21.7.06

தேவர் மகனும் பெயிலும்...

குடியரசு தினத்தை (26/01/2004) பெரும்பாலான தமிழர்களைப் போலவே சன் டிவியில் 'தேவர் மகன்' பார்த்து கொண்டாடினேன். ஏற்கனவே பார்த்த படமென்றாலும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படம். முக்கியமாக, எனது எட்டு வயது மகளுக்கும் புரியக் கூடிய எளிய, சுவராசியமான திரைக்கதை என்பதால் இடையில் எங்கும் கவனம் சிதறாமல் பார்த்து முடித்தேன். மகள் பல தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி!

முதல் மரியாதை பார்த்த பொழுது, 'ஆஹா சிவாஜிக்கு தேசிய விருது அளிப்பதற்கு இந்திய அரசுக்கான கடைசி வாய்ப்பு' என நினைத்தேன். இன்று தேவர் மகன் பார்க்கையில், 'அடடா, அடுத்த வாய்ப்பையும் அரசு நழுவ விட்டதே' என்று நினைத்தேன். என் கணிப்பில் தேவர் மகனின் மூலமான 'காட் பாதரில்' இதே வேடத்தில் நடித்த மார்லன் பிராண்டோவிற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது என நினைக்கிறேன். அமைதியாவின் பிராண்டோவின் நடிப்பிற்கு இணையான உணர்ச்சிகரமான நடிப்பு சிவாஜியின் நடிப்பு! சிறு உதாரணம் கூற வேண்டுமென்றால், ஊருக்கு புறப்படும் மகனின் காதலி காலில் விழுந்து வணங்கப் போகையில், காலை ஆட்டியபடியே உட்கார்ந்திருக்கும் சிவாஜி படீரென ஆனால் அதிகம் வெளித்தெரியாமல் காலை விலக்கியபடியே...'ம்ம்ம்ம்' என்று அதனை ஏற்றுக்கொள்வது போல ஏற்றுக் கொள்ளாத ஒரு உடல் அசைவு போதும். நஷ்டம் இந்திய அரசுக்குதான்...

படத்தின் ஒரு காட்சியில் ஏரிக்கரை வெடி வைத்து உடைக்கப்படுகிறது. பல வீடுகள் நாசம்! ஒரு குழந்தை இறந்து போகிறது!! வெடி வைத்ததில் ஒருவனைப் பிடித்து காவலரிடம் ஒப்படைக்கிறார் கமல். அவன் தான் மட்டுமே வெடி வைத்ததாக கூறுகிறான். வெடி வைக்க சொன்ன நாசர் ஒரு வக்கீலுடன் காவல் நிலையத்துக்கு வந்து பிடிபட்டவனை 'பெயிலில் (பிணையில்) எடுக்க வந்திருப்பதாக கூறுகிறார். காவலர் பெயில் தர முடியாது என்கிறார். வக்கீல், 'ஏன் நான் - பெயிலபிள்' (non bailable) என இழுக்க காவலர், 'இல்ல குற்றத்தை ஒப்புக் கொண்டான்' என்கிறார். வக்கீல் 'குற்றத்தை ஒப்புக் கொண்டாயா...போச்சு' என்கிறார்.

முதலில் நடந்தது கொலைக்குற்றம் அதுவும் வெடிப்பொருள் சம்பந்தப்பட்டது. தடாவோ பொடாவோ நிலுவையிலிருந்தால் அதற்கு கீழும் வரும். எப்படியினும் கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவரை காவலர் பிணையில் (bail) விட இயலாது. எந்த ஒரு வக்கீலும் இவ்வாறாக கொலைக்குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வேண்டி காவலர் நிலையத்தை அணுக மாட்டார்கள். அடுத்து ஆயுள் தண்டனைக்கேதுவான குற்றம் இல்லாதிருப்பின் சில சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டவரை பிணையில் விட காவலருக்கு சட்டப்படி அதிகாரமிருப்பினும் நடைமுறையில் இப்படி நிகழுவது சாத்தியமில்லை. காவலர்கள் ஏன் சிறு குற்றங்களை விசாரிக்கும் மாஜிஸ்டிரேட்டுகளே பெரிய குற்றங்கள் நிகழ்ந்திருப்பின் அதிகாரமிருப்பினும் பிணையில் விடுவதில்லை. அதற்காக அமர்வு நீதிமன்றங்களை (sessions court) அணுக வேண்டும். மிக மிகச் சிறிதான பப்ளிக் நியூசன்ஸ், போக்குவரத்து விதி மீறல்கள் போன்ற வழக்குகளில்தான் காவலர்கள் தாங்களாகவே, அதுவும் குற்றத்திற்கு தண்டனையான அபராதத் தொகையினை பிணைத் தொகையாக கட்டிய பிறகுதான் பிணையில் விடுவர். இதற்காக வக்கீல் யாரும் தேவையில்லை. பிணையில் விடுவது என்பது நடைமுறையில் நீதிமன்றங்களின் பணியே தவிர திரைப்படங்களில் காட்டப்படுவது போல காவல் நிலையத்தில் நடக்கும் நிகழ்வல்ல.

எனவே 'தேவர் மகனில்' குற்றத்தை ஒப்புக் கொண்டான் என்று காவலர் கூறும் காரணத்தை விட 'இது கொலைக்கேஸ்' என்ற காரணம் பொருத்தமாக இருக்கும். ஆனால், திரைக்கதையில் பிடிபட்டவன் 'குற்றத்தை ஒத்துக் கொண்டான்' என்று கூறப்படுவது தேவையாக இருக்கிறது. அடுத்து வளரும் வசனங்கள் அதையொட்டி அமையும். என்றாலும்...கொலைக்கேஸ் என்று காவலர் கூறுவதோடு, 'குற்றத்தையும் ஒப்புக்கொண்டான்' என்றும் கூறுவதாக அமைத்திருக்கலாம். பொதுவாக அனைத்து கொலை வழக்குகளிலும் இந்த 'குற்றத்தை ஒப்புக் கொள்தல்' உண்டு! ஆனாலும் அவர்களை பிணையில் விடுவதுமுண்டு!!

பின்னர் ஏதாவது சந்தர்ப்பத்தில் அதைப் பற்றி....அதற்குப் பதிலாக ஒரு கொசுறுத் தகவல்.

பிணையில் விடப்படுபவருக்கு இரு நபர்கள் ஜாமீன் (surety) கொடுக்க வேண்டியிருக்கும். அதாவது இத்தனை ரூபாய்க்கு ஜாமீன் என்று உத்தரவிடுவார்கள். தெரிந்தவர்கள் யாராவது கைது செய்யப்படுகையில் ஜாமீன் கொடுக்க தயங்காதீர்கள். ஏனெனில், பிணையில் விடப்பட்டவர் தப்பித்துச் சென்றால் ஜாமீன் கொடுத்தவரை பிடித்து உள்ளே போட மாட்டார்கள். அவர் ஜாமீன் கொடுத்த தொகையை அபராதமாக கட்டச் சொல்வார்கள். அவ்வளவுதான். எனவே ஜாமீன் தொகையைப் பொறுத்து ஜாமீன் கொடுக்க சம்மதிக்கலாம்.

2 comments:

சிறில் அலெக்ஸ் said...

நல்ல தகவல்கள் . நீங்க மறுமொழி மட்டுறத்தல் செய்யலன்னு நினைக்கிறேன். அதச் செஞ்ச்சீங்கன்னா இன்னும் அதிகம்பேர் உங்க பதிவுகளப் பார்க்கலாம்.

Comment Modertation.

இதப்பத்தி தமிழ்மண உதவி பக்கங்களைப் பார்க்கலாம். இல்லைன்ன எனக்கு cvalex at yahoo
மடல் அனுப்புங்க சொல்றேன்.

Nakkiran said...

Please do "Marumozhi matturuthal.. so that your post can be visible at thamizmanam for longer time...

Your blog is so informative.. i feel very bad that i have missed this for long time..

This is because, i havent seen your blog in thamizmanam often..

Please do "Marumozhi matturuthal" to help many people by providing the opportunity to read your posts...