22.9.07

நீதிமன்ற அவமதிப்பு - நீதிக்கு அவமரியாதை?

கடந்த வெள்ளிக்கிழமை, மும்பை ‘மிட் டே’ பத்திரிக்கையாளர்கள் சிலரை, நீதிமன்றத்தின் மாண்பினை குறைப்பது போல செயல்பட்டதாக கூறி டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்படி (Contempts of Courts Act’1971) தண்டனையளித்துள்ளது.

தண்டிக்கப்பட்டவர்கள் ‘நாங்கள் உண்மையைத்தானே கூறினோம்’ என்ற வாதத்தினை ஏற்றுக் கொள்ளாததின் மூலம் நீதிமன்றம் தனது கடிகார முள்ளினை இருபது ஆண்டுகள் பின்னோக்கி திருப்பியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைப் பொறுத்தவரை ‘உண்மை’ என்பதை எதிர்வாதமாக (truth as a defence) ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலாவது அதன் கடுமையினை குறைக்க வேண்டும் என்று பரந்த நோக்குள்ளவர்கள், குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் பலரும் எழுப்பிய கோரிக்கையினை கொள்கையளவில் இல்லையென்றாலும், மனதளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற நிலையில் டெல்லி நீதிமன்றம்...நமது நீதித்துறை, நாட்டின் அனைத்து துறைகளிலும் ஏற்ப்பட்டுள்ள அசுரத்தனமான தொழில்நுட்ப வளர்ச்சியினை காண விரும்பாமல் தனது கண்களை இன்னமும் இறுகக் கட்டியுள்ளது போல தோன்றுகிறது.

இன்று இணையத்தில் காணக்கிடைக்கும் அவதூறான என்பதன் எல்லையையும் தாண்டி வைக்கப்பட்டுள்ள பல்வேறு விமர்சனங்களோடு ஒப்பிடுகையில் ‘மிட் டே’யின் விமர்சனம் ஒரு தாலாட்டு!

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ‘டெல்லி சீலிங்’ வழக்கு பற்றியும், டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது உத்தரவுகள் மூலம் கொடுத்த நெருக்கடிகளையும் பத்திரிக்கை படிக்கும் வழக்கமுள்ளவர்கள் அறிந்ததுதான்.

அந்த வழக்கு நடைபெறும் பொழுதே, அப்போதைய தலைமை நீதிபதி சபர்வாலின் மகன்கள், நீதிபதியின் வீட்டினை தங்களது வியாபாரத்திற்கு பயன்படுத்தியதைத்தான் ‘மிட் டே’ கிண்டலடித்து கருத்துப்படம் வெளியிட்டது. இந்த செய்தியில் உண்மையில்லை என்று இதுவரை ஏதும் கூறப்படவில்லை!

கருத்துப்படம் வெளியிடுகையில் சபர்வால் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே அவரைப் பற்றி கூறப்படும் விமர்சனம் நீதிமன்ற அவமதிப்பாகாது என்ற வாதத்தினையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், இப்படியொரு நுட்பமான (technical) வாதத்தினை மிட் டே வைத்திருக்கவே தேவையில்லை. தங்கள் செய்தி உண்மைதான் என்ற அளவோடு, துணிச்சலாக நின்றிருக்கலாம்.


***

சபர்வால் ஓய்வு பெற்றவுடன், ‘வாக் த டாக்’ என்ற நிகழ்ச்சியில் பேட்டியளித்தார். அப்போது அவர் சாதாரணமாக குறிப்பிட்ட ஒரு விஷயம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது!

அதாவது சீலிங் வழக்கு நடைபெற்ற பொழுது, பாதிக்கப்பட்ட அவரது உறவினர் ஒருவர் அவரை சந்தித்து, வழக்கில் மெத்தனப் போக்கை கடைபிடிக்க வேண்டியதாகவும், ஆனால் தான் அவ்வாறு நடந்து கொள்ளாததால் உறவினர் அவருடன் பேச்சு வார்த்தையினை நிறுத்தியதாகவும் கூறினார்.

மிகச் சாதாரணமாக, சற்றுப் பெருமையுடன் கூறிய இந்த விடயத்தில் என்னை வியப்பில் ஆழ்த்தியது, இந்திய நாட்டின் தலைமை நீதிபதியுடன் வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கு பற்றி பேச தைரியம் கொள்ளமுடியும் என்பது மட்டுமல்ல!

அவ்வாறு பேசியது கிரிமினல் சட்டப்படியும், நீதிமன்ற அவமதிப்பு சட்டப்படியும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றச்செயல் என்பதை அறிந்திருந்தும் நீதிபதி அதை கண்டு கொள்ளாமல் விட்டது மட்டுமல்லாமல் அதை சாதாரணமாக வெளியே கூறியது!!


***

எப்படியாயினும், தனது பெயரினை காப்பாற்றிக் கொள்வதற்காக ‘உண்மை’ என்பதை ஒரு வாதமாக உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

பல்வேறு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில், உச்ச நீதிமன்றம் எத்தகையை குற்றச்சாட்டினையும் தாங்கிக் கொள்ளும் பரந்த தோள்கள் தனக்கு உள்ளது எனபதை வெளிப்படுத்தியுள்ளது.

டெல்லி உயநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ‘மிட் டே’ பத்திரிக்கையாளர்கள் தாக்கல் செய்யும் மேல் முறையீட்டில், உச்ச நீதிமன்றம் இன்னமும் பரந்த மனதுடன் தன்னை வெளிப்படுத்துதல் காலத்தின் அவசியம்.

மதுரை
21.09.07

மும்பை மிட் டே பத்திரிக்கை பற்றி எழுத வேண்டும்

3 comments:

Doctor Bruno said...

//அவ்வாறு பேசியது கிரிமினல் சட்டப்படியும், நீதிமன்ற அவமதிப்பு சட்டப்படியும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றச்செயல்//

அப்படியா ????

ஒரு நீதிபதியுடன் அவர் சம்மந்தப்பட்ட வழக்கு பற்றி பேசக்கூடாதா ????

PRABHU RAJADURAI said...

"ஒரு நீதிபதியுடன் அவர் சம்மந்தப்பட்ட வழக்கு பற்றி பேசக்கூடாதா ????"

நீதிமன்றத்தில் பேசலாம்...தனியே அறையில் பேசமுடியுமா?

Doctor Bruno said...

//தனியே அறையில் //

அப்பிடியா விஷயம் !! :) :) :)