20.3.09

அமெரிக்காவைப் பார்...

நடந்து முடிந்த வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தத்தைப் பற்றி 19/03/09 தேதியிட்ட ‘இந்து’வில் அதன் அமெரிக்க வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் கவனத்தை ஈர்ப்பதாயிருந்தது. அதாவது அமெரிக்காவில், ஒரு வழக்காடி தன்னுடைய வழக்கினை தானே நடத்தக்கூடிய உரிமை உள்ளதாம். வழக்குரைஞர் வேலை நிறுத்தம் காரணமாக, தமிழ்நாட்டிலும் வழக்காடிகள் தங்களுடைய வழக்கினை தாங்களே நடத்தும் உரிமையினைப் பெற்றுள்ளார்களாம்.

இந்த கடிதத்தை பிரசுரித்ததன் மூலம், ‘இந்து’ பத்திரிக்கை ஒரு இந்திய வழக்காடிக்கு தனது வழக்கினை தானே வாதிடும் உரிமை இல்லை என்பது போன்ற தோற்றத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது. வாசகரும் சரி, இந்துவும் சரி அறியாத ஒரு விடயம் நமது நாட்டில் நிலவும் சட்டங்கள் நாகரீகத்திலும் மனித உரிமையைப் பேணுவதிலும், அமெரிக்க நாட்டிலுள்ள எந்த ஒரு சட்டத்திற்கு குறைவான ஒன்றல்ல. இங்கும் ஒரு வழக்காடிதான், தன்னுடைய வழக்கினை நடத்தும் முதல் உரிமை உள்ளவர். வேண்டுமானால் அவர் ஒரு வழக்குரை நியமித்துக் கொள்ளலாம். எனவே இந்த ஒரு சாதாராண உரிமைக்கு கூட அமெரிக்காவை தேடி ஓட வேண்டியதில்லை...

பல சமயங்களில், இங்கும் வழக்காடிகள் தங்களுடைய வழக்குகளை தாங்களே நடத்துவதுண்டு. ஒரு வழக்குரைஞருக்கு கிடைக்கும் உரிமையை விட சற்று மேலான உரிமை, ‘Party in Person’ என்று அழைக்கப்படும் அவர்களுக்கு உண்டு. வழக்கினை வாதிடுகையில், தனது வழக்கின் சாரத்தை விட்டு வெளியே சஞ்சரிக்கும் வழக்குரைஞர், நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்படுவார். ஆனால், வழக்காடி வாதிடுகையில், அவ்வித கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்பட முடியாது. எவ்வளவு தர்மசங்கடம் என்றாலும், நீதிபதி அவரது வாதத்தைக் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். இல்லை, கதவுக்கு வெளியே சென்று ‘எனக்கு இங்கே நீதியில்லை. எனது வழக்கினை பேச எனக்கு உரிமை இல்லையா?’ என்று கத்த ஆரம்பித்து விடுவார்கள்.

அது மட்டுமில்லாமல், சட்ட ரீதியிலும் சில உரிமைகள் உண்டு. உரிமையியல் வழக்கில், கூறப்படும் தீர்ப்பில் அந்த தீர்ப்பினை எதிர்த்து எங்கு எவ்வளவு நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என்று கூற வேண்டியதில்லை. நாமே, சட்டப்புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால், வழக்காடி தானே வழக்கினை நடத்துகையில் தீர்ப்பில் அவற்றை குறிப்பிட்டாக வேண்டும். (Order 20 Rule 5A CPC)

சட்டமும், குடிமகன்கள் அனைவரும் சட்டத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்றே கருதுகிறது. சட்டம் இவ்வாறு கூறுகிறது என்பது எனக்குத் தெரியாது என்று வாதிட்டு யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது.

சுப்பிரமணிய சுவாமி, கே.எம்.விசயன் ஆகியோர் தங்களது வழக்குகளை தாங்களே நடத்திய சில முக்கியமானவர்கள்.

ஆனால், எதற்கு பேராணை மனு (Writ), எதற்கு உரிமையியல் வழக்கு (Civil Suit), எதற்கு மனு (Original Petition), எதற்கு நுகர்வோர் மனு (Consumer Complaint) என்ற விடயங்களை மெத்தப் படித்தவர்களே அறிந்து கொள்ள நேரம் செலவழிக்க விரும்பாத நமது நாட்டில், சாதாரண பொது மக்கள் தங்களது வழக்கினை தாங்களே நடத்தினார்கள் என்ற பத்திரிக்கைச் செய்திகளில், விக்கிரமாதித்யன் கதைகளை விட சற்று அதிக அளவில் உண்மையிருக்கலாம், அவ்வளவுதான்.

-oOo-

சட்ட சம்பந்தமான விடயங்களில் தாங்கள் ஆர்வமுடையவராக இருப்பின் கீழ்கண்ட சரியா, தவறா என்பதை யூகிக்கவும். பின்னர் ஒரு வழக்குரைஞரை தொடர்பு கொண்டு தங்களது சட்ட அறிவினை சரி பார்த்துக் கொள்ளலாம். எனது மற்ற பதிவுகளிலும், பதில்கள் இருக்கலாம்.

(எச்சரிக்கை: advocacy is an art of impossibility என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன் நான். எனவே சரியா, தவறா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை)

(1) உங்களது வீட்டினை 3 வருடங்கள் கழித்து கண்டிப்பாக காலி செய்து தர வேண்டுமென்று ஒப்பந்தம் கையெழுத்திட்டு, வாடகைக்கு விடுகிறீர்கள். 3 வருடம் கழித்து வாடகைதாரர் ஒப்பந்தப்படி காலி செய்தாக வேண்டும்.

(2) உங்களது வங்கிக் கணக்கில் (Bank Deposit) தங்களது மனைவி பெயரை மட்டும் நாமினி (nominee) என காட்டியுள்ளீர்கள். உங்களது மரணத்துக்குப் பின்னர் உங்களது மகனுக்கும் உங்களது மனைவியோடு இந்து மத சட்டப்படி வாரிசுதாரர் என்ற வகையில் டிபாசிட் பணத்தில் உரிமை உண்டு.

(3) அதுவே காப்பீட்டு தொகைக்காக கொடுக்கப்படும் நாமினியாக இருந்தாலும் அதே உரிமை உண்டு

(4) உங்களது நிறுவனம், 3 வருடங்களுக்குள் வேலையை விட்டு செல்வதாயிருந்தால், 1 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்ற உறுதியினை பெற்று உங்களை வேலைக்கு அமர்த்துகிறது. அதற்கு ஆதரவாக (security) உங்களது சான்றிதழ்களை நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளீர்கள். ஒரு வருட காலத்தில் வேலையை ராசினாமா செய்து சான்றிதழ்களை பெற வேண்டுமென்றால் 1லட்சம் செலுத்தினால்தான் சான்றிதழ்கள் கிடைக்கும்.

(5) உயில் பத்திரத்தில் முத்திரைக் கட்டணம் (stamp duty) செலுத்த தேவையில்லை.

(6) உங்கள் நண்பருக்கு கடன் உறுதிச் சீட்டு (promissory note) மூலம் கடன் கொடுத்துள்ளீர்கள். மூன்று வருடம் காலம் முடியும் முன், கடனை திருப்பிச் செலுத்த மேலும் ஒரு வருட காலம் அவகாசம் வேண்டுகிறார். நீங்கள் கொடுக்க நினைத்தாலும், மற்றொரு நண்பர் 3 வருட காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் அவ்வளவுதான் என்கிறார்.

மேற்கண்ட விடயங்களில் தங்களது புரிதல்களையும், இந்த விடயம் சார்ந்த பிரச்னைகள் எழும் பொழுது, ஒரு வழக்குரைஞரின் ஆலோசனை பெறாமல் தங்களால் செயல்பட முடியுமா என்பதையும் சற்று சிந்தியுங்கள். பின்னர் உங்களுடைய இடத்தில் ஒரு சாமான்ய குடிமகனை வைத்து பாருங்கள்.

-oOo-

இந்துவில் நான் மேலே குறிப்பிட்ட கடிதத்தினை எழுதிய வாசகர், சம்பந்தப்பட்ட வழக்காடிகள் plead செய்ததாக குறிப்பிடுகிறார். ப்ளீடு என்ற வார்த்தையினை உரிமையியல் சட்டப்படி எழுத்து பூர்வமாக முதலில் தாக்கல் செய்யப்படும் வழக்கினை குறிக்கவே பயன்படுத்துவோம். பொதுவாக, நீதிமன்ற புறக்கணிப்பு நடைபெறும் பொழுது ‘ப்ளீடிங்’ முதலியவற்றை வழக்குரைஞர்களே பார்த்துக் கொள்வார்கள். வழக்கினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அலுவலகத்தில் அதன் ஆய்வினை (scrutiny) முடித்து அதற்கு எண் வாங்கி நீதிமன்றம் முன்பும் கொண்டு வருவார்கள். பின்னர் வழக்காடியை உள்ளே அனுப்பி, வழக்கினை விசாரணைக்கு அனுமதிக்க (admit) வேண்டி இடைக்கால தடை உத்தரவும் (interim injunction, stay, direction etc.,) கோர வைப்பார்கள். அவ்வளவுதான்.

மற்றபடி வழக்காடிகளை இறுதி விசாரணைக்கு எல்லாம் அனுப்புவதில்லை.

வழக்குரைஞர்களின் போராட்டம் என்பது, நீதிமன்ற புறக்கணிப்புதான். வேலை நிறுத்தமல்ல. இதனால்தான், வழக்குரைஞர்கள் தங்களுடைய போராட்டத்தினை நாட்கணக்கில் தாங்க (sustain) முடிகிறது.

தொழிலாளர் போராட்டத்திற்கும், வழக்குரைஞர்களின் போராட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இது புரியாமல், இந்து வாசகர்கள் அனைத்து வகைகளிலும் ஆதங்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக கடிதம் எழுதித் தள்ளி விட்டார்கள்.

-oOo-

மேற்கண்ட கடிதம் எழுதிய ரெக்சு அருள் (Rex Arul) அமெரிக்காவில் பொறியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தமிழார்வம் மிக்கவர். திருக்குறளில் மரண தண்டனை பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி வாசித்துள்ளார். என்னை பெயர் சொல்லி அழைக்க தயங்கி uncle என்று கூப்பிடுவார். உறவில் எனக்கு சகலை :-)

மதுரை
20.03.09

3.3.09

தீர்ப்புகள் விமர்சிக்கப்படலாம், முழுவதும் படித்த பின்னர்...




கடந்த மாதம், தில்லி உயர்நீதிமன்றம் ‘பாலியல் பலாத்கார’ வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் தண்டனைக் காலத்தை 5 1/2 ஆண்டுகளாக குறைத்தது, பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பினை ரத்து செய்ய வேண்டுமென்று மகளிர் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக மனுச்செய்யும் அளவிற்கு இந்த தீர்ப்பின் சாரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு, வழக்கம் போலவே இதனைப் பற்றிய செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள்தான் காரணம்.

‘குற்றவாளி இ.ஆ.ப (IAS) தேர்வில் தேர்ச்சி பெற்றதால், பலாத்கார வழக்கின் குற்றவாளியின் தண்டனையை 5 1/2 ஆண்டுக் காலமாக தில்லி உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது’ என்ற வகையிலே பத்திரிக்கை தலைப்புகள், ஏன் செய்தியே வெளியிடப்பட்டது.

நேற்று ‘இந்து’வில் கூட அதிர்ச்சி (shocking) ஏற்ப்படுத்தக்கூடியதாக உள்ளது என்று ஆசிரியருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி அலைகள் யாவும், ஒரு குற்ற வழக்கில் தண்டனையளிக்க நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தினை (jurisdiction & discretion) சரிவர ஆராயமல் ஒரு தீர்ப்பினை புரிந்து கொள்ள முயல்வதால் ஏற்ப்படுவது.

வழக்கில் பாதிக்கப்பட்டவர் 21 வயது நிரம்பிய பெண். குற்றவாளி 29 வயது நிரம்பிய ஆண். தன்னிடம் பாடம் படிக்க வந்த பெண்ணை தனது ‘ஆசை வார்த்தைகளால்’ மயக்கி பலமுறை உடலுறவு கொண்டிருக்கிறார். இடையில் தனக்கு ஏதோ காரியம் ஆக வேண்டுமென்று வேறு ஒரு ஒருவரின் ஆசைக்கும் இணங்கச் சொல்லியிருக்கிறார். பின்னர் தான் வாக்களித்தபடி அந்தப் பெண்ணை திருமணம் செய்யாதலால், விரிவாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு அந்தப் பெண் தற்கொலை செய்திருக்கிறார். கீழமை நீதிமன்றம் தற்கொலைக்கு தூண்டுதல், மற்றும் பாலியல் பலாத்காரம் என்ற இரு குற்றங்களுக்காக, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அளித்தது.

உயர்நீதிமன்றம் வழக்கின் முழு விபரத்தை அறிந்து குற்றவாளி பாதிக்கப்பட்டவருக்கு ஏற்ப்பட்ட மன உளைச்சலை ஏற்ப்படுத்தியதைத் தவிர தற்கொலையினை நேரடியாக தூண்டவில்லை என்று கூறி தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவிலிருந்து குற்றவாளியை விடுவித்துள்ளது. பின்னர் நடந்து ‘பாலியல் பலாத்காரம்’ என்ற பிரிவில் ஆராய்ந்து சற்றுத் தயக்கத்துடனே குற்றவாளி என்று தீர்மானித்துள்ளது.

தீர்ப்பில் இருந்து பார்க்கையில், பாதிக்கப்பட்டவர் இறப்பதற்கு முன் எழுதிய கடிதமே (suicide note) இந்த வழக்கின் முக்கிய ஆவணமாக உள்ளது. என்னுடைய பார்வையில் அந்தப் பெண் தெள்ளத் தெளிவாக சிந்தித்து, குற்றவாளியை தப்பிக்கவே முடியாத வகையில் சிறைக்குள் தள்ள வேண்டுமென்ற முடிவோடு எழுதியுள்ளது போலத் தெரிகிறது. மற்றொரு நபரின் ஆசைக்கும் இணங்க வற்புறுத்தியதாக கூறியது மட்டும் அந்தக் கடிதத்தில் இல்லையெனில், காதலித்து ஏமாற்றியது என்ற வகையோடு இந்த தவறு நின்றிருக்கும். ஆயினும், இவ்வளவு தெளிவாக மற்ற விடயங்களை எழுதிய அந்தப் பெண், யார் அந்த மூன்றாவது நபர் என்ற விடயத்தை எழுதாமல் விட்டது, அதன் உண்மைத் தன்மையை பற்றிய சந்தேகத்தினை எழுப்புகிறது.

கடிதத்தில் ‘I had to attend to that person and make him happy’ என்று இருப்பினும் வற்புறுத்தப்பட்டார் என்ற அளவிலேயே அரசின் வாதமும் அமைந்தது.

ஆயினும் நீதிபதிகள், குற்றவாளிக்கு முதலிலிருந்தே அந்தப் பெண்ணை திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்ற அடிப்படையில் நடந்தது பாலியல் பலாத்காரம் என்று தீர்மானித்துள்ளார்கள். இதுவும் எவ்வளவு தூரம் இதச பிரிவு 375ன் கீழ் வருகிறது என்று தெரியவில்லை.

மேற்கண்ட விடயங்கள், இரு தரப்பினரின் வயது போன்றவற்றை ஆராய்ந்த நீதிபதிகள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை என்பது மிக அதிகம் என்று தீர்மானித்து, அவர் அது வரை சிறையில் கழித்த 5 1/2 ஆண்டுகளை மட்டும் போதுமானது என்று அவரை விடுதலை செய்துள்ளனர்.

நீதிபதிகள் பாலியல் பலாத்காரத்திற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்பதை கருத்தில் கொள்ளவில்லை. ஆயினும், குற்றவாளிக்கு சிறையில் அளிக்கப்படும் தண்டனைக் குறைப்பு (remission) போன்றவற்றை அனுசரித்தே 5 1/2 ஆண்டுகள் என்று கூறுகின்றனர்.

தீர்ப்பினை முடிக்கும் முன்னர், சிறையிலும் தண்டிக்கப்பட்டவர் நல்ல முறையில் நடந்து கொண்டார் என்பதை எடுத்துக் காட்டவே அவர் இஆப தேர்விலும் தேறியுள்ளார் என்று போகிற போக்கில் குறிப்பிடுகிறார்கள்...அவ்வளவுதான், அந்த ஒற்றை வரி ‘ஏதோ இஆப தேர்வில் தேறினால் தண்டனைக் குறைப்பு, அதுவும் வன்புணர்வு குற்றவாளிக்கா?’ என்று கண்டனத்தை ஏற்ப்படுத்தி விட்டது.

தண்டனை எவ்வளவு என்பதை கணிதம் (mathematical precision) மூலம் கூற முடியாது. வழக்கு விசாரணையில் நீதிபதியும் முன் வைக்கப்படும் பல்வேறு காரணிகளை ஆய்ந்து, அவை நீதிபதியிடம் ஏற்ப்படுத்தும் தாக்கத்தினைப் பொறுத்து அமைவது. அவையனைத்தையும், தெளிவாக தீர்ப்பில் கூற முடியும் என்பதும் இயலாதது. எனவே இவ்விதமான ஒற்றைப் பரிமாண விமர்சனங்கள், நீதிபதிகளை தட்டையான தீர்ப்பினைக் கூறும் இயந்திரங்களாக மாற்றி விடக்கூடும்!

நீதிபரிபாலனம் என்பது மூளை மட்டும் சார்ந்த விடயமல்ல...இதயத்திற்கும் கொஞ்சம் பங்கு உண்டு!

மதுரை
03.03.09


நேற்று இந்துவில் வெளிவந்த கடிதத்திற்கு நான் எழுதிய எதிர்வினை...



It is unfair on the part of the press to criticize the Delhi High Court, for its judgment, reducing the sentence of Ashok Rai, convicted for the offence of rape. It seems no one, including your reader who expressed shock in his letter published on 02.02.09 bothers to read the judgment before pouring vitriol on the Learned Judges, who only after weighing the entire circumstances of the case, in their wisdom thought fit to release the convict after 5 ½ years of incarceration. The much maligned observation on the ‘convict qualifying for IAS’ is made only as a passing reference at the end of Judgment to bolster the point that the convict had shown good conduct while in jail. It is another matter whether he is fit or legally entitled to work as a civil servant or not.

Instead, what weighed most in the mind of the Learned Judges was that what had happened between the victim and the culprit was not technically rape but a consensual sex, obtained on a false promise of marriage. The culprit was aged 29 and the victim 21 and had she exhibited a little more strong will, she could have succeeded in bringing the culprit into book, without losing her life. The way in which the suicide note was written, creates a suspicion in my mind that the victim, in a fit of rage and spirit of revenge has laid a well thought out plan to send the cheater for a long period behind the bars. Well, 5 ½ years is not a small period but still the Learned Judges could have stuck to the minimum period of 7 years and leaving the remission period to the concerned authorities.

In any case, it is not correct that convict’s qualifying for IAS was not cited by the Delhi High Court as the only reason for reducing the sentence.