13.6.06

சமம்?

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

கிறிஸ்தவ மதக் கட்டளைகளில் மிக மிக முக்கியமான ஒரு கட்டளை என்று குறிப்பிட வேண்டுமென்றால், அதன் ஸ்தாபகரான இயேசு கிறிஸ்துவை நன்கு புரிந்து கொண்டவர்கள் எவ்வித சந்தேகமுமின்றி குறிப்பிடும் கட்டளை 'உன்னைப் போல பிறனை நேசி' என்பதாகும். அதே பே¡ல இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மிக மிக முக்கியமான பிரிவு, ஆச்சரியகரமான முறையில் ஏறக்குறைய அதே வகையில் அர்த்தப்படும் 'அரசு சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும்' என்னும் 14வது ஆர்ட்டிகிள் என்பதனை அரசியலமைப்புச் சட்டம் பற்றி அறிந்த அனைவரும் குறிப்பிடுவர். இந்தப் பிரிவினை நேரடியாக தமிழ்ப்படுத்தினால், 'அரசு எந்தவொரு குடிமகனுக்கும் சட்டத்தின் முன் சமமாக கருதப்பட வேண்டிய மற்றும் சமமான சட்டப் பாதுகாப்புக்கான் உரிமைகளை மறுக்கக் கூடாது' என்று வரும். உயர்நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்படும் நீதிப்பேராணை மனுக்கள் அநேகமாக இந்தப் பிரிவில்தால் தாக்கல் செய்யப்படுகின்றன. ஏனெனில் எந்த ஒரு உரிமையை வலியுறுத்தும் குடிமகனும், அந்த உரிமையைப் பொறுத்து தான் மற்ற குடிமகன்களுடன் சமமாக கருதப்படவில்லை என்ற வகையிலேயே வாதத்தை முன்னிறுத்த வேண்டும்.

நண்பர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். திரைப்பட நடிகர்கள் தாங்கள் விரும்பும் சம்பளத்தை அவர்களாகவே நிர்ணயிக்கையில் ஏன் வழக்குரைஞர்கள் விதிமுறைகளுக்குட்பட்டு தங்கள் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும்? என்பதுதான் அது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், இரு வேறு தொழில் செய்யும் இருவருக்கு ஏன் ஒரே மாதிரியான உரிமைகள் இல்லை. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமில்லையா என்ற கேள்வி எழுகிறது. மேற்போக்காக சரி என தோன்றினாலும், இல்லை என்பதே அதற்கு பதிலாக இருக்க முடியும்.

'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்பதை ஒத்துக் கொள்ளும் அதே வேளையில் 'சமமானவர்களே சமமாக பாவிக்கப்பட வேண்டும்' என்பதையும் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்கின்றன. மேலும், தனது குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அரசு, பாகுபாடுகளை ஏற்படுத்திக் கொள்ள அனுமதியுண்டு. இவ்வகையான பாகுபாடுகளை ஏற்படுத்துகையில் அவை உண்மையிலேயே அரசுக்கான குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான அவசியத் தேவையா என்ற பிரச்னை நீதிமன்றங்கள் முன்பு தினமும் எழுவது. உதாரணத்துக்கு சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை கூற விரும்புகிறேன்.

கம்ட்ரோலர் அண்ட ஆடிட்டர் ஜெனரல் என்பவரை நீங்கள் அறிந்திருக்கலாம். மத்திய தணிக்கை ஆணையாளர். அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்வது இவரது பொறுப்பு. இவ்வாறு தணிக்கை செய்வதற்கு இவர் தனியார் தணிக்கை நிறுவனங்களை நியமித்துக் கொள்வார். அதாவது இவரது அலுவலகத்தில் உள்ள பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்ட தனியார் தணிக்கை நிறுவனங்களுக்கு இப்பணிகள் வழங்கப்படும். இவ்வாறு இவரது அலுவலகப் பட்டியலில் பெயரைச் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்க வேண்டி இவரது அலுவலகம் 1981ல் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.

அந்த விளம்பரத்தில் ஒரு பிரிவு தனியொரு தணிக்கையாளர் (சார்ட்டட் அக்கவுண்டண்ட்) உரிமையாளராக இருந்து நடத்தும் நிறுவனங்கள் (Proprietorship Firms) இவ்வாறாக பட்டியலில் பெயரைச் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிப்பதை தடை செய்தது. அதாவது, இரண்டுக்கு மேற்பட்ட நபர்களால் நடத்தப்படும் கூட்டு நிறுவனம் (Partnership Firm) மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என்றது. ஆனால் போதிய தணிக்கையாளர்கள் இல்லாத ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், மேகாலயா, காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இவ்வித பாகுபாடு இல்லை.

குஜராத்தில் உள்ள ஒரு தணிக்கையாளர், 'இந்த பாகுபாடு தனது உரிமையை பாதிக்கிறது. உரிமையாளராக தான் நடத்தும் தணிக்கை நிறுவனம் மற்ற கூட்டு நிறுவனங்களோடு சமமாக பாவிக்கப்படவில்லை என குஜராத் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இங்கு ஒரு கணம் இவ்வித பாகுபாடு நியாயமானதா என்பதை தீர்மானிக்கவும். சரி....குஜராத் நீதிமன்றம் அரசுக்கு எதிராக தீர்ப்பு எழுத இறுதியில் இருபது ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றம் இறுதியாக இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய தணிக்கை ஆணையாளர் கொடுத்த விளக்கமானது, 'கூட்டு நிறுவனங்கள் உரிமையாளர் நிறுவனங்களை விட திறமை மிக்கதாகவும், குறித்த காலத்தில் வேலையை முடிக்க வல்லதாகவும், அதிக முன் அனுபவம் வாய்ந்ததாகவும்....முக்கியமாக நீடித்து நிலைக்கும் தன்மை மிக்கதாகவும் இருக்கின்றன. எனவே அரசு தணிக்கைப் பணியை தனியாளான உரிமையாளர் நிறுவனங்களை நம்பி விடமுடியாது. எனவே இந்தப் பாகுபாடு தேவைதான்' என்பதாகும். இதில் கடைசியில் கூறிய காரணம் வலுமிக்கது. எனெனில் கூட்டு நிறுவனமாக இருக்கையில் ஒரு கூட்டாளிக்கு ஏதேனும் நேரும் பொழுதிலும் மற்றொரு கூட்டாளி தணிக்கைப் பணியை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

இதே பிரச்னையில் முன்மாதிரியான தீர்ப்பு ஏதும் இல்லை. எனவே வழக்கினை தீர்க்கும் நீதிபதிகளின் தயவில் இந்த வழக்கு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் தீர்க்கப்படலாம். இந்த மாதிரியான வழக்குகளைக் கையாளுகையிலேயே பல நீதிபதிகள் வழக்கறிஞர்களின் வாதத்தை விடுத்து தங்கள் சுய மூளைக்கு வேலை கொடுத்து, இறுதியில் தங்கள் விருப்பத்தினையே தீர்ப்பாக அறிவிக்கின்றனர். இந்த வழக்கிலும் அவ்வாறே, 'இருவர் வேலை பார்த்தால் என்ன...ஒருவர் வேலை பார்த்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். பல சமயங்களில் தனியாள் சிறப்பாக வேலை செய்ய இயலும். மேலும் சில கூட்டு நிறுவனங்களில் ஒருவர் வெறுமே 'ஸ்லீப்பிங் பார்ட்னர்' எனவே இதை வைத்து திறமையை எடை போட முடியாது' என்று கூறுவதோடு நில்லாமல் நீதிமன்றத்திற்கு வரும் கட்சிக்காரர்கள் ஒரு வழக்கறிஞரை மட்டுமே நியமித்து அவருடனே 'மூழ்குவதற்கு அல்லது நீந்துவதற்கும்' தயாராக இருக்கிறார்களே என்று ஒரு ஒப்புமையையும் சேர்த்து....இறுதியில் ஆடிட்டர் ஜெனரல் ஏற்படுத்திய பாகுபாடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று வழக்கினை முடித்து வைத்துள்ளனர்.

நீதிபதிகளின் தீர்ப்பு நியாயமானதுதான். ஆனால் இதே வழக்கினை அரசுக்கு சாதகமாகவும் தீர்மானித்து தீர்ப்பு எழுத முடியும். எனவே நான் நினைப்பது என்னவெனில், பொதுவாக தனக்கு எந்த வகையான ஆடிட்டர்கள் தேவை என ஆடிட்டர் ஜெனரல் போன்றவர்கள் தீர்மானிக்கையில், அந்த முடிவில் யாதொரு கெட்ட எண்ணமும் இல்லாத வகையில் அதில் நீதிமன்றங்கள் தலையிடலாகாது என்பதாகும். ஆடிட்டர் ஜெனரலுக்கு எந்தவொரு தனிப்பட்ட நிறுவனத்திற்கு சகாயம் செய்யவோ அல்லது எந்தவொரு தனிப்பட்ட நிறுவனத்தை பட்டியலில் வரவிடாமல் செய்யவோ இந்த பாகுபாடை செய்யவில்லை. எனவே இந்தப் பிரச்னையில் நீதிமன்றங்கள் அவரது மன ஓட்டத்தோடு உடன்பட்டிருக்கலாம்.

இறுதியில் எனது கவனத்துக்கு வருவது, குஜராத் நீதிமன்றத்தில் இரு பெஞ்சுகளிலும் தோற்ற பிறகு, அந்த தீர்ப்பினால் தனக்கு யாதொரு இழப்பும் இல்லாத வகையில் அரசு, இதனை ஒரு ஈகோ பிரச்னையாக கருதி.....உச்சநீதிமன்றம் வரை சென்று பணம் செலவழித்தது. அரசு தனது வழக்குகளை சமரசமாக முடித்துக் கொள்ள முயன்றால் நீதிமன்றங்களில் பாதி வழக்கு முடிந்து போகும். யார் காதில் இந்த சங்கு ஊதப்பட வேண்டும்.

No comments: