங்குவதால், விவாதம் தண்டனை பற்றி அல்லாமல் அந்த வழக்கு பற்றியே நடக்கிறது.

இதில் பிரச்சனை என்னவென்றால் மரணதன்டனை குறித்த கருத்து வழக்கு குறித்த கருத்தாகவே (மக்களால் மற்றும் ஊடகங்களால்) பார்க்கப்படுகிறது.