12.11.06

அப்சலும், க்ரீமி லேயரும் - 5

ஆனால் க்ரீமி லேயர்?

அரசியலமைப்பு குழு அப்படி ஒரு வகுப்பினைப் பற்றி சிந்திக்கவும் இல்லை. விவாதிக்கவும் இல்லை. பங்கு பெற்ற யாரும், ‘உங்களது மகனுக்கும் இட ஒதுக்கீடு தேவையா’ என்று அம்பேத்கரைப் பற்றி வினா எழுப்பவில்லை. எனவே அரசியலமைப்புச் சட்டத்திலும் அவ்வாறான ஒரு பிரிவினரைப் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை. பின்னர் ஏன் உச்ச நீதிமன்றம், முக்கியமாக மண்டல் கமிஷன் வழக்கில் க்ரீமி லேயரைப் பற்றி கேள்வி எழுப்பி அதற்கு விடை காண முயன்றது? ஒரு வேளை இந்த விவாதம் நரசிம்ஹராவ் அரசு கொண்டு வந்த இரண்டாவது குறிப்பாணையால் எழுந்திருக்கலாம். ஏனெனில் அந்த குறிப்பாணையின் மூலம் பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ‘poorer section’கு முன்னுரிமை (preference) அளிக்கப்பட்டது. இது க்ரீமி லேயரைப் பற்றியே குறிப்பிடுவதாக இதனைப் படிக்கும் எவரும் புரிந்து கொள்வார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் மேற்கண்ட இரு ஆங்கில பதங்களுக்கும் புதிய அர்த்தம் கூறி குறிப்பாணை சரியே என ஏற்றுக் கொண்டது. அதன் மூலம் அரசு குறிப்பாணையும் க்ரீமி லேயரைப் பற்றி குறிப்பிடவில்ல என்றாகிவிட்டது. இனியும் நீதிமன்றம் க்ரீமி லேயர் என்ற கேள்வியினை எழுப்பியது என்றால், நீதிமன்ற சுவர்களை தாண்டி வெளியே நடந்த வாத பிரதிவாதங்களை தனது கருத்தில் உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது என்றுதான் அனுமானிக்க முடியும்.

ஏனெனில், தமிழக, கேரள, பீகார் மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வாதாடிய அனைவருமே க்ரீமி லேயர் என்ற பாகுபாட்டினை வெகுவாக எதிர்த்தனர். வினோதமாக, ‘பிற்ப்படுத்தப்பட்டவர்களில் சிலர் வெகுவாக முன்னேறி விட்டதாகவும், அவர்கள் இட ஒதுக்கீட்டின் முழு பலனையும் அபகரித்துக் கொள்வதாகவும்’ என்ற க்ரீமி லேயர் வாதம் இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களால் முன் வைக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டினால் திறமைக்குறைவு ஏற்ப்படும் என்ற அவர்களது வாதம் உண்மையெனில், மேலும் திறமைக்குறைவினை ஏற்ப்படுத்தும் க்ரீமி லேயர் வாதம் அவர்களாலேயே வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க முரணாகும். மேலும் இட ஒதுக்கீடு ‘அனைவரும் சமம்’ என்ற உரிமைக்கு எதிரானது என்பது வழக்கின் அடி நாதமாக இருக்கையில் க்ரீமி லேயர் எந்த விதத்திலும் அந்த வாதத்திற்கு துணை புரியப் போவதில்லை என்ற பொழுதிலும், அந்த வாதம் வைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் முன் எழுந்த பிரச்னையும் இட ஒதுக்கீடு குறிப்பாணை சம உரிமையினை பாதிக்கிறதா என்பதுதான். உச்ச நீதிமன்றமும் இட ஒதுக்கீடு மொத்தமாக 50%க்குள் இருக்கையில் சம உரிமையினை பாதிப்பதாகாது என்று கூறியது சட்டத்தினை பரிசீலனை செய்யும் அதன் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான். ஆனால், தானாக முன் வந்து க்ரீமி லேயர் என்று பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ஒரு புது வகுப்பினை வரையறுக்க முயன்றது, அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல் என்பது, நீதிபதிகளுக்கு தக்க மரியாதையுடன் நான் கருதும் எண்ணம்.

***
to be continued...

3 comments:

Sivabalan said...

சார்,

//தானாக முன் வந்து க்ரீமி லேயர் என்று பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ஒரு புது வகுப்பினை வரையறுக்க முயன்றது, அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல் என்பது, நீதிபதிகளுக்கு தக்க மரியாதையுடன் நான் கருதும் எண்ணம்.//


மிகச் சரியான பார்வை..

நல்ல தொடர்.. நன்றாக உள்ளது..

அடுத்த பதிவை படிக்க ஆவலாக உள்ளது..

நன்றி

Anonymous said...

Prabhu Rajadurai,

Please don\'t align=justify your post content while posting. The letters appear broken in Firefox browser.

Anonymous said...

உங்கள் பதிவு "Firefox" உலாவியில் சரியாகத் தெரிவதில்லை, உதவிக்கு ->
Internet Explorerஇல் நன்றாகத் தெரியும் வலைப்பதிவுகள் Firefox உலாவியில் சரியாகத் தெரிவதில்லை. என்ன செய்ய வேண்டும்?