நான் அடிப்படையில் ஒரு உரிமையியல் (civil) வழக்குரைஞர். குற்றவியல் வழக்குகளில் அவ்வப் பொழுது பங்கு கொண்டாலும், அவை பெரும்பாலும் காசோலை மோசடி, நில மோசடி போன்ற உரிமையியல் பிரச்னைகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரு கொலை வழக்கையாவது நடத்த வேண்டுமென்பதுதான் எனது உச்சகட்ட குற்றவியல் லட்சியம்!
மதுரை வந்த பொழுதில், மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவியல் மேல்முறையீடு ஒன்றினை நடத்தித் தர வேண்டுமென்று, ஜூனியர் ஒருவர் கேட்கவும் உற்சாகமாக ஏற்றுக் கொண்டேன்.
குற்றம் சாட்டப்பட்டவர்...ம் வசந்தன் என்று வைத்துக் கொள்ளலாம். நகர பேருந்தில் பயணி. தனது இடம் வந்ததும், பேருந்தை நிறுத்த கேட்டுக் கொள்கிறார். நடத்துநர் அது விரைவுப் பேருந்து என்று அடுத்த நிறுத்தத்தில்தான் நிறுத்துகிறார். எரிச்சலுற்ற வசந்தன் இறங்கும் பொழுது படியில் நின்று கொண்டிருந்த நடத்துநரை தள்ளிவிட்டு இறங்கிச் சென்று விட்டார். தடுமாறி கொஞ்சம் ஏடா கூடமாக கீழே விழுந்த நடத்துநரின் விலா எலும்பு ஒன்று உடைந்து விட்டது.
நடத்துநரை கீழே தள்ளிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குச் சென்று விட்ட வசந்தன், அடுத்த நாள் செய்தித்தாளில் ‘பயணியால் தாக்கப்பட்ட நடத்துநர் மருத்துவமனையில் அனுமதி’ என்று பெட்டிச் செய்தியை துரதிஷ்டவசமாக பார்க்க நேரிட்டது. குற்ற உணர்வில் ‘அந்த நடத்துநரை தள்ளிவிட்ட நடத்துநர் தான்தான்’ என்று தாயாரிடம் கூற, அவரோ உடனே அரசு மருத்துவமனைக்குச் சென்று, அந்த நடத்துநரையே சந்தித்து தனது மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.
நடத்துநருக்கு ஏற்பட்டதோ, இந்திய தண்டனைச் சட்டப்படி கொடுங்காயம் (grevious hurt) குற்றவாளியை எப்படி கண்டுபிடிப்பது என்று இருந்த காவலர்களுக்கு, அவராகவே வந்து மாட்டவும், உடனடியாக பிடித்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்து விட்டனர்.
கொடுங்காயத்துக்கு அதிகபட்ச தண்டனை ஏழு வருடம். குற்றவாளியின் எண்ணப்பாட்டினைப் பொறுத்து தண்டனை வழங்கப்படும். நீதிபதியோ கடுமையானவர். ஏழு வருடம் தீட்டி விட்டார்.
-oOo-
‘இதுக்கெல்லாமா ஏழு வருடம் கொடுப்பார்கள், மனிதத்தன்மையே இல்லையா?’ வழக்கைப் படித்த எனக்கு தோன்றியது இதுதான். ஒரு வருடமென்றாலும் எனக்கு இப்படித்தான் தோன்றியிருக்கும்.
‘சரி, ஏற்கனவே சிறையில் இருந்த சில மாதங்களை தண்டனைக்காலமாக குறைக்கச் சொல்லலாம்’ என்று நினைத்து வழக்கைப் படித்த எனக்கு நியாயமான சந்தேகம் ஒன்று தோன்றியது. சம்பவம் நடந்ததற்குப் பிறகு வசந்தனை, நடத்துநர் சாட்சி விசாரணை பொழுதுதான் பார்க்கிறார். பின்னர் எப்படி, வசந்தநன்தான், நடத்துநரை தாக்கியவர் என்று காவலர்கள் கண்டுபிடித்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்? என்ற சந்தேகம்தான் அது.
காவலர் வழக்குகளை சோடிக்கத்தான் செய்வார்கள். வசந்தனின் தாயார் நடத்துநரைப் பார்த்த விபரமெல்லாம் இல்லாமல் அவர்களாகவே வசந்தனை கண்டுபிடித்த மாதிரித்தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவரும், தாக்குபவரும் முன்பின் அறிமுகம் ஆகாத நபராக இருக்கும் பட்சத்தில், காவலர்கள் தாக்கியவர் என்று ஒருவரை கைது செய்தவுடன் ‘identification parade’ நடத்துவது அவசியமானது.
மேல்முறையீட்டில், இந்த ஒரு கருத்தை வைத்தே எனது வாதத்தை வடிவமைத்த நான், இறுதியில் குற்றம் செய்யப்பட்டதாகவே இருப்பினும், இத்தகைய ஒரு செயலை நாம் அனைவருமே நமது வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்தில் செய்யக் கூடியவர்களாகவே இருக்கிறோம். நமது அதிஷ்டம், நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமைவதில்லை...அமைந்தாலும் விலா எலும்புகள் எப்பொழுதுமே உடைவதில்லை. இந்தச் செயலுக்கு ஏழு வருடம் என்பது நியாயமா? என்றும் ஒரு கேள்வியை வைத்தேன்...
ஒரு வாரம் கழித்து ஜூனியர் என்னைச் சந்தித்து, ‘சார், அப்பீலில் வசந்தனை முழுசா விடுவிச்சிட்டாங்க’ என்று கூறிய பொழுது தரையிலிருந்து எழும்பி கொஞ்சம் உயரத்தில் பறப்பது போல இருந்தது.
-oOo-
மணற்கேணி வலைப்பதிவுகளை தெரிந்தோ அல்லது தெரியாமலோ கண்ணுறுபவர்களைப் பற்றிய புள்ளிவிபரங்களை தரும் வலைத்தளத்தில், மிகுந்த சுவராசியத்துடன் நான் பார்ப்பது, ‘தேடுபொறியில் எந்த வார்த்தையினைத் தேடி மணற்கேணிக்கு வருகிறார்கள் என்பது’.
இரு நாட்களுக்கு முன்னர், ‘ஒரு பெண்’ என்ற இரு வார்த்தைகளை கூகிளில் தேடி இங்கு வந்திருக்கிறார் ஒரு நபர். பெண் என்று தேடலாம், ஒரு என்று கூட தேட வாய்ப்பு உண்டு. ‘ஒரு பெண்’ என்றா தேடுவார்கள்?
எந்த நோக்கத்தில் ஒருவர் ‘ஒரு பெண்’ என்ற வார்த்தைகளை கூகுளில் தேடியிருக்கக்கூடும்?. பொழுது போகாத நேரங்களில், இந்தக் கேள்விக்கான விடையினை தேட முயல்வதுதான் தற்பொழுது எனது பொழுது போக்கு.
-oOo-
நேற்று மூத்த வழக்குரைஞர் ஒருவர், ‘எதற்காக சென்னை மியூசிக் அகாடெமியில் மலையாளிகளை வேலைக்கு வைப்பதில்லை தெரியுமா?’ என்று கேட்டார். எனக்குத் தெரியவில்லை. அவர் சொன்ன பதில்...மெக்ஸிகோ சலவைக்காரியெல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.
நீங்களும் பொழுது போகாத நேரங்களில் யோசித்துக் கொண்டிருந்தால் கண்டுபிடித்து விடலாம்.
எனக்கும் பல சமயங்களில் தோன்றும். ‘இங்கே கவிஞர், எழுத்தாளர் என்று பீற்றிக் கொள்கிறார்களே. sixக்கும் sexக்கும் என்ன வித்தியாசம்? என்று ஒரு நண்பர் கேட்டு அதுக்கு ஒரு பதில் சொன்னாரே, அந்த கிரியேட்டிவிட்டி முன்னால இவங்க கற்பனையெல்லாம் தூசுன்னு’
யார் சொல்லியிருப்பா, இத முதல்லன்னு இப்ப யோசிச்சுட்டு இருக்கேன்!
மதுரை
141009