23.7.06

வயதுக்கு வரவில்லை...

1974ம் வருடம் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபைக்கான ஆறு இடங்களுக்கு தேர்தல் நடந்தது. எட்டு நபர்கள் போட்டியிட்டனர். தேர்ந்தெடுக்கப்படாத நபர்களில் ஒரு ஓட்டு கூட வாங்காத ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதாவது ஆறு நபர்களில் ஒரு நபருக்கு முப்பது வயது பூர்த்தியாகவில்லை என்று.

வெற்றி பெற்றவர் கூறினார், 'எனது ஆரம்பப் பள்ளியிலிருந்து சட்டப்படிப்பு வரைக்குமான அனைத்து சான்றிதழ்களிலும் எனது பிறந்த தினம் 1946ம் வருடம் மே மாதம் பதினாலாம் என்று இருப்பது உண்மைதான். நானும் கூட அப்படித்தான் நினைத்து வந்தேன். ஆனல் சில காலம் முன்பு எனது கிராம மக்களோடு ஒரு பிரச்னை குறித்து விவாதித்துக் கொண்டிருக்கையில் சிலர் எனது சமுதாயம் சார்பாக நான் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று கூறினர். நான் 'விரைவில் ராஜ்யசபை தேர்தல் வருகிறது. ஆனால் எனக்கு முப்பது வயது பூர்த்தியாகவில்லையே என்று கூறினேன்'. உடனே அருகிலிருந்த என் அண்ணன், 'என்ன உளறுகிறாய். நீ பிறந்த வருடம் 1943 என்று கூறினார். அடுத்த நாள் நாங்கள் எங்களது தேவாலயத்தில் உள்ள ஞானஸ்னான பதிவேட்டினை பார்த்தால் எனக்கு 1943ம் வருடமே ஞானஸ்னானம் கொடுக்கப்பட்டதாக இருக்கிறது. பின்னர் நான் அந்த ஆதாரத்தின்படி சென்னையிலுள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் வாக்காளர் பட்டியலில் எனது வயதினை மாற்றும்படி மனுச்செய்து எனது சரியான பிறந்த வருடமான 1943ம் வருடம் பதியப்பட்டது. எனவே நான் பிறந்த வருடம் 1943. எனக்கு முப்பது வயது பூர்த்தியாகி விட்டது' என்று கூறினார்.

அவரது ஊரிலுள்ள அரசு பிறப்பு-இறப்பு பதிவேட்டினை நீதிமன்ற அழைப்பாணையின் பேரில் வரவழைக்க முயன்றும் முடியவில்லை. தொலைந்து விட்டது எனபதுதான் பதில். அவர் அப்போதைய ஆளும் கட்சியை சார்ந்தவர் என்பதை கூற வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட தேவாலயத்தின் பாதிரி ஞானஸ்னான பதிவேட்டுடன் வந்தார். ஆனால், கொண்டு வந்த பதிவேடோ அசல் அல்ல. கேட்டால், அசல் மிகவும் பழையதாகிவிட்டதால் அதனை புதிய பதிவேட்டில் நகலெடுத்து அசலை எரித்து விட்டதாக கூறினார். இவ்வாறு தேவாலய பதிவினை அழிப்பது இறைவிதி 777 (இது என்ன நம்பரோ?) க்கு முரணான புனிதமற்ற கொடுஞ்செயல் எனக்கூறப்பட்டது. இதற்காக அந்தப் பாதிரியாரை 'உண்மைக்கு எதிராகவும், கிறிஸ்தவத்துக்கு எதிராகவும் கீழ்மையாக நடந்து கொண்டுள்ளார்' என்று கடுமையான வார்த்தைகளால் சென்னை உயர்நீதிமன்றம் சாடியது. இது போதாதென்று, 1943ம் வருடம் அதே தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து, 'அவர் பிறந்து ஏழு நாட்களுக்குள் ஞானஸ்னானம் கொடுத்த ஞாபகம் இருப்பதாக' சாட்சி சொல்ல வைத்தார். நல்லவேளை தள்ளாத வயது காரணமாக அவர் நீதி மன்றத்தின் கண்டனங்களில் இருந்து தப்பித்தார். கடைசியில் பதவி பறி போனது. மனிதர் உச்ச நீதிமன்றம் சென்றார். அங்கும் தோல்விதான்....

வயது மட்டுமே அவருக்கு தகுதிக்குறைவு. மற்றபடி தனது சொல்லாட்சியாலும், பரந்த படிப்பறிவாலும் பாராளுமன்ற உறுப்பினராக தகுதி வாய்ந்த அவர் வேறு யாருமில்லை. கலைஞருக்கும், எம்ஜிருக்கும், ஏன் ஒரு காலத்தில் ஜெயலலிதாவிற்கும் பிடித்தமானவராக இருந்த 'இந்த நாள் இனிய நாள்' புகழ் வலம்புரி ஜான்தான் அப்படி பதவியிழந்தவர்....

(வேறு ஒரு வழக்கில் பத்தொன்பது வயதே நிரம்பியவர் என்று தெரிந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்ற காரணத்தாலேயே, பஞ்சாயத்து தேர்தலில் ஜெயித்து அதன் தலைவராகவும் 1970 வருடம் சேலத்தில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டது....உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது)

No comments: