3.7.06

அந்தரங்கம் புனிதமானது - 1

உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் மணல் கோபுரங்கள் போல பொலபொலவென விழுந்து மறைந்ததற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மக்களால் மறக்க முடியாத ஒரு தொலைக்காட்சி நிகழ்வு, ‘பல்லாயிரக்கணக்கான மக்களின் சாவுக்கு காரணமான கொடூரன்’ என்று வர்ணிக்கப்படும் சதாம் ஹ¥சைன், ‘கையும் களவுமாக மாட்டிய நம்ம ஊர் சாமியார்கள்’ போன்ற அப்பாவித்தனமான முகபாவனையுடன் அமெரிக்க ராணுவ மருத்துவர்களின் மரபணு சோதனைக்கு தன்னை உட்படுத்திய காட்சியாகத்தான் இருக்க முடியும்.

சதாமின் இன்றைய தகுதி என்ன? அவரை இனி என்ன செய்வது என்பது அமெரிக்காவின் கவலை...பிபிசி போன்ற தொலைக்காட்சிகளில் பதில் சொல்வதற்காக அழைக்கப்படும் சர்வதேச சட்ட வல்லுஞர்களின் கவலை. எவ்வித படைபலமும் இல்லாமல் தனியாளாக மாட்டிக் கொண்ட சதாமை பற்றி உங்களுக்கும் எனக்கும் எவ்வித கவலையும் இருக்கப்போவதில்லை. னால், இத்தனை சட்ட சிக்கல்களுக்கு மத்தியில் இவ்வாறு ஒரு மனிதனை மருத்துவ பரிசோதனைக்கு அவரது அனுமதி இன்றி உட்படுத்துவதும் அதை உலகமெல்லாம் பார்க்கும் வண்ணம் படமாகக் காட்டுவதும் சட்டநெறியின்பாற்பட்டதா என்ற ஒரு கேள்வி எழுகிறது. சதாம் அனுமதியளித்தாரா இல்லையா என்பதல்ல பிரச்னை. நான் பொதுவாக கூறுகிறேன்.

குற்றவாளி என்று கருதப்படும் ஒருவர் அனுமதியின்றி அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும், அவ்வாறு தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும் மனிதனை படமெடுத்து உலகமெல்லாம் காட்டுவது என்பது நாகரீகமான செயலாக எனக்கு தெரியவில்லை. அமெரிக்கா தனது வீரர்களின் இறந்த உடல்களை படமாக காட்டக்கூடாது என்று கூறியதில் இருக்கும் நியாயம் சதாமுக்கும் பொருந்தும். தர்மம், நியாயங்களை தவிர்த்துப் பார்த்தாலும் ‘இவ்வாறு படமாகக் காட்டியது அமெரிக்க அரசின் நோக்கம் பிடிபட்டவர் சதாம்தான் என்ற சாட்சியை பெறுவதற்காக அல்ல, மாறாக கெட்ட நோக்கம் (malafide act) கொண்டது’ என்ற வகையில் சட்டத்திற்கு புறம்பானது என வாதிடலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் என்று ஒரு பிரிவு உண்டு. இப்பிரிவு அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் ‘பில் ஆஃப் ரைட்ஸ்’ என்ற பகுதியில் இருந்து உருவியது. அடிப்படை உரிமைகளின் முக்கியமான உரிமை ‘வாழ்வதற்கான உரிமை’ (right to life). இந்த வாழ்வது என்பது ‘கவுரவமான வாழ்க்கை’. எந்தவிதமான அத்தியாவசிய தேவையுமில்லாத நிலையில் ஒரு மனிதனை இவ்விதமாக அரசே படமெடுத்து வெளிடுவது அவனது கவுரவமான வாழ்க்கை வாழும் அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்று இந்தியாவில் வாதிட்டால் அதனை நமது நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

அடுத்தது, ஒரு மனிதனை அவனது அனுமதியின்றி மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதில் உள்ள மனித உரிமைப் பிரச்னை. மனித உரிமை என்பது ஒரு பலூன் போல. ஒன்றுமேயில்லாமல் தொய்ந்து போய்க்கிடக்கும் அதை ஊதி அப்படியே நமது தேவைக்கு ஏற்ப பெரிதாக்கலாம். பின்னர் தேவையானால் கொஞ்சம் காற்றை இறக்கி சிறிதாக்கலாம். வேண்டுமென்றால் ஒரு ஊசியால் குத்தி ஒரேடியாக வெடித்துப் போகச் செய்யலாம். மக்களாட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ நாட்டின் தேவைக்கேற்ப ஆட்சியாளர்கள் இந்தப் பலூனை ஊதுவர் இல்லை உடைப்பர். எனவே, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் அரசும் நீதித்துறையும் இந்த மருத்துவ சோதனையிலுள்ள மனித உரிமைப் பிரச்னையை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகையில் அணுகுகின்றனர்.

குடிமக்களை இவ்வாறு மரபணு சோதனைக்கு உட்படுத்தி அதைப் பற்றிய விபரங்களை சேகரித்து வைக்கலாம் என்று பல நாடுகள், முக்கியமாக வளர்ந்த நாடுகள் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன. பொதுவாக அரசாங்கங்களுக்கு பொதுமக்களின் விபரங்களை தனது கைப்பிடியில் வைத்திருக்க வேண்டுமென்பது தணியாத ஆசை...அரசாங்கம் என்ன நண்பர்கள் பலர் நடத்தும் வலைப்பதிவுகளுக்கு சென்றாலே, ‘என்ன, உன்னோட வண்டவாளத்தையெல்லாம் நானே வச்சுக்கவா?’ என்று கேட்கிறார்கள். எனினும் அவசரத்தேவை ஏதுமில்லாத பொழுது கட்டாயப்படுத்தி பொதுமக்களிடம் மரபணு சோதனை நடத்தி விபரங்கள் சேமிப்பது சம்பந்தமாக சட்டமியற்றுவது கடினம்.

அடுத்தது அவசரத் தேவை. அதாவது 1997ம் வருடம் நியூசிலாந்தில் தொடர்ந்து வன்புணர்சியில் ஈடுபட்டு வந்த ஒரு மவோரி இனத்தை சேர்ந்த இளைஞனை காவலர்கள் தேடினர். அதற்காக 20லிருந்து 40 வயது வரையிலான மவோரி இன இளைஞர்களை மரபணு சோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளுமாறு காவலர்கள் வேண்டினர். “சோதனை முடிவுகள் வேறு எந்த ஒரு காரியத்திற்காகவும் உபயோகப்படுத்தப்படாது, பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் முன்னிலையிலேயே அழிக்கப்படும்” என்று உறுதியளித்தனர். பலர் சோதனைக்கு முன் வந்தனர். சிலர் தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர். முடிவில் காவலர்கள் தங்களது வார்த்தையை காப்பாற்றாமல் சோதனை முடிவுகளை தங்களது சேமிப்பில் வைக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக வன்புணர்ச்சி வழக்குகளில் இதே மாதிரி பிரச்னை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் எழுந்துள்ளது. சோதனைக்கு முன் வருவது கட்டாயமில்லை என்று அறிவித்தாலும் ‘சோதனைக்கு முன் வராதவர்கள் மேல் உடனடியாக சந்தேகப் பார்வைகள் விழுவதே’ அவர்களை மறைமுகமாக கட்டாயப்படுத்தும் ஒரு செயல் என்று கூறப்படுகிறது. ஆனால் பயங்கரவாதம் உலகமெங்கும் தனது கரங்களைப் நீட்ட மனித உரிமைகளை தூக்கிப் பிடித்த நாடுகளும், நீதிமன்றங்களும் ‘விஞ்ஞானத்தின் பலன் நமக்கு கிடைக்கையில் அதை பயன்படுத்துவதில் தவறில்லை’ என்று இதுவரை தாங்கள் கொண்டிருந்த நிலையினை தளர்த்தி பொதுக் கருத்தோடு இசைந்து முடிவெடுக்க விழைந்துள்ளன. அமெரிக்காவில் சில மாநிலங்களிலும் உலகின் பல நாடுகளிலும் புதிய சட்டப்பிரிவுகளும் ஏற்படுத்தப்படுவதாக அறிகிறேன்.

இந்நிலையில் அமெரிக்க ராணுவம் சதாம் ஹ¥சைனின் பல்லை சோதித்தால் என்ன? அல்லது உடைத்தால்தான் என்ன? ஜியார்ஜ் புஷ் உலக வர்த்தக கட்டிட இடிபாடுகள் மீது நின்று ‘நாம் புகையடித்து அவர்களைப் பிடிப்போம்’ என்று எக்காளமிட்ட வார்த்தைகளை அமெரிக்க ராணுவம் சதாம் இருந்ததக ஒரு துளையைக் காட்டி நிறைவேற்றியுள்ளது...அது போதும்.
தொடரும்...

2 comments:

aaradhana said...

சரியாக சொன்னீர்கள் அய்யா. நன்றி

Anonymous said...

இந்தப் பதிவை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி

http://www.desipundit.com/2006/07/04/anthrangam/