18.8.06

சீக்கியரும் அர்ச்சகர் ஆகலாமா?

வலைப்பதிவு ஒன்றில் நண்பர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ‘அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகராகும்’ சட்டம் நடைமுறைக்கு வந்தால் பெளத்த, சீக்கிய மதத்தினரை சார்ந்தவர்களும் இந்துக்கோவில்களில் அர்ச்சகராகும் அபாயம் இருக்கிறது என்று திரு.பராசரன் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியதாக திரு.பத்ரி அவர்களது வலைப்பதிவில் குறிப்பிட்ட செய்தியினை எடுத்துக்காட்டி அபத்தம்! என்று முடித்திருந்தேன். பின்னர்தான் இந்த சட்ட திருத்தம் பற்றியும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாரம் பற்றியும் எதுவும் அறிந்திராத நான் அவ்வாறு ஒரு வார்த்தையினை உங்கள் முன் பயன்படுத்துவது தவறான ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடும் என்ற அச்சம் எனக்கு ஏற்ப்பட்டது. அதற்காக வருந்துகிறேன்!

ஆயினும் நான் அபத்தம் என்று குறிப்பிட்டது திரு.பராசரன் அவர்களது பரந்துபட்ட அறிவினை நோக்கியல்ல...மாறாக இந்த வாதத்திற்கு முக்கியத்துவம் அளித்த பத்திரிக்கைச் செய்தியின் மீதுதான். ஒரு வழக்கினை தாக்கல் செய்கையில் வலிமையாக நம் பக்கம் இருக்கும் வாதங்களோடு, சிறு துறும்பாக உள்ள எந்த ஒரு வாதத்தினையும் முன் வைப்பது வழக்கம். அனைத்தும் சேர்ந்து நீதிபதியின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்ற நம்பிக்கையில். அது போலவே திரு.பராசரனும் இந்த வாதத்தினை வைத்திருப்பார் என எண்ணுகிறேன்.

அவ்வாறு நான் எழுதியதும், கேள்வி கேட்ட நண்பர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ‘அவ்வாறாயின் நமது சட்டங்கள்/ அரசியலமைப்பு சட்டம் போன்றவை ‘இந்து யார்’ என்பதை வரையறுக்கும் விளக்கத்தினை மாற்ற வேண்டுமோ என வினவியிருந்தார். தான் சட்டம் படித்தவரல்ல என்று கூறிக்கொண்டாலும், அவரது நுண்ணறிவு என்னை வியக்க வைத்தது. (அதிகம் வியக்கும் மற்றொருவர் திரு.ரவி ஸ்ரீனிவாஸ்) ஏனெனில் நமது அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 25(2)(b)ல் ‘இந்து சமய நிறுவனங்களில் அனைத்து இந்துக்களும் பங்கேற்கும் வண்ணம் அரசு சட்டமியற்றலாம்’ என்ற உரிமையினை வழங்கி பின்னர் இறுதியில் இந்துக்கள் என்பது சீக்கியர், பெளத்தர் போன்றோரையும் இந்து நிறுவனங்கள் என்பவை அவ்வாறான மற்ற நிறுவனங்களையும் குறிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக இந்து என்பது சீக்கியர், பெளத்தர் போன்றோரையும் குறிக்கும் என்பதால் அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆக முடியுமெனில் சீக்கியர்களும் ஆகலாமே என்பதுதான் திரு.பராசரனின் வாதமாக இருக்க முடியும்.

சட்டம் ஒரு பதத்தினை விளக்குவது அகராதி விளக்கம் போல அல்ல. அந்தந்த சட்டத்திற்கே செல்லுபடியாகும். ஆயினும் அரசியலமைப்பு சட்டத்தின் இந்தப் பிரிவினை படித்தால் அனைத்து மதத்தினரையும் தனித்தனியே குறிப்பிட்டு சட்டப்பிரிவுகள் ஏற்ப்படுத்துவதற்கு பதிலாக ஒரே சட்டப்பிரிவாக இயற்றுவதற்கு வசதியாகத்தான் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். அதைப்போலவே திருமணம், சொத்துரிமை போன்ற இந்து சட்டங்களைப் படிக்கையிலும் அவற்றில் இந்து என்பது சீக்கியர், பெளத்தர் போன்றோரை குறிப்பிடும் என்றாலும் அது அவரவருக்கு தனியே சட்டமியற்றாமல் பொதுவான சட்டமாக இயற்ற வேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமே கூறப்படுவதாகும் என்பது எளிதில் விளங்கும்.

எனினும், இவ்வாறாக ஒரு விளக்கம் கொடுக்கப்பட வேண்டியிருப்பதால், திரு.பராசரனின் வாதத்தில் விஷயம் இருக்கிறதல்லவா என்று இன்னமும் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், சட்டத்திருத்தம் ஏற்பட்டுள்ள இந்து அறநிலையத்துறை சட்டத்தினை (The Tamilnadu Hindu Religious and Charitable Endowments Act’1959) ஆராய்ந்தால் எவ்வித குழப்பமும் இல்லை என்பது புரியும். அரசு வேலைக்கான விண்ணப்பங்களை கவனித்து வந்தால் அவற்றில் இந்து அறநிலையத்துறை பொறுத்து மட்டும் ‘இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்’ என்று இருப்பதை பார்த்திருக்கலாம். இந்துக்கள் என்றிருந்தால் தவறு. ‘இந்து மதத்தினை பின்பற்றுபவர்கள்’ என்றிருக்க வேண்டும். ஏனெனில் இந்த சட்டத்தின் 10வது பிரிவில் ‘இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் எந்த ஒரு ஊழியரும் இந்து மதத்தினை பின்பற்றுபவர்களாக இருத்தல் வேண்டும் என்று உள்ளது. இந்து என்று மட்டுமே கூறாமல் இந்து மதத்தினை பின்பற்றுபவர் (person professing hindu religion) என்றிருப்பதால் குழப்பங்கள் இல்லை அல்லவா?

இந்தச் சட்டத்தின் 55ம் பிரிவின்படிதான் கோவில் ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஊழியர் என்பது அர்ச்சகர் மற்றும் பூஜாரிகளை உள்ளடக்கியதாகும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே 10வது பிரிவோடு சேர்த்து படிக்கையில் அர்ச்சகர் இந்து மதத்தினை பின்பற்றுபவராக இருந்தல் வேண்டும். சீக்கியரோ அல்லது பெளத்தரோ இந்துவாக இருக்கலாம். ஆனால் இந்து மதத்தினை பின்பற்றுபவர் இல்லை.

இவ்வாறு ஏற்கனவே சட்டத்தில் தெளிவாக மத தகுதியினை கூறுவதோடு நிற்காமல் கோவில் ஊழியர்களை நியமிப்பது குறித்த விதிகளில் (The Tamilnadu Hindu Religious Institutions (officers and servants) Service Rules’1964 3வது விதியிலும் இந்து மதத்தினை பின்பற்றுபவராக இருத்தல் வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் இந்து மதத்தினை பின்பற்றுபவர் என்று எவ்வாறான உறுதி மொழி எடுக்க வேண்டும் என்பதற்கும் அரசாணை எண் 4055/1961 மூலம் விதிமுறைகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே ஏற்கனவே அறநிலையத்துறை சட்டத்திலும் விதியிலும் அர்ச்சகர் இந்து மதத்தினை பின்பற்றுபவராக இருத்தல் வேண்டும் என்று தெளிவாக இருக்கையில் சீக்கியரும், பெளத்தரும் அர்ச்சகராகலாம் என்ற வாதத்தில் கொஞ்சம் கூட வலு இருக்கப்போவதில்லை என்பது என் கருத்து...

மதுரை
18.08.06

1 comment:

மு. சுந்தரமூர்த்தி said...

பிரபு ராஜதுரை,
சட்ட விளக்கங்களுக்கு நன்றி. உங்கள் பதிவு தமிழ்மணத்தில் திரட்டப்படுவதில்லை போலிருக்கிறது. முடிந்தால் சேர்த்துவிடுங்கள்.

சம்பந்தப்பட்ட சுட்டி, உதவிப் பக்கங்கள் இங்கே
http://www.thamizmanam.com/user_blog_submission.php
http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=help