3.11.07

கண்ணீர்த்துளி, கட்டிடமாக!


தாஜ்மகாலைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம், பெரிதாக எதுவும் எனக்கு இருந்ததில்லை. தாஜ்மகால் படங்களை சிறுவனாக இருக்கையில் காண்கையில், இதில் என்ன அப்படி உலக அதிசயம் இருக்க முடியும் என்று நினைப்பேன். பின்னாட்களில், தாஜ்மகால் சென்றவர்கள் கொணரும் புகைப்படங்களில், அதன் பீடத்தின் மீது நிற்கும் மனிதர்களின் உருவ அளவோடு ஒப்பிடுகையில், தாஜ்மகாலின் பரிணாமம் புரிய, ‘முழுவதும் சலவைக்கல்லிலான, பிரமாண்டமான ஒரு கட்டிடத்தினை நேரில் பார்க்கையில் வியப்பாகத்தானே இருக்கும்... அதுதான் அதன் சிறப்பு போல’ என்று நினைத்தேன்.

ஆயினும் இதே காலகட்டத்தில் எகிப்திய பிரமீடுகள், சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றின் பிரமாண்டங்களைப் பற்றி மேலும் அறிந்ததில், தாஜ்மகால் எனது அதிசய பட்டியலில் இல்லை.

கடந்த வாரம், ஒரு வழக்கு விடயமாக தில்லி சென்ற பொழுது, கூட வந்த நண்பர் ‘தாஜ்மகாலினைப் பார்க்காமல் திரும்பக் கூடாது’ என்று கூறிய பொழுது, ஒரு நாள் தாஜ்மகாலுக்காகவா என்று சலிப்பாகத்தான் இருந்தது.

ஆனால், சிவப்புக் கற்களாலான முகப்புக் கட்டிடத்தை கடந்து உள்ளே செல்கையில் மெல்ல தன்னை வெளிக்காட்டிய தாஜ்மகால்...

சுற்றிலும் முரட்டுக் காவலர்கள் சூழ்ந்து நிற்க நடுவே மெளனமாக ஒரு பெண் நின்றிருப்பதை காண்பது போன்ற இனந்தெரியாத சோகம் என்னைக் கவ்வியது. ‘காலத்தின் கன்னத்தில் வழிந்த கண்ணீர்த்துளி’ என்று தாஜ்மகாலை தாகூர் கூறியதுதான் உடனடியாக நினைவுக்கு வந்தது.

கட்டிடங்களையும் ஆண் பெண் என பிரிக்க முயன்றால், நடுவே நிற்கும் சலவைக்கல் மாளிகையை பெண்ணாகவும், அதன் மூன்று பக்கங்களிலும் உள்ள சிவப்பு கட்டிடங்களை ஆணாகவும் எளிதில் கூற முடியும். எனக்கு அவ்வாறுதான் தோன்றியது!

உண்மையில் அன்று தாஜ்மஹாலினை காணும் வரை ஷாஜகானையும் அவன் காதல் மனைவியையும் நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால், தாஜ்மஹாலினை கண்ட மாத்திரத்தில் ஷாஜகானும், மும்தாஜும் சோக சித்திரமாக என்னை நிறைத்திருந்தனர்.

காதலை, மனிதர்கள் கவிதையாகவும், நடனமாகவும், பாடலாகவும், இசையாகவும் ஏன் சித்திரமாகவும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஷாஜஹானோ கட்டிடக் கலைப் பிரியன். தன் மனைவி மீது கொண்ட அளவற்ற காதலையும், அதன் பிரிவுத் துயரையும் ஒருவன், கட்டிடமாக வெளிப்படுத்தினால்...தாஜ்மகாலை விட அழகாகவும், பொருத்தமாகவும் யாராலும் வெளிப்படுத்த முடியாது.

‘if one wants to express his love in the form of a structure, I am standing before it’ தாஜ்மஹாலின் பீடத்தின் அடியிலிருந்து என் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட என்னை மறந்து கூறிய வார்த்தைகள்.


***

ஷாஜஹானின் காதலின் வெளிப்பாட்டிற்காக செலவழிந்தது எண்ணற்ற கலைஞர்களின் உழைப்பும், அளவற்ற பொருட் செல்வமும். அவுரங்கசீப்பிற்கு இவை எரிச்சலூட்டியிருக்கலாம். அவரது பார்வையில் அது நியாயமாக கூட இருக்கலாம்...

ஆனால், வாழ்வின் மகிழ்வுகள் வெறுமே உணவிலும், உடையிலும் மட்டும் இருப்பதில்லையே!

‘a thing of beauty is a joy for ever’ என்ற ராபர்ட் ப்ரோஸ்டின் வரிகள்தான் தாஜ்மஹாலின் தேவையினை நியாயப்படுத்துகின்றன!


***

பலர் என்னைக் கிண்டல் செய்தது போல தாஜ்மகால் நண்பரோடு போகக் கூடிய இடமல்ல. நான் கவனித்தவரை பெண்கள் தாஜ்மகால் மீது அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்களின் கண்களில் வியப்பு பொங்கி வழிய, கூட வரும் ஆண்களில் கண்களில் கொஞ்சம் பொறாமையிருந்தது!

மதுரை
03.11.07

2 comments:

துளசி கோபால் said...

ரொம்பசரி.

கோபால், எனக்காக ஒரு தாஜ்மகால் கட்டுவார்னு சத்தியம் செஞ்சா, இப்பவே நான் இறக்கத்தயார்.

பொய் சத்தியம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது:-)

cheena (சீனா) said...

தாஜ்மகால் - காதலுக்காக -காதலிக்காக - கட்டப்பட்ட - நினைவிடம். அங்கு சென்று மகிழும் அனுபவம் அருமை.

துளசி, கோபால் கட்றேன்னு சொன்னாக்கூட நீங்க இறக்க வேண்டாமே !! - என்ன இது பைத்தியக்காரத்தனம்.

உணர்ச்சி வசப் படாதீங்க - Negative சொற்களைத் தவிருங்கள் - உரிமையோடு சொல்றேன்