Showing posts with label Times of India. Show all posts
Showing posts with label Times of India. Show all posts

15.12.11

டைம்ஸ் ஆப் கேரளா = 100 கோடி = முன்னாள் நீதிபதி!


தலைவலியும் வயித்து வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும், என்பது எத்தனை அருமையான பழமொழி!

சமீபத்தில்தான் கபில் சிபல், மற்றவர்களது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், சோனியா, மன்மோகன்சிங் ஆகியோர் பற்றி அவதூறாகவும் இணையம் எங்கும் பரவிக்கிடக்கும் விடயங்களை கட்டுபடுத்த முயற்சிக்கையில் அனைத்து இணைய பயன்பாட்டார்களாலும், பத்திரிக்கைகளாலும் விளாசித் தள்ளப்பட்டார்.

அவ்வாறு பேச்சு சுதந்திரத்திற்கு (freedom of expression) கொடி பிடித்து வந்ததில் டைம்ஸ் ஆப் இந்தியாவும் முன்னணியில் இருந்தது.

ஆனால், அந்த சூடு ஆறுவதற்கு முன்னதாகவே, டைம்ஸ் ஆப் இந்தியா தான் அவதூறு செய்யப்பட்டுள்ளதாக கூறி, 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கையின் சிறப்பு நிருபராகிய ராதிகா கிரி என்பவருக்கும் சம்பந்தப்பட்ட அவரது கட்டுரை வெளியான ‘வீக் எண்ட லீடர்’ என்றவலைத்தளத்திற்கும் அறிவிப்பு அனுப்பியுள்ளது.


ராதிகா கிரி தனது கட்டுரையில், சென்னையில் செயல்படும் ஆங்கிலப்பத்திரிக்கைகளில் முக்கியமாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் எப்படி மலையாளிகளின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது என்றும், அதனால் அவை முல்லைப் பெரியார் பிரச்னையில் கேரள அரசு சார்பாக செயல்படுகின்றன என்றும் எழுதியுள்ளார். முல்லைப் பெரியாரை ‘முல்லபெரியார்’ என்ற மலையாளஉச்சரிப்பில் ஆங்கில் ஊடகங்கள் எழுதுவதை ஒரு எளிய உதாரணமாக குறிப்பிடும் ராதிகா,டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலம் ‘ஓண’த்திற்காக அலங்கரிக்கப்பட்டாலும், தமிழ் புதுவருடம்கொண்டாட அனுமதிக்கப்படவில்லை என்பதிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களை தனது கட்டுரைக்குஅடிப்படையாக குறிப்பிடுகிறார்.

ஒரு அலுவலகத்தில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஒரு பத்திரிக்கையாளரின் மனதில் எழும் எண்ணப்பாட்டினை (perception) கட்டுரையாக வடித்துள்ளார், ராதிகா கிரி.

இதுதான், தம்மை அவதூறு செய்துள்ளதாகவும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு உலை வைத்துள்ளதாகவும், இரு மாநில மக்களிடையே விரோதத்தை தூண்டியதாகவும் கூறி முதலில் ஒரு கோடி கேட்டு அறிவிப்பு அனுப்பிய டைம்ஸ்தனது இரண்டாவது அறிவிப்பில் 100 கோடி கேட்டுள்ளது.

பேச்சு சுதந்திரத்தை தூக்கிப் பிடித்துள்ளதாக கூறும் பத்திரிக்கையாலேயே, இந்த ஒரு சாதாரண அவதூறை தாங்க முடியவில்லை என்றால், தனது கட்சியின் தலைவியை கீழ்த்தரமாக சித்தரிக்கும் வலையெழுத்து மீது, ஒரு அரசியல்வாதி கபில் சிபல் நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவதை எப்படி நாம் விமர்சிக்க முடியும்!

-oOo-

டைம்ஸ் ஆப் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு ஒரே ஒரு விளக்கம்தான் (justification) கொடுக்க முடியும். அதற்கு உடனடியாக ரூ.100 கோடி தேவைப்படுகிறது. தான் அவதூறு (?) செய்த வேறு ஒரு நபருக்கு நஷ்ட ஈடாக டைம்ஸ் 100 கோடி கொடுக்க வேண்டியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் முதற்கொண்டு பல்வேறு நீதிபதிகளுக்கு பங்கிருப்பதாக சொல்லப்பட்ட புராவிடண்ட் பண்டு ஊழல் பற்றிய செய்தியொன்றில், டைம்ஸ் குழும தொலைக்காட்சியான டைம்ஸ்நவ், முன்னாஸ் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவராக பணியாற்றியவருமான பி.பி.சாவந்த் படத்தினை சில விநாடிகள், தவறுதலாகத்தான் ஓட விட்டது.


அதனால் தான் அவதூறு செய்யப்பட்டதாக கூறி சாவந்த் வெகுண்டெழுந்தார். டைம்ஸ் நவ் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அதனை தனது தொலைக்காட்சியிலும் தெரிவித்தது. சாவந்த பெருந்தன்மையாக விட்டிருக்கலாம். டைம்ஸ் குழுமம் மீது புனே நீதிமன்றத்தில் 100 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

புனே நீதிமன்றம், வழக்கின் இறுதியில் டைம்ஸ் குழுமத்தை சாவந்திற்கு 100 கோடி நஷ்ட ஈடாக கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. இவ்வளவு பெருந்தொகை, சட்டமுறை அறிந்த அனைத்து நியாய் உணர்வுகளுக்கும் எதிரானது என்பதுதான் சட்ட வல்லுஞர்களின் கருத்தாக இருக்க முடியும். புனே நீதிமன்றம்தான் இப்படியென்றால் அதற்குப் பின்னர் ந்டந்ததுதான் வேடிக்கை!


டைம்ஸ் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. மேல்முறையீடு முடியும் வரை புனே நீதிமன்ற தீர்ப்பினை இடைக்கால தடை செய்ய வேண்டிய மனுவில், உய்ர்நீதிமன்றம் 20கோடியை தொகையாக வைப்பீடு செய்ய வேண்டுமென்றும் மீதி 80 கோடிக்கு வங்கி உத்தரவாதம் (Bank Gurantee) கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. வங்கி உத்தரவாதம் என்பது, அந்த தொகையை வைப்பீடு செய்வது போலத்தான். வேறு வழியில்லாமல் டைம்ஸ் உச்ச நீதிமன்றம் சென்றால், மும்பைஉயர்நீதிமன்றம் கூறியது சரிதான் என்று மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மூன்று நீதிமன்றங்களுமே, இதுவரை பழக்கத்தில் உள்ள சட்ட நடைமுறைகளின்படி நடந்து கொள்ளவில்லை என்பது உரிமையியல் வழக்குகளில் பரிச்சயமுள்ள யாரும் கூறுவர். அவதூறுக்கு இத்தனை பெரிய இழப்பீடு என்பது, நீதிமன்ற தீர்ப்புகளை கேலிக்கூத்தாக்கி விடும். ராஜீவ் கொலை வழக்கில் 26 குற்றவாளிகளுக்கும் தூக்குத்தண்டனை கொடுத்தது போலத்தான்.

தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் நடந்து கொண்டுள்ள முறைகள், மக்கள் ‘முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி என்றால் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நஷ்ட ஈடா என்று கேள்வி கேட்கும் நிலையை உருவாக்கலாம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர், டைம்ஸ் குழுமத்திற்கு வேறு வழியில்லை. 100 கோடி ரூபாய் பணத்தை கட்டித்தான் ஆக வேண்டும். அதற்குத்தான் சாதாரண ஒரு வலைத்தளம் மீது பாய்ந்துள்ளார்கள் போல!

மதுரை
15/12/11