17.1.08

அலங்காநல்லூர் சல்லிக்கட்டு படங்கள்

அலங்காநல்லூரில் இன்று சல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை வீர விளையாட்டு என்பதை விட திறமை விளையாட்டு (game of skill) என்பது வீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என்று விளையாட்டினை பார்த்த எனக்கு தோன்றியது.

மாட்டினை அணையும் தூரம் சில அடிகளே! மாட்டிற்கு துன்புறுத்துதல் என்பது இல்லை. மாட்டினை அடித்தலோ வாலைப்பிடித்து இழுத்தலோ இல்லை. இழுத்த இரு வீரர்கள் உடனடியாக அகற்றப்பட்டனர். வாலைப்பிடித்து இழுத்தல் அணையும் வீரர் மாட்டிலிருந்து அகல வசதியாகவே செய்யப்படினும்.

முக்கியமாக வீரர்களுக்கிடையேயான புரிந்துணர்வு மற்றும் தோழமை எந்த ஒரு விளையாட்டிலும் காணமுடியாதவை...அது பற்றி விரிவாக எழுத வேண்டும்.

இப்போதைக்கு நான் கூற விரும்புவது, பதிவர்கள் எழுதிய பல விடயங்கள் இந்த வழக்கினை மேலெடுத்துச் செல்ல உதவும். உதாரணமாக, சுந்தர் கூறிய தற்காப்பு பேட் கட்டிக்கொள்வது. இந்த வழக்கில் யாரும் இதுவரை சிந்திக்காத ஒரு விடயம். அந்த யோசனைக்கு நன்றி....உச்ச நீதிமன்றத்தில் எனது பதில் மனுவில் இந்த யோசனையை தெரிவிக்கப்போகிறேன். நன்றி!

மதுரை
17.01.08



ATOP THE TREE TO SEE SALLIKATTU TO SEE BIGGER IMAGE CLICK THE PITCURE


FROM VADIVASAL INTO THE ARENA


ACTION IN THE ARENA


A FEW INCHES MORE TO VICTORY


HOWZAAT!


DEFEAT AND VICTORY


THE WINNER TAKES IT ALL


A CHALLENGE...


...ACCEPTED


FIREBALL


BRAVING THE SKY TILL THE END TO WITNESS THE VALOR - CHIVALRY OR IDIOCY

16.1.08

சக் தே! பில்லா மற்றும் சில படங்கள்...


Big Temple, Thanjavur


ஷோலேயைத் தவிர வேறு எந்த ஹிந்திப்படமும் எனக்குப் பிடித்ததில்லை பார்ப்பதிலும் விருப்பம் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தேன், ராம் கோபால் வர்மாவின் ‘சத்யா’ (Satya) பார்க்கும் வரை!

இத்தனைக்கும் நான் ‘சத்யா’ கேபிள் இணைப்பில் மோசமான ஒலித்தரத்துடன் பார்த்தேன். ஆனாலும் இரண்டு மூன்று நாட்களுக்கு என்னை சத்யா நினைவுகள் துரத்தியடித்ததற்கு முக்கிய காரணம், அதன் தெளிவான திரைக்கதை, திரைத் தொகுப்பு...முக்கியமாக அதன் யதார்த்தம்!

மும்பையில் எனது முதல் நாள் அனுபவம், சத்யாவின் முதல் நாள் அனுபவத்தை ஒத்திருந்ததும் ஒரு காரணம். தேவையற்ற இரு பாடல்களை எடுத்துவிட்டால்...ஹாலிவுட்டின் காட் பாதர் படத்திற்கு இணையான ஒரு படம்.

சமீபத்தில் நான் பார்த்த பிளாக் ஃபிரைடே (Black Friday) ஓரளவிற்கு சத்யா அனுபவத்தினை கொடுத்தது. மும்பை குண்டு வெடிப்புகளுக்குப் பின்னர் நடைபெற்ற புலன் விசாரணையைப் பற்றி எவ்வித பாரபட்சமும் இன்றி, எடுக்கப்பட்ட சுவராசியமான ஒரு படம். ஏறக்குறைய ஆவணப்படம் என்றாலும், விறுவிறுப்பில் எந்த ஒரு திரில்லர் ரக படத்திற்கும் குறைவில்லாதது. ஸ்பீல்பெர்க்கின் மியூனிக் (Munich) படம் போன்றதொரு முயற்சி.

சத்யா பெருவெற்றி பெற்றது என்றாலும், பிளாக் ஃபிரைடே என்னவாயிற்று என்று தெரியவில்லை.


***

பிளாக் ஃபிரைடே பற்றி எழுதுவதற்குள்ளாக மற்றுமொரு படம் நேற்று முன்தினம் பார்த்த ‘சக் தே இந்தியா’ (Chak De India)

ஷாருக் கான், இந்திய ஹாக்கி அணியின் தலைவர். உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக பெனால்டி அடியில் கோட்டை விட்டு ‘துரோகி’ என்று பட்டம் சூட்டப்பட்டு, ஹாக்கி உலகிலிருந்தே துரத்தப்படுகிறார். ஏழு வருடங்கள் கழித்து எப்படி இந்திய பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக முன் வந்து அதனை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் வெற்றி பெறச் செய்கிறார் என்பதுதான் கதை!

படத்தில் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள்...

ஷாருக் கான் படம் முழுக்க மடித்து விட்ட கைகளுடன் கூடிய வெள்ளை நிற முழுக்கை சட்டையில் படம் முழுவதும் வருவது.

நம்மவர்களுக்கு எரிச்சலூட்டும் அவரது வழக்கமான ஏதோ குளிரில் நடுங்குவன் போல பேசும் பாணியை கைவிட்டு சாதாரணமாக பேசியிருப்பது.

உணர்ச்சியில் பொங்கி, ஓவர் ஆக்டிங் செய்யக்கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்தும் அவ்வாறு செய்யாமல் அமைதியாகவும், ஆழமாகவும் நடித்திருப்பது. இத்தாலி உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் பெக்கென்பர் (beckenbauer) இருந்த அளவிற்கு இறுக்கமாக இல்லையெனினும், தேவைப்படும் அளவிற்கே உணர்ச்சி காட்டியிருப்பது.

முதலில் ஷாருக் கான் விளையாடுவதாக காட்டப்படும் காட்சிகள் தவிர மற்ற அனைத்து ஹாக்கி காட்சிகளையும் மிகவும் உண்மைத்தன்மையுடன் (authentic) அமைத்திருப்பது.

காதல், கத்தரிக்காய் என்று எதுவுமில்லாததால், கதையின் ஓட்டத்தையே குலைக்கும் டூயட் என்ற அருவருப்பு இல்லாமலிருப்பது. ஆயினும் இரு பாடல்களை பின்னணியில் இணைத்து சிறிது சமசரசம் செய்யப்பட்டுள்ளது.

சந்தர்ப்பம் இருந்தும் தேசபக்தியை தூண்டாமலிருந்தது. இறுதியில் கொடியைத் தூக்கிக் கொண்டு கூட யாரும் ஓடுவது போன்று காட்டாத தைரியம்.

முக்கியமாக, மிகவும் முக்கியமாக இப்படிப்பட்ட வித்தியாசமான திரைக்கதையினை கையாண்ட இயக்குஞர், தயாரிப்பாளரின் துணிச்சல்.

படத்தில் உருத்திய விடயம் ஒன்றுதான். கிரிக்கெட்டில் இந்தியா தோற்றால் ‘ஒழிஞ்சுது சனியன்’ என்று மகிழும் எனக்கே, கிரிக்கட் மட்டையுடன் தாக்க வருபவரை தடுத்து ‘பின்னிருந்து அடிப்பது கோழைகளின் செயல்’ என்று ஷாருக் சொல்வது. மற்றும் காதலராக வரும் கிரிக்கட் வீரரை இறுதியில் சிறுமைப்படுத்தியிருப்பது. ஆயினும் இயல்பான கோபம்தானே! சரி, வயிற்றெரிச்சல் என விட்டு விடலாம்.

இயல்பான முகங்கள், சாதாரண உடைகள். பார்ப்பது ஹிந்திப்படம்தானா என்ற ஆச்சரியத்தினை ஏற்படுத்திய இவ்வித முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.


***

சக் தே பார்த்த பாவத்திற்காக நேற்று குழந்தைகளுடன் ‘பில்லா’ பார்த்து புண்ணியம் தேடிக் கொண்டேன். குட்டிப் பெண் ஒரு வாரமாக ‘பிக் டிவி’யில் (Big TV) சினிமா பார்க்க வேண்டும் என்று வேண்டியதால், சரி போவோமே என்று திருமணமான புதிதில் எடுத்த ‘குருதிப்புனல்’ முயற்சிக்கு பின்னர் மீண்டும் மனைவியுடனான, தமிழ்ப்பட முயற்சி.

கஷ்டம் அனுபவிக்கும் சில நேரங்களில் ‘அப்படியே செத்துப் போய் விட மாட்டோமா’ என்றிருக்குமே அந்த எண்ணம் நேற்று வந்தது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை செவியில் ‘இனிமே இங்க வருவியா, வருவியா’ என்று கேட்பது மாதிரி தொடர்ந்து அறைய படத்தில் நடி(ட)க்கும் அனைவரும் சிக்கென்ற உடையில் இறுதி வரை ஸ்லே மோஷனில் நடந்து கொண்டே இருந்தார்கள்.

தமிழில் இது ஹிட் படமாம்.

முன்பு ரஜினியின் பில்லாவை ‘துக்ளக்’கில் மூளையைக் கழற்றி பக்கத்தில் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டிய படம் என்று விமர்சனம் எழுதி பாலாஜியிடம் வசமாக வாங்கிக் கட்டினார்கள். நான் தயாராக இல்லை!


***

‘பில்லா! இது இவனது சொந்தப் பெயரா?’ என்று படத்தில் ஒருமுறை குழம்புகிறார்கள். பில்லா, எண்பதுகளில் பிரபலமான ஒரு கிரிமினல். பில்லாவும் அவரது கூட்டாளியான ரங்கா என்பவரும் பணத்திற்காக இளம் வயது பெண்ணையும் அவரது சகோதரரையும் கடத்திச் சென்று கொன்றதற்காக தூக்கிலிடப்பட்டனர். பில்லி (பூனை) என்ற ஹிந்தி வார்த்தையிலிருந்தே இவருக்கு பில்லா என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது.

பில்லாவின் வெற்றிக்குப் பின்னர் ரஜினிகாந்த் பின்னர் ரங்கா என்ற பெயரிலும் ஒரு படத்தில் நடித்தார்.


Big Temple, Tanjore

பில்லாவை மோசமான ஒரு நடிப்புடன் பிரபு துரத்துவதை விட வேட்டையாடு விளையாடு கமலை அனுப்பியிருந்தால் இந்திய பீனல் கோடு பற்றிய பயம் இல்லாமல், ‘பொட்’ ‘பொட்’ என போட்டுத் தள்ளியிருப்பார். அந்தளவுக்கு பயங்கரமான கிரிமினல் கொலைகளை செய்கிறார் சூப்பிரண்டண்ட் ஆப் போலீஸ் ராகவன். ஆனாலும் கடைசியில் எவ்வித தண்டனையுமின்றி ஜோதிகாவை கல்யாணம் செய்கிறார்.

வேடிக்கை என்னவென்றால், இறுதியில் பல காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி என்று எழுத்து போடுகின்றனர்.

நன்றிக்குண்டானவர்கள் நெளிந்திருப்பார்களோ?

***

இல்லை என்கிறார் சாமி விக்ரம். நேற்று அவரது பட பேட்டியில் சாமி பட காட்சியினை காட்டினார்கள். ஊர்வலத்தை சமாளிக்க கத்தி, கபடாவுடன் இறங்குகிறார். படத்தைப் பார்த்து காவலதிகாரிகள் பாராட்டினார்கள் என்று கூறினார்.

நமது காவல்துறையை கேவலப்படுத்த வீரப்பன் தேவையில்லை...இரண்டு மூன்று தமிழ்ப் படங்கள் போதும்.

பில்லாவில் அதுதான் ஆறுதலிக்கும் விடயம். மலேசிய போலீஸை கேவலப்படுத்தியிருப்பார்கள்.


மதுரை
16.01.08


படத்திற்கும் பதிவிற்கும் சம்பந்தமில்லை...நம்ம பதிவில் நாம எடுத்த படத்தைத்தானே போடணும்

14.1.08

சல்லிக்கட்டு வழக்கும் நானும்!

இன்று தமிழகத்தின் முக்கிய செய்திகளில் ஒன்றாக அலசப்படும் சல்லிக்கட்டு வழக்கு, கடந்த 2006ம் ஆண்டு மாட்டு வண்டிப் பந்தயத்திற்கு (Rekla Race) அனுமதி கிடையாது என்று காவல்துறை வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் தொடங்கியது.

தொண்ணூறுகளில் கோவாவில், சூதாட்டத்திற்காக மாடுகளை மோதவிட்டு நடைபெறும் காளை சண்டையினை (bull fight) எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதனை தடை செய்து மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை உத்தரவிட்டிருந்ததை, சுற்றறிக்கைக்கு காரணமாக கூறப்பட்டிருந்தது.

இதனால் தமது கோவில் குடமுழுக்கு விழாவில் நடத்த உத்தேசித்திருந்த மாட்டு வண்டி பந்தயத்திற்கு அனுமதி வேண்டி, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்த கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவர் நமது உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையினை அணுகினார். வழக்கினை விசாரித்த நீதிபதி.பானுமதி விலங்குகள் பால் அன்பு கொண்டவர். விலங்குகள் குறித்தான சட்டங்களைப் பொறுத்து மேனகா காந்தி அவர்கள் தொகுத்துள்ள புத்தகம் ஒன்றினை துணைக்கு வைத்துக் கொண்டு மாட்டு வண்டிப் பந்தயம் என்ன சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் விலங்குகளை துன்புறுத்தும் அனைத்து வகையான போட்டிகளையும் அரசு தடை செய்ய மார்ச்’2006ல் உத்தரவிட்டார்.

ஆனால், இந்த வழக்கில் நீதிபதி தான் வழங்கும் தீர்ப்பானது ஏறக்குறைய பொதுநல வழக்கினை ஒத்திருப்பதாக உணரவில்லை. அவ்வாறு உணர்ந்திருந்தால், வழக்கினை அதன் முக்கியத்துவம் கருதி ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியினை வேண்டியிருப்பார். மேலும், இதே போன்றதொரு வழக்கில் மற்றொரு நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டதை நீதிபதி அறிந்திருந்தும், அதற்கு எதிர்மாறான தீர்ப்பினை அளித்தது சட்டப்படி சரியல்ல. அவ்வாறான நிலைமையிலும் அவர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நீதிபதிகளால் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்றே கூறியிருக்க வேண்டும்.

முக்கியமாக, அரசு தரப்பு எவ்வித வாதத்தினையும் வைக்காத நிலையிலும் மனுதார் தரப்பிலும் பெரிய அளவில் எவ்வித வாதமும் புரியப்படாத நிலையிலும், வழக்கின் எல்லைகளை மீறி, நீதிபதி ஏறக்குறைய தனது சொந்த எண்ணங்களை தீர்ப்பாக எழுதியது எவ்வளவு தூரம் சரியென்று தெரியவில்லை.

a judge is entitled to have his own opinion on an issue before him but the same will become a judgment only if the same is placed before the court and tested by an adverse opinion’ என்று பின்னர் இரு நீதிபதிகள் முன் நடந்த வாதத்தில், இதனை மனதில் வைத்தே நான் குறிப்பிட்டேன்.

***

2006 டிசம்பர் வரை தூங்கிய பிரச்னை, பொங்கல் நெருங்கவும் விழித்தது. சல்லிக்கட்டு நடத்தும் பலரும் அனுமதி வேண்டி பொதுநல வழக்காக இரு நீதிபதிகள் முன்பு வழக்கு தாக்கல் செய்ய, அலங்காநல்லூருக்காக நானும் ஒரு வழக்கு தாக்கல் செய்தேன். இதே வேளையில் சம்பந்தப்பட்ட மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்த அரசு, சல்லிக்கட்டு நடத்த வேண்டி தானும் உதவ முன் வந்தது. இந்தக் கால கட்டம் வரை சல்லிக்கட்டு என்பது, நீதிபதிகள், வழக்குரைஞர்கள் அனைவராலும் எதிர்மறை உணர்விலேயே அணுகப்பட்டு, சல்லிக்கட்டினை நீதிமன்றத்தினால் அனுமதிக்கவே முடியாது எண்ணமே இருந்தது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல!

ஆயினும் இவ்வித பின்வாங்கும் (defensive) எண்ணத்தினை கைவிட்டு முன்னேறும் (offensive) எண்ணத்தினை என்னுள் விதைத்தது, சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் எனது நண்பரின் ஊரில் நான் பார்த்த சல்லிக்கட்டும், ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவலும்.

***

முதன் முதலில் சல்லிக்கட்டினை பார்த்த எனக்கு ‘இவ்வளவுதானா’ என்றிந்தது. சல்லிக்கட்டானது திரைப்படங்களாலும், ஊடகங்களாலும் காட்டப்படும் வகையில் மாட்டின் கொம்பினைப் பிடித்து அதனை சாய்ப்பதல்ல...யதார்த்தமாக திரைப்படம் எடுப்பதாக கூறப்படும் கமல்ஹாசனின் விருமாண்டி படத்திலேயே அவர் மாட்டினை அடக்கும் காட்சி நகைப்பிற்குரியதாக இருக்கும்.

மாறாக திட்டி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் மாடானது சுமார் 30 முதல் 50 அடி அகலமுள்ள மைதானம் வழியாக ஓட வேண்டும். அவ்வாறு ஓடும் மாட்டின் கொம்பினை ஒரு கையாலும், திமிலை மற்றொரு கையாலும் அணைத்துப் பிடித்தவாறு மாடுபிடி வீரர் குறிப்பிட்ட தூரம் (சுமார் 50 அடி) ஓட வேண்டும். இதனை அணைவது என்கிறார்கள்.

பொதுவாக மாட்டின் கொம்பில் பரிசினை கட்டுவதில்லை. திட்டி வாசலிலேயே அறிவிப்பாளரின் கையில் மாட்டிற்கான பரிசானது கொடுக்கப்படும். மாட்டினை அணைந்த வீரர் திரும்பி ஓடி வந்து பரிசினை பெற்றுக் கொள்கிறார். பல சமயங்கள் மாட்டினை அணைய முடியாது. அப்பொழுது மாடு வென்றதாக அறிவிக்கப்பட்டு பரிசு மாட்டின் உரிமையாளரிடம் கொடுக்கப்படும்.

சில மாடுகள் ஓடாமல், சடக்கென திரும்பி ‘வா ஒரு கை பார்க்கலாம்’ என்றவாறு திரும்பி நிற்கும். அப்பொழுது மட்டுமே விளையாட்டு சூடு பிடிக்கும்.

இந்த சமயத்தில்தான் ‘கோபல்ல கிராமம்’ நாவலில் ஒரு இடத்தில் தங்களது கிராமத்தினை ஏற்ப்படுத்திய பின்னர், நாயக்கர்கள் காடுகளில் திரியும் மாடுகளை பிடித்து வர வாலிபர்களை அனுப்புவார்கள் என்று படித்தது நினைவுக்கு வந்தது. ஆக, அணைவது என்பது மாட்டினை பிடித்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதானே தவிர காளையோடு சண்டையிடுவது அல்ல என்று அனுமானித்தேன்

***

இதற்குப் பின்னர் வழக்கினை எடுத்துச் செல்வது சிரமமாக இருக்கவில்லை. விரைவில் பொங்கல் வருவதால், வழக்கினை இடைக்கால உத்தரவிற்காக நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அரசும் நிலைமையின் தீவிரம் கருதி விளக்கமாக, எங்களது மனுவினை ஒட்டி மேலும் பல தகவல்களுடன் தனது எதிர்மனுவினை தாக்கல் செய்திருந்தது.

எங்களது வழக்குகளோடு, சல்லிக்கட்டினை படம் வரையப் போய் மாட்டினால் குத்தப்பட்டு இறந்து போன ஒரு ஒவியரின் தந்தை இதனை தடை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. திடீரென, விலங்குகள் நல வாரியம் (Animal Welfare Board) வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு, மடிக்கணணி, புகைப்படங்கள், பத்திரிக்கைச் செய்திகள் முதலியவற்றுடன் சல்லிக்கட்டினை தடை செய்ய வேண்டும் என்று கோரியது. அவற்றை பரிசீலிக்கும் எவருக்கும் ‘ஆஹா இத்தனை ரத்தம் சிந்துதலா’ என்று இருக்கும்.

***

விலங்குகள் நல வாரியத்தின் வாதம், ‘ சல்லிக்கட்டிற்காக மாடுகள் சாராயம் கொடுக்கப்பட்டும், மிளகாய் பொடி தூவப்பட்டும், வால்கள் முறுக்கப்பட்டும் வெறியேற்றப்படுகின்றன. திட்டிவாசலில் இருந்து கிளம்பும் மாடும் உதைக்கப்பட்டும் அடிக்கப்பட்டும், வால்கள் பிடித்து இழுக்கப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றன. எனவே, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் (The Prevention of Cruelty to Animals Act’1960) பிரிவு 11 (a) மீறப்படுகிறது என்பதாகும். அந்தப் பிரிவு கூறுவதாவது...
If any person beats, kicks, over-rides, over-drives, over-loads, tortures or otherwise treats any animal so as to subject it to unnecessary pain or suffering or causes or being the owner permits any animals to be so treated........he shall be punishable

***

எங்களது தரப்பு வாதம் அரசின் வாதத்தை ஒட்டியே அமைந்திருந்தது. எத்தனையோ நூற்றாண்டுகளாக எங்கள் கலாச்சாராத்தோடு ஒட்டியுள்ள இந்தப் போட்டியினை முழுவதுமாக தடை செய்வது தேவையற்றது. ஆதிகாலத்தில் மாடுகளை தன்னுடன் இசைந்து வாழும் நோக்கத்துடன், அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறமையினை வெளிப்படுத்தும் ஒரு போட்டியானது, இன்று மனிதர்களை காவு வாங்கும் ஒரு வருடாந்திர நிகழ்ச்சியாக போனது உண்மைதான். ஆனால் அரசு மட்டும் மனது வைத்தால், தகுந்த கட்டமைப்பு வசதிகளை (infrastructure facility) ஏற்ப்படுத்தி தர முன் வந்தால் தமிழர்களின் நாகரீகத்தினையும், கலாச்சாரத்தினையும் பறைசாற்றும் ஒரு நிகழ்ச்சியாக உலகின் முன் வைக்க முடியும்.

‘பலரும் நினைப்பது போல சல்லிக்கட்டில் உயிரிழப்பவர்கள், பெரும்பாலும் பங்குபெரும் வீரர்கள் அல்ல. வீரர்கள் மாடுகளோடு பழகி தகுந்த பயிற்சி பெற்றவர்கள். மாட்டின் கொம்பிலிருந்து தப்பிக்கும் லாவகம் அறிந்தவர்கள். போட்டி நடைபெறும் இடத்திற்கும் பார்வையாளர்களுக்கும் இடைவெளி ஏதும் கிடையாது என்பதால் பார்வையாளர்களே பெரும்பாலும் குத்தப்படுகிறார்கள். இவ்வாறாக மைதானத்திற்குள் குவிபவர்கள், ஜாலிக்காக சரக்கடித்து வரும் கிராமத்து இளைஞர்கள். இவர்களே பய உணர்வு ஏதும் இன்று மாடுகளின் மீது விழுபவர்கள். இவர்களை விலக்கி, மாடுபிடி வீரர்களுக்கு தகுந்த மைதானத்தினை ஏற்ப்படுத்திக் கொடுத்தால் உயிரிழப்புகளை தவிர்ப்பது இயலும்’

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம் 2007 பொங்கலை ஒட்டி சல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுத்தது. எங்களது வாதத்தினை ஒட்டி பார்வையாளர்களுக்கு தடுப்புச் சுவர் (barricade) கட்டப்பட்டது. இதனால் கடந்தமுறை அலங்காநல்லூரில் உயிரிழப்பு ஏதும் இல்லை. போட்டியாளர்களுக்கு தனி உடை வழங்கப்பட்டது. ஆயினும், இதுவும் போதாது என்பது எனது எண்ணம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் முறை வைத்து போட்டியாளர்களை அனுமதிக்கலாம். ஏனெனில் அதிகமாக போட்டியாளர்கள் இருப்பதும் குழப்பம் விளைவிக்கிறது.

***

எங்களது முக்கியமான மற்றொரு வாதம், ‘சல்லிக்கட்டு அதன் உண்மையான வடிவில் நடத்தப்பட்டால், உலகில் விலங்குகள் சம்பந்தப்படுத்தி மனிதன் நடத்தும் அனைத்து போட்டிகளிலும் நாகரீகமிக்கது’ என்பதாகும்.

‘குறிப்பாக, காளைகள் சம்பந்தப்படுத்தி நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் காளைகள் கொல்லப்படுகின்றன அல்லது காயப்படுத்தப்படுகின்றன. ஸ்பெயினில் மனிதர்களை குறுகலான சந்துகள் வழியாக காளைகள் துரத்தும் போட்டிகளிலேயே சிமிண்ட் தரையில் ஓடுவதால் காளைகள் விழுந்து கால்களை முறித்துக் கொள்கின்றன.

ஆனால், சல்லிக்கட்டின் இன்றைய நிலையிலேயே காளைகளுக்கு காயம்படுவதில்லை. காளைகளுக்கு சாராயம் கொடுப்பதும், துன்புறுத்தி தயார்ப்படுத்துவதும் மாடுகளை தகுந்த மருத்துவரின் சோதனைகளுக்கு உட்படுத்துவதன் மூலம் தடுக்க முடியும். குதிரைப் போட்டிகளில், குதிரைகளுக்கு ஸ்டெராய்ட் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சியும் நடந்ததே!

மற்றபடி போட்டியாளர்கள் மட்டுமே மைதானத்தில் அனுமதிக்கப்படுகையில் மற்ற அடித்தல், உதைத்தல் மாட்டின் மீது கும்பலாக பாய்ந்து அமுக்குதல் அனைத்தையும் தடுப்பது சுலபம். விதிகளை மீறி மாட்டினை பிடிக்கும் வீரர்களை வெளியேற்றலாம்.

மாட்டினை அணைவதும், விலங்குகளை துன்புறுத்துதல் என்று கூறமுடியுமா? சட்டமே தேவையற்ற வலி என்றுதானே கூறுகிறது.’.

இதற்கு பதிலளித்த விலங்குகள் நல வாரிய வழக்குரைஞர், ‘துன்புறுத்துதல் (cruelty) என்பது ஒரு விலங்கானது தனது இயற்கையான சூழலில் செய்யாத ஒரு செயலை செய்ய வைப்பது’ என்றார். போனவாரம் நான் சந்தித்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்களும் ‘எந்த மாடு தன்னை இவ்வாறு திட்டிவாசலில் இருந்து ஓட வைப்பதை விரும்பும்?’ என்றார்.

அன்று நான் ‘எந்த நாய் தன்னை ரிப்பன் கட்டி அலங்கரிக்க விரும்புகிறது. எந்த குதிரை தன் மீது ஒரு மனிதன் அமர்ந்திருக்க ஓட விரும்புகிறது. ஏன், The Performing Animals (Registration) Rules’2000 பந்தயத்தில் ஒரு குதிரையினை எட்டு முறை அடிக்கலாம் (whip) என்று அனுமதிக்கிறதே, அது துன்புறுத்துதல் இல்லையா? விலங்கு நல வாரியம் வேண்டுமானால் நகரங்களுக்கு சென்று குதிரைப் பந்தயம், நாய்க்காட்சி போன்றவற்றை நிறுத்தட்டுமே பார்க்கலாம்’ என்றேன்.

வருந்த வைத்த ஒரு விஷயம், விலங்கு நல வாரிய வழக்குரைஞரிடம் இருந்து உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்காக வாதாடிய வழக்குரைஞர் வரை, சல்லிக்கட்டில் மத உரிமை அடங்கியுள்ளதை ஒத்துக் கொள்ளவே மாட்டோம் என்பதுதான்.

‘சல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று கீதையிலும் சொல்லவில்லை, பைபிளிலும் சொல்லவில்லை, குரானிலும் சொல்லவில்லை’ என்று மதுரையில் வாதிடப்பட்டதுதான் வேடிக்கை!

***

ஒரு நாள் முழுவதும் வாதங்களை கேட்ட நீதிபதிகள் 2007ம் வருடம் சல்லிக்கட்டினை அனுமதித்து இடைக்கால அனுமதி வழங்கினர். பின்னர் இறுதி விசாரணையிலும் அதே வாதமே புரியப்பட்டது. நீதிபதிகள் சல்லிக்கட்டின் தற்பொழுதைய நிலையில் துன்புறுத்துதல் இருப்பது உண்மைதான் எனினும், இதனை கட்டுப்படுத்த இயலும் என்று கூறி இதற்கான விதிமுறைகளை வகுக்க அரசினை பணித்தது. வழக்கம் போல இதனை கிடப்பில் போட்ட அரசு இன்று.... உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு (review) மனு தாக்கல் செய்து கொண்டு ஒரு அதிசயம் நிகழுமா என்று பார்த்தவாறு இருக்கிறது. தீர்ப்பின்படி அரசு விதிகளை வகுத்திருந்தால், இன்று அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் ஏற்ப்பட்டிருக்காது.

***

யாரும் எதிர்ப்பார்க்கவில்லை, வாரியம் உச்ச நீதிமன்றம் செல்லும் என! ஆனால், அவர்கள் இப்படி செய்திருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட யாரையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல் அரசினையும், சல்லிகட்டு வேண்டாம் என்று கூறியவரையும் மட்டுமே சேர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மேல் முறையீடு! அதில் ஒரு எக்ஸ்பார்ட்டி இடைக்கால தடை!!

எனவே வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளவே சம்பந்தப்பட்டவர்கள் ஒரு மனு தாக்கல் செய்ய வேண்டி வர, அரசு மட்டுமே தடையை நீக்க மனு செய்ய வேண்டிய நிலை!

சல்லிக்கட்டின் வரலாற்றினை எடுத்து வைக்க யாரும் இன்றி, ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று தலைமை நீதிபதி கூற என்னுடன் வந்த அலங்காநல்லூர் நண்பர் கொதித்துப் போனார். மீண்டும், இத்தனை நபர்கள் இறந்து போனார்கள் என்ற தகவல் மட்டுமே வைக்கப்பட தடையை நீக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். கவனமாக வளர்த்த மரம் சடாரென வெட்டப்பட்டது போல உணர்ந்தோம்.

இனி, இறுதி விசாரணையில் மட்டுமே, சல்லிக்கட்டினை ஒரு முறையான போட்டியாக மாற்றி, அதன் பாரம்பரியத்தினை காப்பாற்ற இயலும் என்ற வாதத்தினை நீதிபதிகள் புரியும் வண்ணம் வைத்தல் இயலும்.

வேடிக்கை, வழக்கின் முடிவில் திடீரென தலமை நீதிபதி, ‘வேண்டுமானால், மாட்டு வண்டி பந்தயம் நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறி வழக்கில் சம்பந்தமே இல்லாத ரேக்ளா பந்தயத்திற்கு ஒரு வரியில் அனுமதி கொடுத்து விட்டார்.

உண்மையில் ரேக்ளா பந்தயத்தில், மாடு படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அங்கே மேனகா காந்தி தீர்ப்பினைப் பார்த்து பொறுமிக் கொண்டிருக்கிறார்.

ரேக்ளா பந்தயத்தின் முடிவில் மாடுகள் நாக்கு தள்ளிப் போய், மரணத்தை எட்டிப் பார்த்து திரும்புகின்றன. மஞ்சுவிரட்டில், மாடுகளை ஊருக்குள் அவிழ்த்து விட்டு அவற்றை வாலிபர்கள் துரத்துகிறார்கள். துரத்துபவர்கள் களைப்படைந்தால், வேறு குழு தொடர்ந்து துரத்தும். இங்கும் மாடு முழுமையாக களைப்படைந்து, கடுமையான துன்பம் அனுபவிக்கும்...

ஆனால் சல்லிக்கட்டினை திறமையை வெளிப்படுத்தும் ஒரு கிராமப் போட்டியாக உருவாக இயலும் என்பது எனது தனிப்பட்ட கருத்தும் கூட!

மதுரை
14.01.08


விலங்கு ஆர்வலர்களுக்கு மேனகா காந்தியின் பின் செல்லும் ஆபத்து புரியவில்லை. மும்பையில் இருக்கையில் குஜராத்தி அமைப்பு ஒன்றின் விருதினை மேனகா அவர்கள் பெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிட்டது. மேனகா தனது பேச்சின் நடுவே, ‘பசுவின் பாலைக் குடிப்பது அதன் இரத்தத்தை அருந்துவது போன்றது. நான் எனது மகனுக்கு இதுவரை பசும் பாலோ, பால் பொருட்களோ கொடுத்ததேயில்லை’ என்றார்

அமுல் மாநிலத்தவர்களுக்கு மயக்கமே வந்து விட்டது!

30.12.07

மேலும் கேள்விகள், ஆங்கிலத்தில்



கடந்த பதிவில் கேள்வி கேட்டிருந்த நண்பர் மேலும் சில கேள்விகளை கேட்டிருந்தார். ஒரு ஆவணமாக இருக்கட்டுமே என்று எனது பதிவிலியே பதில்களை தருகிறேன்.

சுவராசியமாக ஏதும் இருக்காது, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலையுச்சியிலுள்ள முதலியார் ஊத்து என்ற இடத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தை தவிர...


Question : Is the photographs/video taken using Mobile phones/Digital
cameras are accepted by Indian evidence act?

Answer : Indian Evidence Act deals with photographs as Secondary Evidence. It can be accepted as evidence, subjecting the person who took the photograph to examination. However it is to be shown that the picture is foolproof or otherwise it would not be relied by the Court. I don’t think any court would believe a digital photo, as the same could be manipulated easily.

I saw in Trichy, a Traffic Police clicking the number plates of the bikes, violating red signal.

I read in newspaper that in Pramod Mahajan's case, an expert using a laptop and net connection demonstrated before the court that it was even possible to tamper with the sms messages stored in a cellphone.

***


Question :As per Cr. P.C - Sec 39, it is defining the sections of offences of IPC, for a public can give information to police. IPC sec 159-160 offence of affray) is not there. So a public cannot inform to police, if he saw an affray. Am I right?

Answer : Kindly read the section again. Section 39 makes it compulsory for every person to give information. That does not mean you cannot give information regarding the commission of the offences not listed therein.

In respect of those offences listed in Section 39 you are legally bound to give information. Hence failure to give information will attract the offence defined under Section 202 of IPC.

***


Question : As per Cr. P.C - Sec 43, any private person may arrest or cause to be arrested any person who in his presence commits a non-bailable and cognizable offence. So no private person (X) can make a private arrest of a person (Y), if he (Y) commits an offence of affray (IPC-160) which is bailable and cognizable . Am I right?

Answer : For a private person to effect arrest, the offence must have been both cognizable and non bailable. Since affray is bailable offence, private person cannot effect arrest.

Madurai

301207



பயணம் 1 - வேட்டங்குடி


Vettangudi Birds Sanctuary

மதுரை - மேலூர் - திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். அதிக அளவில் பிரபலமாகாத இந்த சரணாலயத்திற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு இருநாட்களுக்கு முன்பு போனது நல்ல அனுபவம்.

பறவைகளைப் பார்ப்பதற்கு வசதியாக உயரமான கண்காணிப்பு கோபுரம் உள்ளது. சரணாலயத்தை ஒட்டி உள்ள குடியிருப்பினை விட வேறு மனித இடையூருகள் இருக்காது. பறவைகளுக்கு தொந்தரவு என, கிராம மக்களும் தீபாவளிக்கு வெடி கூட வெடிப்பதில்லை.


Rest in Nest

மதுரை மேலூர் 30கி.மீ. பின்னர் மேலூரிலிருந்து சுமார் 25கி.மீ ரம்மியமான சாலையில் பயணம் செய்தால், வேட்டங்குடி வந்துவிடும். ஆனால், வழியில் ரொட்டித்துண்டினை பாதியாக வெட்டியது போன்று குன்றுகளை அறுத்து கிரானைட் கற்பாளங்களாக மாற்றுவதை காணும் அவலத்தினை தவிர்க்க இயலாது!



Ascent

கடைகள் ஏதும் இல்லை என்பதால், உணவுப் பொருட்களும், தண்ணீரும் கொண்டு செல்வது நல்லது. பிளாஸ்டிக் தவிர்க்க இயலாது எனில், கையுடன் திரும்பக் கொண்டு வந்து விடவும்.


Descent

படங்களை பெரிதாக பார்க்க, படத்தின் மீது க்ளிக்கவும்!

24.12.07

மீண்டும் மீண்டும் மரணதண்டனை!



The mood and temper of the public with regard to the treatment of crime and criminals is one of the most unfailing tests of the civilizations of any country

-Winston Churchill


வின்ஸ்டன் சர்ச்சில் மீது எனக்கு பெரிய அளவில் மரியாதை ஏதும் இல்லையெனினும், தனது எண்ணங்களை சிறந்த முறையில் வெளியிடும் அவரது ஆற்றல் குறித்து வியப்பு கலந்த மதிப்பு உண்டு. கடந்த நூறு ஆண்டுகளில் தோன்றிய அரசியல் தலைவர்களில் புகழ் மிக்க communicatorகளாக விளங்கிய மிகச் சிலரில் அவரும் ஒருவர்.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில், சர்ச்சிலின் மேற்கண்ட ஆங்கில வரிகள் அலசப்பட்டது என்பது அவரது மேதமைக்கு ஒரு சான்று!

அவரது இந்த வாக்கியத்தினை பல்வேறு பரிமாணங்களில் பார்க்கலாம் என்றாலும், சமீபத்தில் மதறாஸ் உயர்நீதிமன்றத்தான் ‘தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில்’ உறுதி செய்யப்பட்ட தூக்குத் தண்டனையினை இந்த வரிகளால் எவ்வாறு அணுகுவது என்பதை அவரவர் யூகத்திற்கே விடுகிறேன்.



மரணதண்டனை குற்றங்களை விட குற்றவாளிகளின் தகுதி ஓரளவிற்கும், பாதிக்கப்பட்டவரின் தகுதி பெருமளவிற்கும் தீர்மானிப்பதாக மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் ஒரு வாதத்தினை எடுத்து வைக்கிறார்கள். எனக்கு உடனடியாக மனதில் தோன்றும் பில்லா, ரங்கா பின்னர் கல்கத்தாவில் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டவர் வழக்கிற்கும் தர்மபுரி வழக்கிற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.

தற்பொழுது உள்ள சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தண்டனை குறைக்கப்படும் வாய்ப்பு அதிகம். அதுதான், இறந்தவர்களுக்கு செலுத்தக்கூடிய பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

***

சில சமயங்களில், இப்பதிவுகளை படிக்கும் நண்பர்கள் தங்களது சந்தேகங்கள் குறித்து மின்னஞ்சல் அனுப்புவார்கள். அவ்வாறு கடந்த வாரம் மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை இங்கேயே தருகிறேன்.

கேள்வி : ஆயுள் தண்டனை என்பது ஆயுள் வரை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 31(அ) எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அப்படிப்பட்ட நபருக்கு 14 ஆண்டுகளுக்கு மேலான தண்டனை அளிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளதே?

பதில் : பிரிவு 31னை முழுவதும் படித்தால் இந்த குழப்பம் தீரும்.

ஒரே செயலில் பல குற்றங்கள் இணைந்து வரும். உதாரணமாக வெடிகுண்டு வீசி ஒருவரை காயப்படுத்தினால் கொலை முயற்சி குற்றமும் வரும். வெடிப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றமும் வரும். இரண்டிற்கும் தனித்தனி தண்டனை வழங்கப்படும். நீதிபதி நினைத்தான் இந்த தண்டனைகளை குற்றவாளி ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று கூற இயலும். ஆனால் அவ்வாறாக ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கையில் மொத்த தண்டனைக் காலம் 14 ஆண்டுகளுக்கு மிகக்கூடாது என்பதுதான் இந்தப் பிரிவு கூற வருவது.

ஆனால் ஆயுள் தண்டனையினைப் பொறுத்தவரை நீதிபதி கூறினாலும், கூறாவிட்டாலும் மற்ற தண்டனைகள் அதனுடன் சேர்ந்தே அனுபவிக்கப்படும். எனவே இந்தப் பிரிவு ஆயுள் தண்டனையினைப் பொருந்தவரை, பொறுத்தமற்றது.

***

மரணதண்டனைக்கேதுவான குற்றத்தினைப் புரிந்தவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் 14 ஆண்டுகளை சிறையில் கழிக்காமல் அவரது தண்டனைக் காலத்தை அரசு குறைக்க முடியாது என்று Cr.P.C. பிரிவு 433A கூறுகிறது.

ஆனால் சீர்திருத்தப்பள்ளிகளில் சேர்க்கப்படும் (Borstal School) சிறார்களுக்கு (Adolescents) (16 முதல் 21வயதுடையவர்கள்) இந்த விதி பொருந்துமா என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விவாதிக்கப்பட்டு தீர்ப்பினை எதிர்நோக்கியுள்ளார்கள்.

***

ஆண்டிப்பட்டி மலைபகுதியில் பழங்கால குகை ஓவியங்கள் உள்ளன என்று குமுதத்தில் ஒருவர் எழுதியதை வைத்து, நாங்களும் பளியர் ஒருவர் துணையுடன் சித்திரப்புடவு எனப்படும் புடவிற்கு சென்றால், ஓவியங்களை காணவில்லை. ஆனால், 500 மீட்டர் உயரமுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் அருமையான ஒரு நடைப்பயணம்!

முக்கியமாக எங்கள் பார்வையில் சிக்கிய படத்தில் நீங்கள் காணும் நபர்!!

மதுரை
24.12.07

1.12.07

மலர்கள்-புகைப்பட போட்டிக்காக...

என் வீட்டுத் தோட்டத்தில்...





Canon Powershot S5IS
Auto
Ex 1/250sec
ISO200
AV F 2.71
FL 6.0mm
Super Macro





என் வீட்டுப் பக்கத்தில்...




Manual
Ex 1/1600 seconds
ISO 800
AV F 4.51
FL 6.00 mm
Macro




இவை பறிப்பதற்கல்ல...





மதுரை
011207




8.11.07

சின்னதாய், ஒரு மின்னல்!

ஏறக்குறைய 500 வருடங்களுக்கு முன்னர் நடந்த கதை. மார்ட்டின் கெரி பிரஞ்சு தேசத்தை சேர்ந்த பெரிய ஒரு நிலச்சுவாந்தாரின் மகன். மார்ட்டினுக்கும் பெட்ராண்டே டி ரால்ஸ் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றதென்றாலும், திருமண வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. சில வருடங்களாகியும் அவர்களுக்கு குழந்தையில்லை. மார்ட்டினுக்கு பாலியல் ரீதியான குறைபாடுகள் இருந்ததே காரணம் என்று சொல்லப்பட்டது. ஒரு கிராம வைத்தியப் பெண்ணிடம் ஆலோசனை கேட்க, பின்னர் என்ன நிகழ்ந்ததோ மார்ட்டினுக்கு புத்திர பாக்கியம் அமைந்தது.

சில காலம் கழித்து, மார்ட்டினுக்கும் அவரது தந்தைக்கும் குடும்ப சொத்து விவகாரமாக சச்சரவு எழ, வீட்டை விட்டு தனியே வெளியேற்றப்பட்டார் மார்ட்டின். பின்னர் அவர் தனது தந்தையின் பூர்வீக நாடான ஸ்பெயின் தேசத்துக்கு சென்றதாகவும், அங்கிருந்த ராணுவத்தில் கூலிப்படையாக சேர்ந்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.

எட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன. மார்ட்டினின் தந்தை மறைந்திருந்தார். அவருடைய அளப்பறிய சொத்துக்கள் அவரது உறவினர்களின் மேற்பார்வையில். பெட்ராண்டேவோ உறவினர்களின் பாதுகாப்பில் தனது குழந்தையுடன் தனியே அதே கிராமத்தில் வசித்து வந்தார்.

திடீரென ஒரு நாள் வாசலில் மார்ட்டின்! பெட்ராண்டேவையும் குழந்தையையும் தேடி!!

முதலில் அனைவருக்கும் சந்தேகம். பின்னர் வந்தவருக்கு உருவ ஒற்றுமை இருந்தது. முன்னர் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் நினைவு கூறவும் முடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக பெட்ராண்டேவுக்கு வந்த மார்ட்டினை மிகவும் பிடித்து விட்டது, முக்கியமாக மார்ட்டினிடம் இந்த எட்டு ஆண்டுகளில் தென்பட்ட பெரிய மாற்றம். மார்ட்டினுக்கோ காதல் காத தூரம். வந்தவனோ அதில் வல்லவனாக இருந்தான். திருமணமான பின்னர் முதன் முறையாக மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள் பெட்ராண்டே.

மார்ட்டினின் வருகையும், மனைவியுடனான புதிய வாழ்க்கையும் மற்ற உறவினர்களை சங்கடப்படுத்தியது. அவர்கள் இத்தனை நாட்கள் அனுபவித்து வந்த சொத்துக்களுக்கல்லவா வேட்டு வந்து விட்டது. அவர்கள் பெட்ராண்டேவின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் விதைத்தனர். 'வந்தவன் அவளையும் சொத்துக்களையும் திருட வந்தவன்' என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வந்தனர். பெட்ராண்டேவுக்கோ தர்ம சங்கடம். அவள் கஷ்டம் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

பெட்ராண்டே வந்தவனை மார்ட்டின் என்று நம்பினாலும், வேறு வழியில்லாமல் உறவினர்களுடன் சேர்ந்து விரும்பாத ஒரு வழக்கை தாக்கல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் நீதிமன்றம், வழக்கின் இறுதியில், வந்தவன் ஒரு போலி என்று நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற நிலைக்கு வந்தது.

நீதிபதி தீர்ப்பினை 'வந்தவன் மார்ட்டின். அவர் அவருக்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்தலாம்' என்ற தனது தீர்ப்பினை வாசிக்க ஆரம்பித்து விட்டார். பெட்ராண்டேவுக்கோ உள்ளுக்குள் மகிழ்ச்சி...

தீடீரென செயற்கையான கட்டைக் கால்களுடன் ஒரு நபர், நீதிமன்றத்திற்குள் வந்தார்....பார்த்தால் மார்ட்டின்!!!

வந்தவன், மார்ட்டினுடன் ஸ்பெயின் கூலிப்படையில் பணியாற்றிய பன்செட்டே. பல்குரல் மன்னன் மற்றும் சிறந்த நடிகன். மார்ட்டினை சிநேகம் பிடித்த அவன், மார்டினின் முழுக்கதையும் கேட்டு அறிந்து பின்னர் மார்ட்டினாக உருமாறியிருந்தான். இருவரும் நன்கு பரிசோதிக்கப் பட்டு, பன்செட்டே போலி என்பது உறுதியானது.

இறுதியில் பன்செட்டே தான் போலி என்பதை ஒத்துக் கொள்ள...சில நாட்களில் தூக்கிலிடப்பட்டான்.

(One Author named Natalie Zemon Davis has written this story into a book titled The Return of Martin Guerre (1983). This has also been made into a film)


(இதே போன்றதொரு இந்திய வழக்கினைப் பற்றி எழுதுவதற்காக, இணையத்தில் தேடியதில் கிடைத்த சுவராசியமான மற்றொரு சம்பவம் இது. இந்திய வழக்கு ‘நான் யார்?’ என்ற பதிவில்)


(குஜராத் படுகொலைகளில் மோடியின் பங்கு பற்றி தெஹல்கா ஆய்வுகளை படித்த, பார்த்த எனக்கு, முன்பு நான் எழுதிய ‘விஷம் கக்கிய பாம்பு’ என்ற அமெரிக்க வழக்கு ஒன்றும் ஞாபகம் வந்தது)

நீதிபதிகள் கடவுள் அல்ல!

‘நமது விமானப் பணிப்பெண்களில் பலர் மிகத் தடிமனாக இருக்கிறார்களே’

‘ஆம், அதனால்தான் அவர்கள் இருக்கைகளுக்கிடையே நடக்க சிரமப்படுகிறார்கள் போல’


சுமார் 15 வருடங்களுக்கு முன்னர், கேலியும் கிண்டலுமான மேற்கண்ட உரையாடலை நான் கேட்டது ஏதோ கேளிக்கை விடுதியிலில்லை! தங்கள் உரிமைகளின் கடைசிப்புகலிடமாக மக்கள் கருதும், சென்னை உயர்நீதிமன்றத்தில். அதுவும் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றிய நீதிபதிக்கும், சென்னையின் முக்கியமான சட்ட நிறுவனம் ஒன்றின் வழக்குரைஞருக்கும் இடையே, திறந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற உரையாடல்.

பலர் இந்த உரையாடலில் மகிழ்ந்து சிரித்தாலும், உயர்நீதிமன்றத்தில் புதிதாக தொழிலை ஆரம்பித்திருந்த எனக்கு சற்று வியப்பாக இருந்தது!

ஆயினும் இந்த சொல்லாடல்கள் (comments) எனக்கு இன்றும் மறக்கால் இருப்பதற்கு ‘that’s what they find it difficult to walk between the aisles’ என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் அந்த வழக்குரைஞர் கூறியதை வைத்து aisle என்ற வார்த்தையினை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டதும் ஒரு காரணம்.

***

இந்த உரையாடல் நடைபெற்ற காலகட்டத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டும்தான் இருந்தது என்பதை விடவும், இன்று போல தனியார் தொலைக் காட்சிகள் இல்லை என்பது இங்கு முக்கியம். ஏனெனில், இவ்வாறு தொலைக்காட்சிகள் வந்த பின்னர்தான், நீதிமன்றத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் தொலைக்காட்சி தவிர பிற அச்சு ஊடகங்களாலும் பெரியதொரு பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகின்றன என்பது எனது அனுமானம்.

இன்றைய சூழ்நிலையில் இதே போன்றதொரு கிண்டலை திறந்த நீதிமன்றத்தில் கூற ஏதாவது நீதிபதி தைரியம் கொள்வாரா என்பது கேள்விக்குறியது. ஏனெனில், அடுத்த நாளே, ‘விமானப் பணிப்பெண்கள் தடிமனாக இருக்கிறார்கள் - சென்னை உயர்நீதிமன்றம் வருத்தம்’ என்று தலைப்புச் செய்தி வெளியாகி, அந்த நீதிபதி பின்னர் பத்திரிக்கை கடிதங்களில் கிழித்து எறியப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம்.

***

சில வருடங்களுக்கு முன்னர் மும்பையில் தொழில் புரிகையில், பரபரப்பான வழக்கு ஒன்றில் தினசரி நீதிமன்றத்தில் நடக்கும் வாத பிரதிவாதங்களோடு, நீதிபதிகளின் சொல்லாடல்களையும் (comments) பத்திரிக்கைகள் வெளியிட, அதனால் மக்களுக்கு தவறான செய்தி சென்று சேருவதாக புகார் செய்யப்பட, நீதிபதிகள் அந்த வழக்கில் நீதிமன்ற சொல்லாடல்களை வெளியிடக் கூடாது என்று தடை செய்தனர். ஆயினும், இந்த தடை சட்டத்திற்கு புறம்பானது என்பது எனது கருத்து.

***

நீதிமன்ற சொல்லாடல்கள் தீர்ப்புகள் அல்ல. பல சமயங்களில் அவை நாம் நினைப்பது போல, நீதிபதிகளில் மனதில் உள்ள கருத்தின் வெளிப்பாடும் அல்ல. எனது தனிப்பட்ட அனுபவத்தில், நீதிபதிகள் தங்களுடைய மனதினை என்னுடைய வழக்கின் பக்கம் திருப்பிய பின்னர், மேலும் வேகமாக என் வழக்கிற்கு எதிரான கேள்விகளை எழுப்புவதை பார்த்திருக்கிறேன். ஏனெனில், இருக்கும் கொஞ்ச நஞ்ச சந்தேகத்திற்கும் என்னால் பதில் அளிக்க முடிந்தால்...தீர்ப்பினை எவ்வித குறைபாட்டிற்கும் வழியின்றி எழுதலாம் என்ற ஆதங்கமே தவிர வேறல்ல!

ஆனால், வழக்கினை கவனித்துக் கொண்டிருக்கும் கட்சிக்காரருக்கோ, ‘என்ன நீதிபதி நம்முடைய வழக்குரைஞரை இப்படிப் போட்டு குடைகிறார். நம் பக்கம் சாதகமாக இல்லையோ?’ என்று கவலை ஏற்படுவதுண்டு!

சில அவசரகுடுக்கை கட்சிக்காரர்கள், நிலைமை புரியாமல் வேறு தவறான யூகங்களுக்கு உட்பட்டு முட்டாள்தனமான சில முடிவுகளுக்கு தங்களை இட்டுச் செல்வார்கள்.


***

சமீப காலமாக பொது நலம் சார்ந்த வழக்குகளில், இவ்வாறு நீதிமன்றங்களில் நடக்கும் சொல்லாடல்கள், ஊடகங்களால் பரபரப்பாக்கப்பட்டு, நீதிமன்றங்களின் நம்பகத்தன்மையினையே கேள்விக்குறியாக்கும் நிலமைக்கு இட்டுச் சென்றுள்ளன.

உதாரணமாக, சமீபத்தில் வாதப் பிரதிவாதம் முடிந்த இட ஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகள் எழுப்பும் கேள்விகள் ஏதோ, அவர்களின் தீர்ப்பு போல பத்திரிக்கைகளால் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவே உணர்கிறேன். நான் தவறாமல் படிக்கும் ‘இந்து’வில் இந்த செய்திகளுக்கு அளிக்கப்பட்ட தலைப்புகள் இவ்வாறான எண்ணத்தை என்னுள் தோற்றுவித்தது.

நீதிபதிகள் மனிதர்கள். அவர்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு விருப்புகள் (bias) உள்ளது உண்மைதான். அவ்வித விருப்புகள் அவர்களது நீதிமன்ற சொல்லாடல்களில் வெளிப்படுவதும் எதிர்பார்க்கக்கூடியதே! ஆயினும், அந்த விருப்பினை தீர்ப்பாக வடிப்பது கடினம். அவ்விதமான விருப்பு சார்ந்த தீர்ப்புகள், பிரபலப்படுத்தப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் தவறு இல்லை...தேவையானதும் கூட!

ஆனால், சொல்லாடல்கள் (comments) அவ்வளது தீவிரமாக எடுத்து அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராயப்பட வேண்டியவை அல்ல!

காலை முதல் மாலை வரை, மதிய இடை வேளை தவிர மற்ற நேரங்களில் ஒரு தேநீருக்காக கூட இருக்கையிலிருந்து எழ இயலாத ஒரு நீதிபதி, இறுகிய முகத்துடன் சேரியமாக ஒரு வழக்கினை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, சேடிஸம். நான்கு பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், அவர்கள் தங்கள் பணியில் இயல்புத் தன்மையற்று இருக்க வேண்டுமென்பது, சலிப்பூட்டும் ஒரு அலோசனன.

அசதி அதிகமானால், எழுந்து அல்லது உட்கார்ந்தபடியே கைகளை பின்னுக்கு தள்ளி சோம்பல் முறித்துக் கொள்வது ஒரு காவல்காரருக்கு கூட இயலுவது போல ஒரு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இயலாது.

ஆயினும் ஊடகங்களை மட்டும் நான் குறை கூறவில்லை. நீதிபதிகளும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியினை புரிந்து கொண்டு தங்கள் வார்த்தைகளை சற்று கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளனர்.

‘தமிழக பந்த்’ வழக்கில் முதலில் நீதிபதி அவசரத்தில் தெளித்த வார்த்தைகளை, ஏதோ ‘ஆட்சியினைக் கலைக்கும் சர்வ அதிகாரம் அவரது கையில் இருப்பதைப் போலவும், தமிழக அரசு அதோ கதி’ என்ற ரீதியிலும் ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் அன்று திரும்ப திரும்ப ஓட்டிக் கொண்டேயிருந்தன!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது அவ்வளவு எளிதல்ல. தகுந்த அறிவிப்பு வழங்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு பல்வேறு காரணிகளை கவனத்தில் கொண்டே பின்னர் தீர்ப்பு வழங்க முடியும். எனவே அன்று கூறிய வார்த்தைகள், அவரது பணியின் இடையே நடைபெற்ற தனிப்பட்ட சொல்லாடல் என்ற அளவிலேயே நாம் பார்க்க வேண்டும், என்பதே எனது கருத்து.

ஆனால், ஏதோ ஒரு தீர்ப்பினைப் போல பெரிய முக்கியத்துவம் அளித்து, நீதிமன்ற நடவடிக்கைகளை பெரிதும் அறிந்திராத மக்களிடம் தேவையற்ற விவாதத்தினை எழுப்பியதில் ஊடகங்களும் ஒரு காரணமாகி விட்டன!

‘Let the Judges be judged by their Judgements but not on their casual outbursts...they are after all humans like you and me’

பிரபு ராஜதுரை
08.11.07

3.11.07

கண்ணீர்த்துளி, கட்டிடமாக!


தாஜ்மகாலைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம், பெரிதாக எதுவும் எனக்கு இருந்ததில்லை. தாஜ்மகால் படங்களை சிறுவனாக இருக்கையில் காண்கையில், இதில் என்ன அப்படி உலக அதிசயம் இருக்க முடியும் என்று நினைப்பேன். பின்னாட்களில், தாஜ்மகால் சென்றவர்கள் கொணரும் புகைப்படங்களில், அதன் பீடத்தின் மீது நிற்கும் மனிதர்களின் உருவ அளவோடு ஒப்பிடுகையில், தாஜ்மகாலின் பரிணாமம் புரிய, ‘முழுவதும் சலவைக்கல்லிலான, பிரமாண்டமான ஒரு கட்டிடத்தினை நேரில் பார்க்கையில் வியப்பாகத்தானே இருக்கும்... அதுதான் அதன் சிறப்பு போல’ என்று நினைத்தேன்.

ஆயினும் இதே காலகட்டத்தில் எகிப்திய பிரமீடுகள், சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றின் பிரமாண்டங்களைப் பற்றி மேலும் அறிந்ததில், தாஜ்மகால் எனது அதிசய பட்டியலில் இல்லை.

கடந்த வாரம், ஒரு வழக்கு விடயமாக தில்லி சென்ற பொழுது, கூட வந்த நண்பர் ‘தாஜ்மகாலினைப் பார்க்காமல் திரும்பக் கூடாது’ என்று கூறிய பொழுது, ஒரு நாள் தாஜ்மகாலுக்காகவா என்று சலிப்பாகத்தான் இருந்தது.

ஆனால், சிவப்புக் கற்களாலான முகப்புக் கட்டிடத்தை கடந்து உள்ளே செல்கையில் மெல்ல தன்னை வெளிக்காட்டிய தாஜ்மகால்...

சுற்றிலும் முரட்டுக் காவலர்கள் சூழ்ந்து நிற்க நடுவே மெளனமாக ஒரு பெண் நின்றிருப்பதை காண்பது போன்ற இனந்தெரியாத சோகம் என்னைக் கவ்வியது. ‘காலத்தின் கன்னத்தில் வழிந்த கண்ணீர்த்துளி’ என்று தாஜ்மகாலை தாகூர் கூறியதுதான் உடனடியாக நினைவுக்கு வந்தது.

கட்டிடங்களையும் ஆண் பெண் என பிரிக்க முயன்றால், நடுவே நிற்கும் சலவைக்கல் மாளிகையை பெண்ணாகவும், அதன் மூன்று பக்கங்களிலும் உள்ள சிவப்பு கட்டிடங்களை ஆணாகவும் எளிதில் கூற முடியும். எனக்கு அவ்வாறுதான் தோன்றியது!

உண்மையில் அன்று தாஜ்மஹாலினை காணும் வரை ஷாஜகானையும் அவன் காதல் மனைவியையும் நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால், தாஜ்மஹாலினை கண்ட மாத்திரத்தில் ஷாஜகானும், மும்தாஜும் சோக சித்திரமாக என்னை நிறைத்திருந்தனர்.

காதலை, மனிதர்கள் கவிதையாகவும், நடனமாகவும், பாடலாகவும், இசையாகவும் ஏன் சித்திரமாகவும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஷாஜஹானோ கட்டிடக் கலைப் பிரியன். தன் மனைவி மீது கொண்ட அளவற்ற காதலையும், அதன் பிரிவுத் துயரையும் ஒருவன், கட்டிடமாக வெளிப்படுத்தினால்...தாஜ்மகாலை விட அழகாகவும், பொருத்தமாகவும் யாராலும் வெளிப்படுத்த முடியாது.

‘if one wants to express his love in the form of a structure, I am standing before it’ தாஜ்மஹாலின் பீடத்தின் அடியிலிருந்து என் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட என்னை மறந்து கூறிய வார்த்தைகள்.


***

ஷாஜஹானின் காதலின் வெளிப்பாட்டிற்காக செலவழிந்தது எண்ணற்ற கலைஞர்களின் உழைப்பும், அளவற்ற பொருட் செல்வமும். அவுரங்கசீப்பிற்கு இவை எரிச்சலூட்டியிருக்கலாம். அவரது பார்வையில் அது நியாயமாக கூட இருக்கலாம்...

ஆனால், வாழ்வின் மகிழ்வுகள் வெறுமே உணவிலும், உடையிலும் மட்டும் இருப்பதில்லையே!

‘a thing of beauty is a joy for ever’ என்ற ராபர்ட் ப்ரோஸ்டின் வரிகள்தான் தாஜ்மஹாலின் தேவையினை நியாயப்படுத்துகின்றன!


***

பலர் என்னைக் கிண்டல் செய்தது போல தாஜ்மகால் நண்பரோடு போகக் கூடிய இடமல்ல. நான் கவனித்தவரை பெண்கள் தாஜ்மகால் மீது அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்களின் கண்களில் வியப்பு பொங்கி வழிய, கூட வரும் ஆண்களில் கண்களில் கொஞ்சம் பொறாமையிருந்தது!

மதுரை
03.11.07