Showing posts with label layoff. Show all posts
Showing posts with label layoff. Show all posts

16.2.08

ஐடி நிறுவனமென்றால், ஆண்டையா?

சந்தோஷ் பக்கங்கள்’ என்ற வலைப்பதிவில், ஐய்டி நிறுவன ஊழியர்களை தடாலடியாக வேலையிலிருந்து நீக்குவது பற்றி விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்வினையாக எழுத விரும்பிதை இங்கு தனிப்பதிவாக...

முக்கியமாக கருத்து தெரிவித்த பலரும், ஐய்டி ஊழியர்களுக்கு ஏதும் சட்டப் பாதுகாப்பு இல்லை என்பது போலவே எழுதியிருக்கிறார்கள். சட்டத்தின் நான்கு மூலைகளுக்கும் உள்ளாக கொண்டு வர முடியாமல் எந்த ஒரு செயலும் இங்கு இல்லை. ஆண்டை - அடிமை சமுதாயத்தில்தான் பிடிக்காத வேலையாளை தூக்கி எறிவதெல்லாம், நியாயம். சனநாயக, மக்கள் நலன் பேணும் (welfare) நாட்டில் அல்ல!

ஐய்டி நிறுவன ஊழியர்களுக்கும் அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ‘Shops and Establishment Act’ அளிக்கும் பாதுகாப்பு உண்டு. எனவே போதிய காரணமின்றி (reasonable cause) யாரையும் வேலையிலிருந்து நீக்க இயலாது. ஆனால், போதிய காரணம் என்பதை தற்போதய தாரளமயமாக்கல் சூழலில், நீதிமன்றங்கள் பரந்த அளவில் நோக்கலாம். ஏன், திறமையின்மை கூட போதிய காரணமாகலாம்.

எவ்வளவு தூரம், இது நியாயமான செயலாக இருக்க முடியும்? மேற்கூறிய விவாதத்தில் கூறப்பட்ட இரு கருத்துகளின் மீதான எனது கருத்துகளை தெரிவிப்பதும், பயனளிக்கலாம்.

***

பின்னூட்டங்களில் ‘வேலையில் சேரும் பொழுது, நிறுவனம் விரும்பிய வரையில் (at will) வேலை பார்க்க சம்மதிக்கிறேன் என்று கூறி விட்டு பின்னர் வருத்தப்படலாமா’ என்று ஒரு கேள்வி வைக்கப்படுகிறது. (ஸ்ரீதர் நாராயணன்)

முன்பு ஒருமுறை இந்திய கிரிக்கட் வாரியம், மேற்கிந்திய தீவுகளை நமது அணியினை அனுப்பியது. விளையாட்டு தொடர் முடிந்ததும், சில வீரர்கள் வாரியத்தின் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றனர். பின்னர் அவர்கள் மீது வாரியம் நடவடிக்கை எடுத்த பொழுது, பாதிக்கப்பட்ட வீரர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர்.

‘தொடர் முடிந்ததும் வீரர்கள் நேரடியாக இந்தியா திரும்ப வேண்டும்’ என்ற ஒப்பந்தத்தினை வீரர்கள் மீறியதாக, வாரியம் வாதிடுகையில், உச்ச நீதிமன்றம், ‘இந்திய கிரிக்கட் அணியில் இடம் பெற வேண்டுமென்றால், ஒரு கையை கூட வெட்டிக் கொடுக்க தயாராக பலர் உள்ள நிலையில், உங்களது எந்த ஒரு ஷரத்திற்கும் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திட்டிருக்கும் நிலையில், அதனை ஏற்றுக் கொள்ள இயலாது’ என்று கூறியது.

ஒரு ஒப்பந்தம் இருப்பதால் மட்டுமே அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் (Indian Contract Act) பிரிவுகளுக்கு ஒப்ப அமைய வேண்டும். தார்மீக நியதிகளுக்கு எதிரான ஒப்பந்த (unconscionable and unreasonable) ஷரத்துகள் நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை, முக்கியமாக ஒப்பந்தமிடும் நபர்கள் சமநிலையில் (equal negotiating position) இல்லாது இருக்கையில்!

***

அடுத்த கருத்து ‘இன்று தரமில்லாதவர்களை சேர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது எந்த நிறுவனத்திலும் நடக்காத விஷயம்’ என்பது (இலவச கொத்தனார்)

சரிதான், ஆனால் பிரச்னை, தரமில்லாதவர்களை சேர்த்துக் கொள்ளவதல்ல. மாறாக சேர்த்துக் கொண்ட பின்னர் நீக்குவதில். இதிலுள்ள நியாயம், குழந்தை பிறக்கும் வரை பேசாமல் இருந்து விட்டு, பின்னர் ஊனமாயிருக்கிறதென்று கொன்று விடுவதில் உள்ள நியாயமே!

அப்படியெனில், ஒரு வேலையாளின் தரத்தினை கூட சரியாக வேலையில் அமர்த்தும் முன் சோதிக்கத் தெரியாத முதலாளியின் (employer) திறமையின்மைக்கு என்ன தண்டனை? இத்தனைக்கும், நேர்காணலுக்குப் பிறகு புரேபஷன் காலம் (probation period) கூட உள்ளது.

முதலாளியின் உத்தரவாதத்தினை நம்பி, வேலைக்கு சேர்ந்து, புரேபஷன் காலத்தையும் முடிக்கும் ஒரு வேலையாள் தன்னைச் சுற்றி ஒரு குடும்பத்தினை உருவாக்குகிறார். அதில் ஒரு குழந்தை இருக்கும். அது பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும். குடும்பத்தலைவர் வேறு குற்றம் ஏதும் புரியாத பொழுதிலுமா, அந்தக் குழந்தை தண்டிக்கப்பட வேண்டும்.

எனவேதான் ‘திறமையின்மை’யினை மட்டும் காரணம் காட்டி ஒருவரை வேலையிலிருந்து நீக்குவது சட்டத்திற்கு புறம்பான ஒரு செயலாகவே கருதப்பட வேண்டும்.

முதலில் நிறுவனம் என்பது அதன் முதலாளிக்கு மட்டுமே சொந்தமான ஒரு சொத்தாக கருதுவது தவறு. ஒரு தொழில் நிறுவனத்திற்கு அரசு பல்வேறு சலுகைகளை அளிக்கிறது. முதலீட்டில் வங்கிகளும் பங்கெடுக்கின்றன. அனைத்து வேலையாட்களின் கூட்டு முயற்சியிலேயே, நிறுவனம் கட்டமைக்கப்படுகிறது. நிறுவன லாபமானது, எதிர்பாராத வகையில் ஏற்ப்படும் நட்டங்களையும் கணக்கிட்டே நிர்ணயிக்கப்படுகிறது. நட்டமானது, நிர்வாகிகளின் தவறான ஒரு முடிவினாலும் வரலாம். வேலையாள் ஒருவரின் திறமை குறைவதோ, உடல், மன ரீதியிலான குறைபாடு தோன்றுவதோ இவ்வகையிலான நட்டம்தான். ஆனால் அவரது திறமைக்கு ஏற்ற வேலையினை அளித்து, அனைவரோடு அவரையும் முன்னெடுத்துச் செல்வதுதான் நியாயமாக இருக்க முடியும்.

ஏறக்குறைய பலர் சேர்ந்து ஒருவரின் இழப்பினை ஈடு செய்யும் காப்பீடு (Insurance) போன்றதுதான், நான் கூறுவது.

நான் கூறுவதில் நியாயமில்லையெனில், வேறு வகையில் சிந்திந்துப் பாருங்கள். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மனதிலோ உடலிலோ ஊனமேற்ப்படுகையில் மற்றவர்கள், ‘இனி இவரால் பயனில்லை’ என்று அவரை விரட்டி விடுவதும் நியாயம்தானே!

‘liberalisation with human face’ என்பது பின்னர் என்னவாம்?

மதுரை
16.02.08