25.5.06

கலப்புமண வாரிசு - ஜாதி?



சில நாட்களுக்கு முன்னர் திரு.பத்ரி நாராயணன் தனது ‘எண்ணங்கள்’ வலைப்பதிவில் இட ஒதுக்கீடு பற்றி எழுதியிருந்த பதிவில் ‘இட ஒதுக்கீடு பற்றி எழுதப்படும் பலவித கருத்துகளில் கலப்பு மணம் பற்றி, ஏன் விவாதம் ஏதும் இல்லை’ என்ற வியப்பினை எனது பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன். யாரும் இது வரை ஏதும் தெளிவான விவாதம் எதனையும் முன்னெடுக்காததினால், ‘தனது, தனது பிள்ளைகள் திருமண விடயத்தில் சாதி சார்ந்த இட ஒதுக்கீட்டினை கடைபிடிக்கும் யாருக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டினை மறுக்க உரிமை கிடையாது’ என்ற எனது நிலைப்பாட்டில் இதுவரை மாற்றமில்லை.

கலப்பு மணம் இட ஒதுக்கீட்டு பிரச்னையை போக்க உதவுமா? என்றால் கட்டாயம் உதவும் என்பது எனது அனுமானம். எனது மேற்கூறிய பின்னூட்டத்திலேயே, கலப்புமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தை அல்லது தாய் இருவரில் ஒருவருடைய ஜாதியினை தேர்ந்தெடுக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆதிரை என்பவரின் ‘உள்ளல்’ என்ற வலைப்பதிவில் எனது பின்னூட்டம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், கலப்பு மணம் குறித்து நான் கூறியது ஏதும் இல்லை. ஆனால், ஆதிரை எனது பின்னூட்டத்தினை முழுவதுமாக படிக்கவில்லை என நினைக்கிறேன், ‘கலப்புமணம் யாருடைய ஜாதிக் கணக்கில் வரும்?’ என்ற கேள்வியினை பொதுவில் எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ‘வவ்வால்’ என்ற வலைப்பதிவாளர் கலப்பு மணத்தின் வாரிசுக்கு தந்தையின் ஜாதியே தரப்படும் என்று ஒரே போடாக போட்டிருந்தார். இதனை அவர் எங்கு படித்தார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த தகவல் நானறிந்த வரையில் தவறு என்று சுட்டிக்காட்டவே இப்பதிவு.

தமிழ்நாடு அரசு 27.06.75 தேதியிட்ட தனது அரசாணை எண் 477ன் மூலம் கலப்புமண தம்பதிகள் தங்களில் யாராவது ஒருவருடைய ஜாதியினை தங்களது குழந்தைகளுக்கு தேர்ந்தெடுக்க அனுமதியளிக்கிறது. ஆனால், அனைத்து குழந்தைகளும் ஒரே ஜாதியினைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழக அரசு பின்னர் தனது 16.08.94 தேதியிட்ட அரசாணை எண் 17ன் மூலம் ஒரு திருத்தத்தினை கொணர்ந்தது. அதாவது, அட்டவணை வகுப்பினரைப் பொறுத்தவரை அந்தக் குழந்தைகள் அந்த வகுப்பினரால் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அட்டவணை வகுப்பு என்று சான்றிதழ் பெற இந்த ஒரு தகுதியும் பெற வேண்டும். அட்டவணை வகுப்பினரைப் பொறுத்தவரை மத்திய அரசிற்கே அதிகாரம் உண்டு. எனவே இந்த திருத்தம் மத்திய அரசின் அறிவுரையின் பெயரில் ஏற்ப்படுத்தப்பட்டது. இதற்கான காரணம் தற்பொழுது தேவையில்லை. நாம், தெரிந்து கொள்ள வேண்டியது ‘கலப்பு மணம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் தங்களில் யாராவது ஒருவரின் ஜாதியினை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்’ என்பதே!

மேலும் கலப்பு மணத்தினை ஊக்குவிக்கும் வண்ணம் ஊக்கத் தொகை போன்ற பிற பயன்களையும் அரசு அளிக்க முன்வருகிறது. முக்கியமாக 28.12.76 தேதியிட்ட தமிழக அரசு அரசாணை எண் 188ல் வேலை வாய்ப்பில் கூட முன்னுரிமை வழங்கப்படுகிறது.

5 comments:

Muthu said...

நல்ல தகவல்.நன்றி.

பத்மா அர்விந்த் said...

பிரபு
நடைமுறையில் பல கலப்பு மணங்களில் ஆரம்ப காலத்தில் கணவன் மனைவி இருவருமே விட்டு கொடுத்து எந்த முறையை பின்பற்றினால் என்ன என்று யோசிப்பது இல்லை. ஆனால் குழந்தை பிறந்தபின், தன் சாதியை என்பதைவிட தன் குடும்ப வழக்கம் தன் பிள்ளைக்கு வரவேண்டும் என்பதற்காக இருவரும் போட்டி போடுவதும், பெரும்பான்மையான நேரங்களில் கணவன் வழக்கமே(அத்துடன் சாதி) வருவதும் நடைமுறை. கலப்பு மணம் செய்து கொண்டு தங்கள் குடும்பங்களை பகைத்து கொண்டவர்கள் எப்படியாவது அவர்களை திருப்தி படுத்து உறவை புதுப்பித்துவிட வேண்டும் என்பதற்கான ஒரு முயற்சியும் கூட.
தன் பெற்றோரை வயோதிக காலத்தில் கவனித்து கொள்வது தன் கடமை என்று நினைக்கும் ஆண்மகன், திருமணம் ஆனபின் கணவன் வீட்டு பழக்கமே வர வேண்டும் என்று சொல்லும் தலை முறை பாடங்கள்இவை எல்லாமும் சாதியை உயிரோடு வைத்திருக்கும் என்பதே கசப்பான உண்மை.

Anonymous said...

If a non dalit girl marries a dalit boy she does not become a
dalit.she cannot claim benefits
of a dalit.
அதாவது, அட்டவணை வகுப்பினரைப் பொறுத்தவரை அந்தக் குழந்தைகள் அந்த வகுப்பினரால் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்
what does this mean.
inter caste marriage will not
weaken caste system as the govt.
supports caste system thro reservation and quotas.Let the
govt show the way first by abolishing caste based benefits.
as parents have to choose one caste
or another, caste is still there.

aathirai said...

கலப்பு மணம் இட ஒதுக்கீட்டு பிரச்னையை போக்க உதவுமா? என்றால் கட்டாயம் உதவும் என்பது எனது அனுமானம்.

idhu nalla ideava theriyudhu.
tax benefit kuda kudukalam.

PRABHU RAJADURAI said...

நன்றி!
தலித்தினை மணக்கும் ஒருவர் தலித்தாக கருதப்பட மாட்டார். ஆனால் மூன்றாவதாக குறிப்பிட்ட அரசாணையின்படி வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரலாம். பண உதவியும் பெறலாம். முதல் இரண்டு அரசாணைகளும் அவரின் குழந்தைகளைப் பற்றியது...