11.7.12

அகிலேஷ் யாதவின் கொடை!



‘உத்திரப்பிரதேச முதல்வர் அம்மாநில சட்டமன்ற பிரதிநிதிகளுக்கு, மகிழுந்து வாங்குவதற்காக ரூ.20 லட்சம் அளிக்கப் போவதாக’ செய்தி வெளிவந்தவுடனேயே, ஊடகங்களில், முக்கியமாக ஆங்கில ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்தது. எதிர்ப்பு என்பதை விட, அந்த விமர்சனங்களில் மறைந்திருந்த கிண்டல்களும் புரிந்து கொள்ளக்கூடியதாகவே இருந்தது.

‘டாக்ஸ்பேயர் மனியிலிருந்து எம் எல் ஏக்களுக்கு காரா?’ என்ற எதிர்ப்பினை சமாளிக்க முடியாமல், அறிவித்த வேகத்திலேயே அகிலேஷ் அதனை திரும்ப பெற்றுக் கொண்டார்.

ஊடகங்கள் கிளப்பிய விமர்சனப் புழுதியில் ‘அந்த தொகை ஒன்றும் ‘பொனாசா’ இல்லை. பெரிய மகிழுந்து தேவைப்படும் உறுப்பினர்கள், அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் வரை செலவழித்து மகிழுந்து வாங்கிக் கொள்ளலாம் எனவும் பின்னர் அவர்களது பதவிக்காலம் முடிந்ததும் தேய்மானத்திற்காக கழித்தது போக, மீதி கிரயத் தொகையை கொடுத்து வண்டியை தாங்களே சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற அந்த திட்டத்தின் சாராம்சங்கள்’ விவாதிக்கப்படாமலேயே போயின.

சட்டமன்ற பிரதிநிதிகள் என்ன, பல தனியார் நிறுவனங்களே தங்களின் இடைநிலை நிர்வாகிகளைக் கவர, இதே வகையான திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். அநேக நிறுவனங்களில் இளநிலையில் இருக்கும் பொறியாளர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் மகிழுந்து வாங்குவதற்கான படிகள் அளிக்கப்படுகையில் லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் பதவி வகிக்கும் நபருக்கு ரூ 20 லட்சம் என்பது பெரிய தொகையல்ல.

ஆயினும் பழைமைவாத உடைகளோடும், நாட்டுப்புறத்தன்மையோடும், முரடர்களாக நம்முன் உருவகப்படுத்தப்பட்டுள்ள எம் எல் ஏக்களுக்கு மகிழுந்து என்பதால், நம்முடைய ஆழ்மனதில் ஏற்ப்படும் ஒவ்வாமையே இந்த எதிர்ப்பின் மூல காரணம் என்றே நான் நினைக்கிறேன்.

எம் எல் ஏக்களுக்கு இவ்வாறு பலன்கள் அளிக்கப்படுகையில் நம்மால் உணரப்படும் அசூயையான உணர்வு, பொருளாதார மந்தநிலையிலும் சில நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு கோடிக்கணக்கில் அளிக்கப்படும் பலன்களை காண்கையில் வியப்பாக மாறுகிறது.

சர்வதேச பணச்சந்தையிலும், பங்கு வர்த்தகத்திலும் பல்லாயிரக்கணக்கான எண்களோடு உறவாடும் ஐஐஎம் நிர்வாகிகள், அதே திறமையினை பயன்படுத்தி ஒரு சட்டமன்ற தொகுதியிலாவது வெற்றி பெற்றதில்லை. ஏன், ஊடகங்களின் பெரிய ஆதரவு இருந்தும், சென்னையில் சில ஐஐடி தொழில்நுட்பவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி ஒன்று ஒரே தேர்தலோடு உடைந்து போனது.

மகிழுந்து ஒரு நிறுவனத்தின் நிர்வாகிக்கு தேவைப்படுவதை விட மக்கள் பிரதிநிதிக்கு அதிகம் தேவைப்படுகிறது. நகர்ப்புற சாலைகளை கடந்து பட்டி தொட்டியிலும் சுலபமாக சென்று வர பெரிய வகை மகிழுந்துகள் (SUV) ஏற்றதாக இருக்கும் என்று அகிலேஷ் நினைத்ததில் தவறில்லை.

நாடு இருக்கும் பொருளாதார நிலையில், இவ்வகையான செலவினங்கள் தேவையா என்பதும் வெற்று வாதமே! ஏனெனில், இதே பொருளாதார நிலை வேறு எந்த நிறுவன நிர்வாகிக்கும், மகிழுந்தினை மறுக்கவில்லை. மேலும் நாட்டின் பொருளாதார நிலை, நாட்டில் செயல்படும் நிறுவனங்களின் ஒட்டுமொத்தமான பொருளாதார நிலையோடு நேரடி தொடர்புடையதாகும்.

பல பிரதிநிதிகள் கோடீசுவரர்களாம். கோடீசுவரராக பணியில் சேருபவர் அவரது கோடிகளைக் கொண்டு வந்து கொட்ட வேண்டுமா. அதுவும், இந்த திட்டமானது சாதாரண நிலையிலிருக்கும் உறுப்பினர்களை மனதில் கொண்டே அறிவிக்கப்பட்டதாக அகிலேஷ் கூறுகிறார்.

வசதியாக உள்ள பிரதிநிதிகளை பார்க்கும் நாம், நடுத்தர நிலையில் இருந்து இயங்கும் பல பிரதிநிதிகளை மறந்து விடுகிறோம். திருநெல்வேலியில் நான் வழக்குரைஞராக பணியினை தொடங்கிய பொழுதில் நேரில் கண்டு பழகிய மூன்று பிரதிநிதிகளை இந்தக் கணத்தில் என் நினைவுக்கு வருகிறார்கள்.

ரமணி நல்லதம்பி என்ற பெயரை இன்று நெல்லையிலேயே யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1989லும் 1991லும் இருமுறை காங்கிரசு கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். குறுகிய காலத்திலேயே தனது துணிச்சலான அரசியல் மற்றும் சட்டமன்ற செயல்பாட்டினால் கருணாநிதி, செயலலிதா ஆகிய இருவரின் கவனத்தையும் கவர்ந்தவர். ஆனால் அதே வேகத்தில் அரசியலிலிருந்து காணாமல் போனார். சில காலம் கழித்து ‘நக்கீரன்’ அட்டையில் புற்றுநோயால் தாக்கப்பட்டு சாகும்தறுவாயிலிருந்த ரமணியின் புகைப்படத்தை கண்டவர்கள் அதிர்ந்து போனார்கள். ரமணியும், வழக்குரைஞராக பணியாற்றிய அவரது கணவராகிய நல்லதம்பியும் தங்களது சொற்ப வருமானத்தையும் ரமணியின் சிகிச்சைக்காகவே செலவிட்டு வறுமையில் தள்ளப்பட்டு நிற்கையில், அவர் சார்ந்திருந்த கட்சியே அவரை கைவிட்டு விட்டதுதான் கொடுமை!

இதே காலகட்டத்தில் அதிமுகவிலிருந்து நெல்லை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலையா என்பவரையும் நான் அறிவேன். அரசு வழக்குரைஞராக இருக்கையிலேயே அவரது நேர்மைக்கும் கண்ணியத்துக்கும் பெயர் பெற்றவர். ஓரளவு வசதியானவராயினும்,  ஐந்து வருடம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியதை வைத்து, எவ்விதத்திலும் தமது செல்வத்தையோ, செல்வாக்கையோ விரிவுபடுத்தியவரல்ல. இவரும் இளம்வயதிலேயே இறந்து போனதுதான் துரதிஷ்டம். முதல்வரின் காலில் கட்சிக்காரர்கள் அனைவரும் ‘பொத்’ ‘பொத்’ என்று விழுந்து கொண்டிருக்கையில், ‘வேலையா அண்ணன் விழுந்தாரா, இல்லையா?’ என்பதுதான் எங்களிடையே அப்பொழுது புதிராக உலவிய சந்தேகம்!

1967லிருந்தே திமுக பிரதிநிதியாக பலமுறை பணியாற்றிய ஏ.எல்.எஸ் என்று அழைக்கப்படும் ஏ.எல்.சுப்பிரமணியன் பற்றி கூட ஏதும் கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லை. நான் அறிந்தவரை அரசியலுக்காக தனது சொத்துக்களை இழந்தவர் என்றுதான் இவரைப் பற்றியும் கூறுவார்கள்.

இவர்களில் ரமணி நல்லதம்பி கொஞ்சம் பயர்பிராண்ட். ஆனால் மற்ற இருவரும் அதிர்ந்து பேசி கூட நான் எப்பொழுதும் பார்த்ததேயில்லை. சட்டமன்ற உறுப்பினர் என்றதும், எனக்கு இவர்கள்தாம் நினைவுக்கு வருகிறார்கள்.

இவர்களைப் போன்று, எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் இருக்கலாம். உத்திர பிரதேசத்திலும் இருக்கலாம். தங்களது அரசியல் செயல்பாட்டிற்காகவும், மக்கள் பிரச்னைக்கான உழைப்பிற்காகவும், அரசு செலவில் ஒரு மகிழுந்து கிடைக்குமாயின், அது ஒரு பொருத்தமான பலனாகத்தான் இருக்க முடியும்.

ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் அகிலேஷின் திட்டத்தில் ஏதும் குறைகளை என்னால் காண இயலவில்லை.

மதுரை
11/07/12

2 comments:

saravana said...

நிச்சயமா எனக்கும் இதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.
சமீபத்தில் சாலை விபத்தில் பலியான MLA தொகுதியில் இடைதேர்தல் நடத்த மொத்த தொகை குறைந்தது பத்து கோடியாவது இருக்கும்.
ஒரு பாதுகாப்பான வண்டி இருந்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாம்.
நம்ம மக்களுக்கு ஏனோ இந்த மாதிரி எண்ண ஓட்டங்களே உள்ளன.

Alarmel Mangai said...

ஏ.எல்.எஸ் அவர்கள் கடந்த சனிக் கிழமையன்று மறைந்து விட்டார்கள். அவர் எனக்கு மிக நெருங்கிய உறவினர். பொது வாழ்க்கையில் மட்டுமல்லாமல், தனிப் பட்ட வாழ்க்கையிலும் மிகவும் பண்பானவர். மிக அருமையான மனிதர். அவருடைய இழப்பு அவருடைய குடும்பத்துக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் ஒரு பேரிழப்பே. அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்.

அலர்மேல் மங்கை