24.5.06

ஐந்து ரூபாய்...



சுவராசியத்துக்கு பஞ்சமில்லாத தொழில் ஒன்று உண்டென்றால் இந்த வக்கீல் தொழிலைப் போல வேறு ஒன்றும் இல்லையென்று அடித்துச்சொல்லி விடுவேன். ஆனால் கிணற்றுத் தவளை தனது கிணற்றை பற்றிப் பெருமையடித்தது போல ஆகி விடலாமென்ற எச்சரிகையின் காரணமாக தொழில்களில் ஒன்று என்று நிறுத்திக் கொள்கிறேன். நான் இப்படி சொல்வதற்கு காரணம் கூட என்னால் சொல்ல முடியும். மனித மனம் மற்றும் செயல்கள் யாரலும் அறுதியிட்டுக் கூற முடியாத மகாக்குழப்பம். அத்தகைய இரண்டு, ஏன் அதற்கு மேலும் அதிகமான மனங்களின் போராட்டத்தின் முடிவினை யாரால்தான் அனுமானிக்க முடியும். வேகமாக விளையாடப்படும் செஸ் போல எத்தனை இயக்கங்கள், சூதுகள் மற்றும் திட்டங்கள். எனவேதான் நான் மொபசல் கோர்ட்டுகளில் அனுபவித்த சுவராசியங்கள் ஹைகோர்ட் போன்ற மேல் கோர்டுகளில் இல்லை. அப்பீல் கோர்ட்டுகளில் வாதி, பிரதிவாதிகளோடு புழங்குவதை விட கேஸ் கட்டுகளோடு மன்றாடுவதுதான் அதிகம். அப்பீல் கோர்ட்டுகளில் விசாரணையோ, குறுக்கு விசாரணையோ கிடையாது. எல்லாம் கீழ்கோர்ட்டுகளில் நடந்து முடிந்து ரிக்கார்டுகளாக்கப்பட்டு, வீங்கிப்போன கட்டுகளை புரட்டிப் போடுவதோடு சரி. பல சமயங்களில் கட்சிக்காரரின் முகம் கூட தெரியாமல் தபாலில் வந்த கட்டுகளையும் அதனோடு இணைத்து அனுப்பப்பட்ட டிமாண்டு டிராப்டையும் வைத்து கேஸ் நடந்து முடிந்து விடும். இதில் என்ன சுவராசியம் இருக்கப் போகிறது. ஆனால் நான் எற்கனவே சொன்னபடி டிரையல் கோர்ட்டுகளில் அப்படியல்ல. எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. எப்போது யாருக்கு அதிஷ்டம் அடிக்கும் என்பதையும் சொல்ல முடியாது.


எனக்குத் தெரிந்த வக்கீல் ஒருவருக்கு இப்படி ஒரு அதிஷ்டம் அடித்தது. அவர் ஒரு நல்ல கிரிமினல் வக்கீல். பதினைந்து வருஷம் இருக்கும். ஒரு பெயில் சம்பந்தமாக ஆஜரானார். பெயிலும் கிடைத்தது. கைதானவரின் அப்பாவுக்கு பெரிய சந்தோஷம்.


"ரொம்ப தேங்ஸ், பீஸ் தரணும் உங்களுக்கு....எவ்வளவு"


"என்ன... ஒரு அஞ்சு ரூபா கொடுங்க" வக்கீல் நண்பர்.


ஐநூறை அஞ்சாக சொல்வதில் ஒரு சலிப்பும் கலந்திருந்தது, இதெல்லாம் ஒரு பீஸா என்று. வழக்கு சாதகமாக முடிந்தால் வக்கீல்களின் பேச்சில் ஒரு சின்ன அலட்சியம் தென்படுவது கோர்ட்டுக்கு சென்றவர்களுக்குத்தான் தெரியும்.


"கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே...மூணு ரூபாயா வாங்கிக்கங்க. அடுத்த தடவ பாக்கலாம்."


பதறினார் வக்கீல்," பாய்...அதுக்கெல்லாம் அப்பியரானா கஷ்டம். சரி நாலு ரூபாயா தந்துருங்க..."


பாய் யோசித்தார். நண்பருக்கு கவலை...ஒரு நல்ல கட்சிக்காரரை இழந்து விடுவேமோ என்று. இந்த மனப்போராட்டங்களெல்லாம் ஒரு சில நொடிப்பொழுதில் நடந்து முடிந்து, வக்கீல் வாய் திறப்பதற்குள், கட்சிக்காரர் "இந்தா..பிடிங்க, மனசா வாங்கிக்கங்க..." பணத்தை நீட்டினார்.


வாங்கிய வக்கீல் நண்பருக்கு அதிர்ச்சி...பின்ன பாய் மூவாயிரத்தோடு ஒரு ஐநூறை சேர்த்து, முவாயிரத்து ஐநூறாக அல்லவா தந்திருந்தார். நண்பர் ஐநூறை ஐந்தாக்க, வந்த பாயோ ஐயாயிரமாக நினைத்திருக்கிறார்.

3 comments:

SnackDragon said...

//வாங்கிய வக்கீல் நண்பருக்கு அதிர்ச்சி...பின்ன பாய் மூவாயிரத்தோடு ஒரு ஐநூறை சேர்த்து, முவாயிரத்து ஐநூறாக அல்லவா தந்திருந்தார். நண்பர் ஐநூறை ஐந்தாக்க, வந்த பாயோ ஐயாயிரமாக நினைத்திருக்கிறார்.//
துண்டு போட்டு விரலை பிடிச்செல்லாம் பீஸ் கேப்பாங்களா சார்? :-)

Anonymous said...

I'm impressed with your site, very nice graphics!
»

Anonymous said...

Your site is on top of my favourites - Great work I like it.
»