11.8.06

தலாக்...தலாக்...தலாக்...

(எச்சரிக்கை: சிறுகதைகளை முழுவதும் படித்து முடிக்கும் திறமையும் பொறுமையும் உள்ளவர்களுக்கு மட்டும்...)



“கொஞ்சம் உள்ளே வா. ஒரு வேலை இருக்கு” வண்டியிலிருந்து இறங்கிய சீனியர், தனது வேட்டியை இன்னும் இறுக்கமாக கட்டியபடி வீட்டிற்குள் அழைத்தார். ‘என்னடா இது சோதனை, ராத்திரி பத்து மணியாகியும் வீட்டுக்குப் போகவிடமாட்டாரா?’ என்ற சலிப்பினை முகத்தில் தேக்கி நோக்கிய என் திகைப்பு அவருக்கு புரிந்திருக்க வேண்டும். “இல்ல நம்ம பாய் ஒருத்தரைக் கூட்டிட்டு வர்றாரு. ஏதோ பேசணுமாம்” என்றவாறு எனது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டார்.

தினமும் அலுவலகம் முடிந்து இரவு, சீனியரை அவரது வீட்டிற்கு கூட்டிச் செல்வது எனது வேலை. பல நாட்களில் அங்கேயே சாப்பிட வேண்டுவார். எனக்கும் ஹோட்டல் சாப்பாடு வெறுத்துப் போகும் போதெல்லாம், அங்கேயே சாப்பிடுவதுண்டு. னால் அதில் ஒரு பிரச்னை. தனியே சாப்பிட வேண்டும். சீனியர், நான் வாங்கிக் கொடுத்த விஸ்கியுடன் உட்கார்ந்து விடுவார். சாப்பிட்டு கிளம்பும் போது அவருடன் உட்காரச் சொல்லிவிட்டால் மேலும் பிரச்னை! ‘மரடோனா ஒன்றும் நான் சொல்லிய மாதிரி பிரமாதமாக இல்லையே என்பதிலிருந்து எம்.எஸ்.எஸ் போல உண்டா’ என்பது வரையான ஏற்கனவே நான் அவரிடம் கேட்ட விஷயங்களை திரும்பவும் கேட்க வேண்டும். ஆனாலும், பல சமயங்களில் அவரது வாழ்க்கையில் நேரிட்ட ரசமான சில நிகழ்ச்சிகளை பேச்சிலேயே நம் கண்முன் கொண்டுவருவார். நான் சந்தித்த சில சுவராசியமான மனிதர்களில் அவருக்குதான் முதலிடம்.

‘பாய்’ என்று அவர் குறிப்பிட்டது அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒரு இஸ்லாமியர். சில சமயம் தனது தொழில் சம்பந்தமாக ஏற்படும் சட்டப்பிரச்னைகள் குறித்து கேட்க வருவார். பல சமயங்களில் வெறும் உரையாடலுக்காக, விஸ்கியுடன் வருவார். நாங்கள் வருவதை அவர் பார்த்திருக்க வேண்டும். சில நிமிடங்களிலேயே வந்து விட்டார். கூடவே, ‘பயத்தாலா இல்லை ஏதாவது சந்தேகத்தாலா’ எனப் புரிந்து கொள்ளவியலாத தவிக்கும் கண்களுடன் ஒல்லியான தேகத்தில் இளைஞர் ஒருவர்! திரைப்படங்களில், வில்லனது குகைக்குள் மாட்டிக்கொள்ளும் காமெடி நடிகரைப் போல அவரது கண்கள், அச்சூழ்நிலையின் மீதே சந்தேகம் கொண்டது போலவே அங்குமிங்கும் அலைந்தாலும் சந்தேகப்படும்படியாக எங்களிடம் ஒன்றுமில்லையாதலால், பயம்தான் என யூகித்துக் கொண்டேன். வசீகர முகம் படைத்த அந்த இளைஞருக்கு வயது இருபத்தெட்டுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

“இவர் என்னோட அக்கா பையன்” என்று மற்ற விசாரிப்புகள் முடிந்து நாங்கள் அனைவரும் நாற்காலியில் அமர்ந்த பின்னர் பாய் ஆரம்பித்தார். கூட வந்தவரோ முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் நாற்காலியின் விளிம்பில், கைகள் இரண்டையும் சேர்த்துப் பிடித்து கால்களுக்கு நடுவில் வைத்தபடி அமர்ந்திருந்தார்.

“திருச்சியில டாக்டராயிருக்காரு” வந்தவர் பேசாமல் இருக்க பாய்தான் தொடர்ந்தார். “போன வருஷத்துக்கு முந்தின வருஷம் இவருக்கு நிக்கா ஆச்சு. பொண்ணுக்கு தஞ்சாவூர். அங்கே அவங்க வாப்பா பெரிய டாக்டர். அண்ணன்ங்க கூட டாக்டர்கள்தான். நல்லாத்தான் இருந்தாங்க. ஆனா, இவரைப் போட்டு ஏதோ தொந்தரவு பண்ணி, போன வாரம் போலீஸ்ல கம்பெளைண்டு குடுத்துட்டாங்க”

சீனியர் பொறுப்பை என்னிடம் தள்ளியவாறு நாற்காலியில் சரிந்து உட்கார்ந்திருந்ததாலும், நானும் அசுவராசியமாக ஒரு பிஸ்கெட்டை எடுத்து கடித்துக் கொண்டிருந்ததாலும் ‘என்ன கம்பிளைண்டு’ என்று கேட்கத் தோன்றவில்லை. மேலும் மனைவி வீட்டில் கணவன் மீது என்ன புகார் கொடுப்பார்கள் என்பது புரியாமல் வக்கீலாக குப்பை கொட்டுவதில் அர்த்தமில்லை!

“ஏதோ, இவரு ஒரு லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு சண்டை போட்டதாக சொல்லி, விசாரணைக்கெல்லாம் இழுத்துட்டாங்க. திங்கக்கிழம, போலீஸை வச்சு கட்டாயப்படுத்தி ‘தலாக்’ பண்ணிட்டாங்க”

“தாலாக்கா...” என்று நான் நிமிர்ந்து முகத்தை சரியாக கேட்காதது போன்ற பாவனையில் முன்னே நீட்டினேன். ‘பிறகு என்ன பிரச்னை, வக்கீலைத் தேடி வருவதற்கு’ என்ற வியப்பு எனக்கு வந்ததில் ஆச்சரியமில்லை. வழக்கமாக கணவன் மணமுறிவுக்கு துடிக்க மனைவி அந்த முயற்சியை முறியடிக்க போராடுவதைத்தான் பார்த்திருக்கிறேன். புகார் கொடுத்த மனைவி வீட்டிலேயே, மணமுறிவும் செய்வது எனக்குப் புதிது!

“ஆமாம், நான் தலாக்நாமா கொடுக்கலைன்னா, கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன்னு மிரட்டினாங்க. இன்ஸ்பெக்டரும் எழுதிக் கொடுக்கலைன்னா நான் வீட்டுக்கு போக முடியாது...நேரா ஜெயிலுக்குதான் போகணும்னு சொன்னாரு. எனக்கு வேற வழியில்லை” வந்தவர் இப்போது முதன் முறையாக பேசினார்.

“சரி, இப்போ என்ன? வரதட்சணை வாங்கிட்டு வேற பொண்ண கலியாணம் பண்ணிக்க வேண்டியதுதானே” சீனியரிடம் இருந்து சன்னமாக வந்தது குரல். மனிதன், இரண்டாவது ‘பெக்’கில் இருந்திருக்க வேண்டும்.

“நான் வரதட்சணையே கேட்கவில்லை. நிக்காவுக்கு அவங்க கொடுத்த அவ்வளவு ஜாமானையும் அவங்ககிட்டயே ஒன்னு விடாம அப்படியே திருப்பிக் கொடுத்துட்டேன்” குரலில் ஒரு எரிச்சல் தொனித்தது. புதிய சூழ்நிலையின் பயம் போயிருக்க வேண்டும். அல்லது சீனியரின் கிண்டல் உறைத்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் நாற்காலி விளிம்பில் இருந்து உள்ளே செல்லவில்லை.

“சரி, இப்போ என்ன பண்ணனும். கேஸ் எதும் போடலல்ல” நேரடியாக அவரது முகத்தைப் பார்த்துக் கேட்டேன்.

“அவங்களுக்கு வேற நிக்காவுக்கு ஏற்பாடு செய்யிறாங்க. அதத்தடுக்கணும்”

“தடுத்து...”

“என் வொய்ஃப் என்னோட வரணும்னு ஆர்டர் வாங்கணும்”

“சரி, உங்களுக்கிடையே என்ன பிரச்னை. இந்த மாதிரி கேஸெல்லாம் சமரசமாகத்தான் முடிக்கணும்” என்று சொல்லி வந்தவரது முகத்தைப் பார்க்க, “அதெல்லாம் எங்களுக்கிடையிலே ஒன்னும் பிரச்னையில்லை” என்றார் அப்பாவியாக.

பிரச்னை எதுவுமேயில்லை என்று கூறிக்கொண்டே விவாகரத்து வரை செல்லும் பல தம்பதிகளை எனது அந்த சிறு அனுபவத்திலேயே பார்த்திருந்தாலும்...அவரை மேலும் மேலும் துருவியதில் இறுதியாக சில விஷயங்களைத்தான் அனுமானிக்க முடிந்தது. அதாவது டாக்டர் அவரது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மிதமான வசதி படைத்த குடும்பம். டாக்டர், அரசு வேலைக்கு ஏதும் முயலாமல் தனியே கிளினிக் வைத்து பொது மருத்துவராக பணியாற்றுகிறார். அவரது மனைவியின் குடும்பமோ வசதி நிறைந்தது. மேலும் அவரது அப்பா, அண்ணன்கள் தஞ்சாவூரில் பெரிய மருத்துவமனை நடத்துகின்றனர். இந்தச் சூழ்நிலையில் மகளின் கணவரையும் தன்னுடன் வந்து மருத்துவமனையில் பணிபுரிய வேண்டுவது பல தந்தைகள் எதிர்ப்பார்ப்பதுதான். ஆனால், அந்த ஒரு பிரச்னையில் இத்தனை சிறிய காலத்தில் விவாகரத்து வரை செல்வார்களா என்பது ஆச்சரியமாக இருந்தது. மேலும் டாக்டருக்கு ‘குழந்தைகள் யாரும் இல்லையென்பது’ காரணம் அதுவாக இருக்கமுடியாது என்று, டாக்டர் மறுத்தாலும் உணர்த்தியது.

எனது சீனியருக்கோ எதிலும் பொறுமை கிடையாது. அதுவும், நோயில் விழுந்து எழுந்து வந்ததாலோ என்னவோ...அவர் விரும்பும் வண்ணம் பதில் வரவில்லையென்றால் எரிச்சல் எரிச்சலாக வரும். டாக்டரிடமோ, நமக்கு வேண்டிய ஒரு பதிலைப் பெறுவதற்கு பத்து கேள்விகளாவது கேட்க வேண்டியிருக்கிறது. எனவே சீனியரை கையமர்த்தி நானே டாக்டரைக் கையாண்டதில் அவருக்கு எந்தவித ஆட்சேபமுமின்றி, பாயுடன் விஸ்கியின் பிரதாபங்களை ராய்ந்து கொண்டிருந்தார்.

“சார், கொஞ்சம் சிக்கலா இருக்கிறது. இஸ்லாமிக் லாவில் தலாக் பண்ணிவிட்டால் ரத்து பண்ண முடியாதுன்னு படிச்சுருக்கேன்...ம்ம்ம் காலேஜில படிச்சதோடு சரி! இவர் வொய்ஃப் வேற கலியாணம் பண்ணக்கூடாதுன்னு இஞ்ஜக்ஷன் வாங்கச் சொல்றார். எதுக்கும் நாளைக்கு வரச் சொல்லுங்க. இந்த டாக்குமெண்ட்ஸையெல்லாம் முதல்ல படிக்கணும்” என்று சீனியர் பக்கம் திரும்பினேன். சீனியர், அவர்களிடம் எதுவும் கேட்காமலேயே அனுமதிப்பதாக தலையாட்டினார். டாக்குமெண்ட்ஸ் என்று நான் குறிப்பிட்டது அப்படியொன்றும் பெரிய ஆவணமல்ல. டாக்டர் தனது மனைவி எழுதிதாக என்னிடம் காட்டிய சில கடிதங்கள். அவற்றை அங்கேயே படித்திருக்க முடியும். ஆனால், எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. தூக்கம் வேறு கண்ணைச் சுழட்டியது.

***

படுக்கையில் படுத்தபடியே ஏதாவது படித்தால், பாடல் கேட்டால்தான் தூக்கம் வரும். சில முறை விளக்கை அணைக்காமலேயே தூங்கியிருக்கிறேன். டாக்டர் தந்த கடிதங்களில் இருந்த சீரான ஆங்கில எழுத்துக்கள், என்னை அதை படிக்கத் தூண்டியது. கோடு போடாத வெள்ளைத் தாளில் அவ்வளவு நேரான அதே சமயம் அழகான ஆங்கில எழுத்துகளை நான் பார்த்ததில்லை. இரண்டு பாராக்களிலேயே புரிந்து போனது...கையெழுத்து மட்டும் சீரானதல்ல.....ஆங்கில வார்த்தைக் கட்டுகளும்தான். வாக்கியங்கள் மட்டுமல்ல...அதன் விஷயங்கள்! நான் காதல் கடிதங்கள் எதுவும் படித்ததில்லை. ஆனால், அந்தக் கடிதங்களில் காதல் ரசம் சொட்டச் சொட்ட டாக்டருக்கும் அவரது மனைவிக்குமான அந்தரங்க விஷயங்கள்...அதுவும் அத்தனை நேர்த்தியான முறையில் எழுதப்பட்டிருந்தது. ஆங்கில நாவல்கள் படிக்க ஆரம்பித்து சில வருடங்களே கழிந்திருந்தாலும்...நான் அதுவரை படித்திருந்த ஆங்கில நாவல்களில் விவரிக்கப்பட்டிருந்த காதல் காட்சிகளுக்கு சற்றும் அழகில் குறைவில்லாத் வரிகள்! எனக்கு அப்படியே வியர்த்து விட்டது. காதல் என்பது இதுதானா? தூக்கமெல்லாம் அப்படியே காணாமல் போய்...முதல் முறையாக என்னிடம் வந்த ஒரு கட்சிக்காரன் மீது பொறாமையாக வந்தது. இவனது காதல் மீது எவ்வளவு அன்பும், பிரியமும் கொண்டிருந்தால் ஒரு பெண்ணால் இப்படி எழுத முடியும்? மண வாழ்க்கையில் இவர்களுக்கிடையே உடல்ரீதியிலான பிரச்னன ஏதும் இருப்பதாக இனி அனுமானிப்பது அபத்தம் என்று பட்டது.

தூக்கம் எங்கோ ஓடிப்போனது என்று உணர்ந்ததாலோ, படித்த கடிதங்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தாலோ, வீட்டிலிருந்த இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய புத்தகத்தை பிரித்து படித்தவாறு இருந்தவன் எப்போது தூங்கினேன் என்பது தெரியவில்லை.

***

“சார், டாக்டருக்கும் அவரது பொண்டாட்டிக்கும் ஏதும் பிரச்னை இருப்பது போலத் தெரியவில்லை. இப்பதான் ஒரு மாசத்துக்கு முந்தி எழுதுன கடிதம்தான். இப்படி இவர் மேல உருகி உருகி எழுதியிருக்கு. சும்மா, அவங்க அப்பா இல்ல இவர் அம்மா, அப்பாதான் ஏதோ காரணமாயிருக்கும். அந்தப் பொண்ண கோர்ட்டுக்கு வரவச்சுட்டா..சரியாடும்னு நினைக்கிறேன்” டாக்டரை வெளியறையிலேயே உட்கார்த்தி வைத்துவிட்டு சீனியரிடம் கிசுகிசுத்துக் கொண்டிருந்தேன். வெளியே பெஞ்சில் டாக்டர், அப்பாவித்தனமாக எதன் மீதும் எந்தவித சுவராசியமும் இல்லாத மாதிரி கை நகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

“கிறுக்கன் மாதிரி இருக்கான்” நெஞ்சு நிமிர்த்தி தோரணையாக பேசாத எவரும் சீனியருக்கு கிறுக்கன்தான். ‘இந்த ஊர், இங்க உள்ளவனெல்லாம் கால்ல கிடக்கற மாதிரி ஒரு திமிர் இருக்கும்’ என்று அவரே சொல்லிக் கொள்ளும் பழைய திமிர் அவரிடம் இன்னமும் மிஞ்சியிருந்தது.

“சரிடா, ஆனா என்னன்னு கேஸ் போடுவே! தலாக் பண்ணியாச்சே!!” என் கண்களை நேரடியாக பார்த்து கேட்டார்.

“வேடிக்கைய பாருங்க. இன்ஸ்பெக்டரும் சாட்சி மாதிரி தலாக்நாமாவிலே கையெழுத்து போட்டிருக்காரு. அவங்க கொடுத்த கம்பிளைண்டு ஸ்டேஷன்ல இருக்கும். எல்லாத்தையும் வச்சு...டாக்டரை மிரட்டியிருக்காங்க..அதனால அவர் மனதால ‘தலாக்’ எழுதிக் கொடுக்கலன்னு புரூவ் பண்ண முடியும்”

“மடையா, அதான் கம்பல்ஷன்ல வாங்குனாலும் தலாக் செல்லுமே” உண்மைதான். வற்புறுத்தி வாங்கப்பட்டாலும் சரி, மனதார அன்றி வேறு நபர்களின் தூண்டுதலின் பேரில் தலாக் செய்தாலும் அது செல்லும். பாகிஸ்தானில், ஒரு நாடக மேடையிலும் கணவன் மனைவியாக நடித்தவர்கள் ‘த்லாக்’ சொல்ல ‘வேடிக்கைக்காக சொன்னாலும் தலாக், தாலாக்தான்’ என்று குரல்கள் எழுந்தன என்று செய்தித்தாளில் படித்த ஞாபகம்.

“இதை நல்லா படிங்க” புத்தகத்தை அவரிடம் தள்ளிவாறு தொடர்ந்தேன், “கம்பல்ஷன்ல கொடுத்த தலாக் செல்லணும்னா...தலாக்குக்கு யூஸ் பண்ற வார்த்தைகள் நேரிடையா (express words) இருக்கணும்னு இருக்கு”

“சரி, அதனால...”

“இங்க பாருங்க. தலாக்ல இரண்டு வகை இருக்கு. வாய்மொழியா சொல்றது. எழுதிக் கொடுக்குறது” அவர் கைகளில் இருந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டியபடி தொடர்ந்தேன், “ எழுதிக் கொடுக்குறதிலியும் ‘மானிஃபெஸ்ட்’ அல்லது ‘கஸ்டமரி’ (manifest or customary) அப்புறம் ‘அன்யூஷ¤வல்’னு (unusual) இரண்டு முறை இருக்கு பாருங்க. அதாவது கணவர் நேரிடையா மனைவிக்கு அட்ரஸ் பண்ணி இரண்டு பேரோட பெயர், விலாசம் எழுதி தலாக் பண்ணிட்டேன்னு சொல்றது கஸ்டமரி. அப்படியில்லாம தலாக்நாமா, மனைவிக்கு சொல்றது மாதிரி இல்லாம ஏதோ டிக்லரேஷன் மாதிரி இருந்தா அது ‘அன்யூஷ¤வல்’ தலாக்” நான் உற்சாகமாக சொல்லிக் கொண்டு வந்தாலும், சீனியர் ஏதோ புரியாதது போல ஒரு அசுவராசியம் காட்டினார்.

“இப்ப டாக்டர் எழுதிக் கொடுத்த தலாக்நாமாவைப் பாருங்க. அவர் மனைவியை நேரிடையாக குறிப்பிட்டு எழுதவில்லை. தேர்ட் பெர்ஸனில் (third person) எழுதியிருக்கு. அதனால இத அன்யூஷ¤வல் தலாக்னு சொல்லுவோம். அன்யூஷ¤வல் தலாக்ல, தலாக் பண்றதுக்கு விருப்பம் இருக்கணும். அது மாதிரி மிரட்டி வாங்குன தலாக்கும் செல்லாது சொல்றதும் இங்க அப்ளை ஆகாது” என்று நிறுத்தி ஒரு பெருமிதத்தோடு சீனியரைப் பார்த்தேன். அவரோ எந்தவித உணர்ச்சியும் காட்டவில்லை. பல சீனியர்களுக்கு ஜூனியர்கள் சட்டத்தை விளக்க (interpret) வேண்டும். ஆனால் அதை பெரிதாக கருத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எனது சீனியர் அப்படியல்ல. எனக்கு பின்னர் வழக்கு தயாரிப்பிலும் முழு சுதந்திரம் கொடுப்பார். சொத்துப் பிரச்னைகளுடன் அல்லாடி வரும் வழக்கறிஞர்களுக்கு, திருமணம் சம்பந்தபட்ட வழக்குகளில் கிடைக்கும் பணம் தேவையாயிருந்தாலும் ஒரு ஏளனம் இருக்கும், அவர்களது திறமைக்கு அதில் ஏதுமில்லை என்பது போல.

“சரியா பாருடா...அதுல கம்பல்ஷன்ல வாங்குன தலாக் செல்லனும்னா, தலாக் எக்ஸ்பிரஸ் வோர்ட்ஸ்ல இருக்கணும்னு இருக்கு. நீ மானிஃபெஸ்டையும் எக்ஸ்பிரஸையும் போட்டுக் குழப்பிக்கற” இப்போதுதான் எனக்கு அது உறைத்தது. அது வரை நான் கட்டிய கோட்டை ஆட்டம் காண்பது போல இருந்தது.

“எப்படியோ, இது அன்யூஷ¤வல் தலாக்தான். அதனால விருப்பம் இருக்கணும். விருப்பம் இல்லைன்னு நிரூபிக்க முடியும். அந்தம்மா எழுதின கடிதம் இருக்கு. போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்தது பொய் கம்பிளைண்டுன்னு புரூவ் பண்ணிடலாம். தலாக் பண்ணுற இடத்துல இன்ஸ்பெக்டருக்கு என்ன வேலை” சீனியர் ஒன்றும் பேசாமல் இருக்கவே, நானே தொடர்ந்தேன், “சார், யோசிக்காதிங்க கேஸ் போட்டப்புறம் செட்டில் யிடும்”

“சரி, அவங்கள கூப்பிடு” என்று என்னிடம் கூறினாலும் அவரே எட்டி, “பாய் கொஞ்சம் உள்ளே வாங்க” என்றார்.

***

திருச்சியில் எனது நண்பன் சலித்துக் கொண்டான், “என்னடா இது, இப்படி ஒரு கேஸைக் கொண்டாந்திருக்கே. பொண்ணுக்கு கல்யாணம் ஆகக்கூடாதுன்னு ஆர்டர் தருவானாடா?”

“இரண்டாவது கல்யாணம்” திருத்தினேன். “அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நாளைக்குப் ஃபைல் செய்து மத்தியானம் ஹியரிங்குக்கு கொண்டு வந்திரணும். கிளையண்ட் ரொம்ப பயந்து போய் இருக்கார்”

“சரி, எங்க கிளையண்ட், யாரோ டாக்டருன்னு சொன்னே”

“இங்கதான் பக்கத்துல கிளினிக்காம். முடிச்சுட்டு வந்துடறேன்னு சொன்னார். இதப் பாரேன்...இந்த லிஸ்ட. கிடைச்சாலும் இப்படி மாமனார் கிடைக்கணும்டா”

“ஆமாம், அதான் பொண்ணை கூட்டிட்டு போய்ட்டார்” என்றபடி டாக்டர் என்னிடம் கொடுத்து வழக்கில் வணமாக சேர்த்திருந்த ஒரு பட்டியலைப் மேய்ந்தான். அதில் டாக்டருக்கு திருமணத்தில் போது கொடுத்த ஒரு டஜன் கைக்குட்டையிலிருந்து...வீட்டிலிருக்கும் குளிர்ப்பெட்டி வரைக்கும் போததற்கு தங்க, வெள்ளி நகை வகைகளில் என்னின்ன உண்டோ அதெல்லாம் இருந்தது. நான் கேள்விப்படாத பாத்திர பண்ட வகைகள், நகைகள் சிலவும் இருந்தன. முழுத்தாளில் பல பக்கங்களில் இருந்த அந்த பட்டியலில் கண்களை ஓட்டிய நண்பனின் கண்கள் விரிந்தன.

“லிஸ்ட் போட்டு இத்தனை வாங்கியிருக்காரு. ஒரு லட்சம் கேட்க மாட்டாரா?”

“போடா...இத்தனையும் அப்படியே திருப்பிக் கொடுத்திருக்காரு. அடியில எழுதி எல்லோரும் கையெழுத்துப் போட்டிருக்கிறதைப் பாரு. அதுவும்...ஒரு லட்சம் தூசுடா, முக்கியமா பொண்ணோட அப்பாவுக்கு”

“கலியாணம் ஆகி ஒரு வருசமாச்சுன்னு சொல்றே...இதென்னடா ஸ்பூன், கஃப் பின் அப்புறம் கர்சீஃப் கூட திருப்பிக் கொடுத்தாரா? என்னடா இது, யாருகிட்ட பூச்சுத்துற”

“நீ அவரப் பாத்தா நம்புவ. அதுவும் அப்படிக் கொடுக்காம கையெழுத்துப் போடுறாங்களாக்கும்”

சிறிது நேரத்தில் டாக்டர் வந்து நண்பனுடனும் சகஜமானாலும் பட்டியல் மீது நம்பிக்கையில்லாத நண்பன், டாக்டரின் ஒரு செயலில் ‘நான் சொன்னது சரிதான்’ என்பது மாதிரி கண்ணடித்தான். எல்லாம் முடிந்து டாக்டரிடம் நண்பனுக்கு வழக்கை தாக்கல் செய்வதற்கான கட்டணம் மற்றும் செலவுகளை கொடுக்க வேண்டினேன். எல்லாவற்றையும் கணக்கிட்ட நண்பன், ‘எண்ணூற்றி அறுபத்தியெட்டு ரூபாய்’ என்றான். டாக்டர் தான் வைத்திருந்த தோலினாலான பையை மெல்லத் திறந்து அதற்குள்ளிருந்து அதே நிறத்திலான மற்றொரு சிறிய தோல் கைப்பையை எடுத்தார். இடது உள்ளங்கையில் அப்பையை நிறுத்தி வலது கையால் மெல்லத் திறந்தார். பக்கத்திலிருந்த நான் பை முழுவதும் பணம் என உணர்ந்தேன். ஒரு பெண்ணிற்கே உரிய நளினத்துடன் லாவகமாக ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் பைக்குள் செலுத்தி, முதலில் நூறு நூறு நோட்டுகளாக எடுத்தார். வெட்கம் துறந்து மேலும் நன்றாகப் பார்த்தேன். அந்தப் பைக்குள் அனைத்து டினாமினேஷனிலும் ஒரு ரூபாய்த் தாள்கள் வரை வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது. அது போதாதென்று தனியான ஒரு பகுதியில் சில்லரைகள் சலசலத்தது. நண்பன் கேட்ட பணத்தை ஒரு ரூபாய் அங்கே இங்கேயின்றி டாக்டர் எண்ணி வைத்தார். அந்த ஒரு நாள் மட்டுமல்லாமல் டாக்டரை பின் நான் வழக்கு சம்பந்தமாக சந்திக்க நேர்ந்த பல நாட்களில், அவர் அப்படி இரு விரல்களை செலுத்தி பைக்குள் இருந்து பணத்தை சரியான சில்லறையில் எடுப்பதை, சில சமயம் ‘சாலைகளில் செருப்புத் தைப்பவன் வேலை செய்வதை’ பார்க்கும் அதே ஆர்வத்துடன் பார்ப்பேன். எங்கும் எந்தவித சந்தர்ப்பத்திலும் அவரிடம் சரியன சில்லறை இருக்கும்.

நண்பர் கடைசியில் டாக்டரைப் பார்த்து “சரி, நீங்க கேஸ் போடுறது அவங்க யாருக்கும் தெரியாம நாளை வரை பார்த்துக்கோங்க. இல்லைன்னா காரியம் கெட்டுடும்” என்றான். ‘ஏன்?’ என்பது போல விழித்த டாக்டரிடம் நான், “அது ஒன்றுமில்லை. ‘மிகவும் அவசரம், அதனால் எதிராளிக்கு அறிவிப்பு கொடுக்க முடிய நேரமில்லை. அவர்கள் வந்து பின்னாளில் வழக்கில் கலந்து கொள்ளும் வரை இண்டரிம் ஆர்டர் கேட்கப் போகிறோம். அவர்கள் நாளை கோர்ட்டுக்கு வந்துவிட்டால் அவர்கள் எழுத்துபூர்வமான பதில் தாக்கல் செய்த பிறகுதான் ஆர்டர் கிடைக்கும். அதற்குள் பல நாட்கள் கிவிடும். எனவே நாளை நாம் கோர்ட்டுக்கு போவது அவர்களுக்கு தெரியக்கூடாது” என்றேன்.

தஞ்சாவூரில் வசிக்கும் பெண் வீட்டாருக்கு டாக்டரின் வழக்கு விபரம் தெரியும் சாத்தியக் கூறு ஏதும் இல்லையெனினும், டாக்டர் இந்த எச்சரிக்கையில் மிகவும் கலவரப்பட்டு போனார். ‘சரி நீங்க வாங்க. நான் உங்களை கொண்டு போய் ஹோட்டலில் சேர்க்கிறேன்’ என்று என்னை வற்புறுத்திக் கூட்டிக் கொண்டு போனவர் அடுத்து ஸ்கூட்டரை நிறுத்திய இடம், காவிரிப் பாலத்தின் நட்ட நடுவில். இரவு ஏற்கனவே மணி பத்தை தாண்டி விட்டது. என்னை இறங்கச் சொல்லியவர் அங்கிருந்த கைப்பிடிச்சுவரில் சாய்ந்து, ‘சொல்லுங்க’ என்றார். நான் புரியாமல் விழிக்க அவரே தொடர்ந்தார், ‘இங்கதான் நாம் வசதியா நிதானமா பேசலாம், கேஸ் பத்தி’ என்றார். ‘என்ன விளையாடுறீங்களா?’ என்று பொங்கி வந்தது கோபம். ஆனால் அவர் ஒரு டாக்டர், என்னை விட வயதில் சிறிது மூத்தவர்! மறுப்பு ஏதும் சொல்லாமல் கேட்கிற பீஸை தருகிறார். முக்கியமாக தொழிலை அப்போதுதான் ஆரம்பித்த ஒரு வக்கீல் நான். கோபப்பட முடியுமா? அதனால், “டாக்டர், கேஸ் பத்தியெல்லாம் ஒன்னும் இல்லை. நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்” என்றேன். மனிதர் விடாமல் பத்து நிமிடம் பேசிய பிறகே அழைத்துச் சென்றார். கடைசியில் எனது ஹோட்டலில் இறக்கிவிட்டவரிடம், “நாளை காலை சீக்கிரம் வந்து விடுங்கள்” என்றபடி விட்டால் போதும் என்று திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டேன்.

***

அடுத்த நாள் ஆறு மணிக்கெல்லாம் கதவை யாரோ தட்டுவதைக் கேட்டு, ‘யார் இது இந்த நேரத்தில்?’ என்று கதவைத் திறந்தால்...டாக்டர்! கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு!! ‘என்ன இந்த நேரத்தில்’ என்றால் ‘நீங்கள்தான் காலையிலேயே வரச் சொன்னீர்கள்’ என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘கோர்ட் பத்தரைக்குதான். நாம பதினொரு மணிவரை ஃபைல் செய்யலாம். நீங்கள் வீட்டுக்குப் போகும் போதே மணி பன்னிரண்டு இருக்குமே’ என்றேன். ‘நான் ரொம்ப தூங்கெல்லாம் மாட்டேன். சமயங்களில் இரண்டு மணியாகிவிடும்’ என்றார் அப்பாவியாக. அந்தக் களைப்பே தெரியாமல் மனிதர், நன்றாகக் குளித்து புதிய உடைகளுடன் இருந்தார். ‘சரி நானே கோர்ட்டுக்கு வந்து விடுகிறேன். நீங்கள் கோர்ட் பக்கம் வர வேண்டாம். அந்த சாலை முனையில் உள்ள கடையில் எனக்காக ஒரு மணிக்கு வெயிட் செய்யுங்கள். நான் கேஸ் நம்பர் ஆனவுடன் உங்களுக்கு வந்து சொல்கிறேன். வழக்கு மத்தியானம் ரெண்டேகாலுக்குதான் எடுப்பார்கள்’ அப்போது வந்தால் போதும் என்றேன். விடாமல் உள்ளே வந்து ஒரு அரை மணி நேரம் பேசிச் சென்றார்.

நான் கூறியபடியே ஒரு மணிக்கு டாக்டரை சந்தித்தேன். “சார் நான் வந்தால் யாராவது பார்த்துவிடுவார்கள்” எனவே நீங்கள் வழக்கு முடிந்து என்னிடம் ஆர்டர் கிடைத்ததா என்று மட்டும் வந்து சொல்லுங்கள் என்றார். ஏதோ, ஆங்கில திரைப்படங்களில் நான் பார்த்த ரஷிய ஒற்றர்கள் பேசிக் கொள்வதைப் போல இருந்தது அந்தச் சந்திப்பு. நண்பனின் எச்சரிக்கை பலமாக வேலை செய்திருக்கிறது. எனினும், அவர் அருகில் இல்லாமல் இருந்தால் நல்லது என்று எண்ணி நானும், ‘அதுவும் சரிதான்’ என்றேன்.

என் நல்ல காலம். நீதிபதி கருணைமிக்கவராக இருந்தார். அதுவும் இளவக்கீல் ஒருவன் வந்து போராடுகிறானே என்ற கனிவான பார்வை அவரிடம் வெளிப்பட்டது. எனக்கும் முதல் அனுபவம். னால், ‘அது எப்படி நான் கல்யாணம் செய்யக் கூடாது என்று ஆர்டர் தருவது. இன்று கூட கல்யாணம் இருக்கலாம்’ என்று யோசித்தார். அதுவரை குரலை உயர்த்தி பேசியவன் கடைசியில் கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டேன். பின்னாலிருந்த நண்பன், ‘டேய், ஸ்டேடஸ் குவோ (status quo) ஆர்டர் கேளு’ என்றான். நீதிபதியின் தன்மை அறிந்தவன் அவன். உடனே நான், “அவ்வாறென்றால் தாங்கள் ஸ்டேடஸ் குவோ உத்தரவிடுங்கள்’ என்றேன். நீதிபதி உடனே, ‘ஹாங். ஸ்டேடஸ் குவோ உத்தரவு தருகிறேன்’ என எங்கள் முகங்களில் மலர்ச்சி! பின்ன, எல்லாம் ஒன்றுதான். ‘ஸ்டேட்ஸ் குவோ’ என்றால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் பொழுது என்ன நிலையோ அது நீடிக்க வேண்டும் என்பதுதான். ஆக அன்று அப்பெண்ணுக்கு திருமணம் நடந்திருக்கவில்லையென்றால் அந்த உத்தரவு நீக்கப்படும்வரை திருமணம் செய்யவியலாது. உடனடியாக வெளியே ஓடிச் சென்று காத்திருந்த டாக்டரிடம் உத்தரவை விளக்க அவருக்கும் மகிழ்ச்சி!!

***
உத்தரவை எதிராளி விலாசத்துக்கு அனுப்பிய சில நாட்களிலேயே எதிர்பார்த்தது நடந்தது. அவர்கள் உடனடியாக நீதிமன்றத்தை அணுகி, இடைக்கால உத்தரவை விலக்க வேண்டுமென மனுப் போட்டிருந்தார்கள். டாக்டர் கூறிய மாதிரியே, ‘அவர் வரதட்சணை கேட்டு வற்புறுத்தியதாக’ மனுவில் கூறியிருந்தாலும் ‘தலாக் கூறியது கூறியதுதான். எக்காரணத்தாலும் அது செல்லாமல் போகாது’ என்று சட்ட விளக்கம் வேறு.

குறிப்பிட்ட நாளில் மீண்டும் திருச்சி நீதிமன்றம். அதற்கு முன் நாள் முன்பு போலவே காட்சிகள் அரங்கேறியது. நண்பன் அலுவலகத்துக்கு இரவு தனது கிளினிக்கை முடித்து வந்த டாக்டர் என்னை மீண்டும் காவிரிப் பாலத்தில் நிறுத்தியது...பின் ஏறக்குறைய நான் அவரைத் திட்டி எனது ஹோட்டல் அறையிலிருந்து வெளியேற்றியது என்று. நீதிமன்றத்தில், ‘இப்படி ஒரு தடை உத்தரவு வழங்கப்படவே முடியாது’ என எதிர்ப்பக்க வக்கீல் ஒற்றைக் காலில் நிற்க ‘உத்தரவை நீக்கினால், உடனடியாக பெண்ணுக்கு திருமணம் முடித்து விடுவார்கள். பின்னர் எங்களது வழக்கு விசாரணையில் நாங்கள் வெற்றி பெற்றாலும் பிரயோசனமில்லை’ என்று நானும் இடை மறித்தேன். பின்னர் இருவருக்கும் பொதுவாக, வழக்கையே இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி கூற அதை அனைவரும் ஏற்றுக் கொண்டோம். பொதுவாக இடைக்கால உத்தரவு வாங்கியவுடன் வழக்கு விசாரணைக்கு வர சில வருடங்கள் ஆகும். சீக்கிரம் வரும் வழக்கையும் தள்ளிப் போட சில வழிமுறைகள் உண்டு. ஆனால், இந்த வழக்கை கிடப்பில் போட எங்களுக்கே மனதில்லை. ஏனெனில் டாக்டருடன் பழகிய சில நாட்களில் அவர் கூறியதை வைத்து, அவர் மனைவி அவரைப் பார்க்கையில் மனம் மாறிவிடுவார் என்றே தோன்றியது. அவர் பெற்றோர்களுக்காகத்தான் அப்பெண் பயந்து கொண்டு இருப்பதாக அனுமானித்தேன். ஏனெனில் மனுஷன் விவாகரத்து வரை போகக் கூடிய எந்த ஒரு காரணத்தையும் கூறவில்லை. எதிர்ப்பக்கத்து வக்கீல் நல்லவர். நான் அவரிடம், டாக்டர் அவர்கள் விரும்பினால் அவர்கள் வீட்டிலேயே வந்து இருக்க சம்மதம் தெரிவிக்கிறார் என்றதற்கு எதுவானாலும் அவர்களிடம் பேசுங்கள். தான் குறுக்கே நிற்கப் போவதில்லை என்றார். நானும் டாக்டரிடம், இப்போதைக்கு மாமனார் வீட்டுக் கண்டிஷனுகெல்லாம் சம்மதியுங்கள் என்று கூறி வைத்திருந்தேன். அவர்கள் வக்கீல் அப்பெண்ணுடன் கூட நாங்கள் பேசலாம் என்று கூறினார். எனக்கு நம்பிக்கை வந்தது.

***

விசாரணை நாளும் வந்தது. எனது சீனியரோ ‘நீயே எதுவும் செய்து கொள்’ என்று என்னிடமே வழக்கை விட்டுவிட்டார். முதலில் டாக்டரின் முதல் விசாரணை. அது எளிது. நாம் மனுவில் எழுதியிருப்பதை அவர் அப்படியே கூற வேண்டும். டாக்டரும் நல்லபடியே கூறினார். எதிர் வக்கீல் தனது குறுக்கு விசாரணையில் டாக்டரிடம் இருந்து எவ்வித சாதகமான பதிலும் பெறமுடியவில்லை. டாக்டர் ‘வரதட்சணை என்ற பேச்சுக்கே தன் வாழ்வில் இடமில்லை, தனது மனைவியை தலாக் செய்யும் எண்ணம் தனக்கு துளியும் இல்லை’ என்றும் அடித்துக் கூறினார். எங்கள் பக்க சாட்சி முடிய அடுத்து அவர்கள் பக்கம் டாக்டரின் மனைவியை விசாரிக்கப் போவதாக அவர்கள் வக்கீல் கூற எனக்கு ஆச்சரியம்...தொடர்ந்து பயம்!

எவ்வித பிரச்னையும் திருமண வாழ்வில் இல்லாத நிலையில், அப்பெண்ணை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்துவது அவர்களுக்கு புத்திசாலித்தனமான காரியமா என்பது புரியவில்லை. னாலும் நாங்கள், இல்லை நான் எதைத் திட்டமிட்டேனோ அதன்படியே காரியங்கள் நடப்பது குறித்து மகிழ்ந்தேன்.

டாக்டருக்கு கை கால் இருப்புக் கொள்ளவில்லை. அவரைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருந்தது. மறுபடியும் எங்கள் அலுவலகத்தில் வைத்து பெரியதொரு ஆலோசனை. சீனியர், ‘நான் த்¢ருச்சி வரை வரணுமா?’ என்று இழுத்தார். ‘நீயே போய் கிராஸ் பண்ணிடேன்’ என்று என்னிடம் கூறியவர் டாக்டரிடம், ‘அவனே பாத்துக்குவான். ஒன்றும் பயப்படாதீங்க’ என்றார். டாக்டருக்கு நானே வருகிறேன் என்றது உண்மையில் நிம்மதியாகப் போய் விட்டது. பின்னே...சீனியரைக் கூட்டிக் கொண்டு இரவு பத்து மணிக்கு மேல் காவிரிப் பாலத்துக்கு போக முடியுமா? சீனியரிடம் அவருக்கிருந்த பயம் இன்னமும் குறையவில்லை. கடந்த இருமாத காலங்களில் ஒருமுறை கூட சீனியரின் கண்களை நேருக்கு நேராக பார்த்து பேசாதவர் என்னிடம் ஏதோ ஒருவித நட்புணர்வு பாராட்ட ஆரம்பித்துவிட்டார். அந்த நட்புணர்வின் நெருக்கத்தில் வழக்கில், ‘எப்படியாவது ஜெயிச்சுரணும், எப்படியாவது ஜெயிச்சுரணும்’ என்று என்னை மந்திரித்துக் கொண்டிருந்தார். நீதிமன்ற முடிவுகளை ஆண்டவே கூட அனுமானிக்க முடியாது. இவர் என்னவென்றால் வழக்கில் வெற்றியைத் தவிர வேறு முடிவுகளுக்கே தன்னை தயார்ப்படுத்தியவராக தெரியவில்லை. அவர் சுமந்து வந்து முழுப்பாரமும் என் தோள் மீது விழுந்து மிகவும் கனமாக உணர ஆரம்பித்தேன். அந்தப் பெண்ணின் மீது முக்கியமாக டாக்டரின் மாமனார் மீது கோபம் கோபமாக வந்தது. இப்படி மனைவிக்காக எதையும் செய்யத் தயாராக ஒருவன் இருக்கும் போது வேறு என்னதான் தேவை அவருக்கு?

“கவனி, ஜோரா... அழகா... ஒரு பொண்ணு வந்து நிக்கும். பாத்து அசந்துராதே...அது ஒரு சாட்சி அவ்வளவுதான். உன் வேலையில கவனமாயிரு. தைரியமா செய்” கிளம்புவதற்கு முன்னர் தனியாக என்னிடம் சீனியர் கூறிய வார்த்தைகள் அவை. ஏன் அப்படி கூறினார் என்று தெரியாவிட்டாலும், அவர் அனுமானித்தபடியே மிகவும் அழகுள்ள ஒரு இளம்பெண். டாக்டரின் தவிப்பின் அர்த்தம் எனக்கு ஓரளவுக்கு விளங்கியது. சேலையணிந்து வந்திருந்தாலும் ஒரு கறுப்பு துணியை தோளைச் சுற்றி மூடி, மிகவும் அடக்கத்துடன் அமர்ந்திருந்ததைப் பார்த்தால் ‘மிகவும் சிநேக மனப்பான்மையுள்ள, எவ்வித கர்வமும் இருக்க முடியாத பெண்’ என்று தோன்றியது.

முன்னாள் இரவுதான் டாக்டரிடம், ‘உங்களுக்குள் வேறு ஏதாவது பிரச்னை இருக்கிறதா’ என்று நூற்றி எழுபத்து இரண்டாவது தடவையாக கேட்டேன். அவரும் வழக்கம் போலவே, ‘இல்ல சார்’ என்றார். அப்போதெல்லாம் மனதில், ‘பணக்காரத் திமிர் புடித்த பெண்ணாக இருக்கும் போல’ என்று ஒரு எண்ணம் மின்னல் போல தோன்றி மறைவதுண்டு. அதுவும் நேற்று இரவு எனது கடைசி சந்தர்ப்பம். டாக்டரை நான் எனது அறையிலிருந்து அனுப்புவதற்கு வெகு நேரம் கிவிட்டது. வழக்கு தாக்கல் செய்கையில் அவரிடம் கொடுத்திருந்த குறைந்தபட்ச உத்திரவாதம், ‘அவரது மனைவியை நீதிமன்றத்திற்கு அழைத்து, அவருடம் பேச டாக்டருக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தர இயலும்’ என்பதுதான். மனிதர் என்னைப் போட்டு அழுத்திய அழுத்தத்தில் எனக்கு சட்டமுறைகளெல்லாம் மறந்து ‘டாக்டரைப் பார்த்தால் அவரது மனைவி அப்படியே ஸ்லோ மோஷனில் ஓடி வந்து அவரைக் கட்டிக் கொள்வார்கள்’ என்று சினிமாத்தனமான நம்பிக்கைதான் இருந்தது. அப்படித்தான் அவரிடமும் கூறி வைத்திருந்தேன். ‘உங்கள் வொய்ஃபையே பாருங்கள். என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். ஒரு வக்கீல் வைக்கக்கூடாத நம்பிக்கை!

‘உங்க கிளையண்டும் என் கிளையண்டும் பேசிக் கொள்ள முடியுமா?’ என்று வழக்கு ஆரம்பிக்கும் முன்னர் எதிர்த்தரப்பு வக்கீலிடம் கேட்டதில் பலனில்லை. கூட வந்திருந்த டாக்டரின் மாமனார், ‘அதெல்லாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்’ என்றுவிட்டார். அவரைப் பார்த்ததில் எவ்வித சமரசத்திற்கும் உட்படாதவர் போலத் தோன்றியது. அவரும் சரி, அவரது பெண்ணும் சரி...டாக்டர் அங்கிருப்பதையே பொருட்படுத்தியவர்களைப் போலத் தெரியவில்லை. நான் மனம் தளரவில்லை.

என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்த சிறிது நேரத்தில் சுற்றிலும் பார்த்தால் நீதிமன்றம் இவ்விநோத வழக்கில் கவரப்பட்டு நிரம்பியிருந்தது. பின்னே எனது நண்பன் அடுத்து என்ன கேட்கலாம் என்று எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் அந்தப் பெண்ணோ எனது எண்ணங்களை தவிடு பொடியாக்கி, எவ்வித பதட்டமும் இன்றி மிகச் சாதாரணமாக பதிலளித்தார். நல்ல வேளை, அவர் எழுதியதாக நாங்கள் வைத்திருந்த கடிதங்களை ஒத்துக் கொண்டதோடு, டாக்டருக்கும் அவருக்குமான மணவாழ்க்கையில் எவ்வித பிரச்னையும் இல்லை என்று கூறினாலும் ‘அதனலென்ன’ என்ற புத்திசாலித்தனமான தோரணையிலிருந்தார். அரைமணி நேரம் கழித்து சிறிது சுவாசப்படுத்தியவன் பின்னால் திரும்பினால் அங்கே...டாக்டர் நின்றபடி இடுப்பில் கையூன்றி சாட்சிக் கூண்டிலிருக்கும் பெண்ணை கண்களை அகல விரித்தவாறு உற்றுப் பார்த்தபடி இருந்தார். பார்ப்பதற்கு ஏதோ சாட்சியை அச்சுறுத்திக் கொண்டிருப்பது போல இருந்தது. நீதிபதி அவரைக் கவனிக்கிறாரா என்று ஒருமுறை கவனித்தவன் டாக்டரருகே சென்று, ‘என்ன இங்க நிக்கிறீங்க’ என்றேன் எரிச்சலுடன். அப்பாவித்தனமாக ‘நீங்கதானே அவளையே பார்க்கச் சொன்னீர்கள்’ என்றாரே பார்க்கலாம். எனக்கு சிரிப்பதா அல்லது கோபப்படவா என்பது தெரியவில்லை. அருகிலிருந்த என் நண்பனிடம், ‘டேய் இவரைக் கூட்டிட்டுப் போய் உட்கார வையுடா. இவர் பார்க்கிற பார்வையில இறங்கி வந்து அடிக்கப் போறா’ என்றபடி தொடர்ந்தேன். கடைசியில் எனது சினிமாக் கற்பனைகள் தவிடுபொடியானது. ‘நிஜத்துக்கும் நிழலுக்கும் வித்தியாசங்கள் உண்டு’ என்ற முதல் பாடத்தை அன்று கற்றேன்.

அவர்களது அடுத்த சாட்சி, டாக்டரை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் தலாக்நாமாவில் கையெழுத்திட்ட காவல்துறை ஆய்வாளர். எங்களுக்கு நம்பிக்கையளித்த சாட்சி! ஏனெனில் குறுக்கு விசாரணையில் டாக்டர் வரதட்சணை ஏதும் கேட்டு மனைவியை மிரட்டவில்லை. மனைவியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதை ஒத்துக்கொண்டார். டாக்டரின் மனைவியும் அவரது தகப்பனாரும் எப்போது நீதிமன்றத்தை விட்டு வெளியேறினர் என்பதை நாங்கள் கவனிக்கவில்லை...நாங்கள் எங்களது கட்டுகளை அடுக்கியபடி பார்த்தால் அவர்கள் பக்கத்திலிருந்து யாரும் இல்லை. டாக்டரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

***

இனி உணர்வுகளை நம்பி பலனில்லை. நீதிபதியே துணை! டாக்டரின் சார்பில் வாதம் செய்ய எனது சீனியரே வந்தார். ஆய்வாளரின் ஒப்புதலை சுற்றியே எங்களது வாதம் அமைந்தது. அவர்கள் பக்கமிருந்து எதிர்பார்த்தபடி பெரிதாக வாதம் ஏதும் இல்லையெனினும், ‘மிரட்டிப் பெற்றலும் தலாக் செல்லும்’ என்று ஏதோ ஒரு உயர்நீதிமன்றம் எத்தனையோ மாமாங்களுக்கு முன்னர் எழுதிய பழங்கால தீர்ப்பை ஒட்டி அமைந்திருந்தது. டாக்டரோ வழக்கில் வெற்றியைத் தவிர வேறு எதையும் நினைத்துக் கூட பார்ப்பவராக தெரியாதது, எனக்கு மேலும் கவலையளித்தது.

தீர்ப்பு நாளன்று மாலையில் எனது நண்பன்தான் திருச்சியிலிருந்து தொலைபேசினான், ‘வழக்கு தள்ளுபடியாகிவிட்டதாக’. எனக்கு சிறிது அதிர்ச்சி. கொஞ்சம் கவலை. எனது சீனியர், பெரிய வழக்கறிஞர்களுக்கேயுரிய அலட்சியத்துடன் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. இரவு நானும் சீனியருடன் சிறிது விஸ்கியுடன் அமர்ந்து விட்டேன். சிறிது நேரத்தில் டாக்டர், பக்கத்து வீட்டு பாயுடன் வந்தார். தீர்ப்பு முழுவதையும் கையால் எழுதிக் கொண்டு வந்திருந்தார். முகத்தில் எவ்வித சலனமுமில்லை. சீனியர் சைகை காட்ட எதுவும் பேசாமல் அதை வாங்கிப் படித்தேன். படிக்கப் படிக்க வியப்பில் என் கண்கள் விரிந்தன. வரிக்கு வரி நீதிபதி ஒவ்வொரு பொருளிலும் எங்களுக்கு சாதகமாக எழுதியிருந்தார். நம்பவே முடியவில்லை. முழுவதையும் படிக்கும் முன்னரே உற்சாகம் பொங்க, “என்ன சார், ஜட்ஜ் எல்லா இஷ்யூலயும் நமக்கு சாதகமாகவே எழுதியிருக்காரு” இதில் பெரிய கவனமில்லாமல் சீனியர், ‘முழுதும் படி பார்க்கலாம்’ என்று பாயுடன் பேச்சைத் தொடர்ந்தார். டாக்டரோ என் முகத்தை பார்த்தபடியே இருந்தார். அப்படியே படிக்க பொறுமையில்லாமல் கடைசிப் பக்கத்துக்கு போனால்...’இது என்ன கேஸை டிகிரி பண்ணியிருக்கு?’

“டாக்டர் தீர்ப்பு நமக்கு சாதகமா இருக்கு. தோத்துருச்சுன்னு சொன்னீங்க”

ஒருமுறை ஒன்றுமே விளங்காதது போல என்னைப் பார்த்து விழித்தவர், ‘இது நான் எழுதியது’ என்றார்.

“நீங்கன்னா...சரி. கோர்டிலுள்ள தீர்ப்பைப் பார்த்துதானே எழுதினீங்க?”

“ஆமாம்”

“பிறகு, நமக்கு சாதகமா இருக்கே” இதற்குள் சீனியரும், பாயும் தங்களது பேச்சை நிறுத்தி எங்களை கவனிக்க ரம்பித்தனர்.

“இல்லை. தீர்ப்பைப் பார்த்து, ஜட்ஜ்மெண்ட் இப்படித்தான் இருக்கணுமுன்னு நானே எழுதியது இது. கோர்ட் ஜட்ஜ்மெண்ட் காப்பி கிடைக்க இன்னும் இரண்டு நாட்கள் குமாம்”

சீனியர் ஒரு கையால் தலையைச் பரபரவென்று சொரிந்தபடி, “என்ன நீதிபதி இப்படி எழுதியிருக்கணும்னு நீங்களே எழுதினீங்களா? சரியாப் போச்சு” என்றார். என்னால் வியப்பை அடக்க முடியவில்லை. ‘என்ன மாதிரி மனிதன் இவன். கோர்ட்டில் உட்கார்ந்து சுமார் இருபது பக்க தீர்ப்பைப் பார்த்து படித்து அதை அப்படியே மாற்றி எழுதியிருக்கிறானே!’

சீனியருக்கு டாக்டரின் திறமையை வியப்பதற்கெல்லாம் இது நேரமல்ல. எதுவும் பேசாமல் பாய்க்கு ஒரு கிளாஸில் விஸ்கியை ஊற்றியவர் அதை தூக்கிப் பிடித்தபடியே, “டாக்டர் உங்களுக்கு” என்றார்.

“இல்லை எனக்குப் பழக்கமில்லை”

மேலும் வற்புறுத்தாமல் தனது கிளாஸை வாய்க்கருகே கொண்டு சென்றவர், ஏதோ நினைத்தவராக சிறிது நிறுத்தி, “டாக்டர் இதெல்லாம் மேன்லி வைசஸ் என்பார்கள். பொண்டாட்டி இருக்கணுன்னா இதெல்லாம் கொஞ்சம் வேணும்” என்றார்.

சீனியரின் முகத்தில் தோன்றிய புன்முறுவல் ‘குரூரமான ஏளனமா’ அல்லது அவரின் ‘வார்த்தைகள் உண்மையா பொய்யா?’ என்ற சிந்தனையெல்லாம் இன்றி டாக்டர் முகத்தில் அதே ஏகாந்த நிலை...

அன்று இரவு எனக்கு தூக்கமேயில்லை. எதிர்பாராமல் குடித்த விஸ்கி அதற்கு காரணமில்லை...

மும்பை
21.09.03


பி.கு. இன்று இதே வழக்கு நடைபெற்றிருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். ஏனெனில் முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு சட்டம் அமுலுக்கு வந்த பிறகு, பெண்கள் ஜீவனாம்சம் கோரினாலே ஆண்கள் முத்தலாக்கு முறையில் விவாகரத்து செய்வது பழக்கமாகிப் போனது. அண்மையில் மும்பை உயர்நீதிமன்றம், ‘தலாக்கு மறுக்கப்பட்டு வழக்கு தொடரப்படுகையில் தலாக் செய்ததற்கான தகுந்த காரணம் கூறப்படவேண்டும். அவ்வாறில்லாத தலாக்குகள் செல்லாது’ என்று தீர்ப்பு கூறியுள்ளது. எனவே தற்போது இஸ்லாமியர்களும் முன்பு போல எளிதாக எவ்வித காரணமுமின்றி விவாகரத்து செய்தல் கடினமான காரியம்.

1 comment:

Nakkiran said...

Felt very bad for the Dr...