16.1.09

அழிப்பது ‘புலி’களின் குணமே!

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியப் பெண்களுக்கான தேசிய கூட்டமைப்பு (National Federation of Indian Women) என்ற சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிப் பேராண்மை மனுவினை (Writ Petition) தாக்கல் செய்தது. அதாவது தணிக்கை குழுவினரால் (Censor Board) தடை செய்யப்பட்ட திரைப்படக் காட்சிகளையும், பாடல்களையும் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பேருந்துகளில் ஓளி/ஒலிபரப்புவதை தடுக்க போதிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வேண்டும் மனு.


பொதுவாக எனக்கு இது போன்ற மனுக்களில் நம்பிக்கை அவ்வளவாக கிடையாது. நானும் வழக்குரைஞர் நண்பர் ஒருவருக்காக முன்பு 'அரசு அனுமதித்த நபர்கள் தவிர மற்றவர்கள் தங்களது வாகனங்களில் சிவப்பு விளக்கினை பயன்படுத்துவதை உடனடியாக தடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்' என்று ஒரு மனு தாக்கல் செய்து அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் ஏதும் பலன் இல்லை!


‘இன்னார்’ சிவப்பு விளக்கினை பயன்படுத்துவதாக கூறி ஒரு அவமதிப்பு மனு (Contempt Petition) போடலாமா? என்றால், வழக்கு தாக்கல் செய்த நண்பர் ‘ஏன், நான் ஒழுங்காக இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா’ என்கிறார்.



***


சமீபத்தில் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு வழக்குரைஞர்களின் கருத்துகளை கேட்டபின்னர், ‘படக்காட்சி என்றால் சரி, படக்காட்சியோடு இணையாத பாடல் (Audio without any accompanying visual display) மட்டுமென்றால் அந்தப் பாடல் காட்சி தணிக்கைத் துறையினரால் தடை செய்யப்பட்டிருந்தாலும் திரைப்பட சட்டத்தின் (Cinematograph Act) எந்த ஒரு பிரிவினையும் மீறியதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.


ஆனாலும் குத்துப்பாட்டு போடுபவர்கள் ஒரேடியாக மகிழ்ந்து விட வேண்டாம். வெறும் பாடல் என்றாலும், பாடல் வரிகள் அநாகரீகமாக (obscene) இருக்கும் பட்சத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.


இந்திய தண்டனைச் சட்டத்தின் 294ம் பிரிவு மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும்(annoy) வண்ணம் அநாகரீகமான பாடல்களைப் (obscene songs) பாடினால் மூன்று மாத தண்டனைக்கேதுவான குற்றம் என்று கூறுகிறது. இந்தப் பிரிவின் மற்றொரு பகுதி அநாகரீக செயல் (obcene act) புரிந்தாலும் குற்றம் என்று கூறுவதால், அநாகரீக பாடல்களை ஒலிபரப்புவதும் குற்றமே!


‘அப்சீன்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு பொருத்தமான தமிழ் வார்த்தை எனக்குத் தோன்றவில்லை. தமிழறிஞர்களைக் கேட்டால், முதலில் அப்சீன் என்றால் என்னவென்று வரையறு என்பார்கள்.


***


அநாகரீக பாடல் கூடாது. இந்தப் பாடலைப் பாடலாமா?

இதோ வருகுது யுத்தம்
துடிக்குது புஜம்
ஜெயிப்பது நிஜம்


பகைவனுக்கருள்வது பிழை
வா

பகைவனை அழிப்பது முறை
ம்ம்ம்...பொறுப்பது புழுக்களின் குணம்
அழிப்பது புலிகளின் குணமே!

எட்டிப்போ
இதோ வருகுது புலி
யுத்தத்தால் அடாவடி ஒழியுது
மனோபலம் வருகுது மொத்தத்தில்


பாடாவிட்டாலும் நேற்று கேட்டேன், ஏதோவொரு பண்பலை வானொலியில்!

விக்ரம் படத்தில், இளையராசா இசையமைப்பில், கமல்காசன் பாடிய இந்தப் பாடலுக்கு படம் வெளிவந்த காலகட்டத்தில் சில எதிர்ப்புகள் இருந்ததாக படித்த ஞாபகம். தற்பொழுது இல்லை போலும்.



நமது பேச்சுரிமை அதிகரித்திருப்பதற்காக நாம் மகிழலாம்!


மதுரை
160109









கண்ணுக்கு விருந்து...

13.1.09

வலைபதியும் நீதிபதிகள்!

கிழக்கு பதிப்பகம், பத்ரி நாராயணனை ஒருமுறை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அமெரிக்காவில் உள்ள பொருளாதார பேராசிரியர் ஒருவரும், நீதிபதி ஒருவரும் இணைந்து சட்டம், அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களைக் குறித்து விவாதிக்கும் ‘பெக்கர் போஸ்னர் வலைப்பதிவு’ (Becker-Posner-blog) என்ற பதிவினை எனக்கு அறிமுகப்படுத்தி, ‘இது போல இந்தியாவிலுள்ள நீதிபதிகளும் பதிவு எழுத முன் வருவார்களா?’ என்று வினவினார்.

‘இந்திய நிலையில் அப்படியொரு சாத்தியக்கூறு இல்லை’ என்றேன்.

ஆனால் இன்று தற்செயலாக வலையினை மேய்கையில், பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் கண்ணன் அவர்கள் கடந்த இருவருடங்களாக வலையில் எழுதி வரும் Justice Kannan, being non-judgmental என்ற பதிவு கண்ணில் பட்டது.


***

நீதிபதி கண்ணன், தமிழகத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் மிக முக்கியமானதும், பழமையானதுமான சட்ட சஞ்சிகையான Madras Law Journalல் ஆசிரியராக, நீதிபதியாக பதவியேற்கும் முன்பு வரை பணியாற்றியவர்.

சட்ட சஞ்சிகை (Law Journal) என்பது, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தொகுத்து வெளியிடப்படும் பத்திரிக்கை. வாரசஞ்சிகைகளும் உண்டு, மாத சஞ்சிகைகளும் உண்டு. இவைகளை வாங்கி தொடர்ந்து படிப்பதன் மூலம், வழக்குரைஞர்கள் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, அவற்றை தங்களது வழக்குகளில் பயன்படுத்துவார்கள்.
இவ்வாறான சட்ட பத்திரிக்கைகளின் தொகுப்பே, நாம் வழக்குரைஞர்களின் அலுவலகங்களில் காண்பது.

நீதிபதி கண்ணன், வழக்காடுவதோடு, எழுதுவதிலும் அதிக ஆர்வம் காட்டுபவர். பல்வேறு சட்டம் சம்பந்தமான கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

பல ஆண்டுகளாக நீதிபதியாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், சமீபத்தில்தான் அந்த வாய்ப்பு இவரை தேடி வந்தது. தமிழகத்தில் இவர் பதவியேற்றாலும், சில மாதங்களிலேயெ பஞ்சாப் உயர்நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.


***


மணற்கேணி தினத்தந்தி என்றால், நீதிபதி கண்ணனின் வலைப்பதிவு ஹிந்து படிப்பது போல இருக்கும். தீவிரமாக சட்டம் பற்றி அறிந்து கொள்ள அந்த வலைப்பதிவினை நாடலாம். இந்தியாவில் சட்டம் பற்றி விவாதிக்கும் மற்றொரு வலைப்பதிவினை எனக்கு பத்ரிதான் அறிமுகப்படுத்தினார். ஏற்கானவே நான் இங்கு சுட்டிக்காட்டியுள்ள Law and other Things.


***

நீதிபதி கண்ணன், அவர் நீதிபதியாக பதவியேற்பதற்கு முன்பிருந்தே பதிவு எழுதி வருகிறார். நீதிபதிகள், அதுவும் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதிவு எழுதுவது சாத்தியமான ஒன்றா என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. முக்கியமாக நீதிபதி பாஸ்னர் கண்ணனைப் போல பேராண்மை (writ) மனுக்களை விசாரிக்கவல்ல நீதிபதியல்ல என்றே நினைக்கிறேன்.

பேராண்மை மனுக்களை விசாரிக்கவல்ல நீதிபதிகள், சமூகத்தை பாதிக்கும் பல விடயங்களில், தங்களை சொந்த கருத்துகளை அனைவரும் அறியும் வண்ணம் இவ்வாறு வெளிப்படுத்துவது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை.

உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு கூட முக்கியமான விடயங்களில் ஹிந்துவில் கட்டுரை எழுதுகிறார்.

நீதிபதிகள், பொதுக்கூட்ட மேடைகளில் தங்களது கருத்துகளை தொடர்ந்து வெளிப்படுத்துகையில், கட்டுரை எழுதுவதும் வலைப்பதிவதும் சாத்தியமான ஒன்றுதான்.

உண்மையில், நீதிபதிகள் தங்களது சொந்தக் கருத்துகளை தீர்ப்பில் வெளிப்படுத்துவதை விட தங்களது சொந்த வலைப்பதிவில் வெளிப்படுத்துவது சரியான ஒரு செயலாகவே இருக்க முடியும்.

ஆனால், வலைப்பதிகையில் பதிபவர், தனது பதிவினை ஒட்டி எழும் விவாதத்திலிருந்து விலகியிருப்பது சாத்தியமில்லை. முக்கியமாக எதிர்வினைகளை அனுமதிக்கையில், சில தர்மசங்கடமான நிலைகளுக்கு வலைப்பதிபவரை இட்டுச் செல்லலாம்.

எனினும், இந்தியாவில் வலைப்பதியும் முதல் நீதிபதி கண்ணனானகத்தான் இருக்க முடியும். இந்த அவரது முயற்சி வரவேற்க்கத்தகுந்ததுதான்.


***

எதிர்காலத்தில் நானும் நீதிபதியாகக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், என்னால் இந்த பதிவினை தொடர முடியுமா என்று நான் சிந்திப்பதுண்டு. நீதிபதி கண்ணன் நம்பிக்கை தருகிறார். ஆயினும், சந்தேகம் இருக்கிறது.

நீதிபதி ஒருவேளை இதன் சட்டச்சிக்கல்களைப் பற்றி எழுதலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஆயினும் குடிமக்களாகிய உங்களுக்கும் எனக்கும் உள்ள பேச்சுரிமை, அதை நமக்கு உறுதிப்படுத்தும் நீதிபதிகளுக்கு இல்லை, பாவம்!

மதுரை
120109





KODAIKANAL, FOUR YEARS AGO...

9.1.09

ஆடு மேய்க்கும் பயங்கரவாதியும், ‘ஐயா’ வீடும்!

ஆடு மேய்ப்பது ஒரு குற்றம் என்றால், அதைத் தவிர வேறு ஏதும் குற்றச் செயலில் ஈடுபடாதவர்கள்தாம், அவர்கள் இருவரும்...

அவர்களது கிராம எல்லைக்குள், கம்பீரமாக ஓங்கியுயர்ந்து புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டிடத்தினைப் பார்த்து, மற்ற கிராமவாசிகளைப் போல பெருமைப்பட்டவர்கள்தாம் அவர்கள்.

‘இது நம் கட்டிடம்’ ‘நம்மைப் போன்ற மக்களுக்கானது’ என்று மக்களாட்சித் தத்துவம் அவர்களை நினைக்க வைத்திருந்தது.

அதனால்தான், தங்களது ஆடுகளுக்காக, கட்டிடத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த மதில்சுவர் மீது ஏறி தழைகளை ஒடிப்பதும் ஒரு தவறென்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.


***

அவர்களது துரதிஷ்டம், அந்தக் கட்டிடத்தில் பெருமைமிகு பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவரின் கண்களில், ஏதோ உள்ளேயே கட்டப்பட்டிருந்த தனது வீட்டில் திருட வந்தவர்களாகப் பட்டனர். அல்லது நாடு முழுவதும் எழுப்பி விடப்பட்டிருக்கும், பய உணர்ச்சியில் (fear psychosis) தன்னை தாக்க வந்தவர்களாகவும் நினைத்திருக்கலாம்.

‘விடாதே, பிடி அவர்களை’ என்றாராம், தனது காவலர்களிடம்.

இருவரில் ஒருவர் சுதாரிப்புடன் ஓட, மற்றவர் தான் என்ன செய்துவிட்டோம் என்று ஓடவில்லை.

தனது காவலரிடம் ஓடியவரை ‘அவனை சுடு’ என்று உத்தரவிட்டதாகவும், காவலர் தயங்கி மறுத்ததாகவும் தகவல்.

***

பிடிபட்டவரை, அருகிலிருந்த காவல் நிலைய அதிகாரி, மூன்று நாட்கள் தனது காவலிலேயே வைத்திருந்தாராம். கைது செய்யப்பட்டவர் 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பது, முக்கியமான சட்டம்.

காவல் அதிகாரி இரக்கமானவர். பிடிபட்டவரின் உறவினர்களை, ‘ஐயாவைப் பார்த்து இரக்கம் காட்டச் சொல்லுங்கள். அவர் சொன்னால், வழக்கு ஏதும் இல்லாமல் விட்டு விடுகிறேன்’ என்று சொல்லித்தான் மூன்று நாட்கள் வைத்திருந்தாராம்.

ஆண்களாகப் போனால் ‘ஐயா’ கோபப்படுவார் என்பதால், பெண்களெல்லாம் கிளம்பி ஐயாவைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றாலும், ஐயாவை பார்க்க முடியவில்லையாம்.

வேறு வழியில்லாமல், காவல் அதிகாரி, ‘ஐயா வீட்டில் மரச்சாமான்களை திருட சுவரேறிக் குதிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்து’ நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டார். ‘ஐயா வீட்டிலேயேவா’ என்று ஜாமீன் தாக்கல் செய்ய ஆளில்லை. தாக்கல் செய்தவரும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன்னரே தயக்கத்தில் வாபஸ் வாங்கி விட்டாராம்.

***

ஏறக்குறைய ஒரு மாத நீதிமன்ற காவலுக்குப் பிறகு தற்பொழுது பிணை மனு (bail application) தாக்கல் செய்யப்பட்டு, கிடைத்து விட்டது!

நீதிபதி, ‘ஐயா வீடென்றால் பிணை கொடுக்கக் கூடாது என்றா இருக்கிறது?’ என்று வியந்தாராம்!

எனக்கும் வியப்பு, ‘அரசுக் கட்டிடத்தினை பயங்கரவாத தாக்குதலில் இருந்து எப்படிக் காப்பது’ என்று குழை ஒடிக்க வந்த பயங்கரவாதியை முன்னிருந்தி, தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருவதால்...

மதுரை
09.01.09






MUMBAI - PUNE HIGHWAY, DURING MONSOON...

27.12.08

'கஜினி'யும், ஹிட்லர் சொன்னதும்...


கஜினி.....

மும்பை பயங்கரவாத தாக்குதலாலும் அதனைத் தொடர்ந்த தொலைக்காட்சி ஊடகத்தாக்குதல்களாலும் ஏற்ப்பட்டுள்ள விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெளியிடப்பட்டுள்ள திரைப்படம். அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு பின்னர் புதிய பட வெளியீடுகளை ஹாலிவுட்டு நிறுவனங்களே தள்ளிப் போட்டன என்று படித்திருக்கிறேன்.

ஆனாலும், கஜினி தயாரிப்பாளர்கள் நம்புவது, படத்தில் செலவில் சுமார் 30 சதவீதத்தினை முழுங்கிய விளம்பரத்தினை.

சும்மாவா பின்னே...நமது தொலைக்காட்சி ஊடகங்கள் தேசபக்தியை வளர்ப்பதில் மிஞ்சிய நேரத்தை கஜினியை விற்பதில் செலவிடுகின்றன. அந்த ஊடகத்தாக்குதலில், இந்தியர்கள் மறந்து போனது ‘இந்திய திரைப்பட உலகின் மகா தயாரிப்பான (magnum opus) கஜினி’ மெமண்ட்டோ (Memento) என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்’ என்பதை.

இந்த ‘தழுவல்’ என்பது காப்பி என்பதன் நாகரீகமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் இந்திய காப்பி ரைட் சட்டப்படி ‘தழுவுதல்’ (adaptation) என்பதும் ஒரு காப்பிரைட் மீறல்தான். சட்டத்தை தள்ளுங்கள்...தார்மீக உரிமை?

ஐயா, தழுவுங்கள் அல்லது காப்பியடியுங்கள்...ஆனால் தயவு செய்து அதனை ஒத்துக் கொள்ளுங்கள். இணையத்தில் தேடினால்...அமீர் கான் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல், ‘கஜினி மெமண்டோவின் தழுவல் கூட இல்லை’ என்கிறார். இதற்கு பேசாமல், கஜினி பார்க்க காசு கொடுப்பவர்களுக்கு ஆளுக்கொரு செருப்படி கொடுத்திருக்கலாம்.

***

நம்ம ஊர் இயக்குஞர் மணிரத்னம் ‘இந்தியாவின் ஸ்பீல்பெர்க்’ என்று புகழப்படுவதும், கொஞ்சம் சங்கோஜமாகத்தான் இருக்கிறது. ஏனெனில், மற்ற திரைப்படங்களிலுள்ள சிறப்பான காட்சிகளை தழுவுவதும், காப்பிரைட் முறைகேடுதான்

இந்த ஒரு காரணத்திற்காகவே, எந்த ஒரு ராமராஜன் படமும், இந்தியாவின் முக்கிய படங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்ட நாயகன் படத்தை விட சிறந்த படம் என்று என்னால் கூற முடியும்.

கரகாட்டக்காரன் தவிர, ஏனெனில் அது தில்லானா மோகனாம்பாளின் தழுவல்!

***

தமிழகத்தின் தலைசிறந்த திரைப்பட அறிவுஜீவியாக புகழப்படும் கமல்ஹாசன் கூட தனது ‘அவ்வை சண்முகி’ படம் என்பது ஆங்கிலப்பட தழுவல் என்பதை தனது ரசிகர்களுக்கு துணிச்சலாக தெரியப்படுத்தினாரா என்பது தெரியவில்லை.

பிக்காசோவின் எந்த ஒரு ஓவியத்தையும், அசலைப்போலவே உருவாக்கும் ஓவியர்கள் உண்டு. ஆனால் அவர்கள் யாருக்கும் பிக்காசோவின் புகழில் ஒரு சதவீத பங்கினைக் கூட உலகம் அளிப்பதில்லை.

***

இந்தியாவின் முக்கிய திரைப்படமும், மூத்த இயக்குஞரும், முன்னணி நடிகரும் இப்படியென்றால்...என்ன சொல்வது?

நம்மவர்கள் வெள்ளையர்களை விட அறிவில் கொஞ்சம் குறைந்தவர்கள் என்றா?


மதுரை
271208

22.12.08

பயங்கரவாதமும், சட்ட உதவியும்...


மும்பை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ‘பிடிபட்ட தீவிரவாதிக்கு வழக்குரைஞரின் உதவி அளிக்கப்படலாமா, கூடாதா?’ என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டு ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தானாக முன்வந்து மனு தாக்கல் செய்த வழக்குரைஞரின் வீடு சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது.

சிவசேனை தொண்டர்கள், நாட்டுப்பற்றினை தங்களது செயலுக்கு காரணமாக கூறினாலும், அவர்களது கோரிக்கை தொலை நோக்குப் பார்வையில் (in long term) நாட்டு நலனுக்கு சாதகமாக இருக்கப் போகிறதா என்றால், சந்தேகமே!

-oOo-

எந்த ஒரு சட்டமுறையின் அடிப்படை விதி ‘Audi Altrem Partem’ என்பதாகும். இதன் அர்த்தம் ‘இரு தரப்பிரனரையும் கேட்க வேண்டும்’ (hear the other side). இந்த விதியினை மீறி சர்வாதிகாரமென்றாலும் சரி, மக்களாட்சியென்றாலும் சரி ஒரு விசாரணையை நடத்தி விட முடியாது.

எனவே மும்பையில் பிடிபட்ட தீவிரவாதிக்கும் தனது தரப்பு வாதத்தினை வைக்க வாய்ப்பளித்துதானாக வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் வாய்ப்பானது, உண்மையான ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு சட்டமுறையினை அறிந்த ஒரு வழக்குரைஞரின் உதவி தேவை.

அவ்வாறான உதவி வழங்கக் கூடாது என்பது, ஏறக்குறைய ‘விசாரணையே கூடாது. அப்படியே தூக்கில் போட்டுவிட வேண்டியதுதான்’ என்று கூறுவதற்கு சமமானது. பயங்கரவாதத்திற்கு எதிரான வலிமை மிக்க ஆயுதம் சட்டத்தின் முறையே (due process of law) தவிர கங்காரு நீதிமன்றங்கள் இல்லை. அவை உடனடி வலி நிவாரணி போல செயல்படலாம். ஆனால் நோய் தீர்க்கும் மருந்து இல்லை.

குற்றம் சாட்டப்படுபவருக்கு, ஒரு வழக்குரைஞரின் உதவி மறுக்கப்படும் விசாரணை முறையும் உண்டு. அதாவது அலுவலர் (Employee) ஒருவர் மீது எடுக்கப்படும் ஒழுங்கீன நடவடிக்கை விசாரணைகளில் (disciplinary proceedings/ domestic enquiry) வழக்குரைஞரின் உதவியினை ஒரு உரிமையாக கோர இயலாது. ஆனால், நிறுவனம் (Management) ஒரு வழக்குரைஞரை தனக்கு உதவியாக வைத்துக் கொண்டால், குற்றம் சாட்டப்பட்டவரும் (delinquent) வழக்குரைஞரின் உதவியினை உரிமையாக கோர இயலும்.

மும்பை பயங்கரவாதி விடயத்திலும், அரசு தனது வழக்குரைஞர் (Public Prosecutor) மூலம் வழக்கு நடத்துகையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்குரைஞரின் உதவி கூடாது என்றால், அந்த விசாரணை ஒரு கண்துடைப்பாகவே உலகின் கண்களில் பார்க்கப்படும்.

-oOo-


மேலும் இந்த விடயம், விவாதத்திற்குறிய ஒன்றாக வைக்கப்படுவது, ஒரு வழக்குரைஞரின் பணி என்பது சரிவர புரிந்து கொள்ளப்படாத நிலையினையே உறுதிப்படுத்துகிறது என எண்ணுகிறேன்.

நமது நாட்டிலுள்ள சட்ட முறையின்படி ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரருக்காக நீதிமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள்ளாக மட்டுமே வாதிட கடமைப்பட்டவர். ஆனால், தற்பொழுது இங்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளைப் போல, வழக்குரைஞர்கள் தொலைக்காட்சி முன் தங்களது கட்சிக்காரருக்காக பேட்டி கொடுக்கும் ஒரு விரும்பத்தகாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய மூத்த வழக்குரைஞர்கள் கூட இதை உணர்வதில்லை!

நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு வழக்குரைஞர், தனது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று கூறினால், அடுத்த கணமே அவர் அந்த கட்சிக்காரருக்காக ஆஜராகும் உரிமையை இழப்பார் என்பதுதான் உண்மை. தனது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று அவரால் கூற முடியுமென்றால், அவரது கட்சிக்காரர் செய்த செயலைப் பற்றி அறிந்த ஒரு சாட்சியாக மாறுகிறார். அந்த வழக்கில் அவரே ஒரு சாட்சியாக மாறும் பொழுது, அதில் வழக்குரைஞராக நீடிக்கும் அருகதை அவருக்கு கிடையாது. ஆயினும் வழக்குரைஞர்களில் விளம்பர மோகத்தில், இத்தகைய ஒரு போக்கு இங்கு வளர்ந்து வருகிறது.

இவ்வாறாக ஒரு வழக்குரைஞர், கட்சிக்காரரின் நலனுடன் தன்னுடைய நலனினையும் (identifyin with the cause of the client) பொருத்தும் ஒரு நிலையில், இத்தகைய விவாதங்கள் எழுவது இயல்பே!

ஆனால் ஒரு வழக்குரைஞர் என்பவர் சட்ட முறைகளை அறியாத ஒருவருக்காக பின்னணி (அல்லது முன்னணி) குரல் கொடுப்பவர் மட்டுமே.

-oOo-


வழக்குரைஞர்களின் தொழிலை வரைமுறைப்படுத்தும் சட்டம் வழக்குரைஞர்கள் சட்டம் (The Advocate’s Act’1961) இந்த சட்டத்தின் கீழ் வழக்குரைஞர்களுக்கான நடத்தை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன (Standards of Professional Conduct and Etiquette). இந்த விதிகளில் ‘ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரர் செய்த குற்றத்தினைப் பொருத்து தனது சொந்தக் கருத்து எதுவாக இருப்பினும், யாரும் தகுந்த ஆதாரங்கள் இன்றி தண்டிக்கப்படக்கூடாது என்பதை மனதில் வைத்து, தனது கட்சிக்காரரை பாதுகாக்க வேண்டும்’ என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

(15. It shall be the duty of an advocate fearlessly to uphold the interests of his client by all fair and honourable means without regard to any unpleasant consequences to himself or any other. He shall defend a person accused of a crime regardless of his personal opinion as to the guilt of the accused, bearing in mind that his loyalty is to the law which requires that no man should be convicted without adequate evidence)

இனியும், பயங்கரவாதிக்கு வழக்குரைஞர் உதவி கூடாது என்பது, நமது நாடு எவ்விதமான சட்ட முறைகளினால் உலகின் கண்களில் உயர்ந்து நிற்கிறதோ, அதற்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு வாதமே என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

-oOo-

இறுதியில், இந்த விடயத்தில் சுப்பிரமணியசுவாமி கூறிய ஒரு கருத்து கவனிக்கத்தக்கது. ‘பிடிபட்டவரை வெளிநாட்டு எதிரி (enemy alien) என்று அறிவித்து விடுங்கள். அவ்வாறு அறிவித்து விட்டால் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் (Constitution of India) பிரிவு 22(1)ன்படி குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தனக்கு பிடித்தமான வழக்குரைஞரை நியமித்துக் கொள்ளும் உரிமையினை பிடிபட்டவருக்கு மறுத்து விடலாம்’ என்பதாகும்.

உண்மைதான். ஆயினும் இதன் மூலம் பயங்கரவாதி தனது வழக்குரைஞரை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையினை மறுக்கலாம். ஆனாலும், அரசு அவருக்காக ஒரு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும். வழக்குரைஞரின் உதவியே கூடாது என்று கூற முடியாது!

அது இயற்கை விதிக்கு (Natural Justice) மாறானது!

மதுரை
221208

26.11.08

சட்டக்கல்லூரி வன்முறையும் சாருநிவேதிதாவும்...


இந்திரா காந்தி இறந்த செய்தி, கடைசியாக தெரிய வந்த இந்தியர், எம்ஜிஆராகத்தான் இருக்க முடியும் என்று கூறுவார்கள். அதுபோல சமீபத்தில் சென்னை சட்டக்கல்லூரில் நடைபெற்ற மோதலின் முழுவீச்சினையும் உணர்ந்த கடைசித்தமிழனாக இருக்கக்கூடிய வாய்ப்பு, எனக்கு கிடைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஏனெனில், அடுத்த நாள் வழக்குரைஞர் சங்க கூட்டத்தில் இந்த விடயத்தின் மீதான விவாதத்தில் மற்றவர்கள் பேசிய பொழுதுதான், விடயம் மிகச் சேரியமானது என்பது எனக்கு விளங்கியது.

காலையில் செய்தித்தாள்களில் படங்களைப் பார்த்தாலும், வழக்கமாக நாம் கல்லூரியில் கேள்விப்படும் வன்முறைதானே என்றிருந்தது. வழக்குரைஞர் சங்கத்தில் ஈழத்தமிழர் பிரச்னையைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூட்டத்தைக் கூட்டியிருந்தோம். ஆனால், அதை விட்டுவிட்டு, கல்லூரி வன்முறையினைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்த பொழுது, இதற்காக ஒரு கூட்டமா என்று நினைத்தேன்.

அப்பொழுதுதான், எனது நண்பர், வன்முறை முழுவதும் திரைப்படம் போல தொலைக்காட்சிகள் காட்டப்பட்ட விபரத்தினைக் கூறினார். பின்னர் மாலை வந்து மீண்டும் ஒருமுறை பத்திரிக்கையில் வந்த படங்களைப் பார்த்த பொழுது, ஓரளவுக்கு என்னால் அதனை ஒரு சலனப்படமாக கற்பனை செய்ய இயன்றது.

ஆயினும் இன்று வரை, மிகப்பெரிய ‘கொடூர’மென்று தமிழகமே பொங்கிப் பொருமினாலும் என்னால், அதில் பங்கு கொள்ள இயலவில்லை.

அஞ்சா நெஞ்சருக்கு மீண்டும் நன்றி!

-oOo-


சில வருடங்களுக்கு முன்னர், கும்பகோணத்தில் பள்ளிக்குழந்தைகள் எரிந்து மடிந்து போன விடயம், முதலில் தெரிய வந்த பொழுது மும்பையில் எனது அலுவலத்தில் இருந்தேன். யாஹூ குழும மடல் மூலமாக. அப்பொழுது அங்கு தனியாக இருந்தேன். உடனடியாக நான் எடுத்த முடிவு, தொலைக்காட்சி பக்கமே செல்லக்கூடாதென. பின்னர் இரண்டு வாரங்களுக்கு குறுந்தகட்டில் படங்கள் பார்ப்பதோடு மட்டுமே டிவியுடனான எனது தொடர்பினை வைத்துக் கொண்டேன்.

இதை எழுதுகையில் எனக்கு ஆங்கிலத்தில் ‘mediacracy’ என்ற வார்த்தையினை உருவாக்கலமா என்ற எண்ணம் பிறந்தது. கூகுளில் தேடினால் அது ஓர் அங்கீகரிக்கப்பட்ட வார்த்தையாக உருவாகி பல ஆண்டுகள் கடந்திருக்கும் போல. Mediarchy என்ற வார்த்தையும் உருவாகியிருப்பதும் புரிந்தது.

-oOo-


சட்டக்கல்லூரி வன்முறை பற்றி எழுத்தாளர் சாருநிவேதிதாவும் எழுதியிருக்கிறார். தவறில்லை யார் வேண்டுமென்றாலும் எழுதலாம். ஆனால், பில் கிளிண்டன் அதிபராக இருந்த பொழுது சாலை விதிகளை மீறி விட்டார் என்று அவரது மகளின் ஓட்டுநர் உரிமம் (‘தமிழ்’ எழுத்தாளரின் மொழியில் டிரைவிங் லைசன்ஸ்) பறிக்கப்பட்டதாக ஒரே போடாக போட்டிருக்கிறார். நான் அறிந்த வரையில் அதிபர் புஷ்ஷின் மகளின் உரிமம் தற்காலிகமாக தடை (suspend) செய்யப்பட்டது. அதுவும் சாலை விதிகளை மீறியதற்காக அல்ல...

தனது எழுத்தினை படிப்பதற்கு காசு வேண்டும் என்று கேட்பவர்கள், கூறும் விடயங்களில் கொஞ்சம் கவனம் எடுப்பது நல்லது. லத்தீன் அமெரிக்கா என்றால் பரவாயில்லை. இங்கு யாருக்கும் தெரியாது. வட அமெரிக்க செய்திகள்தான் விலாவாரியாக படிக்கக் கிடைக்கிறதே!

-oOo-
மதுரை
261108

25.10.08

நன்றி, அஞ்சா நெஞ்சர்களுக்கு...

மும்பையிலிருந்து மதுரைக்கு வருவதற்கு முன்பு, நாங்கள் எடுத்த ஒரு முக்கிய முடிவு, தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்பு ஏதும், ஒரு வருடத்திற்காகவது பெறக்கூடாது. தொலைக்காட்சி இல்லாத வீடு எப்படித்தான் இருக்கிறது என்று பார்த்து விடலாம் என்று.

உண்மையிலேயே இனிமையான காலம் அது! காலை பாடலைக் கேட்டபடியே அலுவலகம் கிளம்ப முடிந்தது. விடுமுறை தின இரவுகளில், குறுந்தகடுகளில் நல்ல திரைப்படங்களை பார்த்து முடித்ததும், அதே நினைவுடன் படுக்கைக்கு செல்ல முடிந்தது.

முக்கியமாக வீட்டுக்கு வருபவருடன் முகம் பார்த்து பேச முடிந்தது...

-oOo-

டிசம்பர் மாதம் தமிழகத்தை தாக்கிய சுனாமி எங்களை அண்டவில்லை. பத்திரிக்கையில் படித்த செய்திகளோடு நின்று போனது சுனாமியின் தாக்கம். மனதைப் பிசையும் காட்சிகள் கண் முன்னே நிற்கவில்லை.

ஆனாலும் சுமார் ஒரு வருடம் கழித்து தற்செயலாக எடுத்த முடிவுதான்...கேபிள் இணைப்பு பெறலாம் என...மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டது, சனியன்!

-oOo-

நேற்று மாலை வீடு திரும்புகையில், சுற்றுச்சுவர் கதவும் பூட்டியிருந்தது.

“ஆமா, ராயல் கேபிள் விஷனில் இருந்து வருகிறோம், இனி அவர்களிடம்தான் இணைப்பு பெற வேண்டும் என்று தொந்தரவு செய்தார்கள். அதான்”

“நம்ம ஆட்கள் என்ன சொல்கிறார்கள்”

“அவங்கல்லாம் இப்பத்தான், ரிமாண்ட்ல இருந்து வந்தாங்களாம். எல்லோரையும் போலீஸ் புடிச்சுக்கிட்டு போயிட்டாங்களாம். நீங்க டிடிஹெச் வாங்கிட்டீங்கன்னு சொல்லுங்கன்னு சொல்றாங்க”

“ஆமா, அப்படியே சொல்லிடு”

-oOo-

சிறிது நேரம் கழித்து, வேகமான வந்த மனைவி, ‘வெளியே நிறுத்தி வச்சிருந்த ஸ்கூட்டரில் என்னோட பர்ஸ வச்சிட்டு வந்திட்டேன். இப்ப காணோம்...மொபைல் போனும் போச்சி...அந்த ராய்ல் டிவிகாரங்கதான் தூக்கிட்டு போயிருக்கணும்”

உண்மைதான், எங்கள் வீடு டெட் எண்ட். வேறு யாரும் வருவதில்லை.


-oOo-

“கேபிளை கட் பண்ணிட்டாங்க. இனிமேல் நமக்கு வராது. அவங்கதான் ராயல்காரங்கதான்...”

இது வரை பத்திரிக்கையில் படித்தும், மற்றவர்கள் சொல்லக்கேட்டதுமான அராஜகம் இதோ என் கண் முன்னே எழுந்து நிற்க, ஏதும் இயலாதவனாகிப் போனவன் போல உணர்ந்ததில், பிறந்த அசதியிலும் அந்த வைராக்கியம் பிறந்தது.

“நமக்கு ஒருத்தனும் வேண்டாம்”

மதுரை
261008





Eravikulam National Park, Munnar

வைகோ கைது - அன்றும், இன்றும்...


ஏன் இவ்வாறு ஒரு நாட்டின் பிரதமரில் இருந்து கடைசிக் குடிமகன் வரை சட்டத்தை மீறும் நிலை ஏற்படுகிறது? ஏன் ஒரு மத்திய அமைச்சரே 'நான் தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தினை இருபத்தைந்து முறை ஆதரித்துள்ளேன்' என்று கூற தைரியம் கொள்கிறார்?”

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதை சட்டம் போட்டு தடை செய்ய முயலும் அரசு ஒன்றினை மறந்து விட்டது. ஏதோ இந்த சட்டம் போட்டதால் மக்கள் ஆதரவளிப்பதிலிருந்து விலகவில்லை. அதற்கு முன்னரே நடந்த ராஜீவ் காந்தி கொலையே பெருமளவு காரணம். அந்த கொலையால் மக்களிடம் தோன்றிய பொதுக்கருத்தின் விளைவே விடுதலைப்புலிகள் இயக்கம் இங்கு தடை செய்யப்பட்டது. அந்த மக்களுக்கு தங்களது சிந்தனையில் அதே நிலையில் நீடிப்பதற்கும் காலப்போக்கில் மாற்றிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது



வைகோ தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், நான்கு வருடங்களுக்கு முன்னர் இட்லி வடை என்ற பதிவர் தனது வலைப்பதிவில் எழுதிய கருத்துகளுக்கு பதிலாக எழுதிய ஒரு கட்டுரையை மீண்டும் எடுத்துப் படித்தால்...இன்றைய சூழ்நிலையில் ஏதும் மாற்றம் இல்லை.......மக்களிடையே நான் கணித்த மனமாற்றம் தவிர...

அந்த பழைய கட்டுரை எனது வலைப்பதிவிலும் உள்ளது
http://marchoflaw.blogspot.com/2006/10/ii.html
http://marchoflaw.blogspot.com/2006/09/i.html


மதுரை
251008

24.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 4


அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு (pardon) அளிப்பதற்கு குடியரசுத்தலைவர் மற்றும் மாநில அளுனர்களுக்கு உள்ள அதிகாரம் தவிர, அரசாங்கத்திற்கு தண்டனையைக் குறைக்கும் (commute) அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 433ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தினை பயன்படுத்தி, அரசு நினைக்கையில் நளினிக்கோ அல்லது சராதானந்தாவுக்கோ தண்டனனயை குறைக்கலாம். இங்கு நாம் விவாதிக்கும் தீர்ப்பு, அரசின் இந்த அதிகாரத்தின் குறுக்கேயும் நிற்க முடியாது. ஏனெனில், நீதிபதிகள் அரசின் இந்த அதிகாரத்தினைப் பற்றி தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டாலும், அரசு இந்தப் பிரிவு அளிக்கும் அதிகாரத்தினைப் பயன்படுத்தி தண்டனையை குறைக்க இயலாது என்றும் கூறவில்லை.


குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இதே அதிகாரம் இந்திய தண்டனன சட்டம் பிரிவு 54 மற்றும் 55ன் கீழும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் பிரிவு 433Aன் படி ஒருவரின் மரணதண்டனையானது ஆயுள் தண்டனையாக இந்தப் பிரிவின்படி குறைக்கப்பட்டால், அவர் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறையில் கழிக்காமல் விடுதலை பெற முடியாது. இந்த 14 ஆண்டு கட்டுப்பாடே ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள்தான் என்ற தவறான எண்ணம் சாதாரண மக்களில் மனதில் தோன்ற காரணம்.


-oOo-


குற்றவாளிக்கு மன்னிப்பு மற்றும் தண்டனை குறைப்பு தவிர தண்டனை தள்ளுபடி (remission) என்பதும் உள்ளது. குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 432ன் படி குற்றவாளியானவர் தனது தண்டனையினை தள்ளுபடி செய்ய கோரலாம். இந்த தள்ளுபடியானது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மட்டுமல்லாமல், சிறை விதிகள், மற்றும் பிற விதிமுறைகளின்படியும் கோரலாம்.


இவ்விதமான தள்ளுபடிகளை கணக்கிட ஒருவரது சிறைக்காலம் அறுதியிட்டாலே இயலும். உதாரணமாக, ஒருவருக்கு ஐந்தாண்டுகள் தண்டனை என்றால், ஆண்டுக்கு இத்தனை நாட்கள் என அவருக்கு விதிகளின்படி கிடைக்கும் தள்ளுபடியினை கணக்கிட்டு விடலாம்.


ஆனால் ஆயுள்தண்டனை என்பதில் தள்ளுபடி அளித்தாலும், ஆயுள் தண்டனை ஆயுள் தண்டனையாகவே இருக்கும். கணிதத்தில் ‘இன்பினிட்டி’ (infinity) போல. இதைத்தான் நீதிபதிகள் சுட்டிக்காட்டி ஆயுள் தண்டனைக்கு தள்ளுபடி என்பது கிடையாது என்று குறிப்பிடுகிறார்கள்.


பொதுவாக, அரசு ஆயுள் தண்டனையினை 20 ஆண்டு காலம் என்று கருதி ஒரு உத்தரவு பிறப்பித்து பின்னர் 20 ஆண்டுகளுக்கான தள்ளுபடிகளை கணக்கிடுகிறது. 20 ஆண்டுகளுக்கு சுமார் 6 காலம் அதிகபட்சம் தள்ளுபடி கிடைக்கும். இவ்வாறான முறையில்தான் அரசு ஆயுள் தண்டனை பெற்ற நபர்களை 14 ஆண்டுகளில் விடுதலை செய்கிறது. அதனால்தான் கோட்சே, நளினி போன்றவர்கள் தாங்கள் 14 ஆண்டு காலம் சிறையில் கழித்து விட்டதால் விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்.


இந்த முறையினையே உச்ச நீதிமன்றம் சராதானந்தாவின் வழக்கில் தவறு என்று கூறுகிறது. அதாவது அரசு எவ்விதம் இவ்வாறு ஆயுள் தண்டனை என்பது 20 வருடம் என கருதுகிறது என்ற கேள்வியினை எழுப்பி அதற்கு சட்டபூர்வமான அதிகாரம் இல்லை என்கிறது.


இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 57ல் தண்டனையை வகுக்கும் தேவை நேர்ந்தால் ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் என கணக்கிடலாம் என்று உள்ளது. உதாரணமாக பிரிவு 511ன் படி ஏதாவது குற்றத்தினை செய்ய முயன்றால் அந்த குற்றத்திற்கான தண்டனையில் பாதி தரலாம் என்று உள்ளது. அதே போல ஒருவர் குற்றம் செய்ய தூண்டி (abet) பின் அந்த குற்றம் செய்யப்படாமல் போனாலும், தூண்டியவர் அந்தக் குற்றத்திற்கான தண்டனையில் கால் பகுதி தரலாம் என்று பிரிவு 116 கூறுகிறது. இம்மாதிரி காரணங்களுக்காகவே 20 வருட கணக்கே தவிர ஆயுள் தண்டனை 20 ஆண்டு என்று எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அந்தக் கருத்து சரியானதே!


ஆயினும் நீதிமன்றம் கவனிக்கத் தவறிய ஒரு விடயம், இன்றுள்ள நிலையிலேயே, அரசு குற்றவாளியின் ஆயுள் தண்டனையினை 20 ஆண்டு கால தண்டனையாக கருதி (deem) அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தாலொழிய குற்றவாளி மேலும் தள்ளுபடி பெற்று வெளிவர இயலாது. எனவே அவ்வாறு இல்லாமல் அரசு ஆயுள் தண்டனையினை 20 ஆண்டுகால தண்டனையாக குறைத்தால், தள்ளுபடி சாத்தியமாகலாம். இரண்டு உத்தரவிற்கும் அரசு மனது வைக்க வேண்டும்.


இதன் விளைவு, அவ்வாறு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென்று ஒருவர் அரசை நிர்பந்திக்க முடியாது. அரசு மனது வைத்தால்தன் இவை இயலும். எனவே ஆயுள் தண்டனை பெற்றவர் மன்னிப்போ அல்லது தண்டனை குறைப்போ பெறுவது அவரது உரிமையல்ல என்பது போலவே தோன்றுகிறது.


அவ்வாறு என்றால், அடிப்படையில் சராதனந்தாவின் தீர்ப்பு புதிதாக எதனையும் கூறவில்லை என்றுதான் கூற வேண்டும். சாகும் வரை வெளியில் விடக்கூடாது என்ற கட்டளையும் தேவையில்லாத ஒன்று. ஏனெனில், குற்றவாளியை விடுதலை செய்ய அரசு நினைக்கையில் தனது மன்னிக்கும் அல்லது தண்டனைக்குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து விடலாம்.


அதே போல வழக்கில் நீதிபதிகள் முக்கிய பிரச்னையாக எழுப்பிய மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனையை சாதாரண ஆயுள் தண்டனையிலிருந்து வேறு படுத்த முடியுமா? என்ற கேள்வியும் அர்த்தமற்றதாகி விடுகிறது. எந்த ஒரு ஆயுள் தண்டனைக்குமே, நீதிபதிகளின் கருத்துப்படி தள்ளுபடி வழங்க இயலாது என்பதால், அனைத்து ஆயுள் தண்டனைகளும் அரசு மனது வைக்கும் வரை ஆயுள் வரைக்குமே!


-oOo-


ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டு காலம் என்பது அல்ல என்றாலும், பல முறை உச்ச நீதிமன்றம் குற்றவாளியை குறைந்தது 20 ஆண்டு காலமாவது சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அவற்றை தங்களது தீர்ப்புக்கு ஆதரவாக நீதிபதிகள் எடுத்துக் கொள்கின்றனர். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் வரை என்று கூறிய பிறகு, நீதிமன்றம் சாகும் வரை என்பதோ அல்லது 20 ஆண்டு காலம் என்பதோ, அரசுக்கு ஒரு அறிவுறுத்தல் என்றே எடுத்துக் கொள்ள இயலும்.


உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சாகும் வரை விடுவிக்கக் கூடாது என்று இரு வழக்குகளில் கூறியுள்ள தீர்ப்புகளும் சுட்டிக்காட்டப்படுகிறது. முதலாவது வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனைதான் என்று நீதிபதிகள் மனதளவில் தீர்மானித்து விட்ட நிலையில், அவர் சாகும் வரை சிறையிலேயே இருக்க தயாராக இருக்கிறார் என்ற வாதம் வைக்கப்பட அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஏறக்குறைய ஒரு சமரசத்தீர்வு போல அவருக்கு எவ்வித தள்ளுபடியோ அல்லது தண்டனைக் குறைப்போ தரக்கூடாது என்று தீர்ப்புக் கூறியுள்ளது (சுபாஷ் சந்தர் எதிர் கிருஷ்ணன் லால் (2001) 4 SCC 458). தள்ளுபடி சரி தண்டனைக்குறைப்பு பற்றி நீதிமன்றம் கூறியுள்ளது எவ்வளவு தூரம் சரியானது என்று தெரியவில்லை. ஏனெனில், தண்டனைக்குறைப்பு அளிக்க அரசு குற்றவாளியின் அனுமதியை பெற வேண்டியதில்லை. எனவே அவர் தனக்கு தண்டனைக் குறைப்பு தேவையில்லை என்று கூறியுள்ள போதிலும் அரசு தனது அதிகாரத்தினை பயன்படுத்தலாம். இன்னும் ஒரு பத்தாண்டுகள் கழித்து கிருஷ்னலால் தீராத நோயினால் பெரும் அவதிப்படுகிறார். அவரை விடுதலை செய்வதே மனிதாபிமானம் என்று அரசு நினைக்கையில் நீதிமன்ற தீர்ப்பு அதற்கு எவ்வளவு தூரம் தடையாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


ஆயினும் இவ்வாறான உத்தரவு மனித உரிமைக்கு எதிரானதா என்ற கேள்வி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது. ஜெயவந்த் தத்தராய சூர்யராவ் எதிர் மகராச்டிரிய அரசு (2001) 10 SCC 109 என்ற வழக்கிலும் இவ்வாறு ஒரு தண்டனை வழங்கப்பட, தூக்கிலிருந்து தப்பித்தாயிற்று என்று அப்பொழுது தண்டனையினை ஏற்றுக் கொண்ட சுபாஷ்சிங் தாக்கூர் தற்பொழுது அந்த தண்டனை தவறு என்று நீதிப்பேராணை (writ) மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகையில் மீண்டும் இந்தப் பிரச்னைகள் மறு ஆய்வு செய்யப்படும்.


-oOo-


ஆனால் இங்கு முக்கியமான வித்தியாசம், நளினிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கவில்லை. குடியரசுத் தலைவரின் மன்னிப்பு! சராதானந்தா உட்பட மற்றவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்குகையிலேயே இவ்வாறு தள்ளுபடி கிடையாது என்று கூறியுள்ளது. நளினிக்கு அவ்வாறான எவ்வித கட்டுப்பாடும் கிடையாது...


ஆயினும், தள்ளுபடி என்பது எந்த ஆயுள்தண்டனைக்கும் கிடையாது என்பதுதான் சராதானந்தாவின் தீர்ப்பில் இருந்து நாம் அறிவது. எது எப்படியோ, நளினி வெளியே வர வேண்டுமென்றால் அரசு மனது வைக்க வேண்டும். தள்ளுபடி என்பது மேற்கண்ட தீர்ப்பின் மூலம் பிரச்னைக்குறிய ஒன்று. அரசு அவரது தண்டனையை குறைப்பதுதான் வழி...


இல்லை, நளினிக்கு காட்டப்பட்டதாக கூறப்படும் கருணை, உண்மையில் ஒரு கானல் நீரே!


மதுரை
24.10.08

16.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 3


ஆயுள் தண்டனைக்கான அர்த்தம், குற்றவாளியின் ஆயுள் வரைதான் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 45 ஆயுள் என்பது ஒரு மனிதனின் ஆயுளைக் குறிக்கும் என்று விளக்கமளிப்பதிலிருந்து ஆயுள் தண்டனை என்பதற்கு வேறு எவ்வித விளக்கமும் கூற இயலாது.

இதையே மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே தன்னை 14 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்க வேண்டுமென்று கோரிய பொழுது உச்ச நீதிமன்றம் கூறியது. (கோபால் விநாயக் கோட்சே எதிர் மகாராஷ்டிர அரசு AIR 1961 SC 400). ஆனால் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையில் தள்ளுபடி (remit) அளிப்பதற்கு அரசிடம் உள்ள அதிகாரத்தினை ஒத்துக் கொண்டே அந்த தீர்ப்பினை அளித்தது.

கோபால் கோட்சே அடுத்த ஆண்டே அரசால் விடுதலை செய்யப்பட்டார் என்பது வேறு கதை!


-oOo-


ஆனால் தற்பொழுது சக்கீராவின் வழக்கில், கோபால் கோட்சே வழக்கின் தீர்ப்பினைப் பற்றி ஆய்ந்த நீதிபதிகள், சில வகையான ஆயுள் தண்டனைகளுக்கு இவ்வாறு அரசு தண்டனையிலிருந்து தள்ளுபடி செய்யும் அதிகாரத்தினை செலுத்தவிடாமல் உண்மையிலேயே ஆயுள் முழுமைக்கும் என்று மாற்ற வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்துகின்றனர். அதாவது, மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனைகளுக்கு அவ்வாறு தள்ளுபடி வழங்குதல் கூடாது என்கின்றனர்.

மரணதண்டனைக்கு மாற்றான ஆயுள் தண்டனை என்று ஒன்று குற்றவியல் சட்டங்களில் இல்லை எனலாம். இந்த தீர்ப்பின் ஆரம்பத்திலேயே, நீதிபதிகள் மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனையினை மற்ற சாதாரண ஆயுள் தண்டனையிலிருந்து வேறு படுத்த இயலுமா என்பதுதான் இந்த வழக்கில் உள்ள் பிரச்னை என்றே ஆரம்பிக்கின்றனர்.

தவறு இங்கேயே ஆரம்பிக்கிறது. ஒரு குற்றத்திற்கு மரண தண்டனை என்றால் மரண தண்டனைதான். மரண தண்டனை வழங்க வேண்டிய வழக்கில் ஆயுள் தண்டனை வழங்க இயலும் என்றால், அது அனைத்து மரண தண்டனை கைதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இல்லை அம்னெச்டி இண்டர்நேசனலின் ‘மரணதண்டனன என்பது இங்கு ஒரு லாட்டரி’ என்ற குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றமே ஒத்துக் கொள்வது போல ஆகிவிடும்!

கீழமை நீதிமன்றத்தில், ஆயுள் தண்டனை வழங்க வேண்டிய குற்றத்திற்கு மரண தண்டனை தவறுதலாக வழங்கப்பட்டு அதனை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றுவது ஏதோ கருணைப் பிச்சையல்ல. மாறாக அது குற்றவாளியின் உரிமை!

கீழமை நீதிமன்றம் செய்த தவறுக்காக, குற்றாவாளிக்கு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்படும் ஆயுள் தண்டனையினை மற்ற ஆயுள் தண்டனையிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது என்பது தர்க்க ரீதியில் மட்டுமல்ல, தார்மீக ரீதியிலும் சரியான ஒரு செயலல்ல என்பதே எனது கருத்து.


-oOo-


நீதிபதிகள், இவ்வாறு தள்ளுபடி இல்லாமல் ஒருவரை ஆயுள் முழுமைக்கும் சிறையில் வைத்திருப்பதற்காக கூறும் மற்றொரு கருத்தும் கவனிக்கத்தகுந்தது. அதாவது, ஒரு குற்றத்தின் தன்மையானது மரண தண்டனை வழங்குவதற்கு சற்று குறைவாக இருக்கிறது. அவ்வாறான சூழ்நிலையில் 14 ஆண்டுகள் என்பது மிகக் குறைவான தண்டனையாக கருதும் நீதிபதி, மரண தண்டனை அளிக்க தூண்டப்படலாம். எனவே இவ்வாறு 14 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளியினை சிறையில் வைத்திருக்கும் வண்ணம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், இங்கு நீதிபதிகள் கவனிக்க தவறுவது, ‘மக்களாட்சி அமைப்பில், நாகரீகமான குற்றவியல் முறையில், நீதிமன்றத்தின் பணியானது குற்றவாளி செய்த குற்றத்திற்கு அதிகபட்சம் இந்த அளவிற்கு தண்டிக்கலாம் என்று நிர்வாகத்திற்கு அனுமதி வழங்குவதோடு நின்று விடும்’ என்பதே!

குற்றத்திற்கு தண்டனை வழங்குவது என்பது, சமூகத்தின் ஒழுங்கினை குற்றச்செயல்களில் இருந்து பாதுகாப்பதற்கே!. அதற்காக குற்றவாளியை எவ்வளவு தூரம் தண்டிக்கலாம் என்பது மக்களோடு நேரடித் தொடர்பில் உள்ள நிர்வாகம் மற்றும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களின் மனக்கவலை.

எனவே நீதிமன்றங்கள் இவ்வளவு தூரத்திற்கு நீங்கள் தண்டித்துக் கொள்ளலாம் என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில்தான் குற்றவியல் நடைமுறைச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.


-oOo-


சில குற்றவாளிகளை நீதிமன்றம் அனுமதித்த அதிகபட்ச அளவில் தண்டிக்கவும், சில குற்றவாளிகளை விடுதலை செய்வதிலும் அரசிற்கு உள்ள தேவைகளை உணர்ந்தே, நமது அரசியலமைப்புச் சட்டத்திலேயே குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுநருக்கும் குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. (பிரிவு 72 மற்றும் பிரிவு 161).

இந்த அதிகாரமானது, அரசியலமைப்புச் சட்டத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளதால், இவற்றை உச்ச நீதிமன்றம் பறிக்க இயலாது. ஷக்கீரா தீர்ப்பிலும் நீதிபதிகள் ‘இந்த தீர்ப்பானது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரத்தினைப் பற்றியதல்ல (Here it needs to be made absolutely clear that this judgment is not concerned at all with the Constitutional provisions that are in the nature of the State's sovereign power) என்று 56ம் பத்தியில் தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.

எனவே அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் அதிகாரத்தினைப் பயன்படுத்தி நளினியை அல்லது சராதானந்தாவை விடுதலை செய்ய அரசு முடிவெடுக்கையில் உச்ச நீதிமன்றத்தினால் அதனை தடுக்க இயலாது.

அரசியலமைப்பு சட்டம் சரி, குற்றவியல் நடைமுறை சட்டத்தில் அரசிற்கு உள்ள அதிகாரத்தினை இந்த தீர்ப்பின் மூலம் பறிக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி...


-oOo-


மதுரை
16.10.08