10.9.07

கர்ப்பிணிக்கு மரண தண்டனை!

ரஜினிகாந்தும், பிரபுவும் இணைந்து நடித்த திரைப்படம். பெயர் ஞாபகம் இல்லை. இருவரும் சிறையில் கைதிகள். அதே சிறையில் பாண்டியன் தூக்குத் தண்டனையினை எதிர்நோக்கியிருக்கும் கைதி. பாண்டியன் நிரபராதி என்று அறியும் ரஜினியும் பிரபுவும் சிறையிலிருந்து வெளியே சென்று உண்மையான குற்றவாளியினை கண்டுபிடிப்பதென்று தீர்மானம் செய்கின்றனர்.

அதற்குள் பாண்டியனுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால்?

அதற்காக, இருவரும் சேர்ந்து பாண்டியனின் காலை உடைத்து விடுவார்கள். அதாவது, உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை தூக்கிலிட முடியாது என்று கூறுவார்கள். இது சரியாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் என்னை வெகுநாட்களாக தொடர்கிறது.

கதாசிரியர் ஒருவேளை சிறைச்சாலை சட்டத்தில் (Prision Act) உள்ள ஒரு பிரிவினை தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் என நினைக்கிறேன். சிறைச்சாலை சட்டத்தில் சிறைக் குற்றங்கள் என சில வரையறுக்கப்பட்டு அதற்கு சிறைக்குள்ளேயே தண்டனை வழங்கலாம் என்று இருக்கிறது. அதாவது Penal Diet எனப்படும் உணவினை கொடுப்பது முதல் சவுக்கடி போன்ற தண்டனைகள். ஆனால், சிறைச்சாலை சட்டத்தின் பிரிவு 50, அவ்வாறான தண்டனை கொடுப்பதற்கு முன்னர் சிறை மருத்துவர், கைதிக்கு அவ்வாறான தண்டனையினை தாங்கக் கூடிய உடல் வலிமை உள்ளதா என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். எனவே, சிறைக்குற்றங்களுக்கான தண்டனைகளுக்குத்தானே தவிர மற்ற தண்டனைக்கு அல்ல.


***

ஏனெனில், மற்ற தண்டனைகளை குறித்து சிறை அலுவலர்கள் முடிவெடுக்க இயலாது. முக்கியமாக மரண தண்டனையினை தள்ளிப்போடும் அதிகாரம் உயர்நீதிமன்றங்களுக்கே (High Court) உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரை விசாரித்து முதலில் தண்டனை தருவது அமர்வு நீதிபதி (Sessions Judge) என்றாலும், மரண தண்டனையினை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உறுதி செய்து அந்த உத்தரவினை பெறும் அமர்வு நீதிபதி 28 நாட்களுக்குள் தண்டனை தேதியினை நிர்ணயித்து நிறைவேற்றுதல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


***

உயர்நீதிமன்றம் இரு சந்தர்ப்பங்களில்தான் தண்டனையினை தள்ளிப்போட இயலும். குற்றவாளி உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்ய விரும்பினால் அல்லது குற்றவாளி ஒரு கர்ப்பிணிப் பெண்ணாய் இருக்கும் பட்சத்தில்.

நண்பர் டாக்டர் புரூனோ மருத்துவ மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் இது குறித்து கேட்கப்பட்ட வினாவினை சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தார். குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 416 ‘தள்ளிப் போட வேண்டும்’ (shall postpone) என்றுதான் குறிப்பிடுகிறதே தவிர எவ்வளவு நாள் என்று கூறவில்லை!

எனவே நீதிமன்றம் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதனை தீர்மானிக்கலாம். தள்ளிப்போட வேண்டும் என்று கூறும் அதே பிரிவு ‘ஆயுள் தண்டனையாக குறைக்கலாம்’ (may commute) என்றும் கூறுகிறது. பயன்படுத்தப்படும் பதம் may என்று இருப்பினும் சட்டத்தின் நோக்கம் புரிவதால், நான் தேடிய வரை இந்திய நீதிமன்றங்களால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு குழந்தை பிறந்த பின்னரும் ஏதும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அல்லது அது குறித்த வழக்கு ஏதும் இல்லை!

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கும், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது குற்றத்தில் அவரது பங்கினை அடிப்படையாக வைத்துதானே தவிர, காவலில் அவருக்கு குழந்தை பிறந்ததை வைத்து அல்ல…

Jail Manual எனப்படும் சிறைச்சாலைக்கான நடைமுறை விதிகளில் சிறையில் அடைக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களைப் பற்றிய நடைமுறைகள் இருப்பதாக அறிகிறேன் என்றாலும், கர்ப்பிணிக்கான தூக்குத் தண்டனையினை தள்ளிப்போடுதல் பற்றி கூறப்படும் வாய்ப்பில்லை. சட்டமே அளிக்காத ஒரு உரிமையினை நடைமுறை விதிகள் அளிக்க முடியாது.

எனவே டாக்டர் குறிப்பிட்ட மருத்துவ மேற்படிப்பில் கேட்கப்பட்ட கேள்வி தெளிவான ஒரு கேள்வி இல்லை என்றே நினைக்கிறேன்.

மதுரை
10.09.07

சிறையில் குழந்தை பெறும் பெண்கள் மற்றும் அவர்களோடு அடைக்கப்படும் குழந்தைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று நமது உச்ச நீதிமன்றம் பொது நல வழக்கு ஒன்றில் பல்வேறு கட்டளைகளை (directions) பிறப்பித்துள்ளது.

2 comments:

Anonymous said...

//பெயர் ஞாபகம் இல்லை//

Guru Shishyan :) :) :)

//எனவே டாக்டர் குறிப்பிட்ட மருத்துவ மேற்படிப்பில் கேட்கப்பட்ட கேள்வி தெளிவான ஒரு கேள்வி இல்லை என்றே நினைக்கிறேன்.//

Definitely.. Most questions (in PG Medical Entrance) are like this only..... At least in FM we will have clear answers, but this was an exception

Muruganandan M.K. said...

சட்ட நுணுக்கங்களைப் பேசும் உங்கள் பதிவு திரைப்படத்தையும் சம்பந்தப்படுத்தியதால் சுவார்ஸமாக இருந்தது.